பூகோள அரசியல் மாற்றங்களால் தடம்புரளும் சிறீலங்காவின் வெளிவிவகார உறவுகள்

பல நூறு மில்லியன் ரூபாய்கள் செலவில் அனைத்துலக மட்டத்தில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாகவே இந்த வாரம் நடைபெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் மூவர் கொண்ட குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த செவ்வாய்க் கிழமை (22) அமைத்துள்ளார்.

இந்த குழுவின் தலைவராக இந்தோனேசியாவை சேர்ந்த முன்னாள் நீதி ஆணையாளர் மார்சூகி தருஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவை சேர்ந்த சட்டவியல் பேராசிரியர் ஸ்ரீவன் ரட்னர், தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஜஸ்மின் சூகா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.நாவின் இந்த அறிக்கை வெளியாகிய தினத்தில் சிறீலங்கா அரசுக்கு மற்றுமொரு அதிர்ச்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பு செய்வதற்கு சிறீலங்கா அரசு மனித உரிமைகளின் நடைமுறைச் செயற்பாடுகள் குறித்து எழுத்துமுலமான உத்தரவாதங்களை தரவேண்டும் என சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இரண்டு சம்பவங்களையும் தடுப்பதற்கு சிறீலங்கா அரசு கடுமையாக முயன்றிருந்தது. ஐ.நாவுக்கான சிறீலங்காவின் நிரந்தரப்பிரதிநிதி பாலித கோஹன ஒருபுறம், புதிதாக நியமனம்பெற்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மறுபுறம் என நியூயோர்க்கிற்கு பல முறை விஜயம் மேற்கொண்டு ஐ.நாவின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு அவர்கள் முயன்றிருந்தனர். சிறீலங்காவின் நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீசும் ஐ.நா அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டனிடமும் ஆதரவு தேடி பீரிஸ் சென்றிருந்தார்.

இந்த முயற்சிகளுக்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டபோதும் அது வெற்றிபெறவில்லை. மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகையை நிபந்தனைகளின்றி பெறும் சிறீலங்கா அரசின் முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளது. இதனை பெறுவதற்காக சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி ஆணையாளர் நாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரசெல்ஸ் சென்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தனர். இந்த வருடத்தில் சிறீலங்காவின் குழுவினர் மூன்று தடவைகள் பிரசெல்ஸ் இற்கு பயணித்திருந்தனர்.

சிறீலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 7,000 இற்கு மேற்பட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகளை அளித்து வருகின்றது. இதன் மூலம் சிறீலங்கா அரசு ஆண்டுதோறும் 1.24 பில்லியன் ஈரோ (1.7 பில்லியன் டொலர்) பெறுமதியான பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றது. இந்த வர்த்தக வரிச்சலுகை மூலம் கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு பெற்றுக்கொண்ட வருமானம் 96 மில்லியன் டொலர்களாகும். வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அரசு இந்த வருமானத்தை இழக்க நேரிடும் என்பதுடன் பல இலட்சம் சிங்கள மக்கள் வேலைவாய்ப்புக்களையும் இழப்பார்கள்.

எனினும் எதிர்வரும் 1 ஆம் நாளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விண்ணப்பம் செய்து வரிச்சலுகையை சிறீலங்கா அரசு பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக உள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட புடவை நிறுவனம் ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார். 17 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அவசரகாலச்சட்டத்தை முழுமையாக நீக்குதல் உட்பட பல நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளதுடன், அதனை ஏற்றுக்கொள்வதாக எழுத்து மூலம் பதில் தரப்பட வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாணின் விலையையும், பால்மாவின் விலையையும் அதிகரித்து வரும் அரசுக்கு தென்னிலங்கை மக்களிடம் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி அரசியல் ரீதியாக பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஐ.நாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்த இந்த அறிவிப்புக்களை தொடர்ந்து சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அவசர கூட்டத்திற்காக அழைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அரச தலைவர் மாளிகையில் கூட்டம் நடைபெற்றபோதும் அதில் என்ன கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் இந்த பத்தி எழுதப்படும் வரை அரசதரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவை தாம் எதிர்ப்பதாக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த புதன்கிழமை (23) தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் குழு தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதும் அதன் உறுப்பினர்கள் மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்றே தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா அமைத்துள்ள மூவர் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவை சேர்ந்த சட்டவியல் பேராசிரியர் ஸ்ரீவன் ஆர் ரட்னர் - மிச்சிக்கன் மற்றும் ரெக்சஸ் ஆகிய புகழ்மிக்க அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சட்டவியல் பேராசிரியராக கடமையாற்றியதுடன், அமெரிக்க வெளியுறவுத்திணைக்களம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றின் சட்டவியல் ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றி வந்திருந்தார்.

போரியல் விதிகள், மனித உரிமை மீறல்கள் மேற் கொண்டவர்கள் மீதான நடவடிக்கை போன்றவற்றில் நிபுணத்துவம் கொண்ட இவர் பல சட்டவியல் விதிகளையும் உருவாக்கியுள்ளார். இந்தோனேசியாவை சேர்ந்த மார்சூகி தருஷ்மன் அனைத்துலக ரீதியாக பல விசாரணைக்குழுக்களில் பங்கு பற்றியிருந்ததுடன், சிறீலங்கா அரசினால் அமைக்கப்பட்ட அனைத்துலக சுயாதீன நிபுணர் குழுவிலும் அங்கம் வகித்திருந்தார். இந்தியாவின் பிரதம நீதிபதி திரு பி.என்.பகவதி தலைமையிலான இந்த குழுவின் நடவடிக்கைகள் மீது அரசு மேற்கொண்ட அழுத்தங்களை தொடர்ந்து சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக இருக்கவில்லை என தெரிவித்து இந்த குழு தனது பணிகளை 2007 ஆம் ஆண்டு இடைநிறுத்தியிருந்தது. தற்போது ஐக்கிய நாடுகள் தலைமையில் அவர்கள் மீண்டும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப்போவது அவர்களின் நடவடிக்கைகளுக்கு அதிக சுதந்திரம் வழங்
கியதாகவே அமையும் என கருதப்படுகின்றது.

மேலும் சிறீலங்காவை அரவணைப்பதும், கண்டிப்பதுமாக மேற்குலகம் சாண் இறங்குவதும், முழம் ஏறுவதுமான போக்கை மேற்கொண்டு வருகின்றது. அதில் அவர்கள் வெற்றியும் கண்டு வருகின்றனர். பர்மாவை சீனாவிடம் இழந்ததை போல சிறீலங்காவையும் முற்றுமுழுதாக இழந்து விட மேற்குலகம் தயாராக இல்லை. கடுமையான அழுத்தங்களின் ஊடாக அங்கு தமக்கு சாதகமான ஒரு அரசியல் சூழலை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். அது வெற்றிபெறாத பட்சத்தில் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்றும் ஒரு இனத்தின் ஊடாக அவர்கள் தமக்கான இடத்தை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

வேல்ஸிலிருந்து அருஷ்*

நன்றி:ஈழமுரசு

Comments