''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'

''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!

காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!

''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.

''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.

இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.

''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.

''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.

பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....

''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!

Comments