சிறிலங்கா: போர்க் குற்றங்களுக்குப் பதிலாக அதிகாரப் பரவலாக்கல்?

ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வுக்குப் பதிலாக போர்க்குற்றச்சாட்டுக்களைக் கைவிடவேண்டும் என்ற உடன்பாடு இந்தியாவினால் கொண்டுவரப்பட்டதொன்று எனச் சிலர் கூறுகிறார்கள்

தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றச்சாட்டுக்களை இனியும் தூக்கிப் பிடிக்கக்கூடாது என்றும் பதிலாக நாட்டினது இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தாம் செயற்படுவோம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்திருப்பதாகத் தெரிகிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின்போதே அரசாங்கம் இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருக்கிறது.

ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுமிடத்து தாம் போர்க் குற்றச்சாட்டுக்களைத் தூக்கிப்பிடிக்கப் போவதில்லை என கூட்டமைப்பும் உடன்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இந்தியாவினது அறிவுரைக்கு அமையவே கூட்டமைப்பு இவ்வாறு நடந்துகொள்கிறதாம் எனச் சிலர் கூறுகிறார்கள்.

ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வுக்குப் பதிலாக போர்க்குற்றச்சாட்டுக்களைக் கைவிடவேண்டும் என்ற உடன்பாடு இந்தியாவினால் கொண்டுவரப்பட்டதொன்று எனச் சிலர் கூறுகிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கருத்துக்களை அலசி ஆராய்ந்தால் அமெரிக்காவும் இதுபோன்றதொரு ஏற்பாட்டினை வரவேற்பதாகத் தெரிகிறது.

சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவின் ரெக்சாஸ் பிராந்தியத்திற்குத் தனிப்பட்ட பயணமாகச் சென்றிருந்தபோது தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை இராசாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ரெக்சாசிலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியிருந்தார். இதன்போது சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் இன நல்லிணக்க முனைப்புக்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை என பிளேக் கூறியிருந்தார்.

இதே கருத்தினையே இந்தியாவின் சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரெறசிற்றா சாபர் வெளியிட்டிருந்தார். "இனநல்லிணக்கத்தினை முன்னெடுப்பது தொடர்பாக சிறிலங்காவினது தலைவர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்பது தொடர்பாக எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை" என அவர் கூறியிருந்தார்.

போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அதிபர் மகிந்த ராஜபக்சவினை அடிபணிய வைக்கும் முனைப்புக்களுக்கு அப்பால் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை அவர் முன்வைக்கும் வகையில் காத்திரமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவேண்டும் என தென் மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான முன்னாள் துணை இராசாங்கச் செயலாளர் ஒருவரும் கூறியிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கம் சுதந்திர விசாரணைகள் இடம்பெறுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரியும் நிலையில், போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றது எதுவோ அதற்குப் பொறுப்புச்சொல்லும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வாதிடுவது ஆக்கபூர்வமான விளைவுகள் எதனையும் தந்துவிடாது என அவர் தொடர்ந்தார்.

மாறாக, நாட்டினது வடக்குப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் இராணுவப் பிரசன்னத்தினைக் குறைப்பதோடு அதிகாரப் பரவலாக்கல் முயற்சியினை அரசாங்கம் மேற்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமானது என வாதாடுகிறார் இந்த முன்னாள் துணை இராசாங்கச் செயலர்.

ஆதலினால் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஒரு கருவியாகக் கொண்டு இலங்கைத் தீவில் அதிகாரப் பரவலாக்கத்துடன்கூடிய அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த முனைவதுதான் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கை என்பதற்கான ஆதாரமாக மேற்குறித்த கூற்றுக்கள் அமைகின்றன.

இந்தியாவின் அழுத்தத்தினைத் தொடர்ந்துதான் மகிந்த அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்ளை நடாத்துவதன் அடிப்படையில் நோக்குமிடத்து இந்தியாவும் இதுபோன்றதொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதையே கணிக்கமுடிகிறது.

நாட்டினது இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக்கூடியதொரு அரசியல் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை நடாத்துமாறு இதற்கு முன்னர் இந்தியா பலமுறை மகிந்த அரசாங்கத்தினைக் கோரியிருந்து. இருப்பினும் அப்போது இந்தியாவின் இந்த அழுத்தங்களுக்கு மகிந்த அரசாங்கம் பணிந்து கொடுக்கவில்லை.

அவமானகரமான தோல்வியினை மகிந்தவிற்குத் தந்துநின்ற லண்டன் பயணத்தினைத் தொடர்ந்துதான் அதிபர் மகிந்த கூட்டமைப்புடனான நேரடிப் பேச்சுக்களை ஆரம்பித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களது இனப்பிரச்சினை விடயத்தில் கொழும்பு அரசாங்கம் போதிய எதனையும் செய்யவில்லை என தமிழ்நாட்டிற்கு பயணம் செய்திருந்த ராகுல்காந்தி அறிவித்ததும் அதிபர் மகிந்த திடீரென மனம்மாறி கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை நடாத்தியமைக்கான இன்னொரு காரணம்.

ஐக்கிய நாடுகள் சபையினது செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைத்த வல்லுநர்கள் குழு தனது இறுதி அறிக்கையினைச் சமர்பிப்பதற்கான காலக்கெடு நெருங்குவதும் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை நடாத்துவது என்ற மகிந்தவின் மனமாற்றத்திற்கான பிறிதொரு காரணம்.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கடும்போக்குடன் கூடிய நிலைப்பாட்டினை எடுத்து அறிக்கைகளை வெளியிடும் அதேநேரம் இந்தியா போன்ற நாடுகள் மென்போக்கினையே கடைப்பிடிக்கின்றன.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகள் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வரிந்துகட்டிக்கொண்டு நின்றபோது சிறிலங்கா சீனாவின் பக்கம் மெல்லச் சாய்ந்ததை இந்தியா நன்கறியும்.

அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகளுடன் இணைந்துநின்று சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுப்பது தனக்குப் பாதகமாக அமையும் என்பதால் அதனைத் தவிர்த்த இந்தியா தனக்கெனத் தனியானதொரு நிலைப்பாட்டினை எடுத்திருந்தது.

அதேநேரம் சிறிலங்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு முண்டுகொடுக்கப்போய் மேற்கு நாடுகளின் எதிர்ப்பினைச் சம்பாதிக்கவும் இந்தியா விரும்பவில்லை.

சிறிலங்காவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி நிற்கும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் சிறிலங்காவிற்கும் இடையில் இடைத்தரகராகச் செயற்படும் நிலைப்பாடே தனக்குச் சாலச்சிறந்தது என இந்தியா நம்பக்கூடும். சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் போர்க்குற்றச்சாட்டுக்களைக் கைவிடுவதன் ஊடாக நாட்டினது இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல்தீர்வினை எட்டமுடியும் என இந்தியா நம்பக்கூடும்.

இவ்வாறாக ஒரு அரசியல் தீர்வு கொண்டுவரப்படுமிடத்து அது இந்திய அரசாங்கத்திற்கு அதிக நன்மையினை ஏற்படுத்துவதாக அமையும். தமிழ்நாட்டில் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில், போர்க் குற்றங்களுக்குப் பதிலாக அதிகாரப்பரவலாக்கம் என்ற இந்தியாவின் இந்த எண்ணம் எடுபடுமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போதைய சூழமைவில் வெறும் ஊகங்களைத் தவிர வேறு எதனையும் எவராலும் உறுதியாகக் கூறிவிடமுடியாது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Comments