ஆட்டுவித்தால் ஆடுவாரா மகிந்த இராஜபக்ச?

வடக்கை இராணுவமயமாக்கும் தீவிரப் பணியில், சிங்களம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சர்வதேச தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காது, தாமே மீள்குடி யேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறும் சிங்கள அரசு, இறுதிப்போரின் இன அழிப்புச் சான்றுகளை அழித்துவருகிறது. முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவ படைத்தளத்தை திறந்து வைத்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராஜபக்ச, அங்கு கடற்படைத்தளமொன்று நிறுவப்படும் என்கிற எதிர்காலத் திட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் உருவாகுமானால், அதற்கான படைக்கல வழங்கல், கடல்பாதையூடாகவே நடைபெறும் என்று கோத்தபாய எதிர்வு கூறுகின்றார். கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில், வெளிநாட்டு முதலீட்டு அனுசரணையில், கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் திட்டமும் அரசிற்கு உண்டு. உயர்பாதுகாப்பு வலையங்களில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளாமல், அங்கு பாரிய படைத்தளங்களை நிர்மாணிப்பதே கோத்தபாயாவின் திட்டம். பண்ணைக்கும் நாவாந்துறைக்கும் இடைப்பட்ட மீனாட்சிபுரத்தில், பொது மக்களின் நிலங்களை அபகரித்து, படையினரின் உதவியோடு படைத்தளக்கட்டு மானப்பணி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

தொழிற்பேட்டை உருவாக்கம் என்கிற போர்வையில் சிங்களக் குடியேற்றமும், படைத்தள விரிவாக்கம் ஊடாக நிலப்பறிப்பும் நிகழப்போகிறது. இத்தகைய இராணுவ பெருந்தள நிர்மாணிப்புக்கள், சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக, கோத்தபாயாவே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். வடக்கில், படையினருக்கான 50,000 வீடுகளை அமைத்துத் தருவதற்கு சீனா முன்வந்த செய்தியையும் இத்தோடு இணைத்துப்பார்க்க வேண்டும். அதேவேளை எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், வான்படைத்தளமொன்று, இரணைமடுவில் அமைக்கும் வேலை ஆரம்பமாகியுள்ளது.

இந்த பிரதான முகாமை பாதுகாக்கும் வகையில், இராணுவ முகாம்களும் இதனைச் சூழ அமைக்கப்படுகிறது. இப்பணியிலும் சீனாவின் உதவிகள் பாரியளவில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே வன்னிப் பிரதேசம் முழுவதும், இராணுவ முகாம்கள், படைத்தளங்கள், பிரதேச படைத் தலைமையகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களை அமைக்கும் நிகழ்ச்சிநிரல், கோத்தபாயாவின் ‘சிங்கள இறைமையைப் பாதுகாப்பது’ என்பதன் அடிப்படையில் இயங்குவதை அவதானிக்கலாம். இந்த இறைமை என்கிற சொல், எம்மை விட, சிங்களத்தால் பயன்படுத்தப்படுவது அண்மைய நாட்களில் பரவலாகக் காணக்கூடியதாகவிருக்கிறது. அதேவேளை ஆகஸ்ட் 15இல் முடி
வடையும் ஜீ.எஸ்.பீ பிளஸ் என்கிற ஏற்றுமதி வரிச்சலுகையை, அடுத்த வருடம் பெப்ரவரி 15 வரை நீடிப்பதற்கு, 15 நிபந்தனைகளை விதித்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இதில் 3 முக்கிய நிபந்தனைகள், சிங்களத்தின் பேரினவாத மகிந்த சிந்தனைக்கு உடன்பாடான விடயமல்ல. மாற்றமில்லாமல் 17வது திருத்த சட்டத்தை அமுலாக்கல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீண்ட காலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவையே சிங்களத்தை எரிச்சலூட்டிய நிபந்தனைகளாகும்.

