தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது – கல்ப் நியூஸ்

தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அழிக்க முடியாது எனவும், அது என்றும் உயிர்வாழ்ந்து கொண்டு இருப்பதால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனவும், டுபாயில் இருந்து வெளியாகும் கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிகை இன்றைய தனது தனது அபிப்பிராயப் பத்தியில் தெரிவித்துள்ளது.

கொழும்பு அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருந்தாலும், தமிழ் மக்களிடையே தமிழீழக் கோட்பாடு தொடார்ந்தும் கனன்றுகொண்டு இருப்பதால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தாமதிக்காது விரைந்து நடவடிக்கை எடுத்து இனப்பிரச்சனைக்கு தீர்வைக்காண வேண்டும் என இந்தப் பத்திரிகை கூறுகின்றது.

வரலாறு கடந்த கால அரசியல் எனவும், தற்கால அரசியல் எதிர்கால வரலாறு எனவும் சுட்டிக்காட்டும் பத்திரிகை, தமிழீழக் கோரிக்கை தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் வலுவாகக் காணப்படுவதை கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் உணர்த்தி நிற்பதாகத் தெரிவிக்கின்றது.

முன்னர் வன்முறை கலந்த போராட்டமாகக் காணப்பட்ட தமிழ் மக்களின் விடுதலை முயற்சி, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் நகர்வுகள், நிதி சேகரிப்புக்கள் என்ற புதிய வழி முறைகளில், மிகுந்த பிரயத்தனத்துடன் வெளிநாடுகளில் நடைபோட ஆரம்பித்துள்ளன.

தமிழ் மக்களிற்கான தீர்வை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும். முகாம்களிலுள்ள மக்கள் தாங்கள் முகாம்களைச் சேர்ந்தவர்கள் அல்ல இலங்கையைச் சேர்ந்த குடிமக்கள் என்று எண்ணும் நிலை ஏற்பட வேண்டும்.

சிறுபான்மை மக்கள் அரசியலில் ஈடுபடுவது உடனடித் தேவையாகின்றது. வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, மின்சாரம், குடிநீர், கல்வி போன்றவற்றுடன் தமிழ் மக்களின் வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவற்றைச் செய்ய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கால தாமதம் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்ப் நியூஸ் தனது அபிப்பிராயப் பத்தியில் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted by எல்லாளன் on 8:02 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for தமிழீழக் கோரிக்கையை அழிக்க முடியாது – கல்ப் நியூஸ்

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.