ஐ.நா நிபுணர் குழு ஒரு முன்னோடி நிகழ்ச்சி. எதிர்ப்புக்களை மீறி விசாரணைகளைத் தொடரவேண்டும்.

சிறிலங்காவின் போர் குற்றங்களை ஆராயப் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு 29 நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன 10 நாடுகள் மாத்திரம் ஆதரவு அளிக்கின்றன நிபுணர்கள் குழு உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறிலங்கா அரசு அவர்களுக்கு வீசா வழங்க மறுத்துள்ளது.

குழு உறுப்பினர்கள் இருவர் சிறிலங்கா அரசைப் பதற்றம் அடையச் செய்துள்ளனர் வழக்கறிஞர் ஸ்ரீவன் ரட்னர் வெளியிட்ட மனித உரிமைகளும் சர்வதேசச் சட்டமும் என்ற நூலில் ஈழத்தமிழர்கள் இனரீதியாகப் புறக்கணிகப்படுகிறார்கள் என்று எழுதியுள்ளார் இந்த உறுப்பினரை குறிவைத்து சிறிலங்கா அரச ஊடகங்கள் எதிர் பிரசாரம் செய்கின்றன.

குழுவின் தலைவரான இந்தோனேசியா நாட்டவரான மர்சுகி டாருஸ்மன் சிறிலங்கா உள்விவகாரங்கள் பற்றி ஏற்கனவே நன்கு அறிந்தவர் 2006ல் நடந்த பிரஞ்சு என்ஜியோவின் 17 தமிழ்ப் பணியாளர்கள் படுகொலை 5அப்பாவித் தமிழ் மாணவர்கள் படுகொலை போன்ற 16 குற்றச் செயல்களை விசாரிப்பதற்கு ஒரு விசாரணைக் குழுவை அதிபர் ராஜபக்ச நியமித்தார்.

இந்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு ஒரு சர்வதேச அறிஞர் பேரவை யையும் அவர் நியமித்தார் அதில் மர்சுகி டாருஸ்மன் இந்தியாவின் பகவதி போன்றோர் இடம்பெற்றனர் விசாரணைக்குழுவை நியமித்த அதே அரசு விசாரணைகள் நீதியாகத் தொடர முடியாமல் முட்டுக்கட்டை களைப் போட்டது. வெறுப்படைந்த மர்சுகி டாருஸ்மன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் இப்போது அவர் மீண்டும் வர சிறி லங்கா அரசு அனுமதிக்க மாட்டாது என்பது தெரிந்த விடயம்.

தான் நியமித்த நிபுணர்குழு விசாரணைகளைத் தொடர முடியாமல் மெல்லச் சாகும் என்பதை பான் கீ மூன் ஏற்கனவே அறிவார் என்று விசயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்காக மாத்திரம் அவர் இந்த நிபுணர்குழுவை நியமித்தாராம் நிபுணர்கள் குழு மூழ்குமா மிதக்குமா என்பது பற்றி பான் கீ மூனுக்குக் கவலை இருந்ததில்லை என்றும் இராசதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனொ தானோ என்று நிறுவப்பட்ட நிபுணர் குழுவிக்கு இத்தனை நாடுகள் இவ்வளவு அகோரமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவி;ல்லை. தாய்க் கோழி குஞ்சைப் பாதுகாப்பது போல் இந்தியா தான் வழமையாகச் சிறிலங்கா அரசை அரவ ணைப்பதுண்டு ஆனால் நிபுணர்கள் குழு விவகாரத்தில் பலத்த எதிர்ப்புக் குரல் கொடுக்கும் நாடு ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா பாக்கிஸ்தான் இஸ்ரேயில் ஈரான் ஆகிய நாடுகளிலும் பார்க்கப் பெறுமதி கூடிய மரபு ஆயுதங்களையும் தடைசெய்யப்பட்ட கொத்தக் குண்டு மற்றும் இரசாயன ஆயுதங்களையும் ரஷ்யா விற்பனை செய்துள்ளது.

500 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட ஆயுதங்களை ரஷ்யா சிறிலங்காவிக்கு போர் காலத்தில் விற்பனை செய்வதோடு இராசதந்திர அனுசரணை வழங்கும் உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளது. மேலும் மிக அண்மையில் படையினரின் பாவனையிலுள்ள பழுதடைந்த ஆயுதங்களையும் கடல் மற்றும் வான் கலங்களையும் திருத்திக் கொடுப்பதற்கு ரஷ்;யா அரசு இணங்கியுள்ளது.

