எங்கே இருந்தாலும் தமிழன் எதிரிதான்!

மீனவன் வலை வீசினால் கொலை விழுகிறது!

கடலும் கடற்கரைப் பரப்பும் காலங்காலமாக மீனவ இனத்துக்குத்தான். இயற்கை அவர்களுக்கு வழங்கிய கொடை இது. தன்னுடைய உடல் உரத்தால் தேசத்தின் பொருளாதார வளத்துக்கு நித்த மும் பல்லாயிரம் கோடியைச் சேகரித்துக் கொடுக்கும் உழைப்புச் சமூகம்.

ஆனால், கடந்த பல ஆண்டு களாக வங்காள விரிகுடாவில் தங்களது வாழ்க்கை யைத் தொலைத்து நிர்க்கதியாக நிற்க ஆரம்பித்திருக்கி றான் தமிழக மீனவன். மீன் பிடிக்கவிடாமல் தடுக்கப் படுகிறார்கள் என்பதைத் தாண்டி, உயிர் வாழக்கூட வழி இல்லாமல் முடக்கப்படுவதுதான் கொடூரம்.


இது வரை 450 குடும்பங்களில் மரணச் சங்கு ஊதப் பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்புகளை இழந்து கையேந்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனாலும், கடலில் உப்புக்கு இணையாக ரத்தம் கலப்பது நின்றபாடில்லை.



நாகப்பட்டினம் மாவட்டம் வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன், கடந்த 7-ம் தேதி பகல் 12 மணிக்கு, கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் பறந்து வந்த இலங்கைக் கடற் படையினர், செல்லப்பனுடன் சென்றவர்களைச் சுற்றி வளைத்து அடித்துத் துவைத்து இருக்கிறார்கள். அந்த இடத்தி லேயே செல்லப்பன் செத்துப் போனார். அவரோடு இருந்த வர்கள் நிர்வாணப்படுத்தப் பட்டு கரை ஒதுங்கினார்கள்.

சாதாரண, தனிப்பட்ட மீனவன் நிர்வாணப் படுத்தப்பட்டதாக மட்டும் இதைப் பார்த் தால் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டவர் ஆவோம். இந்தியக் குடிமகனை எல்லை மீறி வந்து சிங்கள கடற்படை சுட்டுப் பொசுக்கி, இரண்டு நாட்டுக்குமான மறைமுக யுத்தம் தொடர்ந்து வருவதாகவே இதைக் கணிக்கவேண்டி இருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாக இந்தக் கொடூரம் நடந்து வருகிறது. அப்போதெல்லாம், 'தமிழக மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துகிறார்கள், டீசல் கடத்துகிறார்கள்' என்று காரணம் சொல்லி அடித்தார்கள். ஆனால், இன்றைக்கு 'முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்' என்று அறிவித்த பிறகும் சிங்களக் கடற்படை சீறுவது ஏன்?



ராமேஸ்வரம் துறைமுக விசைப் படகு சங்கத் தலைவர், என்.தேவதாஸிடம் கேட்டபோது, "எதிரி நாடுபோல இருக்கிற பாகிஸ்தான்கூட, நம் மீனவர்கள் எல்லை தாண்டினால் முறைப்படி சட்டரீதியாகவே நடத்துகிறார்கள். யாரையும்அவர் கள் சுடுவது இல்லை... கொல்வது இல்லை. கைது செய்கிறார்கள். முறைப்படி விசாரணை நடத்தி விடுதலை செய்கிறார்கள்.

நம்முடைய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் விட்டுவிடுகிறார்கள். ஆனால், இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர் களைச் சுட்டுக் கொன்று இருக்கிறது சிங்களக் கடற்படை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன் பிடிப் பொருள்கள் நாசமாகி உள்ளன. நம் மீனவர்களைப் படுக்கவெச்சு ஐஸ்கட்டி வைக்கிறது, புகைபோக்கியில படுக்கவெச்சு முதுகைச் சுடவைக் கிறது, அம்மணமா நிக்கவைப்பது, கெழுறு மீன் முள்ளால் காதில் ஓட்டை போடுறது என்றுசொல்ல முடியாத அளவுக்குச் சித்ரவதைகள் தொடர்கின் றன" என்கிறார்.

