ராஜபக்சே இயக்கத்தில் டூப்ளிகேட் புலி..! – தயாராகும் துரோகச் சினிமா..!

தமிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய ராமநாமம் போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். “கிளம்பிட்டார்ல எங்க ஆளு” என்று ஒரு பிரிவும், “இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க” என்று இன்னொரு குழுவும் சொல்ல.. ஈழ விவகாரத்தில் இன்னொரு விவகாரமாகக் கிளம்பியிருக்கிறார் கேணல் ராம்.

“நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள் சிதறிக் கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம். என்னைக் குறி வைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாகவே நான் தப்பித்து வருகிறேன்.

எங்கள் படையணியினரின் வீரமும், மன உறுதியும், தாய் நாட்டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்க வைக்கிறது. சிங்கள இராணுவத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வருகிறோம்..” என்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தளபதியாகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வரும் கேணல் ராம் என்பவர் அறிவித்திருக்கிறார்.

இவரைப் பார்த்து யாருமே அதிர்ச்சியடையவில்லை. ஆனால் இவருக்குப் பின்னால் யார் என்ற சந்தேகம் மட்டுமே மிச்சமாகியிருக்கிறது.

‘ராஜபக்சே இயக்கத்தில் தயாராகும் டூப்ளிகேட் புலி’ என்ற துரோக சினிமாவின் தொடக்கமாகவே, இதனை விவரம் அறிந்தவர்கள் உணர்வார்கள்.

2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு தடியெடுத்தவர்களெல்லாம் தமிழ்ப் புலித் தலைவராகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். “பிரபாகரன் என்னைத்தான் அடுத்தத் தலைவராக அறிவித்துவிட்டுப் போனார்..” என்று சொன்ன கே.பி.எனப்படும் குமரன் பத்மநாபன் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு தனி பங்களாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

“மக்கள் விடுதலை ராணுவம்” என்ற அமைப்பு தங்களைப் புதியப் போராளிகளாகத் தனி நாட்டுக்காகப் போராடுவதாக அறிவித்தது. “ஆதரவாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்க செய்யப்பட்ட செட்டப்” என்று அந்தப் பேட்டி அம்பலப்படுத்தப்பட்டது. புலிகளின் புதிய ஊடகத் துறை அதிகாரப்பூர்வமாக இணைய தளம் என்ற பெயரில் அடுத்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியது.

அது யார் என்று விசாரித்தால் 21 ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கத்தைவிட்டு வெளியேறி உளவு அமைப்புகளின் இன்பார்மராக மாறிவிட்ட குண்டப்பா இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது கேணல் ராம்..

கிழக்கு மாகாணத்தை ராணுவம் கைப்பற்றிய பிறகு அந்த மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்புத் தளபதியையும், தாக்குதல் தளபதியையும் 2008-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரன் நியமித்தார்.

மட்டக்களப்புக்கு கேணல் கீர்த்தி, திரிகோணமலைக்கு கேணல் வசந்தன், அம்பாறைக்கு கேணல் ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். பிரபாகரனுக்குக் கீழ் அணி வகுத்த அத்தனை தளபதிகளும், பிரிகேடியர் பால்ராஜ் மறைவைத் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது கீர்த்தி, வசந்தன் இருவரை மட்டும் வரச் சொல்லியிருந்தார் பிரபாகரன். ராமுக்கு அழைப்பில்லை.



கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தில் தனித்துவிடப்பட்டார் ராம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியிருக்கும் புலிகள் அரசாங்கத்திடம் சரணடைய என்னுடைய உதவியை நாடி வருகிறார்கள். ராம் என்று அறியப்பட்ட தலைவர் கடந்த சில தினங்களாக என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்” என்று கருணா அளித்த பேட்டிதான் ராமை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. கருணாவின் முயற்சியால்தான் ராம் சரணடைந்ததாகத் தகவல்கள் வெளியாயின.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து ராம் தப்பிவிட்டதாக அடுத்தத் தகவல் வந்தது. ராணுவத்தின் வசமிருந்து எவரும் எளிதில் தப்பிவிட முடியாது. அதுவம் கேணல் பொறுப்பில் இருந்தவரை நாலாவது மாடியில் வைத்து நையப்புடைத்துவிடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ராம் மட்டும் தப்பினார்.

தலைமறைவான ராம் அடுத்த சில நாட்களில் தன்னைப் புதிய தளபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். சந்தேகம் அதிகமானது. மாவீரர் தினத்தன்று உரையும் நிகழ்த்தி அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார்.

“இந்தச் சமூகத்தில் அரசியல் அபிலாஷைகளை பெற்றுத் தருவதற்கு சர்வதேச நாடுகள் முன் வர வேண்டும். இதற்காக நாம் எந்த விட்டுக் கொடுப்புகளையும் செய்யத் தயாராக உள்ளோம். அத்துடன் ஆயுத வன்முறைகளையும் முற்றாக கைவிடத் தயாராக உள்ளோம்..” என்று பகிரங்கமாக அறிவித்தார் ராம்.

இவை அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் நடந்தவை. தலைமறைவானவர் தலைமறைவாகத்தான் இருக்க முடியுமே தவிர, பின்னால் குயிலோசை கேட்க.. மாவீரர் உரையாற்றியிருக்க முடியாது. அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் முக்கியமான அனைத்து இணைய தளங்களுக்கும் அப்பேச்சு அனுப்பி வைக்கப்பட்டது.

