மகிந்த ராஜபக்சாவின் இந்திய விஜயமும் பூகோள அரசியலும்

சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் இந்திய விஜயம் அனைத்துலக ஊடகங்களிலும், உள்ளூரிலும் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவரின் விஜயத்தில் உள்ள பூகோள அரசியல் தொடர்பில் அனைத்துலக ஊடகங்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ள அதே சமயம், ஆசியப்பிராந்திய வல்லரசுகள் இரண்டினதும் பிடிக்குள் தமது எதிர்காலம் தொலைந்துவிடப் போகின்றது என்ற அச்சங்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கு இணையாக வர்த்தக, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த இந்தியா முனைவது, சீனாவின் தொழிலாளர்களை போல இந்திய தொழிலாளர்களையும் சிறீலங்காவுக்கு திறந்துவிடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என தென்னிலங்கை மக்கள் தற்போது அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைகள் மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா சிறிலங்காவுக்கு அழுத்தம் தரலாம் என எதிர்பார்ப்புக்கள் எழுந்தபோதும், இந்தியாவின் அணுகுமுறை மறுதலையாகவே அமைந்துள்ளது.

அதாவது சீனாவுக்கு இணையாக தானும் பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் சிறீலங்காவை தன்பக்கம் இழுக்க இந்தியா இறுதி முயற்சியை மேற்கொள்ளும் ஒரு நிகழ்வாகவே மகிந்தாவின் இந்திய விஜயத்தை அவதானிகள் நோக்குகின்றனர்.

ஆனால் இந்தியாவின் இந்த தந்திரவலைக்குள் சிறீலங்கா சென்றுவிடாது இருப்பதில் சீனா குறியாகவே உள்ளது. மகிந்தா ராஜபக்சா இந்தியாவில் இருந்து திரும்பும் போது சீனா அரச சபையின் துணைப்பிரதமர் சாங் டிஜிங் அதிக கடன் உதவிகளுடன் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

சீனாவின் உதவிகள் தென்னிலகையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் அது தற்போது வடக்கிலும் தனது நிலையை விரிபுபடுத்தி வருகின்றது. இந்த நிலையில் தான் இந்தியா தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் உதவிகள் வடக்கையே பிரதான குறியாக கொண்டுள்ள போதும், தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெறும் சீனாவின் துறைமுக பணிகளை அவதானிக்கும் நோக்கத்துடன் அங்கு ஒரு தூதரக அலுவலகத்தை அமைப்பதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மகிந்தா ராஜபக்சா மூன்று நாள் விஜமாக இந்தியா செல்ல, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீஸ் கடந்த புதன்கிழமை இரு நாள் விஜயமாக யாழ்குடாநாடு சென்றுள்ளார். அதே சமயம் சீனா துணைபிரதமர் வியாழக்கிழமை (10) சிறீலங்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் 30 பேர் கொண்ட குழுவுடன் சிறிலங்காவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த மூன்று நிகழ்வுகளும் சிறீலங்காவின் கேந்திர முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளப்படும் பூகோள அரசியல் நகர்வாகவே கருதப்படுகின்றது. அதாவது இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் ஆதிக்கத்தை யார் கைப்பற்றப்போவது என்ற இழுபறி நிலையின் வடிவமாகவே இது நோக்கப்படுகின்றது.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தற்போது ஒரு அதிகார வெற்றிடம் காணப்படுவதாகவும் அதனை நிரப்புவதில் சீனா குறியாக உள்ளதாகவும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சீனாவுடன் போட்டியிட்டு அதனை கைப்பற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனினும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் இந்தியா உள்ளதா என்பது தான் தற்போதைய கேள்விகள். ஏனெனில் சீனாவின் படைபல அதிகரிப்பு, அதன் கடற்படை பலம் ஆகியவற்றிற்கு முன்னால் இந்தியாவில் பலம் தாக்குப்பிடிக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அதாவது சீனாவின் பலத்தை எட்டிப்பிடிப்பதற்கு இந்தியா மேலும் அதிகதூரம் செல்லவேண்டும்.

உதாரணமாக 2008 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு ஒதுக்கீடுகளை கருதினால் சீனாவின் பாதுகாப்பு ஒதுக்கீடு 61 பில்லியன் டொலர்கள், இந்தியாவின் பாதுகாப்பு ஒதுக்கீடுகள் 25 பில்லியன் டொலர்கள், ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒதுக்கீடுகள் 607 பில்லியன் டொலர்கள். உலகின் மொத்த பாதுகாப்பு ஒதுக்கீடுகளுடன் இதனை கருதினால் அமெரிக்கா 41.5 விகிதத்தையும், சீனா 5.8 விகிதத்தையும், இந்தியா 2.5 விகித்தையும் கெண்டுள்ளது.

