மர்ம மரணங்களும் மறைந்திருக்கும் உண்மைகளும்

தர்சிகாவின் சடலம் ”எம்பாமிங்” செய்யப்பட்டதில் உண்டான தவறுபோன்று இதுவரை எத்தனை நடைபெற்றனவோ..!

இங்கு தர்சிகாவின் மரணம் குறித்தோ, அதனுள் புதைந்திருக்கும் மர்மம் குறித்தோ இக்கட்டுரை பேச முற்படவில்லை. மாறாக ஆஸ்பத்திரிச் சூழலுக்குள் புதைந்து போகும் சில உண்மைகளை இங்கே வெளிப்படுத்துவதே பிரதான நோக்கமாகும். ஊடகங்கள் பலவற்றிலும் பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான யாழ்ப்பாண மக்களின் அண்மைக்காலப் பேசுபொருளாக தர்சிகாவின் மரணம் மாறிப் போனதாலேயே அவரது உள்ளுறுப்புக்கள் அகற்றப்பட்டதும், வெளியில் செய்யப்பட வேண்டிய சடலத்தைப் பதப்படுத்தும் வேலையை ஆஸ்பத்திரி வளாகத்துக் குள்ளேயே ஒரு நிறுவனம் நடத்தி முடித்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுபோல நிறையச் சம்பவங்கள் நிகழ்வதாக பொதுமக்கள் பலராலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவை பிறருக்குத் தெரியாத படி அமுக்கப்பட்டுவிட்டன.

குடாநாட்டில் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்துள்ள மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பான வழக்கில் இப்போது ஒரு புதுத் திருப்பம்.

தமது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே மீளவும் அச்சடலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தர்சிகாவின் பெற்றோர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன் பின்னர் மனித உரிமைகள் இல்லத்தின் செலவில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊற்றல் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தோல் இருக்க சுளை விழுங்கிய கதையாக தர்சிகாவின் உடலுக்குள் நாக்கு உட்பட உள் உறுப்புகள் எவையும் இருக்கவில்லை.

வெறும் கோது போலவே சடலம் காணப்பட்டது. இந்தச் சடலத்தை வைத்துக்கொண்டு எத்தகைய தீர்மானத்திற்கும் வரமுடியாது. எனவே குறித்த உள்ளுறுப்புகளை கண்டு பிடித்து அனுப்புமாறு அவர் பொலிஸார் ஊடாக நீதித்துறைக்குத் தெரிவித்தார். இதன் பின்னர் மளமளவென்று விசாரணைகள் ஆரம்பமாகின. அதன் போதுதான் இன்னொரு உண்மை வெளிப்பட்டது.

தர்சிகாவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் அச் சடலத்தை ""எம்பாமிங்'' (பதப்படுத்தல்) செய்து தரும்பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் அவரின் பெற்றோர் ஒப்படைத்திருந்தனர். தம்முடைய வேலைச் சுகத்திற்காக வைத்தியசாலை ஊழியர்கள் இருவரை முறைப்படி "கவனித்து', அவர்கள் மூலம் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள்ளேயே ""எம்பாமிங்''கை நடத்தி முடித்து பெருந்தொகைப் பணத்தையும் வாங்கி விட்டது அந்த நிறுவனம்.

ஆனால் சட்டப்படி இத்தகைய ""எம்பாமிங்'' செயற்பாடுகளை ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் செய்யக்கூடாது. இதனால் தான் தம்முடைய குட்டு வெளிப்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக தர்சிகாவின் உடல் உறுப்புகளை சாரம் ஒன்றில் சுற்றிக் கட்டி கொட்டடிப் பகுதியில் உள்ள சேமக்காலையில் கொண்டு சென்று புதைத்திருக்கிறார்கள் அந்தச் சிற்றூழியர்கள். அத்தோடு தர்சிகாவின் உடல் உறுப்புக்கள் எவையும் அகற்றப்படாமல் அப்படியே புதைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் விடுத்த உத்தரவையும் குறித்த தனியார் நிறுவனமும் அதனால் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஊழியர்களும் மீறியிருக்கிறார்கள்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை சரிவரப்புரிந்து கொள்ளாமல், வழமையாகச் செய்வது போல தர்சிகாவின் சடலத்தையும் பதப்படுத்தும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் உறவினர்கள் ஒப்படைத்ததையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும்.