29 நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு பொது நோக்கம் இருக்கிறது வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போல் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் மனித உரிமை மீறல்களும் விசாரணை செய்யப்பட வேண்டிய சர்வதேசக் குற்றச் செயல்களும் காணப்படுகின்றன.
செச்சென்னியா விடுதலைப் போரை நசுக்குவதற்கு ரஷ்;யா பயன் படுத்திய கிராட் போன்ற ஏவுகணைகளும் நடத்திய மனிதப் படுகொலைகளும் சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய குற்றங்களாகும்.

ஜோர்ஜியா நாட்டின் இரு தரைப் பகுதிகளை ரஷ்யா இராணுவ நடவடிக்கை மூலம் தனதாக்கியுள்ளது இது சர்வதேச ஒழுங்கிற்கு முரணான ஆக்கிரமிப்பாகும்.

சிறிலங்கா விவகாரத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு ஒரு ஆபத்தான முன்மாதிரியாக அமையும் என்று எதிர்ப்புக் காட்டும் நாடுகள் கருதுகின்றன. உலக அரங்கில் ஒரு புதிய அத்தியாயத்தை நிபுணர்குழு நியமனம் திறந்து விடும் என்ற அச்சம் எதிர்ப்புக் காட்டும் நாடுகள் மத்தியில் பொதுவாகக் காணப்படுகின்றது.

ஒரு அரசியல் பிரச்சனையைப் பயங்கரவாதம் என்று எடுத்துக் காட்டிப் பேச்சு வார்த்தைக்கும் அதிகாரப் பங்கீட்டுக்கும் இடமளிக்காமல் இராணுவத்தீர்வு ஒன்றே குறியாகத் தாக்குதல் நடத்தும் போக்கு சிறிலங்கா நடைமுறை என்று வகுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புக் காட்டும் நாடுகள் தமது நாட்டின் சிறுபான்மையினர் பிரச்சனையை சிறிலங்காவின் வழியில் தீர்த்துக் கட்டத்தொடங்கியுள்ளன.

இந்தியாவின் அரசியல் கோமாளியான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுதலைப் புலிகளை நசுக்கவதற்கு சிறிலங்கா அரசு இராணுவத்தைப் பயன் படுத்தியதைப் போல் நாம் மாவோஸ்ருகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறினார் ஆனால் அதே சிதம்பரம் மாவோயிஸ்ருகளை ஒழித்துக் கட்டுவதற்காக 50,000 இந்தியப் படையினரைத் தயார்படுத்த தொடங்கியுள்ளனர்.

காஷ்மீரில் எல்லை கடந்த பயங்கரவாதம் என்ற பெயரால் பெரும் மனிதப் படுகொலையை இந்திய இராணுவத்தினர் செய்கின்றனர் மத்திய இந்தியாவின் இயற்கை வளங்களை இந்தியாவின் பாரிய தொழில் நிறுவனங்கள் சூறையாடுகின்றன இப்பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடிகள் இராணுவ நடவடிக்கை மூலம் வெளியேற்றப் படுகின்றன.

இந்தியாவின் நிழல் சிறிலங்காவில் படிந்துள்ளது அனல் மின் நிலையம் அமைக்கும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் இருந்து 1000 தமிழ் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன அவர்கள் இப்போது கிளிவெட்டி அகதிமுகாம்மில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கும் இந்திய நிறுவனம் சம்ப+ர் வாழ் தமிழர்களுக்கு இழைத்த கொடுமையை இன்னும் உலகம் உணரவில்லைப் போலும்.

இன்றைய செய்திகளின் படி நிபுணர்குழுவுடன் ஒத்துழைக்க மறுக்கும் சிறிலங்கா பெரும் ஆபத்தை எதிர்நோக்குவதாக மர்சுகி டாருஸ்மன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையின் கனதியை புரிந்து கொள்ள முடியவில்லை சிறிலங்காவுடன் கைகோர்த்து நிற்கும் அணி மிகவும் பலமானதாக இருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் அதன் பக்கம் கூடுதலாக இருக்கின்றன.

ஐநா நிபுணர்கள் குழு நியமனம் முன்னர் எப்போதும் நடவாத முன்னோடி நிகழ்ச்சி. ஈழத் தமிழர்கள் நலன் இதில் பெரிதும் தங்கியுள்ளது. புலம் பெயர் உறவுகளும் எமக்காக குரல் கொடுப்போரும் நிபுணர்கள் குழு தனது பணியை திறம்பட செயற்படுத்தவும் எதிர்ப்புக்களை மீறி விசாரணைகளைத் தொடரவும் வலுவூட்டல் முயற்சிகளை எடுக்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

Comments