கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை

யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது.

வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே போர்க்களத்தில் இருந்து தனது கவனத்தை புகலிட தேசங்களை நோக்கி சிங்களம் குவிமையப்படுத்திக் கொண்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைத்தெறியும் போர்வையில், புகலிட தமிழீழத் தேசிய அமைப்புக்களையும், தமிழகத்தின் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் குறிவைத்து தனது காய்களையும் நகர்த்தத் தொடங்கியிருந்தது.

இதன் முதன்மை மூலோபாயமாக தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதையும், அதனூடாக ஆயுதப் போராட்டத்தின் மீதான உலகத் தமிழினத்தின் நம்பிக்கையை சிதறடிப்பதையும், இவற்றின் பெறுபேறாக உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவை துடைத்தெறிவதையும் இலக்காகக் கொண்டு, தனது கருத்தியல் போரை சிங்களம் தொடங்கியிருந்தது.

சிங்களத்தின் இந்த மூலோபாயத்தை செயற்படுத்தும் வகையிலான கருத்துக்களையே மே 18இற்குப் பின்னர் கே.பி அவர்களும் வெளியிட்டிருந்தார். அவ்வாறான கருத்துக்களையே இப்பொழுதும் கே.பி அவர்கள் வெளியிட்டு வருகின்றார்.

ஆனாலும் கே.பியூடாகவும், தனது ஊடக வலையமைப்புக்கள் வாயிலாகவும் உலகத் தமிழர்களைக் குறிவைத்து மகிந்தர் தொடங்கிய கருத்தியல் போர் என்பது, 1997ஆம் ஆண்டில் சந்திரிகா அம்மையார் தொடங்கிய `ஜெயசிக்குறுய்` நடவடிக்கைக்கு ஒப்பான நிலையையே தற்பொழுது எட்டியுள்ளது. மெது மெதுவாக, அரக்கி அரக்கி, பதினைந்து மாதங்களில் மாங்குளத்துடன் சிக்குண்டு போன ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கை போன்று, உலகத் தமிழர்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்திய பின்னர், முடக்க நிலையை சிங்களத்தின் கருத்தியல் போர் எட்டியுள்ளது.

இதில் வரலாற்றின் நகைமுரண் யாதெனில், ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையின் பொழுது மாங்குளத்தை சிங்களப் படைகள் நெருங்கிய வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி நகர் மீட்டெடுக்கப்பட்டு ‘ஜெயசிக்குறுய்’ நடவடிக்கையின் இலக்கு பின்தள்ளப்பட்டு, சந்திரிகா அம்மையாரின் கனவு வெறும் கனவாகிப் போனது. இந்நிகழ்வின் மறுபதிவாக, கடந்த யூன் மாதம் புகலிட தேசங்களில் இருந்து கே.பியின் அடிவருடிகளை கொழும்பிற்கு அழைத்து, அதனூடாக உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்தர் எடுத்த முயற்சியும், கலைந்து போன வெறும் கனவாகவே மாறிப் போயுள்ளது.

கே.பி ஆயினும் சரி, அல்லது அவரது அடிவருடிகளாயினும் சரி, அன்றி மிதவாதிகள் என்று கூறிக்கொண்டு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுபவர்களாயினும் சரி, எவ்வளவு தூரத்திற்கு தலைகீழாக நின்றாலும், உலகத் தமிழர்களின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவை சிதறடிப்பது என்பது இவர்களுக்கு முயற்கொம்பாகவே உள்ளது.

இந்த வகையில், சிங்களத்தின் இந்த சதி முயற்சியை தடுத்து நிறுத்துவதில் முதன்மையான பாத்திரத்தை வகித்த தமிழகத் தலைவர்களான பழ.நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்களுக்கு என்றென்றும் ஈழத்தமிழர்கள் நன்றிக்குரியவர்கள்.

இன்று உலகத் தமிழர்களிடையே - குறிப்பாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே - பல்வேறு குழப்பங்கள் நிலவினாலும்கூட, இவையனைத்தையும் கடந்தும் தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கும் சக்தியாக மாவீரர்களின் ஆன்மிக வல்லமையே திகழ்கின்றது. இதுவே இன்று சிங்களத்திற்கு பெரும் சவாலாகவும் விளங்குகின்றது.


பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளடங்கலான மாவீரர்களை இழிவுபடுத்தி செவ்வி வழங்கிய கே.பியை கடுமையாக விமர்சித்து, கே.பி குழுவிற்கு ஆதரவான தமிழ்த் தொலைக்காட்சியில் இவ்வாரம் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் இதற்கு தெளிவான சான்றைப் பகர்கின்றன.

