கருவி ஏந்திய காந்தியவாதிகள்

மாவோயிஸ்டுகள் என அறியப்பட்ட நக்சல்பாரிகளை ஒழித்துக்கட்ட ராணுவம் அனுப்பப்படுமா? என்ற கேள்விக்கு நடுவண் அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக நடுவண் அமைச்சர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வில் ராணுவம் எவ்வித தன்னிச்சையான முடிவும் எடுக்க முடியாது. இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்பதால் நடுவண் அரசின் உத்தரவு வந்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்துவதின் மூலம் நமக்கு ஒன்று தெளிவாகப் புரிகிறது. விரைவில் திட்டமிட்ட உள்நாட்டு போர் ஒன்று நடத்துவதற்கு இந்தியா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது. ஒருபுறம் ராணுவம் பயன்படுத்தப்படாது என்று நடுவண் அமைச்சர்கள், பிரதமர் ஆகியோர் கூறிக் கொண்டிருந்தாலும் நிகழ்வு வேறுவிதமாக இருக்கிறது.

மாவோயினரின் தலைமையை அழித்தொழிக்கும் இந்தியாவின் போக்கு மிக கடுமையாக இறுகத் தொடங்கி இருக்கிறது. இதன் அடிப்படை பணியாக இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட 30 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல் தரமான பயிற்சி அளிக்க அதாவது குறி வைத்துக் கொல்லும் இஸ்ரேல் நாட்டின் பயிற்சியை அந்நாட்டின் உளவுத்துறையான மொசாட் அளித்து வருவதாக இணையத்தளங்கள் சொல்கிறது. மேலும் இஸ்ரேலிடமிருந்து அதிநவீன படைக்கலன்கள் வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கும் இணையச் செய்திகள், செறிவூட்டப்பட்ட ஒளிக்கற்றை தொழில் நுட்பத்தில் இயங்கும் அடைவெளிகாண் கருவிகள், உடல் சூட்டினைக் கொண்டு பதுங்கி இருக்கும் மனிதர்களை காண உதவும் கருவிகள், ஆளில்லாத தானியங்கி மூலம் பறக்கும் வான் ஊர்திகள், முதலியவை இந்தியாவால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக படைகட்ட வாங்கப்படும் கருவிகளாகும்.

இவை அமெரிக்க வல்லாதிக்க அரசால் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை ஆதிவாசி மக்களுக்கு எதிராக அடக்குமுறை அரசு கையில் எடுக்கப் போகிறது. இந்தியாவின் நடுப்பகுதியான அடர்ந்த வனம் சூழ்ந்த தண்டக்காரன்யாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்களுக்கு கெதிராக ஒரு அடக்குமுறையான மாந்த நாகரீகத்திற்கு ஒப்பாத சொந்த மக்கள் மீது நடத்தப்படும் ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாக இந்தியாவின் பாசிச அரசு போர் தொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 40 பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், கணக்கில்லா பழங்குடி பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் வரும் செய்திகள், மாந்த நேய சிந்தனையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மக்கள் விரோத சமரை நடத்திக் கொண்டிருக்கும் சிதம்பரம், இதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் அமைதியாகத்தான் இருக்கிறோம். போர் நடைபெறுகிறது என்று சொல்வதெல்லாம் ஊடகங்கள் சொல்லும் கட்டுக்கதைகள் என்று உளறிக் கொட்டினாலும், அவரே வாய் தவறி மீண்டுமாய் சொல்கிறார், கோடிக்கணக்கான ரூபாய் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ராணுவ தளவாடங்களை வாங்கிடவும், துணை ராணுவப்படை அமைத்திடவும் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும் பல்லாயிர கணக்கான அரச படைகளோடு போக்கிலிகளை கூட்டமைத்து ஒரு புதிய படையும் கட்டியமைக்கப்படுகிறது. இந்த பழங்குடி மக்களுக்கெதிராக எத்தனை போர் படைகள். எல்லையோர காவல்படை, நாகா போர்படை, பழுப்பு வேட்டை நாய்கள், ஆர்பியன்ஸ், கோப்ராக்கள் போன்ற அரசப் படைகளும், சால்வா ஜூடுன், ஹர்மத்வாகினி, சாந்தி சேனா போன்ற பல பெயர்களில் செயல்படும் போக்கிலிகள் கட்டியமைத்துள்ள சட்டவிரோத கூலிப் படைகளும், மனித நாகரீகமற்ற, ஈவுஇரக்கமில்லாத நிலையில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த போர் குறித்த செய்திகளை ஊடகங்களும் மறைக்கின்றன. ஆகையால், இவை வெளி உலகத்திற்கு தெரிவதில்லை. மேற்கு வங்கத்தின் லால்கர் முதல் மகாராட்டிரத்தின் கட்சிரோலி, ஆந்திரா, ஒரிசா வரை அடர்ந்த இருண்ட வனங்களிலிருந்து கொன்றொழிக்கப்படும் பழங்குடியின மக்களின் குரல்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

