போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிகளை நிறுத்த வேண்டும்!

பாகம் 5

புலிப் போராளிகளின் நிலைகள் மீதும் அவர்களுடைய முக்கிய நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீதும் சிறிலங்கா வான் படை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது அவ்வளவோடு நின்றிருந்தால் பரவாயில்லை புலிகளின் ஆட்சிக்குட்பட்ட நிலப் பரப்பில் வாழும் அப்பாவிப் பொது மக்கள் மீதும் மிலேச்சதனமான குண்டுத் தாக்குதலை நடத்தியதோடு அதை நியாயப்படுத்தவும் செய்தனர்.

மூன்றாம் ஈழப் போர் காலத்தில் வடமராட்சியில் இயங்கிய ஒரு பள்ளிக் கூடத்தின் மீது வான் தாக்குதல் நடத்தி 25க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகளைக் கொன்றனர் இதைக் கண்டித்து யூனிசெப் எனப்படும் ஐநாவின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் அறிக்கை விடுத்த போது அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் யூனிசெப்பைக் கண்டித்துப் பதில் அறிக்கை விடுத்தார்.

புதுக்குடியிருப்புச் சந்தையில் நின்ற பொது மக்கள் மீது கிபீர் விமானங்கள் திடீர் குண்டு வீச்சு நடத்திப்படு கொலை நடத்திய போதும் ஐநா கண்டன அறிக்கை விடுத்தது இதற்கும் கதிர்காமர் கொடுத்த சாட்டை அடி எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் மலேரியா நோய் தடுப்பிற்காக நுளம்பு கொல்லி மருந்து அடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பாரம் பரியம் இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது வன்னியில் இடை விடாது நடந்த வான் குண்டு வீச்சுக்களை நிறுத்தும் படி ஐநா அறிக்கை விட்ட படியே இருந்தது சிறிலங்கா அரசு மனம் போல குண்டு வீச்சுக்களை நடத்திய படி இருந்தது முன்பு காலையும் மாலையுமாக நடந்த விமானத் தாக்குதல்கள் இறுதிக் கட்டத்தில் மக்கள் உறக்கத்தில் இருக்கும் நள்ளிரவிலும் நடத்தப்பட்டது.

விமானத்தில் இருந்து பரா வெளிச்சக் குண்டுகளைப் போட்டுப் இரவைச் செயற்கையாகப் பகலாக மாற்றுவார்கள் பின்பு குண்டு வீச்சை நடத்துவார்கள் இதனால் பசிக் கொடுமைக்கு ஆளான பொது மக்கள் தூக்க மின்மையால் அல்லல்பட்டனர்.

வன்னிப் பிரதேசத்திலுள்ள மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு வான் தாக்குதல் நடத்தப்பட்டது இதைச் சிறிலங்கா அரசு மறுக்கவோ மறைக்கவோ இல்லை புதக்குடியிருப்பு அரச மருத்துவமனை பல தடவை தாக்குதலுக்கு உட்பட்டது ஒரு முறை ஐ சி ஆர் சி அதிகாரிகள் முன் நிலையில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரும் சனாதிபதியின் ஆசை தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச புதுக்குடியிருப்பு மருத்துவ மனைத் தாக்குதலை பின்வருமாறு நியாயப் படுத்திப் பேசினார் அரச மருத்துவ மனையாக இருந்தாலும் அங்கு கூடுதலாகக் காயப்பட்ட புலிகள் தான் சிகிச்சை பெறுகிறார்கள் அவர்கள் எங்கிருந்தாலும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்.

கிளிநொச்சியின் புதிய மருத்துவமனைக் கட்டிடங்கள் மீது வைத்த குறி தவறி ஒரு மக்கள் குடியிருப்பைத் தாக்கியது இதனால் ஒரு குடும்பம் முற்றாக அழிந்தது மருந்துவமனைக் கட்டிடத்தின் கண்ணாடி யன்னல்களும் கூரைத் தகடுகளும் சேதம் அடைந்தன.

