தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே!


தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த சனிக்கிழமை, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

கே.பி. தனது திட்டத்தை மேற்கொள்ளும் குழுவிற்கு 'பாரிசில் வாழும் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் தலைமை தாங்குவதாக அறிவித்துள்ளார். திரு. வே. மனோகரன் அவர்களே பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசின் அத்தனை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி வருகின்றார்.

தான் விரும்பியவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தால், பிரான்சில் நடைபெற்ற இரு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ததுடன், இன்றுவரை அது குறித்த எந்த முடிவுக்கும் வரவிடாமல் திரு. ருத்ரகுமாரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

திரு. கே.பி. நல்லவரா? கெட்டவரா? தியாகியா? துரோகியா? என்பதற்கும் அப்பால், கேபி. தற்போது சிங்கள அரசின் பிடியில் உள்ளார். அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவரால் ஈழத் தமிழர்களுக்கோ, தமிழீழ மண்ணுக்கோ எந்த நல்லதும் நிகழப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் உள்ள குழப்பவாதிகள் கே.பி.யை மையப்படுத்திப் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை உருவாக்குவதில் குறியாக உள்ளனர். இது, தங்கள் மீதான நம்பிக்கையை இழந்த காரணத்தால் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது திட்டமிட்ட சி-ங்கள நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட செயற்பாடா? என்பது புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

எது எவ்வாறு இருந்தாலும், கே.பி. மூலமான சிங்கள தேசத்துடனான சமரசம் என்ற இந்தக் குழப்பவாதிகளால் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைக்கான ஜனநாயக வழிப் போராட்ட வடிவம் சிதைக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. சிங்கள தேசத்தின் ஜனநாயக மறுப்பும், இன வன்முறைத் தொடர்ச்சியும் ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் பக்கம் மேற்குலகை நகர்த்தி வரும் இந்த வேளையில், அது சார்ந்த பேரெழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியவர்கள் கே.பி. சார் நிலையை எடுப்பது வேடிக்கையானதாகவே உள்ளது.

அடித்து நொருக்கித் துவைத்துப் போடப்பட்ட தமிழீழ மக்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும், சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களும் போராளிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கள நிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், தமிழீழ மக்களது சுதந்திர வாழ்வுக்கும், உயிர் உடமைப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமற்ற நிலையில் தமிழீழ மண்ணில் எந்த விதமான பாரிய அபிவிருத்தித் திட்டங்களையோ, மீள் கட்டுமானங்களையோ மேற்கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த ஊர்களில், தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ முடியாத, வாழ்வுரிமை ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் அந்த மக்களுக்கான அபிவிருத்தி என்பது சிங்கள அரசை ஏதோ ஒரு வகையில் காப்பாற்ற முற்படும் செயலாகவே நோக்கப்பட வேண்டும்.

கே.பி. அவர்களை வைத்து சிங்கள தேசம் நடாத்தும் நாடகத்தில் பங்கேற்கும் நடிகர்களாக புலம்பெயர் தேசங்களிலும் பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார்கள். கே.பி. கைது செய்யப்பட்டார்... சிங்கள அரசால் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்... அவர்மீது மிக மோசமான வன்முறைக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது... எனப் பல்வேறு செய்திகள் மூலம் புலம்பெயர் தமிழர்களது நாடித் துடிப்பை அறிந்து கொள்ள முற்பட்டுத் தோற்றுப்போன இவர்கள், தற்போது கே.பி. மூலமான மீட்பு, கே.பி. மூலமான அபிவிருத்தி, கே.பி. மூலமான விடுதலை என்ற புதிய வார்த்தைப் பிரயோகங்களுடன் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பிளவு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

2009 மே 18 இற்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போர்க் களம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் குழப்ப நிலைக்குள் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவே சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வசதியானதாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உருவான மக்கள் பேரவைகளும், நாடு கடந்த தமிழீழ அரசும் ஜனநாயக ரீதியாகப் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருந்தாலும் இன்று வரை அந்த அமைப்புக்களின் சாதனைகள் என்று குறிப்பிடும்படியாக எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், இந்த இரு அமைப்புக்களுக்கும் இடையே நட்புறவோ, இணக்கப்பாடோ இருப்தாகக் கூட உணர முடியவில்லை.