பாலியல் வன்புணர்ச்சிகளால் கதறித் துடிக்கும் பெண்களின் குரல்கள் வெளிவராமலேயே முடக்கப்படுகிறது. இப்பகுதிகளுக்குள் செய்தி சேகரிக்க ஊடகவியலர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் யாருக்கும் தெரியாமலேயே மூடி மறைக்கப்படுகிறது. இப்படி பழங்குடியின மக்களுக்கெதிராக மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படும் அரச அழித்தொழிப்பு இயக்கங்களுக்கு காரணம், மாவோயிஸ்டுகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அலறுகிறார்கள், நடுவண் அரசு அமைச்சர் சகாக்கள். ஆனால் உண்மைநிலை என்ன? இயற்கை எழில் கொஞ்சும் தண்டகாரன்யாவில் பூமிக்கடியில் புதைந்துள்ள 200 லட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை எல்லாம் பாகாசுர முதலாளிகள் அன்னிய நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு விற்று விடுவதற்காக அமெரிக்காவின் பாதம்தாங்கி மன்மோகன் சிங்கும், நாட்டுக் கோட்டை செட்டியார் சிதம்பரமும் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி இருக்கிறார்கள். சொந்த மண்ணை விட்டு பழங்குடியின மக்களை பிறித்தெடுக்க கடும் முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் இந்திய அரசின் பயங்கரவாத செயல்கள் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

பழங்குடியின மக்களின் நிலம், நீர், வனங்களிலிருந்து அவர்களை அன்னியப்படுத்தி, அவர்களை வாழ்வதற்கான அடிப்படை தன்மையற்ற நிலைக்கு தள்ளவே நடுவண் அரசு மாவோயிச பயங்கரவாத பூதங்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. இது அப்பாவி ஏழை மக்கள் மீது நடத்தப்படும் கொடியப் போர். மாவோயிஸ்டுகளின் மீதான போர் என்று கூறிக் கொண்டு, அங்கே கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை கொள்ளை அடிக்க, தொடர்ந்து முயற்சி செய்யும் இந்திய அரசு அதற்கான ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கவே மாவோயிசம் என்கிற ஒற்றைச் சொல்லை பயன்படுத்தி, மக்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தினம் தினம் அரசு செய்யும் கொலைகள் ஊடகங்களுக்குள் கொண்டுவரப்படாமல் தடுக்கப்பட்டு, அதே நேரத்தில் பழங்குடியின மக்கள் காவல்துறையினர் மீது தம்மை காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கும்போது, அவை பயங்கரவாதம் என்று சொல்லி, பழங்குடியின மக்களை இந்த நாட்டு மக்களிடமிருந்து பிரித்தாளும் சூழ்ச்சியை நடுவண் அரசு பரப்புரைகளால் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறது.

நம்ம கிராமத்துல ஒரு கதை சொல்வார்கள். ஒரு ஊர்ல ஒரு அண்ணனும் தம்பியும் இருந்தார்கள். அண்ணன்காரன் சரியான ஏமாற்றுப் பேர்வழி. எப்படியாவது சூழ்ச்சி செய்து செத்தை அபகரிக்க நினைக்கும் கேடு மனம் படைத்தவன் இந்தியாவைப் போல. ஆனால் தம்பி ரொம்ப நல்லவன். தமது சிறிய இடமாக இருந்தாலும், தமது வாழ்வே பெரிதென்று வாழும் மனம் கொண்டவன், பழங்குடியின மக்களைப் போல. அண்ணன்காரனுக்கும், தம்பிகாரனுக்கும் ஒருநாள் சொத்தை பங்கு வைத்துக் கொள்ளும் நிலை வந்தது. அண்ணன்காரன் தம்பியைப் பார்த்து, தம்பி நாம் மாடி வீட்டை வைத்துக் கொள்கிறேன். மாடி வீட்டிற்கு வெள்ளை அடிக்க ரொம்ப பணம் செலவாகும். அவ்வளவு செலவழிக்க உன்னால் முடியாது. அதனால் மாடி வீட்டை நான் வைத்துக் கொள்கிறேன். நீ உன் பங்கிற்கு சிறிய வீட்டை வைத்துக் கொள் என்று சொன்னான், நமது நடுவண் அமைச்சர் சிதம்பரத்தைப் போல.