தர்மபுரம் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்பு நான் அங்கு பார்வையிடச் சென்றேன் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து கிடந்தது ஆனால் துணிச்சல் மிகுந்த தமிழ் மருந்துவர்களும் மருத்துவ தொண்டர்களும் ஏதோ தம்மால் இயன்ற பணியைச் செய்த படி இருந்தனர் இறந்தவர்களுடைய உடல்கள் நான் போகு முன்பே அகற்றப் பட்டு விட்டன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர் ஒரு இரண்டு வயதுச் சிறுமி தனது தாயரின் மடியில் மயக்க நிலையில் கிடந்தாள் அவருடைய இரு கால்களும் முழங்காலோடு துண்டிக்கப்பட்டு விட்டன குண்டின் ஒரு பாகம்; அவளுடைய காலைப் பதம் பார்த்த விட்டது.

கட்டத் துணியால் முழங்கால்கள் இரண்டும் சுற்றப்பட்டிருந்தாலும் இரத்தம் கசிந்தபடியே இருந்தது நான் மருத்துவமனையை விட்டுச் சென்ற சில மணி நேரத்தில் அந்தச் சிறுமி இறந்து விட்டதாக அறிந்தேன் இப்படியான காட்சிகளைப் பார்த்தும் அது பற்றிக் கேள்விப் பட்டும் என் மனம் கல்லாகி விட்டது இதன் உளவியல் தாக்கம் சிறிது காலத்தில் தெரியவரும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பெரும் பொருட் செலவில் கட்டியெழுப்பிய டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவ நிலையம் இன்று இல்லை என்றாகி விட்டது ஒன்றுமே இருக்கக் கூடாது என்று சிங்கள அரசு கங்கணம் கட்டி நிற்கிறது இது சாத்தியமா என்று தெரியவில்லை.

பேச்சுவார்த்தை காலத்தில் கட்டப்பட்ட சமாதானச் செயலகம் விமானக் குண்டு வீச்சு மூலம் நொருக்கப்பட்டுள்ளது இடம் பெயர்ந்தோருக்கான உணவு தயாரிப்பு அங்கு நடந்த போது இந்தத் தாக்குதல் நடந்தது 16 பொது மக்கள் இதில் உயிரிழந்தனர்.

கிளிநொச்சியில் புலிகள் தமது சட்ட ஒழுங்கு தேவைக்காக அமைத்த காவல்துறை தலைமைச் செயலகத்தின் கட்டிடத் தொகுதி காலையும் மாலையும் தொடர்சியாக நடந்த விமானத் தாக்குதலில் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.

மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் வடபகுதியின் நெற் களஞ்சியங்களாக உள்ளன மக்கள் தொகை நிரம்பிய யாழ்குடா நாட்டிற்கு இப்பகுதியில் இருந்து வரும் நெல்லும் பிற தானியங்களும் உணவுப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்கின்றன.

தமிழ் நாட்டில் ஐந்திணைப் பிரிவுகளைக் காணலாம் மேற்கூறிய மாவட்டங்களில் பாலையும் குறிஞ்சியும் காணப்படுவதில்லை மருதம் முல்லை நெய்தல் என்பன மாத்திரமே உண்டு இதனால் விவசாயமும் மீன் பிடியும் இதில் வாழம் மக்களின் வாழ்வாதரங்களாக இடம் பெறுகின்றன.

நான்காம் ஈழப் போரில் வன்னி மக்கள் தமது நிலத்திணை எனப்படும் நகராப்பொருளையும் இயங்குதிணை எனப்படும் நகரும் பொருளையும் இழந்துள்ளனர் இரண்டையும் கூட்டாகத் தாவரசங்கமம் என்பார்கள் தமிழீழ மக்கள் சுயகௌரவம் உட்பட அனைத்தையும் இழந்து விட்டனர்.

