கேபிக்காக பொங்கும் பொங்கு தமிழ் இணையம்

தேசியத் தலைவரை ஹெலி மூலம் வெளியேற்ற நினைத்தாராம் கே.பி

மே 18ம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான தமிழ் இணையம் பொங்கு தமிழ். ஈழத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான பொங்கு தமிழ் விழாவின் பெயரை தமது இணையத்தின் பெயராகச்சூட்டி வலம்வரும் இவ் இணையம் தமிழர்களை பொங்கவைக்கவில்லை! மாறாக அதே அடுப்பில் தமிழர்களை வேகவைக்க நினைக்கிறது. பொங்கு தமிழ் நடாத்தும் இணைய அன்பர்களுக்கும், பொங்கு தமிழ் நிகழ்வை நடத்தியவர்களுக்கும் எத் தொடர்பும் இல்லை. இவர்கள் எவரும் அப்பக்கம் தலைவைத்துப் படுத்ததே இல்லை, மழைக்கு அப்பக்கம் ஒதுங்கியவர்களோ அல்லர்.

பிரித்தானியாவில் இருக்கும் ரஞ்சித், இந்தியாவில் இருந்து திரு என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு, நோர்வே பேர்கனில் இருந்து ஹேமா, என்போராலும் வேறு சிலராலும் பொங்கு தமிழ் இணையம் நடாத்தப்பட்டுவருகிறது.

இந்த ஞானசூனியங்கள் கே.பி என்பரை ஒரு பெரும் தலைவராகச் சித்தரிக்க முற்படுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தேசிய தலைவர் எடுத்த முடிவுகள் பிழையானவை என்று ஏற்கனவே வாதிட்டுவந்த இவர்கள், தற்போது கே.பி சொல்வதை தெய்வ வாக்காக எடுத்து கைகளில் வேப்பிலை கட்டி ஆடுவது, வேடிக்கையான விடயம்! வெட்கி நாணவேண்டிய விடயமும் கூட.

இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் கே.பி, தான் சொல்லவருவதை டி.பி.எஸ் ஜெயராஜ் கேட்பது போலவும், அதற்கு தான் ஆத்மார்த்தமாக பதில்சொல்வது போலவும் ஒரு நேர்காணல் நாடகம் ஆட, அதனை அரசு ஆதரவு இணையமான டெய்லிமிரர் பக்கம் பக்கமாக வெளியிட்டு வருகிறது. இதன் தமிழாக்கம் மிக நீளமானது.

அதில் கே.பியை நல்லவர் என்று கருதும்படியான வாசகங்கள் அடங்கிய பகுதிகளை மட்டும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த பொங்குதமிழ் ஆசிரியர்கள், அதனை மட்டும் பிரசுரித்துள்ளனர், மிகவும் இலகுவான நடையில், அதாவது பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இது சுருக்கி பிரசுரமாகியுள்ளதாக பொங்கு தமிழ் இணையமே தெரிவித்துள்ளது.

கே.பியின் முழுப்பேட்டியையும் போடாது, குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டும் ஏன் பொங்குதமிழ் போடவேண்டும்? இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்லவரும் கருத்துதான் என்ன என்கின்ற கேள்விகள் இங்கு எழுகின்றன. அப்படியானால் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் இவர்கள் இயங்குகிறார்களா என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது.

தேசியத் தலைவரை ஹெலி மூலம் காப்பாற்ற நினைத்தாராம் கே.பி:

யுத்த காலத்தில் ஹெலி மூலம் தேசிய தலைவரை தான் காப்பாற்ற நினைத்ததாக கே.பி கூறியுள்ளார். அதற்காக ஒரு ஹெலியை வாங்க தாம் முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். உண்மையில் போர்க்களத்தில் உள்ள தேசிய தலைமையைக் காப்பாற்ற ஒருவர் எண்ணியிருந்தால் காசுகொடுத்து உலங்குவானூர்தி ஒன்றை வாங்கித்தான் செயல்படுத்தவேண்டும் என்று இல்லை. அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்! சமாதான கால கட்டத்தில், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மாலைதீவு சென்று, அங்கிருந்து சிறிய ரக விமானம் மூலம் இரணைமடு குளத்தில் சென்று இறங்கினார். அதற்கு அவர் அவ் விமான ஓட்டிக்கு செலுத்திய பணம் 5,000 டாலர்களுக்கும் குறைவானது.

