வலிசுமந்த வன்னிவாழ்க்கை - II

சாவுகள் வலிசுமந்த வன்னிவாழ்க்கை - I

மக்கள் அமைத்துக் கொள்ளும் பதுங்குகுழிகளுக்குள்ளே அனைவரும் இருப்பதற்கு சந்தர்ப்பம் இருக்காது. இதனால் தமது பிள்ளைகளை பதுங்குழிகளுக்குள் இருத்திவிட்டு தாய் தந்தையர் வெளியில் படுத்து பாதுகாப்புத் தேடுவர். தாக்குதல்கள் 12மணிநேரங்களைக் கடந்தும் தொடராக இடம்பெறும். ஆனாலும் பிள்ளைகளுக்கான பசியினை போக்குவதற்கு ஏதாவது செய்ய எண்ணி தாயோ தந்தையோ அல்லது வீட்டில் யாராவது ஒருவர் ஏதாவது சமையல் முயற்சியில் ஈடுபட்டிருப்பார். பதுங்குகுழியில் இருப்பவர்களின் மனம் வெளியில் இருப்பவருக்கு ஏதாவது நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பிரார்த்தனையுடனேயே இருக்கும். ஆனாலும் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்துவிடும் நிகழ்ந்துவிடும் என்று ஏங்கிய அவர்கள் வெளியில் தலை நீட்டிப் பார்த்தால் உண்மையில் வெளியில் இருந்தவர்கள் தலைசிதறியோ, உடல் சிதறியோ கொல்லப்பட்டே இருப்பார்கள். அவ்வாறு எஞ்சியவர்கள் என்பது மிக அரிதாகவே காணப்படும்.
vanni-0013



முடியுமானவரை கதறி அழ மட்டும் தான் அங்கிருப்போரால் முடியும். மாறாக உயிரிழந்தவர்களுக்கு இறுதிக்கடன் செய்யவோ உறவினர்களுக்குச் சொல்லி அனுப்பவோ எந்த சந்தர்ப்பமும் இல்லை. இலங்கையில் தமிழ் மக்களது மரணத்தின் பின்னான இறுதிச் சடங்கானது முக்கியமான ஒரு நிகழ்வாகும். ஒரு இறப்பு நிகழ்ந்தால் அந்த இறப்பானது பிரிந்து போன குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான ஒரு பிரதான சடங்காக அமைந்துவிடும். ஒரு நபர் உயிரிழந்தால் அவரது உறவினர்களுக்குச் சொல்லி அனுப்பி முக்கியமான நபர்கள் அனைவரும் வருகை தந்தபின்னரே உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். இந்துக்களாக இருந்தால்; அவர்களுக்கு இந்து மத முறைப்படி சவக்கிரியை மேற்கொள்ளப்படும்.

இதில் இறந்தவர்களின் பிள்ளைகள் அனைவரும் பங்கேற்பர். அதே போல கிறிஸ்தவர்களாக இருந்தால் இறந்த ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களது பரம்பரையினரின் நல்லடக்கம் இடம்பெறும் சவக்காலைக்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். பிரதேச வழக்கங்களிற்கமைவாக இறந்த உயிர்களுக்கான விசேட வழிபாடுகள், உணவுப்படையல்கள் இன்னும் பல நிகழ்வுகள் நடந்தேறும். ஆனால் வன்னி எதிர்கொண்ட கோரப் போர்க் காலத்தில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்தேறினால் இறந்தவர்களை சுடுகாடுகளிற்கு எடுத்துச் செல்வதற்கோ அல்லது இறுதி நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. உண்மையில் சுடுகாடுகளின் மத்தியில் கூட மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்தனர். உடலங்களைப் புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ ஒரு ஒதுக்கிடமே இல்லை. இந்த நிலையில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்தேறும் பகுதிகளுக்கு அருகில் கிடைக்கும் சிறிய சிறிய நிலப்பரப்புக்களில் உடலங்களை முடிந்தவரையில் புதைத்துவிடுவர்.

