தமிழ் அகதிகள் கனடா வருவதற்கான காரணம் என்ன? கனேடிய ஊடகம் கேள்வி!

கனேடியர்களுக்கு கப்பல்மூலம் கனடாவிற்கு வந்துள்ள அகதிகளின் அவலங்கள் தொடர்பான உண்மைகளை அறிய மாதங்கள், சில வேளை வருடங்கள் கூட ஆகலாம். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டைகள் ஒரு முடிவிற்கு வந்திருக்கலாம். ஆனாலும் சிறிலங்கா இன்னமும் இனப்பிரச்சினைகளிலிருந்து விடுபடாத ஒரு நாடாகவே இருக்கிறது என கனடாவின் சி.ரிவி நியுஸ் எழுதியுள்ளது.

இவ்வியடம் தொடர்பாக இவ்ஊடகம் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர், போரின்போது மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா பெரும் குற்றச்சாட்டுகளில் சிக்குண்டுபோய் உள்ளது. ஐ.நா சபையின் கணிப்பின்படி 7000 வரையான பொதுமக்கள் கடைசி ஐந்து மாதங்களில் மட்டும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இதுபோன்ற ஏறக்குறைய 300 அறிக்கைகளில் அரசபடைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக இவ் ஊடகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள்
போர்க்கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை
சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டமை
இளைஞர்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டமை
இடம்பெயர்ந்தவர்களுக்கு சரியான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்காமை போன்ற குற்றச்சாட்டுகளில் அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளது.
வயது குறைந்தவர்களை படையில் இணைத்தமை, பொதுமக்களை கேடயமாகப் பாவித்தமை போற்ற குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மேலும் இராஜாங்க திணைக்களம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் சிறிலங்கா அரசு இப்போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை முறையான ஒரு விசாரணயையும் நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இக் குற்றச்சாட்டுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை கூறும்படி வேண்டி ஐ.நா செயலாளர் நாயகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளார். இக்குழுவிற்கு சிறிலங்கா அரசு கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது. கடந்த யூலை மாதம் சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகததை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தார். இதன் காரணமாக ஐ.நா சபையின் அலுவலகம் பூட்டப்படவேண்டிய நிலைக்கு உள்ளானது.

கடந்த வாரம் அமெரிக்க காங்கிரசின் 57 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் கில்லறி கிளின்ரனுக்கு அனுப்பிய கடிதத்தில் சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றிற்கு சிறிலங்காவை வற்புறுத்தும்படி கேட்டிருந்தனர். இவ்வாறான அழுத்தங்களை ஏற்க மாட்டோம் என சிறலங்கா அறிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத் தன்மை குறித்தும் அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முற்றாக மீள்குடியேற்றப்படவில்லை. 11000 வரையான விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நீதி விசாரணைகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என எழுதியுள்ளதுடன் இதன் காரணமாகவே அகதிகள் இடம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு வர நேரிடுகிறது என மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது.

Comments