‘உடல் வேதனையுடனும், உளத்தாக்கத்துடனும், நடைப்பிணங்களாக நடமாடுகின்றோம்’ – வன்னி மக்கள்

மழைபோல பொழிந்த ஷெல் தாக்குதல்களினாலும், தொடர்ச்சியான இடித்தாக்குதல் போன்ற விமானக் குண்டுவீச்சுக்களினாலும் எங்களால் தொடர்ந்தும் எமது கிராமங்களில் இருக்க முடியவில்லை.

வீடுகளைவிட்டு, கிராமங்களைக் கைவிட்டு வெளியேறினோம். பாதுகாப்புக்காக இடத்திற்கு இடம், இடம்பெயர்ந்து, பல இடங்களில் தஞ்சம் புகுந்தோம். ஷெல் குண்டுகளும், துப்பாக்கிக்குண்டுகளும் எங்களைத் துரத்திய வண்ணமே இருந்தன.

எம்மோடு கொண்டு சென்ற உடைமைகளை ஒவ்வொன்றாக இழந்தோம். ஷெல் வீச்சுக்களினால் உறவுகளை இழந்தோம்.பலர் படுகாயமடைந்தோம்.அவயவங்கள் சிதைந்தன. கால்களை இழந்து கைகளைப் பறிகொடுத்து, தலையில், மார்பில், முள்ளந்தண்டில் தைத்த ஷெல் துண்டுகளும், சீறிவந்த துப்பாக்கிக்குண்டுகளும் இன்னும் எஙகளில் பலரது உடல்களில் இருக்கின்றன.

வைத்தியசாலைகளில் அவற்றை முழுமையாக அகற்ற முடியவில்லை. எங்களோடு கூட இருந்தே கொல்லாமல் கொல்லுகின்ற அந்த ஆயுத எச்சங்களோடுதான் நாங்கள் உடல் வேதனையோடும் உளத் தாக்கத்துடனும் இன்னும் நடைப்பிணங்களாக நடமாடுகின்றோம்.

இவ்வாறு வன்னிப்பிரதேசத்தில் உள்ள பலரும், அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஆர்.சம்பந்தன் தலைமையில் அந்தக் கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மே மாதம் 22 ஆம் திகதி முதல், நான்கு தினங்கள், போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பிரதேசத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து அங்கு மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களின் குறை, நிறைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

காணிகளிலும் வீதிகளிலும் அடர்ந்து பற்றிப் படர்ந்துள்ள பற்றைகள், இடிந்து சிதைந்துள்ள வீடுகள்.

கட்டிடங்களோடு, கூடிய கிராமங்களில் வசதிகளற்ற நிலையில் இருந்த பலரும், தமது சோகக் கதைகளையும், பற்றாக்குறைகள், அவசரத் தேவைகளையும் இந்தக் குழுவினரிடம் ஆவேசத்தோடும், ஆறாத துயரத்தோடும் எடுத்துக் கூறினார்கள்.

“மாதாந்தம் பத்தாயிரம் தொடக்கம், ஐம்பதினாயிரம் வரையில் எங்களுக்கு வருமானம் இருந்தது.

உழவு இயந்திரம் இருந்தது. வீடுதோறும் இரண்டு சக்கர உழவு இயந்திரம் வைத்திருந்தோம். மோட்டார் சைக்கிள்கள் இருந்தன.

அநேகமாக பாடசாலை செல்லும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் சைக்கிள்கள் இருந்தன. பத்து, இருபது, நூறு, இருநூறு என வசதிக்கேற்ற வகையில் வீடு தோறும் மாடுகள் நின்றன.

ஆடுகள் வளர்த்தோம். கோழிகள் நின்றன. வீடு நிறைய நெல் மூடைகளை அடுக்கியிருந்தோம். தென்னைகள் நின்றன.

மா மரங்கள் செழித்திருந்தன. வாழைகள் இருந்தன. இப்போது எதுவுமே இல்லை.

பாழடைந்துள்ள கிராமங்களில், இடிந்த வீடுகளிலும், தரைமட்டமாக்கப்பட்ட காணிகளிலும், தரப்பாள் கொட்டில்களிலும், தகரக் கொட்டில்களிலும் முடங்கிக் கிடக்கின்றோம்.

என தம்மைப் பார்ப்பதற்காக வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எல்லோரும் வேதனையோடு கூறினார்கள்.