பில்லியன் டொலர் கணக்கில் இந்தியா உதவும்போது, மகிந்தாவின் கனவு இராஜ்ஜியத்திற்காக உயர்ந்த வட்டியில், சீனா பணத்தைக் கொட்டும்போது, ஐரோப்பிய யூனியன் வழங்கும் 150 மில்லியனுக்காக நாட்டின் இறைமையை அடகுவைக்க முடியாதென்று அரசு கூறுகிறது. இந் நிபந்தனைகளுக்கும், சர்வதேச வர்த்தக உறவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதே மகிந்தாவின் கேள்வி. அனைத்துலகின் 26 சட்ட நியமங்களைப் பூர்த்தி செய்யும் நாடுகளுக்கு மட்டுமே, இவ்வரிச் சலுகை வழங்கப்படுமென மகிந்தரும், பேராசிரியர் ஜீ.எல் பீரிசும் மறந்து விட்டார்கள்போல் தெரிகிறது. இதில் நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாளர் நல உரிமைகளைப் பேணுதல் என்கிற இரண்டு விடயங்களே முதன்மையானது. கியூபாவிலிருந்து வெனிசுவேலாவிற்கு, பாட்டாளிவர்க்கப் புரட்சிக் காவடியை தூக்கிச் செல்லும், மகிந்தாவின் மாக்சிசப் பிரதிநிதிகள், ஆடை உற்பத்தியில் ஈடுபடும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் படும் அவல நிலை பற்றியும் பேசவேண்டும். வரிச்சலுகையை நீடிக்கும் விடயத்தில், தொழிலாளர் நலன் குறித்த முரண்பாடுகள் கவனிக்கப்படுகின்றன. இறைமையில் மிகுந்த நாட்டமும், தேசத்தில் பற்றுக்கொண்டவர்கள், சலுகைகளுக்காகக் கையேந்தக்கூடாது.

கடந்தவாரம் நடைபெற்ற இனஅழிப்பு யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அதிபர் மகிந்த இராஜபக்ச, தனது இராணுவம் ஒரு பொது மகனைக்கூட சுட்டுக்கொல்லவில்லை யென்றும், ஒரு கையில் துப்பாக்கியையும், மறுகையில் மனித உரிமைச் சாசனத்தையும் ஏந்தியபடியே அவர்கள் யுத்தம் புரிந்தார்களென்று கூறுவதை ஐ.நா சபையின் பொதுச் செயலாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதில்கூட, மகிந்தருக்கு அரசியல் ஆளுமை கிடையாது என்கிற விவகாரத்தை அனைத்துலகின் மனித உரிமை ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை, ஆடை உற்பத்தியில் ஈடுபடும் ஒரு இலட்சம் தொழிலாளர்களும், தெரிந்துகொள்ளக்கூடாது என்பதையிட்டு அக்கறை கொள்ளும் சிங்கள அரசு, அதை மூடி மறைப்பதற்கு ‘இறைமை’ கோசத்தை முதன்மைப்படுத்துகிறது. இலங்கையின் இறுதிப்போர் காலத்தில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவருமடங்கிய குழுவால் பெரும் சீற்றம் கொண்டுள்ளது மகிந்த அரசு. ஐ.நா. சபை நிபுணர்குழு, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சகல அமைப்புக்களும், மனித உரிமை மீறல் விவகாரத்தை ஒரே நேரத்தில் தூக்கிப் பிடிப்பதால் அதிர்ந்து போயுள்ள சிங்களம், இறைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்ற அணிசேரா நாடுகள் முன்வைக்கும் கோசங்களை தவிர்க்க முடியாமல் பிரயோகிக்க முற்படுகிறது.

இலங்கை என்பது ஐ.நா. சபையின் காலணியல்ல என்கிற கோணத்தில் செல்கிறது மகிந்தரின் இராஜதந்திர அரசியல் முன்னெடுப்பு. நிபுணர்கள் குழு மேற்கொள்ளும் விசாரணையால், விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற்றுவிடுவார்களென்று புதிய விளக்க மொன்றினை அளிக்கிறார் மகிந்தரின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிக ரம்புக்வெல. தம்மீது கொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், விடுதலைப்புலிகளுக்கும், ஒடுக்கப்படும் ஈழத்தமிழினத்திற்கும் சாதகமாக அமைந்துவிடுமென்பதே சிங்களத்தின் பெருங்கவலை. சீனா போன்று, நிபந்தனையின்றி சலுகைகளை வழங்க வேண்டும்.

தாம் சுட்டிக் காட்டும் இடத்தில் தொழிற்பேட்டை அமைக்கவேண்டும். அத்தோடு மகிந்தரின் அம்பாந்தோட்டை சொர்க்க புரிக்கனவிற்கு நிதி வழங்கவேண்டும். இவைதான் சிங்களம் எதிர்பார்க்கும் கோரிக்கைகள். இதைவிடுத்து, மனிதஉரிமை மீறல், போர்க்குற்ற விசாரணை, மீள் குடியேற்றத்திற்கான காலக்கெடு என்பவற்றை முன் நிபந்தனைகளாக கொள்பவர்கள், நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதில், உறுதியாகவிருக்கிறது பௌத்த சிங்கள பேரினவாத அரசு. பான் கீ மூனின் மூவரடங்கிய குழுவிற்கு, இலங்கைக்குச் செல்ல அனுமதியில்லை என்கிற செய்தியே இங்கு முக்கியமானது.

இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Posted by எல்லாளன் on 8:07 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for ஆட்டுவித்தால் ஆடுவாரா மகிந்த இராஜபக்ச?

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.