ஈடுசெய்ய முடியாத பெரும் பொருளாதார இழப்பை இந்த மக்கள் சந்தித்துள்ளனர் அரசின் முக்கிய திட்டம் மக்களின் பொருளாதாரத்தை முற்றாக வெட்டிச் சாய்ப்பதோடு அவர்களைக் கையேந்தும் நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதாகும்.

ஏன்னுடைய பார்வையில் அரசு ஒரு பூண்டோடு அழிக்கும் போரை நடத்தியிருக்கிறது ஒருவர் கொல்லப்பட்ட அது தனிக் குடும்பத்தின் சோகம் குறுகிய காலத்தில் ஒரு மக்கள் கூட்டமே கொல்லப் பட்டால் அது வெறும் புள்ளி விவரம் என்று வெளியுலகம் ஒதுக்கிவிடக் கூடாது.

ஈழத் தமிழனின் சோகக் கதை இலக்கியப் பொருளாகிவிட்டத தமிழ் நாட்டுக் கவிஞர் தவபாலன் உயிர்வேள்வி என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார் இது ஈழத்தமிழனின் கண்ணீர்கதை பற்றியது தமிழீழத்திலும் ஒரே தவபாலன் இருந்தார் போருக்கு இரையாகிவிட்டார்.

புலிகளின் குரல் வானொலியின் செய்தி ஆசிரியராகவும் செய்தி விமர்சகராகவும் பணியாற்றிய ஊடகவியாளர் தி. தவபாலன் மே 2009ல் செல் அடிபட்டு உயிர்நீத்தார் புலிகளின் குரல் வானொலியின் தலைமைச் செயலகமும் ஒலிபரப்பு நிலையமும் நவம்பர் 2008ல் வான்தாக்குதலுக்கு உள்ளாகினாலும்.

இதில் தவபாலனும் வானொலிப் பொறுப்பாளர் தமிழன்பனும் மயிரிழையில் உயிர் தப்பினர் ஆனால் நிலையத்தில் செய்தி வாசிப்பவராகப் பணிபுரிந்த நாட்டுப்பற்றாளர் இசைவிழி செம்பியனும் இரு தொழில் நூட்பவிலாளர்களும் குண்டு வீச்சில் உயிரிழந்தனர்.

தேசியத் தலைவர் நவம்பர் 27ம் நாள் நடத்தும் மாவீரர் உரையைத் தடுப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது திட்டமிட்ட படி பிறிதோர் இடத்திலிருந்து மாவீர் உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது வரப்போகும் அனர்த்தங்களுக்கு கட்டியம் கூறுவது போல் வானொலித் தாக்குதல் இடம் பெற்றது.

பலநூற்றாண்டு பழமை வாய்ந்த நீர்ப்பாசனக் குளங்கள் மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படுகின்றன பருவக் காற்று மழையை ஏற்தும் நான்கு புறமும் உயர்ந்த கரை உடைய இப்பகுதி நீர்த்;தேக்கங்கள் குளம் என்று அழைக்கப்படுகின்றன.

வன்னி என்று அழைக்கப்படும் இப்பகுதி அனைத்தையும் கூறுபோட்டு ஆட்சி செய்த வன்னிபங்கள் என்று அழைக்கப்பட்ட குறுநில மன்னர்கள் தரை அமைவை அடையாளம் கண்டு குளங்களை அமைத்ததுள்ளனர் மன்னாரில் காணப்படும் கட்டுக்குளம் மிகப் பழமைவாய்ந்தது.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பான காலத்திற்குரிய குளமாக இது இருக்கலாம் இதைப் பூதங்கள் கட்டியிருக்கலாம் என்ற அர்த்தத்தில் ஆங்கில ஆட்சியாளர்கள் அதை ஜயன்ற்ஸ் ராங்க் என்று அழைத்தனர் மன்னார் செழித்து வளர்ந்தது இந்தக் குளத்தால் என்று சொல்லப்படுகிறது

தொடரும்.

அரசியல் ஆய்வாளர் க. வீமன்

Comments