பல இடங்களில் குடிநீர்க்கிணறுகள் சுத்தம் செய்யப்படவில்லை. இருக்கின்ற ஒன்றிரண்டு கிணறுகளிலேயே குடிநீரைப் பெறவேண்டி இருப்பதாக அவர்களில் பலர் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

“மலசல கூடங்கள் இல்லை. கொளுத்தும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும், இடவசதியின்றி வெற்றுத்தரையில் கூடாரங்களிலும், கொட்டில்களிலுமே எங்களது சீவியம் நடக்கின்றது. போக்குவரத்து வசதிகள் எல்லோருக்கும் இல்லை.

பல இடங்களில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு சைக்கிள்கள் கொடுத்திருக்கின்றார்கள். சில இடங்களில் வீட்டுக்கொரு சைக்கிள் கிடைத்திருக்கின்றது.

அநேக கிராமவாசிகளுக்கு சைக்கிள்கள் கிடைக்கவில்லை. அநேகமான பகுதிகளுக்கு பஸ் சேவை இருந்தாலும், வேண்டிய நேரத்தில் போக்குவரத்து செய்யத்தக்கதாக இல்லை.

அருகில் உள்ள முக்கியமான கடைவீதிக்கு அல்லது நகரத்திற்கு காலையில் சென்றால் மாலையில்தான் வரவேண்டும்.

இரவு நேரத்தில் யானைகள் ஒருபக்கம், இடப்பெயர்வு காரணமாக கிராமங்கள் காடாகிப் போயுள்ளதால், பாம்புகள் ஒருபக்கமாக, குக்கிராமங்களில் வாழ்க்கை ஆபத்து நிறைந்ததாகவே இருக்கின்றது.

நிவாரணமாக அரிசி, மா, பருப்பு, சீனி, எண்ணெய் போன்ற உலருணவுப் பொருட்கள் தந்தார்கள். இப்போது அரிசி இல்லை. வெறும் மா மட்டுமே கொடுக்கிறார்கள். அரிசி விலைக்குத்தான் வாங்க வேண்டும்.

வருமானம் இல்லை. இதனால், காய்கறிகள், கறிபுளிக்கு வசதியில்லை. முதல் தொகுதியாக மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் கிராமத்து குளங்களில் உள்ள நீரின் அளவுக்கு ஏற்ற வகையில் ஒரு சிலருக்கு விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

சிறிய அளவில் தோட்டம் செய்வதற்கான உதவிகளும் கிடைத்திருக்கின்றன. மருந்து தெளிப்பதற்கான கருவிகள்இ நீர் இறைக்கும் இயந்திரங்கள் கூட கிடைத்திருக்கின்றன.

ஆனால் இரு எல்லோருக்கும் கிடைக்கவில்லை. பொதுப் பாவனைக்காகத் தரப்பட்டுள்ள விவசாய உபகரணங்களான தெளிகருவி, நீர் இறைக்கும் இயந்திரங்களின் பிரயோசனம் பலருக்கு கிடைக்காத நிலைமையே இருக்கின்றது.

பெண்களில் பலர் மிகவும் இள வயதிலேயே விதவைகளாகி, குழந்தைகளோடு இருக்கின்றார்கள். ஆண் துணையின்றி அடுத்தவரை நம்பியே அவர்கள் வாழ வேண்டியிருக்கின்றது. பிள்ளைகளோடு இருக்கின்ற இந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை இருண்டு கிடக்கின்றது. தொழில் வாய்ப்பில்லை. குடும்பத்துணையில்லை. செலவுக்குப் பணமில்லை. பிள்ளைகளை வளர்ப்பதற்கு வழியில்லை. நிர்க்கதியாக இருக்கும் இவர்களுக்கு யாராவது உதவமாட்டார்களா?

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலர் இன்னும் விடுதலை செய்யப்படாததனால், நாங்கள் பலரும் பெரும் வேதனையில் இருக்கின்றோம். எங்களது கணவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால், உழைப்பாளியின்றி எங்கள் வாழ்க்கை கஸ்டமாக இருக்கின்றது. வவுனியாவில், செட்டிகுளத்தில் பொலன்னறுவையில், மட்டக்களப்பில், பூஸாவில் என்று நாடு முழுதும் எங்கெங்கெல்லாமோ இவர்களைத் தடுத்து வைத்திருப்பதனால், அவர்களைப் போய் பார்ப்பதற்கு எல்லோருக்கும் இயலமால் இருக்கின்றது.