இதேநேரத்தில், உலகத் தமிழர்களிடையே அணையாத தீயாக உயிர்வாழும் தமிழீழக் கருத்தியலால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை, சிங்கள - இந்திய அரசுகளும் நன்கு புரிந்துகொண்டுள்ளன. இப்புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில், சிங்கள - இந்திய அரசுகளின் மூலோபாய ஆலோசனைக் கல்விமான்களாக விளங்கும் பேராசிரியர் ரொகான் குணரட்ண, கலாநிதி தயான் ஜெயத்திலக, கேணல் ஹரிகரன், பி.இராமன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் திகழ்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், கடந்த ஒரு வார காலப்பகுதியில் இந்த நான்கு `நாயன்மார்களின்` ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்திருப்பதோடு, உலகத் தமிழினத்தின் ஆழ்மனத்தின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கருத்தியல் தோற்கடிக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியே தமது ஆய்வுகளையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதுபற்றிக் கருத்துக்கூறும் ரொகான் குணரட்ண, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு தற்பொழுது சிறீலங்கா அரசாங்கத்திற்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதாகவும், எனினும் அதன் செயற்பாடுகள் மேலும் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகளுக்குள் அது அச்சுறுத்தலாக மாறிவிடக்கூடும் என்றும் எச்சரிக்கின்றார்.

இவ்வாறான சூழல் தோன்றுவதை தடுத்து நிறுத்துவதற்கு, கே.பி போன்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதோடு, புலம்பெயர்ந்தோருக்கான கட்டமைப்பு ஒன்றை நிறுவி அதனூடாக தமிழீழக் கருத்தியலை புலம்பெயர்வாழ் தமிழர்களின் மனதில் இருந்து அகற்ற வேண்டும் என்றும், ரொகான் குணரட்ண ஆலோசனை வழங்குகின்றார்.

இதேதொனியில் கருத்து வெளியிட்டிருக்கும் கேணல் ஹரிகரன், புலம்பெயர்வாழ் தமிழர்களை இலக்கு வைத்து ‘சாம, பேத, தான, தண்ட’ மூலோபாயங்களை சிறீலங்கா அரசாங்கம் கையாள்கின்ற பொழுதும், அவர்களின் அடிமனதில் இருந்து தமிழீழக் கருத்தியல் அழிக்கப்படும் வரை, தனது இலக்கை சிறீலங்கா அரசாங்கத்தால் ஈட்டிவிட முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.

கே.பியைப் பயன்படுத்தி புலம்பெயர்வாழ் தமிழர்களிடையே சிதைவுகளை சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தினாலும்கூட, தமிழீழக் கருத்தியலை சிதறடிப்பது கடினம் என்றும், அரசியல் தீர்வின் ஊடாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கேணல் ஹரிகரன் வலியுறுத்துகின்றார்.
இதேபாணியில் கருத்து வெளியிட்டிருக்கும் பி.இராமன், புலம்பெயர் தேசங்களில் மட்டுமன்றி தமிழகத்திலும் தமிழீழக் கருத்தியல் உயிர்வாழ்வதாகவும், இது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கின்றார்.

அண்மையில் இந்திய திரையுலக நட்சத்திரங்களின் கொழும்புப் பயணத்தை தமிழக மக்கள் முடக்கியமை, தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலையே உணர்த்துவதாகவும், தமிழீழக் கருத்தியல் தொடர்ந்தும் உயிர்வாழும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உயிரூட்டம் பெறுவதை தடுத்து நிறுத்துவது கடினமானது என்றும், பி.இராமன் சுட்டிக் காட்டுகின்றார்.

இவர்கள் அனைவரில் இருந்து சற்று வித்தியாசமாகக் கருத்து வெளியிட்டிருக்கும் கலாநிதி தயான் ஜெயத்திலக, புலம்பெயர் தேசங்களில் உயிர்வாழும் தமிழீழக் கருத்தியலை எதிர்கொள்ள முடியாது சிறீலங்கா அரசு திண்டாடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார்.

‘சிறீலங்கா அரசை ஆட்டிப்படைக்கும் அன்ரன் பாலசிங்கத்தின் ஆவி’ என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த சண்டே லீடர்’ வார இதழில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் தயான் ஜெயத்திலக, அனைத்துலக சமூகத்தை இலக்கு வைத்து, 1970களில் இலண்டனில் இருந்து தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தொடக்கி வைத்த ‘பன்னாட்டு அரசியல்-கருத்தியல் இயக்கம்’ என்பது, தற்பொழுது ‘தமிழீழக் கருத்தியலை’ உலக அரங்கில் நகர்த்திச் செல்வதாகவும் குறிப்பிடுகின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களுக்கு ‘மிகவும் நுட்பமான மேற்குலக மயப்படுத்தப்பட்ட மார்க்சிய-யதார்த்தவாத வடிவம்’ கொடுத்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தான் உயிர்வாழ்ந்த காலத்தில் ‘தன்னைப் போன்று அனைவரையும் உருவாக்கி, சிந்திக்க வைத்தார்’ என்றும், இலண்டனில் இருந்து ‘பாலா அண்ணா’ தொடக்கி வைத்த ‘உலக மயப்படுத்தப்பட்ட தனியரசு நோக்கிய ஆதரவியல், பரப்புரை, பொது இராசதந்திர நடவடிக்கைகள்’, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.