அதோடு இல்லாமல், நான் பால் மாட்டை வைத்துக் கொள்கிறேன். நீ கன்றுக்குட்டியை வைத்துக்கொள். பால் மாட்டை உன்னால் பராமரிக்க முடியாது என்று கூறி பாகம் பிரித்தான், பழங்குடியின மக்களை காட்டில் இருந்து விரட்டுவதைப் போல. தம்பிக்காரனும் அண்ணன் நன்மைக்குத்தான் சொல்கிறான் என்ற நம்பி, கன்றுக்குட்டியை வாங்கிக் கொண்டு சிறிய வீட்டிற்கு திரும்பி வந்தான். சிறிது நாட்களில் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. இறந்த கன்றுக்குட்டியின் தோலை உரித்து ஒரு முரசு கட்டி, அதை தெருவெங்கும் அடித்துக் கொண்டு திரிந்தான் தம்பி. தம்பிக்கு கிடைத்த முரசு போலத்தான் பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் கிடைத்தார்கள். ஒருநாள் தம்பிக்காரன் மரத்தின்மேல் ஏறி உறங்கிக் கொண்டிருந்தான். அவன் தாம் செய்த முரசையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்கினான்.

இருட்டியது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்ததால், நடு சாமம் ஆனதும் அவனுக்குத் தெரியவில்லை. நள்ளிரவில் நாளைந்து கள்ளர்கள் தாம் கொள்ளையடித்த பொருட்களை எல்லாம் பங்குப்போட மரத்தடிக்கு வந்தமர்ந்தார்கள். மரத்தின் மீது அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தம்பிக்காரன் உறக்க நிலையில் தம் கரங்களில் இருந்த முரசை தவறவிட்டான். மரக்கிளைகளில் பட்ட முரசு, ஒலி எழுப்பிக் கொண்டே கீழே விழுந்தது. அது நேரிடையாக அமர்ந்திருந்த கள்வர்களில் ஒருவனின் தலையில் வீழ்ந்ததால் அதிர்ச்சியடைந்த நால்வரும், நாம் கொள்ளையடிப்பதை யாரோ பார்த்துவிட்டார்கள் என்று தலைதெறிக்க ஓடி ஒளிந்தார்கள். கொள்ளையடித்த பணம், பொருள் கொட்டிக் கிடந்தது. அதை தம்பி எடுத்து பத்திரப்படுத்தினான்.

இப்படி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்க இருந்த வளங்கள் தம்பி என்கிற பழங்குடியின மக்கள் காத்துக் கொள்வதற்கு முரசு துணை புரிந்ததைப் போன்று மாவோயிஸ்டுகள் துணைபுரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருந்தாலும், அதை மறுத்துரைப்பதே தமது கடமை என நடுவண் அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. தண்டகாரன்யாவில் ஒருபுறம் காக்கி சீருடை அணிந்த அரச பயங்கரவாத படைகள், மறுபுறத்தில் பச்சை சீருடை அணிந்த மாவோயிஸ்டுகளின் திரிலா படைகள். இச்சூழலில் தான் புக்கர் பரிசு பெற்ற சமூக உரிமைப் போராளி புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் அக்காட்டுப் பகுதிக்கு சென்று மாவோயிச தோழர்களுடன் கால்கடுக்க நடந்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை அங்கே உருவாக்கப்படும் மாந்த விடுதலையின் அடையாளங்களை படம் பிடித்து காட்டுகிறார். அருந்ததி ராயின் வார்த்தையில் மாவோயிஸ்டுகளை அழைப்பதானால், அவர்கள் கருவி ஏந்திய காந்தியப் படையினர்.

