நடுக்கடலில் நிர்வாண சித்ரவதை!

''தவிக்கும் ஈழத் தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்க மறுப்பவர்களின் மெத் தனம் தரும் துணிச்சல்தான் சிங்கள ராணுவத்தின் உருவில் வந்து அடுத்தடுத்து கடலில் மடக்கிக் கொல்கிறது தமிழக மீனவனை! இன்னும் எத்தனை நாட்கள் இந்தத் துயர் எங்களுக்கு?'' என்று கதறல் கேட்கிறது தென்கோடிக் கரையோரம்! கடந்த 6-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றனர் மீனவர் கள்.

அதில் ஒரு படகில் இருந்த மீனவரை அடித்துக் கொன்றும், இன்னொரு படகில் இருந்தவர்களை அடித்துத் துவைத்து நிர்வாணப்படுத்தியும், தனது குரூரத்தை அரங் கேற்றி இருக்கிறது இலங்கை ராணுவம்.




வெள்ளப்பள்ளம் கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருக்க... பலியான செல்லப்பன்வீட்டுக்குச் சென்றோம். அவர் மகன் கோடிமாரி, பேசும் மனநிலையிலேயே இல்லை. ''அரை வயித்துக் கஞ்சிக்காக உசுரப் பணயம்வெச்சிப் பொழைக்கிற எங்களுக்கா இந்த நெலைமை வரணும்?'' என்று மட்டும் கேட்டவருக்கு, அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

செல்லப்பனோடு படகில் சென்ற திருவன்புலம், ''கடந்த 7-ம் தேதி காலைல 10 மணிக்கு படகு எடுத்துப் போய் நடுக் கடல்ல வலையைப் போட்டுட்டு, சாப்புட உக்காந்தோம். அப்ப இலங்கை ராணுவக்காரங்க எங்க போட்டுக்குப் பக்கத்துல வந்து அவங்க போட்டை நிறுத்தினாங்க. திமுதிமுன்னு எங்க போட்டுல குதிச் சாங்க. ஆறு பேர்ல ஒருத்தன், 'நீங்க இந்தியாதானடா?'ன்னு கேட்டு துப்பாக்கியை எடுத்து எங்க நெத்தியில் வெச்சான். நாங்க கை ரெண்டையும் மேல தூக்கிட்டு, 'ஆமா'ன்னோம்.

வேற எதுவுமே எங்ககிட்ட கேக்காம, ஒரு மணி நேரம் எங்க எல்லாரையும் கையால யும் கயித்தாலயும் மாறி மாறி அடிச்சாங்க. அடி தாங்க மாட்டாம கொஞ்ச நேரத்துலயே செல்லப்பன் மயங்கி விழுந்தாரு. ஆனா, அவங்க ஒரு மணி நேரம் வரை எங்க போட்டுலயே இருந்ததால, செல்லப்பனைத் தூக்கி முதலுதவிகூட செய்ய முடியல. வெறி தீரும் வரைக்கும் துன்புறுத்தி முடிச்சிட்டு, எங்க வலைகளை அறுத்துக் கடல்ல வீசிட்டு, 'ஓடுங்கடா'ன்னு விரட்டினாங்க. அப்ப இரவு மணி 8.30 இருக்கும். அதுக்குப் பிறகு செல்லப்பனை நாங்க எழுப்ப... அவருக்கு பேச்சுமூச்சே இல்லை'' என்ற திருவன்புலம் முகத்தில் இன்னும் பயம் தெளியவில்லை!

இன்னொரு படகில் சென்ற முருகேசன், ''இலங்கை ராணுவக்காரங்க எங்களை அடிச்சு... மிதிச்சிட்டு, எங்க டிரெஸ்ஸை எல்லாம் கழட்டி, ஜட்டியையும் கழட்டச் சொன்னாங்க. எல்லாரும் கழட்டிட... நான் மட்டும் 'மாட்டேன்'னேன். அடி உதைச்சு, கம்பால குத்துனாங்க.

வலி தாங்க முடியாம நானும் ஜட்டியைக் கழட்டி னதும், எங்க டிரெஸ், நாங்க கொண்டுபோன வலை, பொருள் எல்லாத்தையும் எடுத்துக் கடலுக்குள்ள வீசிட்டு, 'ஓடுங்கடா நாய்களே'ன்னு விரட்டி அடிச் சானுங்க.

விடியற்காலை கரைக்கு வந்த நாங்க, கரை ஓரத்துல படகை நிறுத்திட்டு, சத்தம் போட்டுத் துணி எடுத்துக்கிட்டு வரச்சொல்லி, அதை இடுப்புல கட்டிட்டுத்தான் கரைக்கு வந்தோம். பிறகுதான், இன்னொரு படகில் இருந்த செல்லப்பன் இறந்துபோன விஷயமும் தெரிய வந்தது'' என்றவரிடம், ''நம் நாட்டு ரோந்துக் கப்பல் நீங்கள் மீன் பிடிக்கும் இடத்துக்கு வருவதில்லையா?'' என்றோம்.

''எப்பயாவது அத்தி பூத்த மாதிரி வந்துட்டுப் போகும். அடிக்கடி நம்ம ரோந்துக் கப்பல் வந்தா... இலங்கைக்காரன் நம்ம எல்லையில் தேடி வந்து இத்தனை தைரியமா அடிப்பானா?'' என்று கேட்டார் வேதனையோடு.

வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுப்ர மணியன், ''காலையில 4 மணிக்கு செல்லப்பன் இறந்த தகவலைச் சொன்னாங்க. உடனே போய்ப் பாத்துட்டு, காவல் துறை, மீன் வளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னேன். அவங்களும் வந்து, விசாரணை செஞ்சாங்க. அதுக்குப் பிறகு செல்லப்பன் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். அங்க டாக்டரும், உதவியாளர்களும் இல்லை. 'நாகப்பட்டினம் கொண்டு போங்க'ன்னாங்க. உயிருக்குப் போராடுறவங்கள கொண்டுபோனா, 'டாக்டர் இல்லை, மருந்து இல்லை'ன்னு நாகப்பட்டினம் கொண்டுபோகச் சொல்வாங்க. ஆனா, செத்துப்போன ஒருத்தர் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யவும் ஆள் இல்லேன்னா, வேதாரண்யத்துல அரசு ஆஸ்பத்திரி எதுக்கு? நொந்துபோன நாங்க உடலை அங்கேயே வைத்துவிட்டுப் போராட்டம் செய்ய முடிவெடுத்தோம்.

அதிகாரிகள் எங்களை சமாதானப்படுத்தி உடலை நாகப்பட்டினம் கொண்டு போகவெச்சாங்க!'' என்றவர்,

''இந்திய அரசாங்கத்தால் குற்றவாளியா அறிவிக்கப்பட்ட இலங்கை அரசுப் பிரதிநிதிகளை எல்லாம்கூட இங்க அழைச்சு, விருந்துவெச்சு உபசாரம் செய்ற அரசாங்கம், இனி நம்ம அப்பாவி மீனவர்களைக் கொல்ற இலங்கை ராணுவத்துக்கும் டெல்லியில் விருந்துவைப்பாங்க போலிருக்கு!'' என்றார் காட்டமாக.

இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் முனியநாதனிடம் பேசியபோது, ''செல்லப்பன் குடும்பத்துக்கு அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு நமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மீனவர்களை மீன்பிடிக்குமாறு மீண்டும் அறிவுறுத்தியுள்ளோம்!'' என்று மட்டும் சொன்னார்.

-கரு.முத்து, வீ.மாணிக்கவாசகம்

நன்றி: விகடன்

Comments