ஜெயலலிதா அறிக்கைகள்: அக்கறையா? அரசியலா?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி மிக வேகமாகவே தமிழ்நாட்டின் அரசியல் களம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதற்கு கடந்த சில நாட்களில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கைகள் சரியான சான்றாகும்.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தின் வாயிலாகக் கையிலெடுத்த ஜெயலலிதா, தனது கூட்டணி 12 நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றியப் பிறகு முற்றிலுமாக மறந்திருந்தார்.

இப்போது திடீரென்று இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒன்றில், ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சீன இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர், அது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், இரண்டாவதாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவை வரவேற்று விடுத்துள்ள அறிக்கையாகும்.

ஏன் இந்த திடீர் அக்கறை?

ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் துயரம் குறித்து அன்றாடம் எத்தனையோ செய்திகள் வந்தபோதெல்லாம் மயான அமைதி காத்த ‘புரட்சித் தலைவி’ திடீரென அறிக்கை மழை பொழியக் காரணமென்ன என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாகும்.

ஏனெனில் இது தமிழ் மக்கள் மீதான அக்கறை காரணமாகவா அல்லது தனது அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடப்பட்டதா என்பது முக்கியமாகும்.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானத் தமிழர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால், டெல்லி அரசின் முழுமையான ஒப்புதலோடு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு உலகமே அதிர்ச்சியுற்ற நிலையில், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ‘ஏதோ எங்கோயோ நடக்கிறது நமக்கென்ன’ எனபதுபோல் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் விட்டனர். தமிழின இயக்கங்களும், மதிமுக, புதிய தமிழகம் போன்ற அரசியல் சக்திகளும் தமிழினப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று போராடின.

இறுதிக் கட்டப் போரில் நடந்த படுகொலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஜெனிவாவில் சிறப்பாகக் கூட்டப்பட்ட மனித உரிமை மன்றத்தில் பேசினார். சர்வதேச விசாரணை கோரி சுவிட்சர்லாந்து தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்து இந்தியாவின் தூதர் கோபிநாத் அர்ச்சங்கரே பேசினார். இலங்கையில் இதுநாள் வரை இயங்கிவந்த ஒரு பயங்கரவாத இயக்கத்தை ஒழித்ததற்காக அந்நாட்டை பாராட்டுவதை விட்டுவிட்டு, அந்நாட்டின் மறுசீரமைப்பிற்கு உதவுவது குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, அதற்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது அர்த்தமற்ற செயல் என்று, உலகமே அதிர்ந்த மானுடப் படுகொலையை முற்றிலுமாக மறைத்துப் பேசினார் இந்தியாவின் தூதர்.

தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச அரசினை காப்பாற்றும் தனது ‘உன்னத’ நடவடிக்கையை அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை இந்தியாவின் தூதர் கோபிநாத் அர்ச்சங்கரே, இலங்கைக்கு எதிராக விசாரணை கோரும் தீர்மானத்தை சீனா, பாகிஸ்தான் தூதர்களுடன் இணைந்து தொல்வியடையச் செய்தது மட்டுமின்றி, சிறிலங்க தூதர் கொண்டுவந்த சுய பாராட்டுத் தீர்மானத்தை ஆதரித்து அதனை வெற்றி பெறவும் உதவினார்.



ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டிய அச்சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படக்கூடிய ஒரு கேள்வியை எழுப்பினார். “எப்போதெல்லாம் சிறிலங்க அரசிற்கு எதிராக மனித உரிமை மீறல், போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாற்றுகள் கூறப்படும் போதெல்லாம் இந்தியா அதை எதிர்க்கிறதே, அதற்குக் காரணம், சிறிலங்காவின் நடவடிக்கையில் இந்தியா மறைப்பதற்கும் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார். இது இங்குள்ள பத்திரிக்கைகளில் வரவில்லை. இலங்கை உட்பட மற்ற நாட்டு நாளிதழ்களில் வெளியானது!

ஈழத் தமிழினத்தை இனப் படுகொலை செய்த ராஜபக்ச அரசிற்கு ஆதரவாக இந்தியா நடந்துகொண்டதை தமிழின அமைப்புகள் கண்டித்தன. ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் கண்டித்தன. நமது நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான இரா.செழியன் இந்தியாவின் செயலைக் கண்டித்து தினமணியில் கட்டுரை எழுதினார். ஆனால், இன்றைக்கு ஐ.நா. நிபுணர் குழுவை அமைத்துள்ளதை வரவேற்று அறிக்கை விடும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை.