இத் தகவல்களை தர்சிகாவின் வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி ப. குகனேஸ்வரன் விபரித்த போது அதிர்ச்சிக்குள் வீழ நேரிட்டது.

இங்கு தர்சிகாவின் மரணம் குறித்தோ, அதனுள் புதைந்திருக்கும் மர்மம் குறித்தோ இக்கட்டுரை பேச முற்படவில்லை. மாறாக ஆஸ்பத்திரிச் சூழலுக்குள் புதைந்து போகும் சில உண்மைகளை இங்கே வெளிப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

ஊடகங்கள் பலவற்றிலும் பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான யாழ்ப்பாண மக்களின் அண்மைக்காலப் பேசுபொருளாக தர்சிகாவின் மரணம் மாறிப் போனதாலேயே அவரது உள்ளுறுப்புக்கள் அகற்றப்பட்டதும், வெளியில் செய்யப்பட வேண்டிய சடலத்தைப் பதப்படுத்தும் வேலையை ஆஸ்பத்திரி வளாகத்துக் குள்ளேயே ஒரு நிறுவனம் நடத்தி முடித்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுபோல நிறையச் சம்பவங்கள் நிகழ்வதாக பொதுமக்கள் பலராலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவை பிறருக்குத் தெரியாத படி அமுக்கப்பட்டுவிட்டன.

குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள பிணக்கிடங்கில் நீண்ட நேர இழுத்தடிப்புக்குப் பின்னரே சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படுவதாகவும் ஏராளமானோரால் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து உதயன் செய்திகளிலும் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதுதவிர பிணக்கிடங்கில் வைக்கப்படும் சடலங்களை மீள ஒப்படைப்பதற்கு ஒருதொகைப் பணத்தை அங்குள்ள சிற்றூழியர்களுக்கு கொடுத்தாலே சடலத்தைக் காலதாமதமின்றி பெறமுடிவதாகவும், இல்லாதுபோனால் வேண்டுமென்றே இழுத்தடித்து பலவித வசைச் சொற்கள் உறவினர் மீது பிரயோகிக்கப்பட்டு அதன் பின்னரே சடலங்கள் அதுவும் அழுகிய நிலையில் ஒப்படைக்கப்படுவதாவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்தோடு யாழ். போதனா வைத்தியசாலையில் சடலங்கள் உரிய அக்கறையோடு பேணப்படுவதில்லை என்றும் பிரேத பரிசோதனை கூட ஏனோ தானோ என்று தான் செய்யப்படுவதாகவும் அதிருப்தி அலைகள் அவ்வப்போது எழவும் செய்தன. ஆனால் அவற்றையெல்லாம் வைத்தியசாலை நிர்வாகம் மறுத்திருந்தது. பிரேதபரிசோதனை, சவக்கிடங்கில் உள்ள சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தல் என்பன தொடர்பான நடைமுறைகள் இறுக்கமாகவும் ஒழுங்காகவும் பின்பற்றப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அந்த நடைமுறையின் ஒழுங்கின் இறுக்கத்தின் "சீத்துவத்தை' ஒரே நாளில் தர்சிகாவின் சடலம் தோலுரித்துக் காட்டிவிட்டது.

தச்சன் தோப்புப் பகுதியில் அண்மையில் மரணமான பெண் ஒருவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவரது சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் குறித்த பெண்ணின் உறவினர்களால் கோரிக்கை விடப் பட்டிருந்தது. ஆனால் அச்சடலத்தை கொழும்புக்கு அனுப்புவதற்குரிய செலவினை உறவினர்களே ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரநிலையில் பின் தங்கிய குறித்த உறவினர்கள் பெருந்தொகைப் பணத்திற்கு எங்கே போவார்கள்? எனவே தம்முடைய சந்தேகங்களை எல்லாம் மூடை கட்டி சடலத்தோடு சேர்த்துப் புதைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவும் இருக்க வில்லை. ஆக பணம் இருந்தால் மாத்திரமே மரணங்களின் மர்மங்களைக் கூட சரிவர அறிந்து கொள்ள முடியும் என்றநிலையே யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது.