vanni-0011

இதனிலும் பரிதாபம் என்னவென்றால் பலர் பல உறவுகளைத் தொலைத்திருப்பர். அவர்களைத் தேடித் தேடி ஒவ்வொரு பகுதிகளாக அலைவர். யாராவது எங்காவது அவர்களைக் கண்டதாகச் சொல்லியிருப்பர். எனவே எவ்வாறாயினும் பிரிந்த தமது உறவுகளைக் கண்டுவிடலாம் என்று அலைபவர்கள் தாக்குதல்களுக்கு உட்பட்டு வீதியிலேயே அனாதைப் பிணங்களாக வீழ்வர். அதேபோல பல நாட்களாகியும் தமது பிள்ளைகளின் பசியினைப் போக்க ஏதாவது வழி கிடைக்காதா என்ற ஏக்கத்தினால் உந்தப்பட்டு பயணிப்போரும் உயிர்துறக்கும் அவலமும் நிகழ்ந்தேதான் முடிந்தது.

இவ்வாறாக உயிரழந்தவர்களை உரியவர்களிடம் சேர்ப்பது என்பது எந்தளவிற்குச் சாத்தியமானது? உயிரிழந்தவர்களை அவர் இறந்த இடத்தின் அருகில் இருக்கும் மக்கள் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வர். எங்காவது கிடைக்கும் இடத்தில் அந்த நபர் புதைக்கப்பட்டு விடுவார். சில வேளைகளில் காயமடைந்து அவர் உயிருடன் இருந்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். அவர் குறித்த எந்தத் தகவலும் குடும்பத்தினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் தற்போதும் குறிப்பிட்ட உயிருடன் இருப்பதாகவே எண்ணி வாழ்கின்றனர் என்ற துயரத்தை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியுமா? இவ்வாறான தொடர்பறுந்து போன பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பற்றிய தேடல்களும், செய்திகளும் இலங்கையின் குறிப்பிட்ட சில ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன.

vanni-0012

இறந்தும் அவர்கள் இறக்கவில்லை என்ற ஏக்கத்துடன் வாழும் பல ஆயிரம் பேரும், இறக்காது திசைமாறி ஆதரவற்றோர் இல்லங்களிலும், முட்கம்பி வேலிமுகாம்களுக்கு இருக்கும் உறவுகளை இறந்ததாகக் கருதி இறுதி நிகழ்வுகளை நிகழ்த்தும் பல நூறு உயிர்களும் இன்னமும் வாழ்க்கைச் சுமையைச் சுமந்து பயணிக்கின்றனர்.

எறிகணைத் தாக்குதல்களால் தலைகள் துட்டிக்கப்பட்டு துடிக்கத் துடிக்;கவோ, உடல்கள் சிதறியோ ஏன் தம்மைக் காப்பாற்றுமாறு கெஞ்சிக் கெஞ்சி துடி துடித்து இறந்துபோன உடன்பிறப்புக்களையோ பிள்ளைகளையோ, தாய், தந்தையரையோ பறிகொடுத்த எத்தனை நூறு உயிர்கள் தமது மனநிலை பாதிக்கப்பட்டு நடைப்பிணங்களாக இன்று வாழ்கின்ற அவலம் என்பது மிகக் கொடிதாகக் காணப்படுகின்றது.

உணவுப்பிரச்சினை

எறிகணைத் தாக்குதல்களால்; நிகழ்ந்தேறிய உயிரிழப்புக்களை விடவும் பசியால் துடித்த உயிர்களின் அவலம் என்பதே வன்னியின் வரலாற்றில் மிகக் கொடிதாகும். வன்னி கடற்றொழில், விவசாயம் இரண்டையும் இரு கண்களாகக் கொண்ட நிலத்தொகுதியாகும். இங்கு மக்கள் வாழ்க்கையை முன்னெடுக்க வெளி இடங்களில் இருந்து நாளாந்த உணவுத் தேவைக்கான அவசியமான எந்தப் பொருட்களையும் வன்னியில் உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ளமுடியும். ஏற்கனவே பல ஆண்டுகளாக வன்னி மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைக் காலங்களில் எல்லாம் வன்னி மக்கள் தமது உணவுத் தேவைகளை எல்லாம் சுய உற்பத்திகளின் மூலமே ஈடுசெய்திருந்தமையே இதற்குச் சான்றாகும். இந்தச் சிறப்பிற்குரிய வன்னி மண்ணில் மக்கள் சந்தித்த உணவுப் பட்டினி என்பது மிக மோசமானது.