கடந்த ஜனவரியில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடத்தப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், தமிழர்களுக்கு எதிரான போரில் அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்று தீர்ப்பளித்தது. அது மட்டுமின்றி, ஈழப் போரில் தமிழர்கள் திட்டமிட்டு இனப் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாற்றின் மீது பன்னாட்டு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் அதனை வரவேற்றோ அல்லது அப்படியொரு பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றோ வலியுறுத்தி ஒரு அறிக்கை கூட ஜெயலலிதா விடுக்கவில்லை.



சட்டத்திற்குப் புறம்பாக தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ ஆதாரங்கள் வெளியானது. அதனை போலி என்றது சிறிலங்க அரசு. அது உண்மையே என்று ஆய்வு செய்து நிரூபித்தார் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் ஆல்ஸ்டன். அந்த சர்ச்சையின் போது எந்த உலகத்தில் ஜெயலலிதா இருந்தார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

சமீபத்தில் இனப் படுகொலைக் குற்றச்சாற்றிற்கு ஆளாகியுள்ள அதிபர் ராஜபக்ச டெல்லி வருவதைக் கண்டித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், தமிழின அமைப்புகளும் போராட்டம் நடத்தி பல ஆயிரக்கணக்கில் கைதாயினர். ஆனால் ராஜபக்ச வருகையை கண்டிக்காத இரண்டு முக்கிய தமிழ்நாட்டுத் தலைவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான்.

ராஜபக்சவுடன் டெல்லிக்கு வந்த சிறிலங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, அவர் தமிழ்நாட்டில் செய்த குற்றங்களுக்காக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யும்படி தமிழ்நாட்டில் இருந்து பெரும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பிரபாகரனை சிறிலங்க அரசு பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காருண்யத்துடன் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, ஒரு அப்பாவியை சுட்டுக் கொன்றது மட்டுமின்றி, மேலும் 4 பேரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய டக்ளஸ் தேவானந்தாவை கைது செய் என்று மத்திய அரசையும் வலியுறுத்தவில்லை, மாநில அரசையும் கண்டிக்கவில்லை.

தமிழினப் படுகொலையில் டெல்லியை மறைப்பதேன்?



இன்றைக்கு திடீரென்று சீனாவின் அச்சுறுத்தல் பற்றி அறிக்கை விடுகிறார். இந்த நிலைதான் ஏற்படும் என்று ஓராண்டிற்கு முன்னரே பழ. நெடுமாறன், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், முன்னாள் அயலுறவுச் செயலர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பக்கம் பக்கமாக எழுதியும் விட்டார்கள், பல கூட்டங்களில் பேசியுமுள்ளார்கள்.

தங்களை தாக்கிய சிறிலங்க கடற்படையினரின் கப்பலில் சீனர்களும் இருந்தார்கள் என்று தாக்குதலிற்கு உள்ளான தமிழக மீனவர்கள் கூறினார்கள். அப்போது இந்த சீன அச்சுறுத்தல் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் போனதேன்?

சில மாதங்களுக்கு முன்னர் கச்சத் தீவில் நடந்த புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குச் சென்றவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ கூடாரங்களில் சீன எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டதாக தெரிவித்திருந்தனர். அந்த படங்கள் பத்திரிக்கைகளிலும் இணையங்களிலும் வெளிவந்தன. அப்போதும் சீன அச்சுறுத்தல் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் போனது ஏன்?

அதுமட்டுமல்ல, தனது அரசியல் எதிரியான முதல்வர் கருணாநிதியை போர்க் குற்றவாளி என்று குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அதற்காகக் கூறிய காரணக் கதை விவரம் அறிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்திருக்கும் என்றாலும், இறுதிக் கட்ட யுத்தத்தில்தான் பல பத்தாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும், அது நடந்தது மே 16 (இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு), 17, 18ஆம் தேதிகளில் என்பதும் தமிழினத்தின் மீது அக்கறை கொண்டோருக்கும், மனிதாபிமானிகளும் நன்கறிவார்கள். ஆனால் ஜெயலலிதாவோ ஏப்ரல் 27ஆம் தேதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தி முடித்த முதல்வர் கருணாநிதி, ‘போர் நின்றுவிட்டது’ என்று இங்கே கூறியது, அங்கே ஈழத்தில் ஒலிக்க, அதுவரை பதுங்குக் குழிகளில் ‘பாதுகாப்பாக’ இருந்த ஈழ மக்கள் வெளியே வர, அதற்கென்றே காத்திருந்த விமானங்கள் குண்டு மழை பொழிய 50 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். எனவே அவர்கள் படுகொலைக்கு கருணாநிதியே காரணம் என்று தனது அறிக்கையில் அபார ஞானத்துடன் கதை விட்டுள்ளார்.