அப்பாவையும் மகனையும் உடலுறவு செய்யச் சொல்வதுபோன்று நடக்கும் கொடூரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் மீனவர்கள். "எங்களை ஏன் அடிக்கிறீங்க? நாங்க என்ன புலிகளா?" என்று மீனவர் ஒரு வர் கேட்டபோது, "தமிழன் எங்கே இருந்தாலும் எங்க ளுக்கு எதிரிதான்" என்று சொல்லியே அடித்து இருக்கி றார்கள். 'ஆபரேஷன் ராமேஸ் வரம்' என்ற பெயரால் ராட்சச ப்ளான் போடப்பட்டுவிட் டதோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது!

வெல்லப்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் நாகப்பனை நாம் தொடர்புகொண்ட போது, "இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு, பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர் பான முயற்சிகளில் பங்கேற்றவன் நான்.

மன்னார், யாழ்ப்பாணம், நீர்க்கொழும்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள மீனவர்களுடன் பேசினோம். மீனவர்கள் எல்லை தாண்டுவது என்பது கடலில் ரொம்பவும் சகஜம். இதற்காக மீனவனைக் கொலை செய்வேன் என்றால் என்ன நியாயம்? உலகத்தில் எந்த நாட்டிலும் இதைச் சரி என்று சொல்ல சட் டம் இல்லை.

செல்லப்பன்தான் எங்கள் ஊரில் செத்துப்போன முதல் மீனவன் என்கிறார்கள்.ஆனால், ஒன்றரை வருடத்துக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த சித்திரவேல், கன்னியப்பன், நாச்சி யப்பன், சண்முகம் ஆகிய நான்கு பேரின் உடல்கள் கரை ஒதுங்கின. சிங்களக் கடற்படைக்காரன் தான் அவர்களை சுட்டுப் பொசுக்கி உள்ளான். கடந்த ஆண்டு ஆறுகாட்டுத்துறை மீனவர் ஒருவர் கொலை யானார்.

இவை எல்லாம் அர சாங்கத்தின் கவனத்துக்கு வராத கொலைகள்" என்று சொல்லும் இவர், "கடலில் தள்ளிவிடுவான்.உப்பு மூட்டைகளைத் தூக்கச் சொல்லுவான், உப் பையும் மீனையும் சேர்த்து வாயில் வைத்து அழுத்து வான். உலகிலேயே அதிக விஷத்தன்மைகொண்டது திருக்கை மீன் முள். அந்த முள்ளால் நாக்கிலும் தொடையிலும் குத்துவான்.

இந்த முள் பட்ட இடத் தில் புண் ஏற்பட்டு சதை அழுகிவிடும். அந்த உறுப்பை அப்படியே அகற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. காஷ்மீரியை பாகிஸ்தான்காரன் சுட்டால், இந்தியனைச் சுட்டுவிட்டான் என்கிறார்கள். குஜராத்தி மீனவனைக் கைது செய்தால், இந்திய மீனவன் என்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மீனவனைச் சுட்டுக் கொன்றால் மட்டும் தமிழ் மீனவன் என்று சொல்கிறார்கள். ஏன் இந்தப் பாகு பாடு?" என்று கேட்கிறார்.



தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு.பாரதியிடம் கேட்டபோது, "மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்பது குற்றம் என்றால், அதற்காக மீனவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை. கடலில் மீன் பிடிப்பது, ரயில் பாதையில் ஒரே பாதையில் வண்டி போவதைப்போன்றது அல்ல. ஓரிரு கி.மீ. அப்பால் தண்ணீருக்குள் போய்விட்டால், எங்கு பார்த்தாலும் கடல்தான் வானம், கடல்தான் எல்லை.