மக்களை முழுமையாக ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் கொண்டு செல்வதற்கான வழியாக மக்கள் மீது தாக்குதல்களை ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்வது அவர்கள் மீது உணவுப் பொருட்களுக்கான தடைகளை ஏற்படுத்துவது போன்ற உத்திகளை சிங்கள அரசு கைக் கொண்டது. இது ஏற்கனவே சம்பூர் பகுதியில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு சிங்கள அரசு அதில் வெற்றியும் பெற்றிருந்தது. இந்த நிலையில் மாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளை மையப்படுத்தி வாழ்ந்த அல்லது அப்பகுதிகளுக்குள் முடக்கப்பட்டமக்களை நோக்கியும் சிங்கள தேசம் தனது வன்முறைகளைக் கைக்கொண்டது.

vanni-0011



நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு வாழ்ந்த போது அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களே இருப்பதாகவும், 3இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்த போது 80ஆயிரம் வரையான மக்களே அங்கிருப்பதாகவும் சிங்கள தேசம் வெளி உலகிற்கு அறிவித்ததுடன் வன்னிப்பகுதிக்கு அனுப்பப்படுகின்ற உணவுப் பொருட்களையும் மிகக்குறைந்த அளவிலேயே அனுப்பி மக்களைப் பட்டினி போட்டது. ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு குடும்பமும் சராசரி இரண்டு தொடக்கம் நான்கு வரையான சந்தர்ப்பங்களிலேயே அரசினால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்ட பிச்சை என்று சொல்லக் கூடிய பொருட்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

அவ்வாறு வழங்கப்படுகின்ற பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்துவது என்பதே மிகக் கடினமாகும். மக்கள் குறைவாகவே வன்னியில் இருக்கிறார்கள் எனக் கூறி அனுப்பப்படும் பொருட்களைத் தான் இலட்சக்கணக்கான மக்களுக்கு பகிர்ந்தளிக்கவேண்டிய நிலையில் சிங்கள அரசாங்கத்தின் வன்னியில் இருந்த அதிகாரிகள் இருந்தார்கள். இந்த இடத்தில் அரசாங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் என்பவரைப் பற்றிக் குறிப்பிடவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பினைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் மக்களுடன் இறுதிவரை இடம்பெயர்ந்து மக்கள் அனுபவித்த அனைத்து அவலங்களையும் நேரடியாகவே கண்ணுற்றவர். அவர் அரச தரப்பினருக்கும், சர்வதேச ஊடங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வன்னியில் மக்கள் தொகை என்ன அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உடனடித் தேவைகள் என்ன? என்பன தொடர்பில் தொடர் அறிவிப்புக்களை மேற்கொண்டே வந்தார்.

ஆனாலும் அவருடைய கருத்தினைக்கூட எவரும் ஏற்று நடக்கவில்லை. படை ஆக்கிரமிப்புக்குள் வந்த அவர் தனக்கிருக்கும் அச்சுறுத்தல் எந்த வேளையிலும் எதிர்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காரணமாக தற்போது இலங்கையில் இருந்து வெளிநாடு ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த இடத்தில் மீண்டும் விடயத்தினைத் தொடர்கின்றோம். மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு சராசரி ஒரு வாரத்திற்குக் கூடப் போதுமானவையாக இருக்கவில்லை.

vanni-0012


இந்த நிலையில் தான் அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்த ஏராளமானோர் பிச்சை எடுக்கும் நிலைக்கு அல்லது கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிச்சை எடுக்கும் மனநிலைக்கு வந்தாலும் பிச்சை வழங்கும் நிலையில் யார் இருந்தார்கள்? யாரிடம் உணவுப் பொருட்கள் இருந்தன? குழந்தைகளுக்கான பால் மா என்பது கிடைக்கவே இல்லை. எங்காவது ஏதாவது பால் மா விற்கப்படுமாக இருந்தால் அதன் சாதாரண விலை ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்பனையாகியது. இந்த விலை கொடுத்து யாரால் பால் மா வாங்கிப் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும்.