இந்த கருவி ஏந்திய காந்திய படையினர் குறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நேர்க்காணலில், அருந்ததி ராய் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். நூற்றுக்கணக்கான நடுவண் அரசின் ராணுவப்படைகள் பழங்குடி கிராமங்களை சுற்றி வளைத்து, அவர்களைக் கொன்று, பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி வரும்போது, இத்தனைக்கும் பிறகு அவர்களை தண்டனை இன்றி உலவும்போது மாவோயிஸ்டுகளின் எதிர் தாக்குதல் வன்முறையை எப்படி கண்டிக்க முடியும் என்று அவர் வினா தொடுத்தார். மேலும் அவர் கூறும்போது, 99.9 விழுக்காட்டு மாவோயிஸ்டுகள் பழங்குடியினர்தான். அவர்களின் அரசியல் குறிக்கோள் ஒத்திசைவானது என்கிறார்.

மேலும் பழங்குடி மக்களும், மாவோயிஸ்டுகளின் கருத்தியல்யாளர்களும் ஒருவருக்கொருவர் தங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான மூலமே இன்று நிறுவனமயப்பட்டுள்ள சனநாயகத்தின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கை இழப்பிலேயே அடங்கி உள்ளது. இக்கருத்துக்களை நாம் ஆழ்ந்து சிந்தித்தோம் என்றால் எந்த காலத்திலும் அங்கே இருக்கும் பழங்குடியின மக்களையும், மாவோயிஸ்டுகளையும் பிரிக்க முடியாது என்பதையும், வெறும் ஒரு விழுக்காடு மாவோயிஸ்டுகளே அந்த மக்களை செழுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும், மீதம் இருக்கும் 99.9 விழுக்காட்டு மக்கள் பழங்குடியின மக்கள்தான் என்பதையும் நம்மால் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.

அதேபோன்று, இந்த பிரச்சனையில் மிக தெளிவான கண்ணோட்டம் உள்ள காந்தியவாதியான கிமான்ஸ்குமார் கீழ்க்கண்டவாறு நகரவாசிகளின் வெள்ளை சட்டை சிந்தனைகளுக்கு மறுப்புரை சொல்கிறார். “நகரவாசிகளின் இன்றைய நிலை இதுதான். ஊர்புறங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. வசதியான வாழ்க்கை வாழும் அவர்களுக்குத்தான் அமைதித் தேவை. ஆனால் மிதிக்கப்படுபவர்களுக்கு முதல் தேவை நீதி. லட்சக்கணக்கான மக்கள் ஏன் படைகலன் ஏந்தி போராடுகிறார்கள். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க மக்களுக்கு இது புரிவதே இல்லை. நாம் நகரங்களில் வாழ்கிறோம். எதிரணியில் இருப்பவர்களுக்கு காவற்துறையும் இல்லை, அரசும் இல்லை, உண்ண உணவும் இல்லை, அவர்கள் தான் படைகலன் ஏந்தியுள்ளனர்.
இம்மக்கள் பல்லாண்டுகளாக அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டம் இது” என்று கூறும் அவர், மேலும் கூறும் போது, “மாவோயிஸ்டுகளின் வன்முறை குறித்து அரசு பேசுகிறது. ஆனால் அரசு தான் வன்முறையைப் பயன்படுத்துகிறது. அமைதியைப் பற்றி உள்துறை அமைச்சர் பேசிக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் நீங்கள் எப்போது பார்த்தாலும் பழங்குடி மக்களை தாக்கிக் கொண்டே இருந்தால் எப்படி அமைதி நிலவும். வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்துமாறு மாவோயிஸ்டுகளுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்ப்பார்க்கலாம். உங்கள் நீதித்துறை, உங்கள் நிர்வாகம், உங்கள் மக்கள் நாயக அரசு என நீங்களே அவர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டுகிறீர்கள். வேறு வழியே இல்லாமல் துப்பாக்கியை பயன்படுத்தும் முடிவிற்கு தள்ளப்படும் பழங்குடி மக்கள் மீது பழி போட முடியுமா?” என்கின்ற கிமான்ஸ் குமாரின் கேள்விக் கணைகள் சொகுசு வாழ்க்கை வாழும் நமது நெஞ்சில் ஈட்டியாக பாய்கிறது.

