ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு

நாம் தமிழர்கட்சியின் இளைஞர் பாசறை தொடக்க விழா மற்றும் முத்துக்குமார் நினைவு வீரவணக்கநாள், நாகையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:-

தமிழின விடுதலை களத்தில் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்காவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் இளைஞர் பாசறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழினம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும். அந்த ஆயுதம் அரசியல் என்னும் அறிவு ஆயுதம். நம் வாக்கு நம்மை ஆளவா? நாம் ஆளவா என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழ் இனத்திற்கு சீமான் உண்மையாக இருக்கிறான் என்பதால் என் எதிரிகள் என்னை கொல்லத் துடிக்கின்றனர். நான் இருந்தால் ஒரு சீமான், செத்தால் இந்த மண்ணில் ஒரு லட்சம் சீமான்கள் உருவாகுவார்கள் என்பதை என் எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தில் நம் தமிழ்ச் சொந்தங்களும், இங்கே மீனவமக்களும் சிந்திய கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் சிங்களவர்கள் பதில் சொல்லும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சீமான் என்னென்ன வித்தைகள் காட்ட போகிறேன் என்பதை ஐந்து வருடம் பொறுத்திருந்து பாருங்கள். எந்த லட்சியத்திற்காக முத்துக்குமார் தன் உடலில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டானோ அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வரை நான் ஓயப்போவதில்லை.

அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர்.

அடக்குமுறை அதன் வாசலை பெரிதாக்குமே தவிர அடைத்து விடாது. எல்லா துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் என்று அத்பேத்கார் கூறியுள்ளார். அந்த ஆட்சி அதிகாரத்தை நாம் கைப்பற்றுவது தவிர நம் இன விடுதலைக்கு வேறு வாய்ப்பு இல்லை என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் சீமான் கூட்டணியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

காங்கிரசுக்கு பாடம் புகட்ட நான் யாரையும் ஆதரிப்பேன். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களும் விடுவிக்கப்பட வேண்டும்.

ஈழத்தில் தமிழின படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் பிரதான நோக்கமாகும். வருகிற சட்டசபை தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை. நீண்ட பயணத்தின் இடையே இளைப்பாற கிடைத்த நீர்த்தேக்கமாகவே இந்த சட்டபேரவை தேர்தலை நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

2011-2016-ல் வரும் இடைத்தேர்தலே எங்கள் களம். அப்போது தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு மிக சிறந்த மாற்றாக நாம் தமிழர் கட்சி உருவெடுக்கும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Posted by எல்லாளன் on 9:55 PM. Filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for ஈழத்தில் தமிழினத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.