செப்ரம்பர் 11இற்குப் பின்னரான உலக ஒழுங்கு பற்றிய மாயைக்குள் இப்பொழுதும் சிறீலங்கா அரசு மூழ்கிக் கிடக்கின்ற பொழுதும், கொசவோவை தனியரசாக அங்கீகரித்தன் மூலம், ஜோர்ஜ் புக்ஷ் அவர்களின் காலத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, மனிதவுரிமைகள், மனிதநேயத் தலையீடு போன்றவற்றின் அடிப்படையில் நாடுகளை பிளவுபடுத்தித் தனியரசுகளை அமைக்கும் நிலைக்குள் தற்போதைய உலக ஒழுங்கு நகர்ந்திருப்பதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.

உலக நாடுகளை அணிதிரட்டி, மிகவும் தீர்க்கமான இராசதந்திர நடவடிக்கையூடாக கடந்த ஆண்டு யுத்தத்தை சிறீலங்கா அரசு வெற்றிகொண்ட பொழுதும், தற்பொழுது ‘தெருச்சண்டியர்’ பாணியில் சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் பழமைவாத மரபுவழி இராசதந்திரம், ‘பாலசிங்கத்தின் ஆவியை’ எதிர்கொள்ள முடியாது திண்டாடுவதாகவும், கலாநிதி தயான் ஜெயத்திலக குறிப்பிடுகின்றார்.

அத்துடன், கே.பியை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்புக்களை உடைப்பதற்கு சிறீலங்கா அரசு எடுக்கும் முயற்சிகள் காத்திரமான பயனை அளிக்கப் போவதில்லை என்றும், கலாநிதி தயான் ஜெயத்திலக சுட்டிக் காட்டுகின்றார்.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா செயலகத்திற்கான சிறீலங்கா அரசின் நிரந்தர தூதுவராகக் கடமையாற்றிய கலாநிதி தயான் ஜெயத்திலக, வன்னிப் போரின் இறுதிக் கணங்கில் புகலிட தேசங்களில் இருந்து தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்ட பரப்புரை நடவடிக்கைகளை முறியடிப்பதில் முன்னின்று செயலாற்றியவர்.

ஒரு வகையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் மனிதநேய முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்த முதன்மை நபர்களில் கலாநிதி தயான் ஜெயத்திலகவும் ஒருவர். மே 18வரை அனைத்துலக அரங்கில் சிங்களத்தின் முதுகெலும்பாக விளங்கிய கலாநிதி தயான் ஜெயத்திலக, யுத்தம் முடிவடைந்ததும் மகிந்த சகோதரர்களால் ஓரங்கட்டப்பட்டு, மீண்டும் தற்பொழுது கொழும்பு பல்கலைக் கழகத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது வேறு கதை.

ஆரம்ப காலங்களில் தன்னை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட கலாநிதி தயான் ஜெயத்திலக, பின்னர் தன்னை முழுமையான சிங்கள இனவாதியாக அடையாளப்படுத்தியமையும் வேறு விடயம். ஆனால் கலாநிதி தயான் ஜெயத்திலகவும், சிங்கள - இந்தியக் கூட்டின் ஏனைய `நாயன்மார்களும்` கூறும்செய்தி ஒன்றுதான்.

அதாவது, புகலிட தேசங்களில் இன்று உயிர்வாழும் தமிழீழக் கருத்தியல், எதிர்காலத்தில் சிங்கள அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதே அது. இதனை நாம் மறு வாசிப்பிற்கு உட்படுத்தினால், தமிழீழக் கருத்தியலில் உலகத் தமிழர்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில், மாறிவரும் உலக ஒழுங்கிற்கு அமைய எதிர்காலத்தில் தமிழீழத் தனியரசு அமைவதை எவராலும் தடுத்து நிறுத்தி முடியாது என்பதே கலாநிதி தயான் ஜெயத்திலகவின் செய்தியாக அமைகின்றது என்று, நாம் கற்பிதம் செய்துகொள்ள முடியும்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் இயங்குசக்தியாக விளங்குபவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அந்த மாபெரும் இயங்குசக்திக்கு ஆன்மீக வல்லமை அளிப்பவர்கள் மாவீரர்கள். முதல் மாவீரன் லெப்.சங்கர் தொடக்கம், முதற் கரும்புலி கப்டன் மில்லர், லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப்.மாலதி, முதுபெரும் தளபதி கேணல் கிட்டு, தேசத்தின் குரல் பாலா அண்ணை, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் பால்ராஜ் என நீண்டு விரிந்து செல்லும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை என்பது ஆழ - அகலங்களுக்கு அப்பாற்பட்டது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இயக்கும் சூரியத்தேவன் என்ற மாபெரும் இயங்கு சக்தியின் நதிமூலமாக விளங்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையே இன்று தமிழீழக் கருத்தியலை உயிர்வாழ வைக்கின்றது.
இதனை எந்தவொரு சக்தியாலும் அழித்துவிடமுடியாது.

இது மட்டும் உறுதி.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால்,


‘சத்தியத்தின் சாட்சியாக நின்று எமது மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்த சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி.’

என்பதை மட்டும் இங்கு நினைவூட்டிக் கொள்ள முடியும்

நன்றி: ஈழமுரசு (12.08.2009)

Comments