அப்படி இருக்கும்போது, தாய்லாந்து, இந்தோனேசியா, மற்றும் மாலைதீவுகளில் பணம் கொடுத்தால் நூற்றுக்கணக்கான விமானிகளை வாடகைக்கு அமர்த்த முடியும் என்பது, ஐரோப்பாவில் இருக்கும் எமக்கே தெரியும் போது, அந்த நாடுகளின் காவல்துறைக்கே கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய கே.பிக்கு தெரியாதா என்ன? யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்? இதோ இங்கு உள்ள இணையத்தைப் பாருங்கள்,(http://www.aircraftdealer.com/) இங்கே 50,000 டாலர் தொடக்கம் விமானங்கள் விற்பனைக்கு உண்டு, அவற்றில் ஒன்றை அல்லது இரண்டை வாங்கி வாடகைக்கு விமானிகளை அமர்த்தி சென்றிருக்க முடியாதா அல்லது அது சாத்தியம் இல்லையா?

அனுராதபுரம், கொழும்பு மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலேயே இலங்கை இராணுவம் விமான எதிர்ப்பு ஆயுதங்களை நிலைநிறுத்தியிருந்தது. முள்ளிவாய்க்காலில் அல்ல. எனவே ஒரு இரவில் இலகுவாகச் சென்று நந்திக்கடலில் தரையிறங்கி குறிப்பிட்ட சில தலைவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கமுடியும். ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தினால் கூட மீதமுள்ள விமானம் பிழைத்திருக்கும். அவ்வாறு செய்யாது மௌனம் காத்தது யார்? இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பணம் சேர்த்தது யார்? இறுதியில் ஏன் இது நடக்கவில்லை?

விடுதலைப் புலிகளின் தலைமை தன்னை விலக்கியது என்பதை கே.பி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். திரும்பவும் தேசியத் தலைவர் 2008ம் ஆண்டு தன்னோடு தொடர்புகொண்டு மீண்டும் ஆயுதக் கப்பல்களை அனுப்பும்படி கூறியபோது, கே.பியின் வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டதே என்ற காழ்ப்புணர்வை தேசிய தலைவருக்கே எடுத்துரைத்துள்ளார் கே.பி. அதனை அவர் இங்கு சொல்லியும் உள்ளார். போர் உக்கிரம் அடைந்துவரும் நிலையில், புலிகள் பல இழப்புக்களைச் சந்தித்தவேளை, தேசிய தலைவர் கே.பியிடம் உதவிகேட்டபோது, தனது வலையமைப்பைக் கலைத்துவிட்டீர்களே என்று கே.பி சொல்லுவாரேயானால் அவர் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை நாம் அறிவோம்!

அத்தோடு மீண்டும் தனது வலையமைப்பைக் கட்டி எழுப்ப 1 வருடம் ஆகும் எனக் கே,பி கூறியபோது அது மிகவும் காலதாமதம் ஆகியிருக்கும் என தேசியத் தலைவர் கூறியதாக கே.பியே ஒத்துக்கொள்கிறார். அப்படியாயின் இக்கட்டான நிலையை அறிந்து அவசரமாக உதவமுடியாத ஒருவர் எவ்வாறு எமது இனத்தை பாதுகாக்க முடியும். பெரும் பணத்தோடும், செல்வாக்கோடும் உலாவந்த கே.பி, அப்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபோதே முடியாததை இப்போது எப்படி செய்வார் என்று எதிர்பார்ப்பது.?

தமிழீழ தேசியத் தலைமையையோ அல்லது தேசியத் தலைவரையோ விமர்சிக்கும் தகுதி இங்கு யாருக்கும் இருப்பதாக நாம் கருதவில்லை. போர்களம், அதன் வியூகங்கள், களநிலைகளை வெறுமனவே வெளிநாட்டில் இருந்து அனுமானிக்க முடியாது. அங்கு உள்ளவர்களே தீர்மானிக்க முடியும்!

எனவே தேசியத் தலைவரை ஒரு பகடைக்காய் போலப் பாவிப்பதும், புலிகள் மீது சேறுபூசுவதும் முதலில் நிறுத்தப்படவேண்டும்! தலைவரைக் காப்பாற்ற நினைத்தேன், அவர் குடும்பத்தை காப்பாற்ற நினைத்தேன் என்று அம்புலிமாமா கதைகளைச் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டாம்!

தேசிய தலைவர் வசனங்கள் பேசி மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை! எனவே வெட்டிப் பேச்சுக்களையும், உதவாத விவாதங்களையும் நிறுத்திவிட்டு, இலங்கை அரசின் போர்குற்றங்களை, இன அழிப்பை, வெளிக்கொண்டுவந்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, வலுப்பெற பாடுபடுவதே தமிழர் விடிவுக்கு வழிசமைக்கும்!

Comments