போக்குவரத்துக்குப் பணமில்லை. பணத்தைக் கஸ்டப்பட்டு யாரிடமாவது பெற்றாலும், தவழ்கின்ற குழந்தைகளை, பாடசாலைக்குச் செல்கின்ற சிறிய குழந்தைகளை யாரிடம் விட்டுச் செல்வது என்பது பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. அடிக்கடி அவர்களைப் போய் பார்க்காவிட்டால் மனம் ஆறுதில்லை. அப்படிப் போகாவிட்டால், அவர்களுக்கு என்ன நடக்கின்றது, எந்தெந்த இடத்திற்கு எப்போது மாற்றுவார்கள் என்பது தெரியாமல் இருக்கின்றது.

இந்த மாதம் ஓரிடத்தில் இருப்பவர் அடுத்த மாதம் அங்கிருந்து எங்கேயோ கொண்டு செல்லப்பட்டுவிடுவார். அவர் இருக்கின்ற இடத்தைத் தேடிக்கண்டு பிடிப்பது என்பது லேசான காரியமில்லை. அதற்குப் பணமும் வேண்டும். இடங்களைத் தேடிச் சென்று பார்ப்பதற்கு சிங்களம் தெரிந்த ஆண் துணையும் வேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்இ இப்படியெல்லாம் கஸ்டப்படுவதற்கு?

முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிவிட்டோம் என்ற பெயர்தானே ஒழிய எங்களது சோகமும், துன்ப துயரங்களும் கூடியிருக்கிறதே தவிர, குறைந்தபாடாக இல்லை.

ஒரு சிலரைத் தடுப்பில் இருந்து விட்டிருக்கின்றார்கள். அவர்கள் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எவ்வளவோ காலம் எடுக்கும் போல் இருக்கின்றது.

விடுதலையாகிய எல்லோரும் சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் இவர்கள் திகைத்துப் போய் இருக்கின்றார்கள்.

எங்களில் பலரது பிள்ளைகளைக் காணவில்லை. அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்.

அவர்களை எப்படி கண்டு பிடிப்பது என்றே தெரியவில்லை. அவர்களைத் தேடி, எங்கே சென்று பார்ப்பது, யாரிடம் கேட்பது என்பது ஒன்றுமே புரியாமல் இருக்கின்றது.

நாங்கள் துன்பமடைந்திருந்தபோது, முள்வேலி முகாம்களில் தவித்த போது, நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? ஏன் எங்களை வந்து பார்க்கவில்லை? எங்கள் துயரங்களைப் போக்குவதற்கு ஏன் எதுவுமே செய்யவில்லை? இப்போதுதான் வந்திருக்கிறீர்கள்.

துயரம் தொண்டையை அடைக்கிறது. உங்கிடம் மட்டுமே நாங்கள் உரிமையோடு கோபிக்க முடியும். எங்களது வேதனைகளை அள்ளிக்கொட்ட முடியும். எங்களது துயரங்களைப் போக்குவதற்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு ஆறுதல் தரப்போவது யார்?

ஷெல்லுக்குப் பயந்து ஓடி, ஓடி முள்ளிவாய்க்கால், வட்டுவாகலில் அஞ்சி ஒடுங்கியபோது, அபயமளித்து அழைத்துச் சென்ற இராணுவத்தினர் மெனிக்பாமில் முள் வேலிக்குள் வைத்திருந்தார்கள்.

மீள்குடியேற்றம் செய்கிறோம். வெளியில் சென்று வர அனுமதிக்கிறோம் என்று அரசாங்கம் சொன்ன போது எங்களின் கஸ்டங்கள், துயரங்களுக்கு முடிவு வந்து வருகின்றது என்று நம்பினோம். ஆனால் மீள்குடியேற்ற வாழ்க்கை முகாம் வாழ்க்கையில் இருந்து பெரிதாக மாறவில்லை. அதே கொட்டில் வாழ்க்கையும் பற்றாக்குறையும் இங்கும் தொடர்கின்றது.

பன்னிரண்டு தகரங்களையும், இரண்டு தரப்பாள்களையும் பயன்படுத்தி ஒரு கொட்டில் அமைக்கலாம் என்றால் மரம் தடி வெட்டுவதற்கு காட்டுக்குச் செல்ல முடியாது.

