புலம்பெயர் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை உடைக்க முயற்சி

புலம் பெயர் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து அவர்களை திசைதிருப்பும் வகையிலும் சிறிலங்கா மீதான சர்வதேச சக்திகளின் அழுத்தத்தைக் குறைப்பதற்கும் புலம் பெயர் நாடுகளிலுள்ள சிலர் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி வருவதால் புலம் பெயர் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

'இன்று புலம் பெயர் மக்கள் மிகவும் ஆறாத வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர். தமது இனம் அழிக்கப்பட்ட கொடூர நினைவுகளில் இருந்து இன்னமும் மீளவில்லை. எனினும் தமது தாயகம் விடுதலை பெற வேண்டுமென்ற வாஞ்சையில் உறுதியுடனும் உணர்வுடனும் உள்ளனர். ஆனால் புலம் பெயர் நாடுகளில் உள்ள சிலர் கடந்த வருடம் மே மாதத்திற்குப் பின்னர் எல்லாமே முடிவடைந்து விட்டது என்ற நிலையில் சிறிலங்கா அரசுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றனர். அந்த நிலை அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகின்றது. புலம் பெயர் நாடுகளில் இருந்து சிலர் தனியாகவும் குழுக்களாகவும் சிங்கள அரசுடனும் தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களுடனும் கொழும்பில் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் புலம் பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்தியும் உள்ளனர். ஆனால் இவர்கள் தமது சுயநலத்திற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மாறாக இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலை மற்றும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி என்பன தொடர்பாக சிங்கள அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களின் இச்சந்திப்புக்கள் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வையோ விமோசனத்தையோ பெற்றுக் கொடுக்கப்போவதில்லை.

சர்வதேசத்தின் அழுத்தத்தில் இருந்து சிங்கள அரசைக் காப்பாற்றவே இச்சந்திப்புக்கள் உதவப்போகின்றன. இன்று சர்வதேசம் தமிழின அழிப்பு, போர்க்குற்றம் என்பன தொடர்பாக இலங்கை மீது தனது கவனத்தைத் திருப்பி வருகின்றது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு, மனித உரிமை ஆர்வலர்கள் என்பன வன்னியில் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. அத்துடன் சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஐ.நா.வின் நிபுணர்குழு அமைத்தல், ஐP.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தம், போர் குற்ற விசாரணை என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தை புலம் பெயர் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர் தமிழின அழிப்பு மற்றும் போர் குற்றம் புரிந்தவர்களுடன் கைகுலுக்கி விருந்துண்டு உறவாடி வருகின்றனர். சிங்கள அரசு கொழும்பில் தமது பாதுகாப்பில் இருப்பவர்களையும் இதற்காக பயன்படுத்தி வருகின்றது. இதை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேச நாடுகளில் பரப்புரை செய்து சிறிலங்கா மீதான அழுத்தத்தைக் குறைத்து போர்க்குற்ற விசாரணை, தமிழின அழிப்பு போன்ற குற்றங்களை மறைப்பதற்கே உதவும். இதற்கு எம்மவர்கள் துணை போவது ஒரு ஆபத்தான விடயமாகும். எமது இனத்தை மீண்டும் பாதாள குழியில் தள்ளிவிடும் செயலாகும். இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழ் மக்களின் விடுதலையை மழுங்கடிக்கவே செய்யும்.

எனவே புலம் பெயர் தமிழ் மக்கள் இவ்விடயங்களில் விழி;ப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளைக் கண்டு எவரும் குழப்பமடையத் தேவையில்லை. காலத்திற்குக் காலம் சிறிலங்கா அரசுக்குத் துணைபோகும் பலரை நாம் கண்டு வந்துள்ளோம். எனவே எமது மக்கள் தாயக விடுதலை, இலட்சியம், கொள்கை என்பனவற்றை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காது புலம் பெயர் தேசங்களில் அரசியல் ரீதியான முனைப்புகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்தாலும் எமது இலட்சியத்தை எவராலும் சிதைத்து விடமுடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.' என எஸ்.ஜெயானந்தமூர்த்தி யானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments