இனப்படுகொலையில் இருந்து தப்பிய தமிழினத்தின் கூட்டு அரசியல் தஞ்சம் கூறும் செய்தி என்ன?

சிறீலங்காவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் விடுதலைப்புலிகள் தொடர்பாக பேசுவதை சிறீலங்கா அரசு ஒரு நாள் கூட நிறுத்துவதில்லை.

விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா அரசு தொடர்ந்து விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசிவருவதன் நோக்கம் வெளிப்படையானது. அதாவது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களைளின் அரசியல் போராட்டங்களை முறியடிப்பது அதன் ஒரு நோக்கம்.


இரண்டாவது போரின் பின்னரும் தொடரும் சிறீலங்கா அரசின் வன்முறைகளின் குறியீடாக தொடர்ந்து அனைத்துலகத்தின் கதவுகளை தட்டும் தமிழ் மக்களின் அரசியல் தஞ்சம் அரசின் நயவஞ்சகத்திட்டத்தை அம்பலப்படுத்தும் என்பதாலும் அந்த அப்பாவி மக்களை விடுதலைப்புலிகளாக்கும் பணிகளை சிறீலங்கா அரசும் சிங்கள சமூகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 6ம் நாள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு "காலி கலந்துரையாடல் 2010" என்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டை மேற்கொண்டிருந்தது. போர் நடந்த காலப்பகுதியில் மற்றும் அதற்கு பின்னராக சிறீலங்காவில் இருந்து தப்பி அகதிகளாக கடல்வழியாக பல்வேறு நாடுகளை நோக்கி தஞ்சம் கோரும் பயணத்தை மேற்கொண்டிருப்பவர்களை "பயங்கரவாதிகள்" என்று சித்திரித்து தடுக்கும் திட்டத்தை தான் அந்த மாநாடு பிரதானமாக கொண்டுள்ளது. அங்கு உரையாற்றிய சிறீலங்காவின் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய உட்பட பெரும்பாலானோர் இதை மையப்படுத்தியே தமது கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.அத்தோடு அமெரிக்காவின் முன்னாள் தென் மற்றம் தென்கிழக்கு ஆசியாவிற்கு பொறுப்பான பிரதி பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் கலாட்ஸ் கப்பலில் வரும் தமிழர்களை சிறீலங்காவுக்கு மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்ற ஒரு பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும் அவரின் கருத்தை உடனடியாகவே வலுவாக மறுத்துள்ள அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தை சேர்ந்த அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறீலங்கா விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜிம் மக்டோனால்ட், விடுதலைப்புலிகள் அனைவரும், குற்றமிழைத்தவர்கள் அல்ல எனவும், சிறீலங்காவுக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்த வித குற்றங்களும் சுமத்தப்படாது 11,000 ஆயிரம் தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதையும் அவர் சுட்டடிக்காட்டத் தவறவில்லை.

ஆனால் சிங்கள சமூகம் தனது முயற்சிகளை தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமிழர்கள் என்றால் அவர்கள்" பயங்கரவாதிகள்"தான் என்ற கருத்துபட தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பேரினவாதியுமான ரொகான் குணரத்ன இந்த கப்பலில் உள்ளவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் சம்பந்தப்பட்ட நாடுகள் இவர்களை நடுக்கடலில்; வைத்து கைது செய்ய வேண்டும் என்றும் இந்த மாதிரியானவர்களுக்கு எதிராக ஒரு முன்னுதாரணமாக கடும் நடவடிக்ககைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்களால் மேற்கு நாடுகளுக்கு ஆபத்து என்றும் அண்மைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

றொஹான் குணரத்தினாவை பொறுத்தவரையில் அவர் சிறீலங்கா அரசினதும், சிங்கள சமூகத்தினதும் தனி மனித இராணுவம்(One man army) அவரால் ஈழத்தமிழர்களின் உரிமை போர் சந்தித்த பின்னடைவுகள் ஏராளம் என்பதுடன், இந்த மனிதாபிமானமற்ற பேரினவாதியினால் தமிழ் மக்கள் புலம்பெயர் நாடுகளில் சந்தித்த துன்பங்களும் அதிகம்.

சிங்கப்பூரை தளமாக கொண்ட நான்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பீடத்தின் தலைவராக பணியாற்றிவரும்(u;ead of RSIS’s International Centre for Political Violence and Terrorism Research (ICPVTR) Nanyang Technological University) குணரத்தினா தான் ஒரு பேராசிரியர் என்ற தொழில் தர்மத்தை கூடமறந்து, சிறீலங்கா அரசின் கூலிப்படையாக தனது பேரினவாதத்தை கக்கிவருகிறார்.


இவரின் கருத்துக்களை நாம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் கருத்துக்களாகவே எதிர்காலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், சிங்கப்பூர் அரச தலைவருக்கும் முறைப்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்பது புலம்பெயர் தமிழ் சமுகத்தின் ஒருமித்த கருத்தாக மாற்றம் பெற்றுள்ளது.

மேலும் அரசியல் வன்முறைகள் தொடர்பான பீடத்தின் தலைவாரக பணியாற்றும் குணரத்தினா சிறீலங்கா அரசின் அரசியல் வன்முறை தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒரு இனத்தின் சிறு குழந்தை தொடக்கம் வயதானவர்கள் வரையும் பயங்கரவாதிகள் என தெரிவித்துவரும் இவரின் நடவடிக்கைகளை நாம் புறக்கணிக்க முடியாது.

இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் வன்முறைகளுக்கான முக்கியமான பங்கை குணரத்தினா என்பவன் வழங்கப்போகின்றான். காலணித்துவ சிந்தனைக்குள் மூழ்கி ஒரு சிறிய இனத்தின் அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியா ஊடகங்கக்கு எதிராக பரமேஸ்வரன் தொடுத்த போரில் அவர் பெற்ற வெற்றி எமக்கு ஒரு முன் உதாரணம்.

புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம் ஜனநாயக நாடுகளில் வாழ்கிறோம், எம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசோ அல்லது அதன் ஊதுகுழலான குணரத்தினாவோ சுமத்த முடியாது. மேலும் புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம்கோரும் மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு.

சிறீலங்கா அரசை போல அனைத்துலக நாடுகளும் நடந்துகொள்ள முடியாது. சிறீலங்காவில் போர் நிறைவுபெற்று 14 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும், புறக்கணிப்புக்களும் நின்றுவிடவில்லை. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றாக இல்லாது செய்த அவசரகாலச்சட்டமும் சிறீலங்காவில் நீக்கப்படவில்லை.

மூன்று தசாப்தத்திற்கு மேற்பட்ட சிறீலங்கா அரசின் உக்கிர இன அழிப்பில் இருந்து தப்பிக்க தமிழ் மக்கள் உலக நாடுகளில் தொடர்ந்து அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ளனர். ஆனால் தற்போது போர் நிறைவுபெற்றுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் முன்னரை விட அதிகளவில் கூட்டம் கூட்டமாக அரசியல் தஞ்சம் கோருவது பல தகவல்களை இந்த உலகிற்கு தெரிவித்துவருகின்றது.

• ஈழத் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலை என்பது போரின் போது மட்டும் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவில்லை, அமைதியான காலப்பகுதியிலும் அது முன்னெடுக்கப்படுகின்றது.

• போரை சிறீலங்கா அரசு முடிவுக்கு கொண்டுவந்தது ஒரு இன அழிப்பின் மூலம் தான். எனவே தற்போது அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு உள்ள அடையாளம் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள் என்பதே.

• ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டு, அவர்களின் இன, காலாச்சார, பூகோள விழுமியங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.

• வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரும் இந்த மக்கள் போரில் கோரமாக தோற்கடிக்கப்பட்டு, இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற தமது அடையாளங்கள் பறிக்கப்பட்டவர்கள்.

• இறைமை என்ற பெயரில் அழிவுக்கு உள்ளாகிய ஒரு சிறிய இனத்தில் எஞ்சியவர்கள் தான் இந்த அகதிகள்.

இதனை தான் தமது உயிர்களை பணயம் வைத்து பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்யும் இந்த மக்கள் உலகிற்கு அறிவிக்கின்றனர். இந்த கூட்டு அரசியல் தஞ்சம் என்பதும் ஒருவகையில் எமது அரசியல் போராட்டத்தின் ஒரு வடிவம் தான்.

இனவாத சிங்கள அரசினாலும், மனிதாபிமானமற்ற பிராந்திய நாடுகளினாலும் அழிவுக்குள்ளான ஒரு இனம் உலகில் சிறிதளவு மனிதாபிமானமும், மனித உரிமைகளும் வாழும் நாடுகளின் வாசல் கதவுகளை தட்டுகின்றனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தமது தாயகத்தில் சிறிலங்கா அரசினதும், படைகளினதும் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக வாழும் நிலையை உலக நாடுகள் ஏற்படுத்தி கொடுக்கும் வரை அவர்களின் வாசல் கதவுகளை ஈழத்தமிழ் சமூகம் அகதிகளாக தட்டிக்கொண்டே இருக்கும்.


ஒரு சிறிய இனம் மீதான போரில் ஒன்றிணைந்த உலக நாடுகள் தற்போது அவர்களின் அரசியல் உரிமைக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளது. அதனை தான் ஒரு இனப்படுகொலையில் இருந்து தப்பிய இந்த சிறிய இனத்தின் மக்கள் உலகிற்கு உணர்த்தி நிற்கின்றனர்.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்-

Comments