'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தை முன்மொழிந்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது சிறிலங்கா அரவின் விருந்தாளியாக உள்ளார். கே.பி. கைதியாகவே உள்ளார் என்று வைத்துக்கொண்டாலும், அவரால் தற்போது அவரது எஜமானர்களை மீறி எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால், தற்போது சிங்கள தேசத்தால் உருவாக்கிவிடப்படும் கே.பி. குறித்த பரபரப்பு செய்திகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைவதற்கு எதுவுமே இல்லை. அந்தச் செய்திகளைப் புறம் தள்ளிவிட்டு, மேற்குலகின் மனமாற்றங்களை வலுப்படுத்தி, அதனைத் தமிழீழ விடுதலைக்கான போர்க்களமாகத் தொடர்ந்து பயணிப்பதே எமது மக்களையும், மண்ணையும் விடுவிப்பதற்கான ஒருவழிப் பாதையாக உள்ளது.

இந்தக் குழப்பமான சூழ்நிலைகளை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய பாரிய கடமை நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், மக்கள் பேரவைகளுக்கும் உண்டு. குறிப்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிர்வாகப் பணிப்பாளர் திரு. ருத்ரகுமாரனுக்கு உள்ளது. 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தியலை முன்மொழிந்தவர் திரு. கே.பி. அவர்கள் என்பதாலும், அதனை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர் திரு. ருத்ரகுமாரன் என்பதாலும், நாடு கடந்த தமிழீழம் சார்ந்து திரு. கே.பி. அவர்கள் குறித்த தமது நிலையை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் அரங்கேற்றி முடித்த சிங்கள அரசுக்கு இப்போது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரே போர்க் களமாக புலம்பெயர் தமிழர் பலமே எஞ்சியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கும், அவர்களது போர்க் களத்தை முறியடிப்பதற்கும் சிங்கள அரசு தனது அனைத்து வளங்களையும், பலங்களையும் திசை திருப்பி விட்டுள்ளது. மேற்குலகின் பல துதரகங்களுக்குத் தனது படைத் தளபதிகளையே துதுவர்களாக நியமித்து வருகின்றது. அத்துடன், தமிழ் மக்கள் மத்தியில் ஏராளமான புலனாய்வாளர்களையும், கொடூரமான ஒட்டுக் குழுவினரையும் ஊடுருவ விட்டுள்ளது. அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளும் சிறிலங்கா துதராலயங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைத் தளத்தில் முன்நின்று போராடும் அமைப்புக்களுக்கிடையே பிளவுகளை உருவாக்கி, அவர்களிடையே மோதல்களைத் தோற்றுவித்து, இடை நுழைந்து சிலரை இல்லாமல் ஆக்கும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் சிங்கள ஊடகவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில், சிங்கள அரச வன்முறை புலம்பெயர் தேசங்களிலும் குழு மோதல் என்ற போர்வையில் அரங்கேற்றப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு வசதியாகவே, புலம்பெயர் தேசங்களில் கள நிலமை மாற்றம் பெற்று வருகின்றது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படும் குழப்பங்களுக்கும், பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் திறந்த பேச்சுக்களை நடாத்திப் பொது இணக்கத்திற்கு வரவேண்டும். அந்த இணக்கப்பாட்டுடன் மக்கள் மத்தியில் தமது விடுதலைப் பயணம் குறித்த நிலையைத் தெளிவு படுத்த வேண்டும். எல்லாக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே. அதைப் படிக்கல்லாக மாற்றும் வித்தை தற்போது யாருக்கும் இல்லை என்பதை, சிங்கள தேசத்தைப் புரிந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

- அகத்தியன்

Comments