இந்த நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றினால் ஒரு தொகுதி பால்மாப் பொதிகள் வன்னிக்கு எடுத்து வரப்பட்டிருந்தன. அவை வழங்குவதற்கான அறிவுப்பு புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பட்டது. அந்த மாவினைப் பெற்றுக் கொள்வதற்கென அதிகாலை 3மணிக்கெல்லாம் மக்கள் நிரலில் நின்றிருந்தனர். இடைக்காட்டுப் பகுதியில் மக்கள் வரிசையில் நின்று மாப் பொதிகளைப் பெற்றுக் கொண்டிருந்த காலை வேளை குறிப்பிட்ட மக்களை இலக்குவைத்து சரமாரியான எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்வேளை அங்கு நின்றிருந்த பலர் தமது குழந்தைகளையும் தங்களுடன் அழைத்தே வந்திருந்தனர். இந்தத் தாக்குதலின் போது 20ற்கும் அதிகமானோரும் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட பெருமளவானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன். எறிகணைத் தாக்குதல் நடைபெற்று சிறிது நேரத்தில் 5வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வீதியால் அழுதபடி ஓடியிருக்கின்றார். அவரை இடைமறித்த மக்கள் எங்கு செல்லுகின்றீர் தம்பி? என வினாவியிருக்கின்றனர். அதற்கு அந்தச் சிறுவன் “அம்மா செல்விழுந்து செத்துப் போனா, அப்பா இன்னும் நித்திரையால எழும்பேல்ல, கூட்டிக் கொண்டு வரப்போறன்” என்று கூறிவிட்டுத் தரிக்காமலேயே சென்று தந்தையை அழைத்து வந்ததை சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு நண்பர் தெரிவித்தார். அந்த ஐந்துவயதுச் சிறுவன் வாசகர்களுக்கு சிறு உதாரணத்திற்காகக் குறிப்பிடப்படுகின்றான். இது இழக்கப்பட்ட ஐம்பதனாயிரம் உயிர்களில் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

வறுமையால் பல பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் வறுமை நிலை காரணமாக தாய் தந்தையினர் படுகின்ற மன வேதனை என்பது மிகக் கொரூரமானது. ஒவ்வொரு பிள்ளையும் பசியினால் அழுகின்றபோது அந்தப் பிள்ளைகளை செல்மழைக்குள் காத்தும் வறுமையினால் அணு அணுவாய் பறிகொடுக்கும் பரிதாபத்தினை எவ்வாறு தாங்கிக் கொள்வது. பிள்ளைகளுக்கென ஒரு முறை மட்டுமே பால் மா வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட மாப் பொதிகளில் பெருமளவானவற்றை மக்கள் விற்பனை செய்துவிட்டனர். காரணம் அதன் மூலம் கிடைக்கின்ற சிறிய தொகைப் பணத்தினைக் கொண்டு ஏனைய பிள்ளைகளுக்கும் ஒரு வேளையாவது உணவு கொடுக்கலாம் என மக்கள் எண்ணினார்கள்.

இதனைவிடவும் பால் மாப் பொதிகளும் ஏனைய உணவுப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் வன்னியில் செயற்பட்ட சில தனியார் வாணிபங்களாலும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களால் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து பால் மாப் பொதிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மக்கள் அதிகாலையிலேயே கூடிவிட்டனர். சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் காத்திருந்தனர். நண்பகலாகியும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஈற்றில் பொருட்கள் தீர்ந்தாக அறிவிக்கப்பட வெயிலின் மத்தியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெறுங் கையுடனேயே வீடு திரும்பினர். அவர்களில் எத்தனை பேர் இடைநடுவே உயிர் அறுந்து வீழ்ந்திருப்பர் என்பது வேறு விடயம்.

பசியைத் தீர்த்துக்கொள்ள மக்கள் உண்ணக்கூடிய அனைத்தையும் உண்ணத் தலைப்பட்டார்கள். பிரண்டை என்றொரு கொடிவகை உயிரினம் இருக்கிறது. அதனை சம்பலாக்கி உணவாக உட்கொள்ளலாம் எனக் கருதிய பல குடும்பங்கள் அவற்றை உணவாக உட்கொண்டன. அவர்களில் பலர் உடல் நடுக்கத்திற்கு உட்பட்டனர். இதனை உட்கொண்ட இளம் பராயத்தினர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இத் தாக்கத்திற்கு உட்பட்டு அவதிப்பட்டனர். இவர்கள் புதுமாத்தளன் பகுதியில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.

வலிகள் தொடரும்......

- இராவணேசன்

Comments