அதுவும் அந்த பி.டி.எஃப். பைலுக்கு ‘மகாவீர’ என்ற சிங்கள வார்த்தையைக் குறிச்சொல்லாக வைத்திருந்தார்கள்.

“இது நம்முடைய நிலம். இங்கு அந்நியன் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறான்” என்பதுதான் புலிகள் இதுவரையில் வைத்திருக்கும் குற்றச்சாட்டு. முதன்முதலாக ராம் தமிழர்களைச் சிறுபான்மை இனம் என்று சொல்லிக் கொண்டார். தமிழீழ மனோபாவம் கொண்டவரால் அப்படியொரு பேச்சை எழுதியிருக்கவே முடியாது என்று அப்போதே விமர்சனங்களும் எழுந்தன.

ஆயுதம் உள்பட அனைத்தையும் விட்டுவிட்டு போராடப் போவதாக பகிரங்கமாக அறிவித்த ராம், இப்போது புலிப்படையை உருவாக்கி காட்டுக்குள் போராடிக் கொண்டிருப்பதாக ‘கதை’ கட்டப்படுகிறது. இதற்குப் பின்னணியில் சிங்கள உளவுத் துறையின் கைங்கர்யம் அதிகமாக இருப்பதாகவே தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பேச்சு.

‘பொறிக்குள் தேங்காய் சில்லை வைத்து எலி பிடிக்கும் தந்திரம்’ போல ‘ராம்’ என்ற ஒருவரைக் காட்டி யாரெல்லாம் புலி ஆதரவாளர்கள், நிதியுதவி எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சிங்கள உளவுத்துறை திட்டமிட்டது.

ராம் தன்னைத் தலைவராகப் பிரகடனப்படுத்தியதும், புலிப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராமை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். வர மறுத்த ராம். குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு அவர்களை வரச் சொன்னார். புலிகள் போகவில்லை. மாறாக, ராமுடன் இருக்கும் இரண்டு பேர் பெயரைச் சொல்லி அவர்களையாவது தங்களிடம் அனுப்பி வைக்கக் கேட்டனர். அதற்கும் ராம் உடன்படவில்லை.

பொதுவாகவே ராணுவக் கட்டுப்பாட்டில் சிக்கியவர்கள்தான் தங்களது இடத்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள். ராம் மீது அதன் பிறகுதான் சந்தேகம் வந்தது. அவரை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று புலிப்படையினர் அறவித்தார்கள் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புலிகளைத் தலையெடுக்க விடாமல் தடுப்பது.. அவர்களது வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைப்பது.. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அரசியலைச் சிதைப்பது.. ஆகிய மூன்று இலக்குகளை சிங்களப் புலனாய்வுத் துறை தனது திட்டமாக வைத்துள்ளது. அதற்கு ராம் கையாள் ஆக்கப்பட்டுள்ளார்.

ராம் ஆயுதப் பயிற்சி பெற்றது தமிழகத்தில்தான். 1982-ல் கொளத்தூர் முகாமில்தான் பயிற்சி பெற்றதாகச் சொல்லியிருக்கிறார். உண்மை என்னவெனில், புலிப்படையின் 9-வது பிரிவில் பயிற்சி பெற்றவர் ராம். முதல் இரண்டு பிரிவுகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது. 3, 6, 10 பிரிவுகளுக்கு கொளத்தூரிலும், 4,5 பிரிவுக்கு வத்திராயிருப்பு மலையிலும், 7, 8, 9 பிரிவுக்கு திண்டுக்கல் சிறுமலையிலும் பயிற்சிகள் தரப்பட்டன.

அதாவது தன்னுடைய சுயகதையைக் கூட சுத்தமாகச் சொல்லத் தெரியாத அளவுக்கு குழம்பியிருக்கிறார் ராம்.

“இவரை வைத்து புலிகள் அமைப்பு மீண்டும் இயங்குவதாகச் சொல்வதன் மூலமாக இலங்கையை எப்போதும் பதற்றமுள்ள நாடாகவே காட்டிக் கொள்ள ராஜபக்சே விரும்புகிறார். பயங்கரவாதம் நாட்டில் இருக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டியே தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறார்” என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

இது போன்ற தகவல்களை இங்கு பரப்புவதும், அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது. 11-வது முறையாக விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் இந்த மாதம் தடை செய்யப்பட்டுள்ளது. முற்றாக ஒழிக்கப்பட்ட இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழாமல் இருக்க.. இயக்கம் இருப்பதாக போலித் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.

இதை வைத்து ஈழமும், ஈழ மக்கள் துயரங்கள், அவலங்களைப் பேசுவதையே பயங்கரவாதமாகப் பார்க்கத் தூண்டும் காரியத்துக்கு ராம் பயன்படுத்தப்படுகிறார். ‘நிஜப் புலி’க்குப் பயந்தவர்கள் இப்போது ‘டூப்ளிகேட் புலி’யைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்.

‘விழிப்புதான் விடுதலைக்கு முதல் படி’ என்று பிரபாகரன் சொன்னதாகச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்யும் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர், “எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்துவிட்டான்” என்று எழுதியிருக்கிறார்.

வீரன் முளைக்கும்போதே துரோகியும் துளிர்க்கிறான் என்பார்கள். ஆனால் வீரனின் வெற்றிக்கு முன், துரோகியின் தோல்வி அறிவிக்கப்படும்.

நன்றி : ஆனந்தவிகடன் – 02-06-10

Comments