மைன்ஸ் இருக்கின்றது என்கிறார்கள். காட்டுக்குள் செல்லவேண்டாம் என கிராமங்களைச் சுற்றிலும் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினர் எச்சரிக்கின்றார்கள். சில சில காணிகளில் வீடுகள் இருந்த இடத்தைச் சுற்றிலும் மட்டுமே கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் கண்ணிவெடிகள் இன்னும் அகற்றவில்லை என்பதற்கு அடையாளமாக மஞ்சள் பட்டியைக் கட்டி, மண்டையோடு, எலும்புத்துண்டுகள் கொண்ட சிவப்பு அடையாளமிட்ட எச்சரிக்கை போர்டுகளை வைத்திருக்கின்றார்கள்.

கொடுக்கின்ற நிவாரணமும் குடும்பத்தில் உள்ளவர்களின் உணவுத் தேவைக்குப் போதாது. தோட்டம்செய்ய வசதியில்லை. வயலுக்கு குளத்திற்குப் போக முடியாது, அங்குள்ள இராணுவத்தினர் இங்கு வரவேண்டாம்.

கண்டபடியெல்லாம் போக முடியாது என கோபிக்கிறார்கள். மனிக்பாம் முள்வேலிக்குளம் கடுமையான இராணுவ காவலக்குள் இருந்த நாங்கள் இப்போது சொந்த கிராமங்களுக்குத் திரும்பியிருந்தாலும். சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலையிலேயே பல கிராமங்களில் எங்களது வாழ்க்கை சிறைவாழ்க்கையாகத் தொடர்கின்றது.

எங்களைப் பார்ப்பதற்காக நீங்கள் வந்தது ஆறுதலாக இருக்கின்றது. எங்களது கண்ணீரைத் துடைப்பதற்கு ஏதாவது செய்யுங்கள், எங்களுக்கு வீடு வேண்டும். வயல் செய்ய வேண்டும், தோட்டம் செய்ய வேண்டும். அதற்கான வசதிகளைப் பெற்றுத் தாருங்கள்.

நாங்கள் கௌரவமாக வாழ வேண்டும். பிரிந்துள்ள பிள்ளைகள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். காணமால் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். என்ன செய்வீர்களோ தெரியாது எங்களது கஸ்ட நிலைமைக்கு ஒரு முடிவு வேண்டும். ஏதாவது செய்யுங்கள். எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்.

இவ்வாறு சென்ற சென்ற இடமெல்லாம் மக்கள் தமது துயர நிலைமை குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறி புதிய வாழ்க்கைக்கு வழி வகுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள், செய்யப்பட்டுள்ள வசதிகள், என்பவற்றையும், அவர்களுக்கான தேவைகள் என்பன குறித்தும், தாங்கள் விஜயம் செய்த பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள், சேதங்கள், தடுப்பில் உள்ளவர்கள், விதவைகள், காணமால் போயுள்ளவர்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது மக்களின் வாழ்க்கை நிலைமை குறித்து உரிய அதிகாரிகள், தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிவாரணம் பெறவும், கஸ்டங்களைப் போக்குவதற்கும் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி கூறியிருக்கின்றார்கள்.

தமது துயர நிலைமைகளை எடுத்துக் கூறிய மீள்குடியேறிய மக்களை ஒருபோதும் தமிழத்தேசிய கூட்டமைப்பு கைவிடமாட்டாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தாங்கள் சந்தித்த மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

“மனந்தளர வேண்டாம். உறுதியாக இருங்கள். நம்பிக்கையோடு இருங்கள். வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.

இப்போதைய இந்தத் துயரச் சூழ்நிலையில் இருந்து மாற்றம் பெறுவதற்கான சகல முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.

அதற்காக ஓயாது உழைப்போம். உங்களது கஸ்டங்களைக் கேட்டுவிட்டுச் சென்று ஓய்ந்திருக்க மாட்டோம். வாழ்க்கையின் முன்னேற்றகரமான மாற்றத்திற்கான சகல முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம். அத்துடன் நின்று விடமாட்டோம். நாங்கள் திரும்பவும் உங்களை வந்து சந்திப்போம்.

உங்களுடனேயே இருப்போம். யுததம் முடிந்து ஒரு வருடமாகிவிட்டது. முகாம்களில் இருந்த நீங்கள் மீள்குடியேற்றத்திற்காக சொந்தக் கிராமங்களுக்கு வந்துள்ளீர்கள். இந்த நிலைமை தொடர முடியாது. நிச்சயமாக ஒரு மாற்றம் தேவை.

அந்த மாற்றம் நன்மையான மாற்றமாகவே இருக்கும். இதனை நம்புங்கள். மனம் சோர வேண்டாம். நம்பிக்கையோடு இருங்கள்’ என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைபபின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


vanni_vi_02

Comments