இதில், மீன் கிடைக்கும் இடத்தில் வலையைப் போடுவார்கள். திசை காட் டும் கருவிகளின் உதவியால் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளலாம் என்பதை மறுக்கவில்லை. எந்தவித நவீனக் கருவிகள்இருந்தாலும் கடலுக்குள் காற்றும் கடல் நீரோட்டமும் யாரையும் எந்தப் பக்கமும் இழுத்துச் சென்றுவிடும்வல்லமைகொண் டது. நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டாலும் ஒரே இடத்தில் இருப்பதுபோலவே இருக்கும்.

நவீன கருவிகளைக் கொண்டுள்ள கப்பற்படை ஆட்களுக் கும் இதுதான் கதி. இதை நாங்கள் சவாலாகவே சொல் கிறோம். அந்த அளவுக்கு கடல் நீரோட்டத்தின் வலிமை இருக்கிறது என்பதை மீனவர்கள் மீதுகுற்றம் சாட்டுபவர்கள் தெரிந்துகொள்வதும் இல்லை.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது எல்லாம் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் நமது மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டார்கள் என்றும் ஆனால், அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கவில்லை என்பதுபோலவும் அறிக்கை வெளியிடுவார்.

இந்த முறை நமது கடலோரக் காவல்படை அதிகாரியே, நமது மீனவர்கள் மீதுதான் தவறு என்று சொல்லியிருக்கிறார். கொல்லப்பட்ட நாகை வெல்லப்பள்ளம் மீனவரின் ரத்த வாடைக்கூடப் போகாத நிலையில் மீனவர்களைக் காக்க வேண்டிய அதிகாரி இப்படிப் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. இதைப்போலக் கண்டபடி பேசுவதை விட்டுவிட்டு மீனவர்களைக் காக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டலாம்.

எங்களைப் பொறுத்தவரை, உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு மீன் பிடியில் எந்த எல்லையும் வகுக்கக் கூடாது என்பது நீண்ட காலக் கோரிக்கை. இது சாத்தியம் ஆகும் வரையில் நாடுகளுக்கு இடையிலாவது இதுபோன்ற ஏற்பாடு களைச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் எல்லை தாண்டும் மீனவர்களிடம் மனிதத் தன்மையுடனும் பன்னாட்டுச் சட்டங்களின்படியும் நடந்துகொள்ள வேண்டும்" என்கிறார்.



ஈழத் தமிழர்களைக் கொன்றபோது, அது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியாவை ஆளும் பிரதமர் சொன்னார். ஆனால், இன்று இந்தியத் தமிழர்களைக் கொல்லும்போது என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி ஜூலை மாதத்தில் நம்முடைய மீனவர் ரத்தம் சிந்தியபோது அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கைவைத்தார்கள். 'இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது' என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அதன் பிறகு 21 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன.

"இலங்கைக் கடல் எல்லை வரை போய், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க நான் அனுமதி வாங்கித் தருகிறேன்" என்று பா.ம.க. குழுவிடம் வாக்குறுதி கொடுத்தவரும் நம் பிரதமர்தான். 'தமிழக மீனவர்களை எல்லை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள்' என்று விஜயகாந்த்துக்குக் கடிதம் எழுதியவரும் நம் பிரதமர்தான். இந்தக் குழப்பம்தான் தமிழனைக் கொன்றுகொண்டு இருக்கிறது. ஃபிரான்ஸ் தேசத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்றபோது, இதனால்சீக்கி யர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் பூட்டாசிங்கை அனுப்பி சொல்லவைக்கும் அளவுக்குச் சுறுசுறுப்புகொண்ட மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள் விஷயத்தில் மட்டும் அசையாப்பிள்ளையாக இருப்பதன் அர்த்தம் என்ன? 'என்னால் கடிதம் அனுப்ப மட்டும்தான் முடியும்.

படைஎடுத்தா போக முடியும்' என்று முதல்வர் கருணாநிதி கேட்டிருக்கிறார். படையெடுக்கத் தேவை இல்லை. மன்மோகன் சிங்கின் மௌனத்தைக் கலைக்கவாவது அவரால் முடியுமே?

Comments