ஒரு மரணம் தொடர்பான மேலதிக பிரேத பரிசோதனைக்கு இன்னொரு இடத்திற்கு சடலத்தை அனுப்பும் செலவை அரசோ அல்லது சுகாதாரத் துறையோ பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் நவீன மயப்படுத்தப்பட்ட சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பிரேத பரிசோனையில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும், அறிவியல் முறையையும் யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும் சுகாதாரத் துறைக்கும் உண்டு. அவ்வாறு நிகழ்ந்தால் மேலதிக பிரேத பரிசோதனைக்காக சடலங்களை தமது செலவில் கொழும்புக்கு அனுப்ப வேண்டிய அவசியம் பொது மக்களுக்கு வரப்போவதில்லை. இது குறித்து இனியாவது உரிய தரப்புக்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.

குடாநாட்டில் அண்மைக்காலமாக மர்ம மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஊடகங்கள் வாயிலாக ஒவ்வொருவரும் அறிந்திருப்பர். பொதுவாக கொள்ளை முயற்சிகளின் போதும் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் வெவ்வேறு இடங்களில் கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சில இடங்களில் கொலைகள் தற்கொலைகள் என முடிவு செய்யப்பட்டு அத்தோடு முற்றுப்புள்ளியும் பெற்று விடுகின்றன. ""ஆனால் சரியான வகையில் இங்கும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமானால் பல மர்மங்கள் புதைந்துபோக வேண்டிய துரதிஸ்டமான நிலை வந்திருக்காது'' என்று ஆதங்கப்படுகிறார் நண்பர் ஒருவர்.

குடாநாட்டில் சமூகச் சீரழிவுகளும் குற்றச் செயல்களும் நிறைந்துள்ள சூழலில் சன நெருக்கம் மிகுந்த நகரப் பகுதியில் ஒரு சடலத்தின் உள்ளுறுப்புகளை வெகு துணிச்சலாக ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து எடுத்துச் சென்று சற்றுத் தொலைவில் உள்ள மயானம் ஒன்றில் சிற்றூழியர்கள் புதைத்திருக்கிறார்கள். இவ்வாறு செய்தவர்கள் நாளைக்கே ஒரு சடலத்தைக் கூட காதுங்காதும் வைத்தாற் போல் பிணக்கிடங்கில் இருந்து மாயமாக்கி விடுவார்கள். இவ்வளவு தூரத்துக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓட்டைகள் இருக்கின்றன.

""தம்முடைய உறவினர்களுக்கான உணவு வகைகளையோ மருந்துகளையோ பார்வையாளர் நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் எடுத்துச் செல்பவர்கள் மீது "வள்' என்று பாய்ந்து விழுந்து, சட்டாம்பித்தனம் செய்து அவர்களை ஒரு குற்றவாளி போல் நடத்தி திருப்பி அனுப்பும் பாதுகாப்பு ஊழியர்கள் தர்சிகாவின் சடலத்தின் உள்ளுறுப்புக்கள் வெளிச்செல்லும் போது எங்கே போயிருந்தார்கள்? '' என்ற ஒரு கேள்வியை கேட்டார் பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் கேட்பதிலும் நியாயம் இருப்பதாகவே படுகின்றது.

இதே வேளை குறித்த தனியார் நிறுவனம் ஒன்றிற்காக வைத்தியசாலைக்குள்ளேயே வைத்து பிணத்தைப் பதனிட்ட வேலை தர்சிகாவின் சடலத்திற்கு மட்டும்தான் நிகழ்ந்ததா? அல்லது இதற்கு முன்ன ரும் இது போன்றுதான் நடந்திருக்கிறதா? என்ற வினாவும் இத்தருணத்தில் எழவே செய்கின்றது. ஆயினும் இவற்றுக்கெல்லாம் பதிலை காலம் தான் சொல்ல வேண்டும். சொல்லுமா?

நன்றி உதயன் நாளிதழ்

Posted by எல்லாளன் on 8:10 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for மர்ம மரணங்களும் மறைந்திருக்கும் உண்மைகளும்

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.