எனவே தமது படை வளங்களை விஸ்த்தரிக்கும் நிலையை இந்தியா ஏற்படுத்திக் கொள்வதற்கு அதன் பாதுகாப்புச் செலவீனங்கள் அதற்கு ஒத்துiழைக்கப்போவதில்லை. அதனை தான் பிரித்தானியாவை தளமாக கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அதாவது ரஸ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அதிக படையினரின் எண்ணிக்கையை கொண்டுள்ளபோதும் உலகின் எந்த மூலக்கும் அவசர நிலமைகளில் படையினரை நகர்த்திச் சென்று போர் புரியும் நிலையில் அவர்கள் இல்லை என தெரிவித்திருந்தனர். 2008 ஆம் ஆண்டுக்கான ரஸ்யாவின் பாதுகாப்பு ஒதுக்கீடுகள் 36 பில்லியன் டொலர்கள்.

எனினும் தமது பிராந்தியத்திற்குள்ளும் அதிகாரங்களை தக்கவைப்பதற்கு இந்தியா – சீனாவுக்கு இடையில் அதிக போட்டி நிலவுகின்றது. தமது அண்டைய நாடுகளின் ஊடாக பிராந்திய ஆதிக்கத்தை செலுத்துவதற்கு அவர்களுக்கு அதிக பொருட்செலவுகள் ஏற்படப்போவதில்லை. ஆசியப் பிராந்தியத்தில் உள்ள வறியநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அதனை மேற்கொள்ள பிராந்திய வல்லரசுகள் தமக்குள் பனிப்போர் மோதலை ஆரம்பித்துள்ளன.

ஆனால் இந்த போட்டியில் சீனா முந்திவிட்டதாகவே இந்திய கொள்கைவகுப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பங்களாதேசம், நேபாளம், சிறீலங்கா, பர்மா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் என சீனா ஒரு வலுவான சுற்றுவளையத்தை உருவாக்கிவிட்டது. அது தனது நிதி உதவிகளையும், தொழிலாளர்களையும் அங்கு நகர்த்தியுள்ளதுடன், அந்த நாடுகளின் பொருளாதார அபிவிருத்திகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இருந்தபோதும் இராமேஸ்வரத்தில் இருந்து சில பத்து கி.மீ தொலைவில் உள்ள மன்னார் பகுதியின் ஊடாக இந்தியா இலகுவாக சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிடும் என தென்னிலங்கை ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவை பொறுத்தவரையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தை தன்வசப்படுத்த விரும்புகின்றது. அங்கு தனது பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய வல்லரசுகளுக்கு அது ஒரு வலுவான சவாலை தோற்றுவிப்பதுடன் வருங்காலத்தில் பிராந்திய வல்லரசுகளின் நகர்வுகளை கட்டுப்படுத்தும் ஒரு பேரம்பேசும் நிலையையும் அங்கு ஏற்படுத்த முனைகின்றது.

ஈரான் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்கு அனைத்தலக சமூகத்தின் வலுவான ஆதரவுகள் திரட்டப்படவேண்டும் எனவும் அமெரிக்க வரைந்துள்ள திட்டங்கள் இந்த வாரம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் பிளவுகள் எற்பட்டுள்ளன. சீனாவும், ரஸ்யாவும் அமெரிக்காவின் திட்டத்தை வலுவாக எதிர்க்கின்றன. அமெரிக்காவின் தடைகளையும் மீறி ஈரானுக்கு குறுந்தூர ஏவுகணைகளை வழங்க ரஸ்யா முன்வந்துள்ளது.

ரஸ்யாவின் இந்த நகர்வுகளுக்கு பின்னாலும், கொரிய வளைகுடாவில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளுக்கு பின்னாலும் சீனா உள்ளதாக அமெரிக்கா நம்பத்தலைப்பட்டுள்ளது. எனினும் யப்பானின் ஒப்பினாயா பகுதியில் இராணுவத்தளத்தை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு யப்பானின் புதிய பிரதமர் அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்காவுக்கு ஆறுதல் தரும் விடயம்.

அமெரிக்காவின் படைத்தளம் தமது மண்ணில் அமைக்கப்படாவிட்டால் அந்த பிராந்தியத்தில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்த முடியாது என யப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் அமெரிக்க தூதுவரின் யாழ் விஜயம் சிறிலங்கா தரப்பால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. அதாவது சீனாவை அதன் கொல்லைப்புறத்துக்குள் வைத்து முடக்க அமெரிக்க காய்களை நகர்த்தி வருகின்றதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவுக்கு அவ்வாறான ஒரு திட்டம் இருப்பின் அதற்காக அவர்கள் பயன்படுத்தப்போகும் தரப்பு தமிழர் தரப்பாகவே இருக்கும் என்ற கருத்துக்களும் வலுவாக எழுந்துள்ளன.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 14 ஆவது அமர்வில் கலந்துகொண்ட பெரும்பாலன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்த கருத்துக்களும் அதற்கு அனுகூலமாகவே அமைந்துள்ளன.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்-
நன்றி: வீரகேசரி வாரஏடு

Comments