தமிழினப் படுகொலைக்கு நியாயம் தேடும் முயற்சியல்ல அந்த அறிக்கை, மாறாக, தனது அரசியலிற்கு ஈழப் படுகொலையை ஜெயலலிதா பயன்படுத்துகிறார் என்பதே உண்மை. இல்லையென்னறால் இப்படிப்பட்ட கதை விட இவருக்கு ஏன் ஒரு வருடம் தேவைப்படுகிறது? அன்றைக்கே இந்தக் கதை விட்டிருந்தால் கொஞ்சம் பொறுத்தமாக இருந்திருக்குமே.

கருணாநிதியை போர் குற்றவாளியாக்குவதில் இவ்வளவு முனைப்பு காட்டும் ஜெயலலிதா, அந்த மாபெரும் திட்டமிட்ட தமிழின அழிப்பில் டெல்லிக்கு உள்ள பங்கை, அதன் இரத்தம் நனைந்த கைகளை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்?

“இந்தியாவின் போரை நான் நடத்தினேன்” என்று ராஜபக்ச கூறியதும், சிறிலங்கா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாற்று கூறினார் டெல்லி பதறுவது ஏன் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பேசியதும், இந்தியாவின் துணையுடன்தான் போரை நடத்தினோம்” என்று கோத்தபய ராஜபக்ச கூறியதும், “இந்தியாவின் துணையின்றி இந்தப் போரில் நாங்கள் வென்றிருக்க முடியாது” என்று சிறிலங்க அமைச்சர் யாப்பா அந்நாட்டு நாடாளுமன்றத்திலேயே பேசியதும், “போரை நிறுத்துமாறு சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தையும் தாண்டி போரை நடத்தி முடிக்க இந்தியாவே உதவியது” என்று கோத்தபய ராஜபக்ச கூறியதும் தமிழ்நாட்டின் எதி்ர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதாவிற்குத் தெரியாததா? பிறகு டெல்லியை குற்றம் சாற்றாமல், மிக வசதியாக கருணாநிதியை மட்டும் போர்க் குற்றவாளி (அதன் உண்மையான பொருள் தெரியாமல்) குற்றம் சாற்றுவது ஏன்?

ஏனென்றால் கூட்டணி அரசியல்! ஈழத் தமிழனின் நலன் அல்ல, காங்கிரஸுடன் கூட்டணி, அது முக்கியம். டெல்லியையும் காப்பாற்றி, கருணாநிதியையும் குற்றவாளியாக்கி (டெல்லிக்கு கருணாநிதி துணை போன விவரம்தான் தமிழ்நாட்டிற்கே தெரியுமே) ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்றால், அவருடைய அறிக்கையின் பின்னணி சிந்திக்கத் தக்கதாகும்.

சில நாட்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த ஒரு அரசியல் வித்தகர், பருவ மழை போல சோவென்று பொழிந்த ஆலோசனைகளின் விளைவே அடுத்தடுத்து ஜெயலலிதா கொட்டியுள்ள இந்த அறிக்கை மழைகள் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதனால்தான் மிகத் தெளிவாக அதில் டெல்லியைக் காப்பாற்றும் திறனும், தேசப்பற்றும் மிதமிஞ்சிக் கிடக்கிறது.

FILE
இன்றொன்றையும் உற்றுப் பார் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம். அது, கடந்த திங்கட் கிழமை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டம். இந்தப் போராட்டத்தின் போது தமிழகத்தில் பலவேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாரதீய ஜனதா தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆனால் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. “பெரிதாக” பங்கேற்காமல் அடக்கி வாசித்ததாம். அதுதான் அ.இ.அ.தி.மு.க. கலந்து கொணடதாகக் கூறும் ஒரு படம் கூட, காட்சிகள் கூட, ஊடகங்களில் தென்படாததற்குக் காரணமாம். இது அ.இ.அ.தி.மு.க. டெல்லிக்கு கொடுத்த சிக்னல் என்கிறார்கள்!

ஆக, ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஈழத் தமிழர் மீதோ அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீதோ கொண்ட அக்கறையால் வெளியிடப்பட்டதல்ல, அது கூட்டணி அரசியலிற்காக விடப்பட்ட தூது அறிக்கைகள். கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் இருவருக்கும் ஆட்சியும், அதை தக்கவைத்துக்கொள்ளும் கூட்டணி அரசியலும் தான் முக்கியமே தவிர, மக்களல்ல. தங்கள் அரசியல் இலாபமே இவர்களின் குறிக்கோள். ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள்! இரண்டுமே தமிழருக்கு எதிரானவை.

-வெப் உலகம்-

Comments