கொழும்பு திரைப்பட விழா தோல்வி-நாம் தமிழராய் இணைந்து வெற்றி தேடித்தந்த சக அமைப்புக்களுக்கு சீமான் நன்றி

கொழும்பில் நடைபெற்ற இந்தித் திரைப்பட விழா தோல்வியடைந்துள்ளது. நாம் தமிழராய் இணைந்து வெற்றி தேடித்தந்த சக அமைப்புகளுக்கு இயக்குநர் சீமான் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்திய ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக ரீதியிலான மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்த போராட்டம் முக்கிய காரணம் ஆகும்.

தமிழ் இனப்படுகொலையை மறைக்கவும் சர்வதேச அளவில் தனது நாட்டின் மீதான அவப்பெயரைப் போக்கவும் இலங்கையை பாதுகாப்பான சுற்றுலா நாடாக பறை சாற்றவும்,இந்திய அரசின் உதவியுடன் கொடுங்கோல் சிங்கள அரசானது ஜூன் 2 முதல் 4 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பு நகரில் நடத்தி அதன் தொடர்ச்சியாக உலக வர்த்தக மாநாட்டை நடத்தி தனது வர்த்தக நலனை பெருக்கிக் கொள்ளலாம் என்பது தான் சிங்கள அரசின் திட்டம்.இதற்காக இலங்கை அரசு ஏறத்தாழ 100 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.

ஆனால் நாம் தமிழர் இயக்கம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்த பின்பு சர்வதேச திரைப்பட விழா முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது.பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ள இந்த வெற்றியில் நாம் தமிழர் இயக்கம் முக்கிய பங்காற்றியுள்ளது.

முதற்கட்டமாக இந்த நிகழ்வின் பிரதான விருந்தாளியான அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக மிக்ப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்தது..முதன் முதலாக கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் வீட்டின் முன் மாபெரும் முற்றுகைப்போராட்டத்தை நடத்தியது.கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் கண்டு தனது கொழும்பு செல்லும் முடிவைப் பரீசீலிப்பதாக நடிகர் அமிதாப் இணையத்தில் அறிவித்தார்..ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு பின்பும் அவர் தனது முடிவை அறிவிக்காததால் மே 11 ஆம் நாள் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நூற்றுககணக்கானோர் கலந்து கொண்டனர்.எமது போராட்டத்தின் வீரியம் காரணமாக அமிதாப் மற்றும் ,அபிஷேக்பச்சன்,ஐஸ்வர்யாராய்ஆகியோர் கொழும்பு திரைப்பட விழாவில் இருந்து மறுநாளே விலகிக்கொண்டனர். இதுவே இந்த தொடர் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாகும்.இதன் மூலம் மற்ற நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள மிகவும் தயங்கினர். இந்த திரைப்பட விழா நிகழ்வு தோல்வியடையப் போகின்றது என்பதற்கு அமிதாப் விலகிய நிகழ்வே கட்டியம் கூறுவதாக அமைந்தது.

அதற்கு பின்னர் தூதராக நியமிக்கபப்ட்ட சல்மான்கான் கொடும்பாவியை நாம் தமிழர் இயக்கமும் இதர தமிழ் அமைப்புக்களும் இணைந்து மும்பை தாராவி காவல் நிலையம் முன் எரித்தனர். அதற்குப் பின்னும் ஜூன் 1 ஆம் நாள் மும்பை ஆசாத் மைதானத்தில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த இந்தி நட்சத்திரங்களைக்கண்டித்து ரஜினி ரசிகர் மன்றத்துடன் இணந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.இன்று கொழும்பு சர்வதேச திரைப்பட விழா மிகப்பெரிய தோல்வியடைந்து இலங்கை அரசின் திட்டத்தில் மண் அள்ளிப் போடப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் அமைப்புக்களும் தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுத்த பொழுது மும்பையில் களத்தில் இறங்கி நாம் தமிழர் இயக்கம் போராடியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இவவாறு பல்வேறு கட்டப்போராட்டங்களை நாம் தமிழர் இயக்கம் நடத்தியதன் காரணமாக இன்று மிகபபெரிய வெற்றி நம் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்துள்ளது. இது நாம் தமிழர் இயக்கம் மட்டும் பெருமைப்படும் வெற்றியல்ல. மற்ற அமைப்புக்களின் பங்கும் இதில் கலந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய வர்த்தக சபை,தென்னிந்திய நடிகர் சங்கம்,இதில் ஆக்கப்பூர்வமான படைப்புக்களை அளித்த நண்பர்கள், குரல்கொடுத்த கட்சிகள்,தமிழ் அமைப்புக்கள், தன்னெழுச்சியாக திரண்ட தமிழ் ஆர்வலர்கள், போராட்டத்தை வெளிக்கொணர்ந்த ஊடகங்கள் அனைவரிடமும் இந்த நேரத்தில் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Comments