ராஜபக்சேவுக்கு அழைப்பா? வைகோ கண்டனம்

டெல்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2010 போட்டிகள் வரும் 14 ந்தேதி (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு ராஜபக்சேவுக்கு அனுப்பி உள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் நிறைவு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்

71 நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள், டெல்லியில் 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன. விழாவைக் கோலாகலமாகத் தொடங்கிவைக்க, இங்கிலாந்து அரசு குடும்பத்தின் பிரதிநிதியாக, இளவரசர் சார்லஸ் இந்திய அரசால் அழைக்கப்பட்டு, அவரும் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.

இந்தப்போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முடித்து வைக்க, ராஜபக்சேக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய ராஜபக்சே அரசின் குற்றங்களை ஆய்வு செய்ய, ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் மூவர் குழுவை அமைத்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் கூடிய, பன்னாட்டு நீதிமான்களின் தீர்ப்பாயம், சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து உள்ளது.


ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்காக, வரிச்சலுகைகளை ரத்து செய்தது. அனைத்து உலக நாடுகளின் சிங்கள அரசு செய்த இனக்கொலை பற்றிய, விழிப்புணர்வு வேகமாக ஏற்பட்டு வருகிறது. எனவே மகிந்த ராஜபக்சேயைப் பாதுகாப்பதற்காகவே, இந்த துரோகத்தில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

தாங்கள் விரும்பியவாறு போரை நடத்திய இலங்கை அரசுக்கு, உதவ வேண்டியே, இந்திய அரசு ராஜபக்சேயை, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நான்கு நாட்கள் அரசு விருந்தாளியாக ஏற்கனவே உபசரித்தது. அந்த இந்திய அரசே ராஜபக்சேயை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முடித்து வைக்கின்ற கவுரவத்தைக் கொடுத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண் ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இதை இந்திய அரசு செய்கிறது.

நியூசிலாந்து நாட்டின் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் டெல்லி மாநில முதல்வரை அவமதித்து விட்டதாகக் கூறி, இந்திய அரசு கண்டனம் தெரிவித்ததற்கு நியூசிலாந்து அரசு வருத்தம் தெரிவிக்க நேரிட்டது.

மும்பையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தானோடு போர் தொடுப்போம் என்று, அன்றைய வெளி விவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி மிரட்டல் விடுத்தார். ஆனால், தாய்த்தமிழத்து மீனவர்கள், நமது கடலிலேயே இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன. அப்படியானால், தமிழர்கள் இந்தியக் குடிமக்களே இல்லையா?

வேல் பாய்ந்த இருதயத்துக்குள்ளே சூட்டுக்கோலைத் திணிப்பதுபோல, தற்போது, ராஜபக்சேக்கு, காமன்வெல்த் போட்டிகளை முடித்து வைக்கின்ற மரியாதையை வழங்கி உள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அரசும், அதனை இயக்குகின்ற தலைமையும், அந்த அரசில் அங்கம்வகிக்கும் கட்சிகளும், பொறுப்பாளிகள் ஆவார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.

Comments