சில தமிழ் ஊடகங்கள் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவு களத்தில் நின்று கொண்டு, மாவோயிஸ்டுகள் ஏதோ இந்தியாவையே அழிக்க முனைப்புக் காட்டுபவர்களைப் போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் எழுத்தாளர் அருந்ததி ராய், பழங்குடியின மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான உறவை, அதன் தொடக்கத்தை கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார். “துவக்கக்கட்டத்தில் தண்டகாரன்யாவில் மாவோயிஸ்டுகள் காலடி வைத்தபோது, பழங்குடி மக்கள் அவர்களை சந்தேக கண் கொண்டே நோக்கினர். வெளியிலிருந்து வருபவர்களை பழங்குடி மக்கள் எளிதில் நம்பிவிட மாட்டார்கள். அவர்களை வென்றெடுக்க மாவோயிஸ்டுகளுக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. இச்சூழலைப் பயன்படுத்தி காவல்துறையினர் மோதுதல் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை படுகொலை செய்தனர். இழப்புகளை பொருட்படுத்தாது அவர்களோ, மக்களிடையே நிலைப்பெற்று தாங்கள் யார் என்பதை புரிய வைத்தனர்.

பீடி இலையை சேகரிப்பதற்கான கூலி உயர்வு, மூங்கில்களை வெட்டி சேகரிப்பதற்கான கூலி உயர்வு போன்றவற்றிற்காக போராட்டங்களை நடத்தி வெற்றியை தேடித் தந்தனர். பழங்குடியின மக்களின் உழவு மற்றும் கால்நடை மேய்ப்பு போன்ற வாழ்வியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருந்து, பழங்குடி பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்திய வனத்துறை அதிகாரிகளின் கொடுமைகளுக்கு எதிராக மக்களை அணித் திரட்டினர். காட்டிலாக்கா அதிகாரிகள் காட்டின் உள்ளேயே நுழையாதபடி தடுத்து நிறுத்தினர். அத்துமீறி நுழையும் அதிகாரிகளை மரத்தில் கட்டி வைத்து பழங்குடி மக்களைக் கொண்டு அடிக்க வைத்து, அவர்களின் ஆற்றலை உணர வைத்தனர். மூன்று லட்சம் ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று தண்டக்காரன்யாவில் நிலமற்ற விவசாயே ஒருவர் கூட கிடையாது.

இவ்வாறு வளர்ச்சியடைந்து, வலிமை பெற்ற மாவோயிஸ்டுகள் 60,000 ச.கி.மீ. கொண்ட அந்தக் காட்டுப்பகுதி முழுவதையும், ஆயிரக்கணக்கான கிராமங்களையும், பல லட்சம் மக்களையும் தங்கள் அரவணைப்பின்கீழ் கொண்டு வந்து நெஞ்சுயர்த்தி நிற்கின்றனர். அவர்கள் ஜனாதனா சர்க்கார் என்ற மக்கள் அரசைக் கட்டியமைத்து வேளாண்மை, வர்த்தகம், சிறுதொழில், சுயசார்பு பொருளாதாரம், நீதி, பாதுகாப்பு, மக்கள் உறவு, பண்பாடு, கல்வி அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர். சேத்னா நாட்டிய மஞ்ச் என்ற அவர்களின் பண்பாட்டு அமைப்பில் 10,000 உறுப்பினர்கள் உள்ளனர். கேந்தி, சத்தீஸ்கரி, ஹல்பின் இந்தி ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளனர்.” இந்த விவரங்களையெல்லாம் தொகுத்தளிக்கிறார் அருந்ததி ராய். (தோழர்களுடன் ஒரு பயணம் -அருந்ததி ராய்)

ஆக, இப்படி ஒரு பண்பாட்டு நடவடிக்கையையும், மாந்தகுல விடுதலையையும் தேவை என்பதை புரிந்துணர்ந்து கொண்டு செயல்படும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் சிறப்பை நாம் பாராட்டி, அவர்களோடு கரம் கோர்க்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். மேலும், அந்த மக்கள்மீது அரசு நடத்தும் பயங்கரவாத அழித்தொழிப்பு சமரை முடிவுக்குக் கொண்டுவர அணி திரள வேண்டும். இது மனிதன் என்று கூறிக் கொள்ளும் எல்லாருடைய கடமையாகும். அரசும், அதன் ஊதுகுழல் ஊடகங்களும் சொல்வதைப் போல, இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. கருவி ஏந்திய காந்திய வாதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

—மீனகம் இளமாறன்

Comments