சிறிலங்கா கடற்படையினர் சோமாலியக் கடற்கொள்ளையர்களை இந்தியக் கடற்பிராந்தியத்திற்குள் அழைத்து வந்தது ஏன்?

சிறிலங்காவினைச் சேர்ந்த சாதாரண மீன்பிடிப் படகுகளை வைத்திருக்கும் மீனவர்கள் சோமாலியக் கடற்பரப்புவரை செல்லமுடியுமெனில் நவீன படகுகள் மற்றும் ஆயுதங்களுடன் இருக்கும் சோமாலியக் கடற்கொள்ளையர்களும் சிறிலங்காவினது கடற்பரப்புக்கு அண்டிய பகுதிகளில் வந்து செயற்படமுடியும்.


அந்த ஆய்வின் விபரமாவது,

'இந்தியாவின் தென்கடற்பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன' Surveillance in Southern Coast increased என்ற தலைப்பில் நேற்றையதினம் truthdive.com என்ற இணையத்தில் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சோமாலியக் கடற்கொள்ளையர்கள் இந்தியக் கடற்பரப்பில் செயற்படுவதற்காக உதவிகளைச் சிறிலங்காவினது கடற்படையினர் வழங்கியிருக்கிறார்கள் என இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தச் செய்தி தொடர்பாக சிறிலங்காவினது கடற்படையினரிடம் கோரியபோதும் இதனை முற்றாக மறுத்த அவர்கள், சிறிலங்காவினது கடற்படையினது நற்பெயருக்கும் அவர்களது புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சிதான் இது எனக் கூறியுள்ளார்கள்.

சிறிலங்காவினது கடல் எல்லையிலிருந்து 70 கடல்மைலுக்கு அப்பால் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் செயற்படுகிறார்கள் என்றும் ஒரு அரசாங்கத்தின் படை என்ற வகையில் இதுபோன்று கடற்கொள்ளையர்களுடன் தங்களது கடற்படை ஒருபோதும் தொடர்புகளை வைத்திருக்காது என்றும் சிறிலங்காவினது கடற்படைப் பேச்சாளர் குசல வர்ணகுலசூரிய கூறுகிறார்.

கடந்த சனவரியில் சிறிலங்காவினைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை நினைவுபடுத்துவது பொருத்தமானது. சோமாலியக் கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட்டமையினாலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டார்கள் என அப்போது செய்திகள் வெளிவந்திருந்தன.

சோமாலியக் கடற்பிராந்தியமானது சிறிலங்காவிலிருந்து அதிக தொலைவில் இருக்கும் நிலையில் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சிறிலங்காவினது மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் காத்திரமான சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

சிறிலங்காவினைச் சேர்ந்த சாதாரண மீன்பிடிப் படகுகளை வைத்திருக்கும் மீனவர்கள் சோமாலியக் கடற்பரப்புவரை செல்லமுடியுமெனில் நவீன படகுகள் மற்றும் ஆயுதங்களுடன் இருக்கும் சோமாலியக் கடற்கொள்ளையர்களும் சிறிலங்காவினது கடற்பரப்புக்கு அண்டிய பகுதிகளில் வந்து செயற்படமுடியும்.

சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் சோமாலியக் கடற்கொள்ளையர்களைச் செயற்பட அனுமதிப்பானது எந்தவகையில் சிறிலங்காவிற்குச் சாதகமாக அமையும் என்ற கோணத்தில் இந்தியாவின் மூலோபாய ஆய்வாளர்கள் தற்போது அலசுகிறார்கள்.

முன்னதாக வங்காள விரிகுடா ஊடாக நுழையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இந்தியாவிலுள்ள சிறிலங்காவினது ஆதரவு ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டிருந்தது.

ஆனால் தற்போது சிறிலங்காவினது துறைமுகங்களில் சீனர்களின் செயற்பாடு அதிகரித்திருக்கும் அதேநேரம் இந்தக் கடற்பிராந்தியத்தில் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் செயற்படும் நிலை தோன்றியிருக்கிறது.

இது நிலைமையினை மேலும் மோசமாக்கும். இந்தியாவின் கடல்வழி போக்குவரத்தினைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம்.

அண்மையில் வங்களா விரிகுடாப் பகுதியில் இரண்டு தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை 500 க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய மீனவர்களும் அந்த நாட்டு ஊடகங்களும் கூறுகின்றன.

புலிகள் செயற்படுநிலையில் இருந்த காலப்பகுதியில் இந்தக் கொலைகளுக்குப் புலிகள்தான் பொறுப்பு என சிறிலங்கா கூறுவந்தது. புலிகளமைப்பு இல்லாத நிலையில், தமிழ்நாட்டு கடற்பரப்பினை அண்டிய பகுதியில் செயற்படும் ஒரேயொரு தரப்பு சிறிலங்காவினது கடற்படைதான்.

இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படும்போதெல்லாம் மீனவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருந்தும் தமக்கும் இந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என சிறிலங்கா தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில், சோமாலியக் கடற்கொள்ளையர்கள்தான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற ஒரு எண்ணத்தினை விதைப்பதற்குச் சிறிலங்கா முனைகிறது.

'கடல்சிங்கம்' என்ற பெயரிலமைந்த நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா தயாராகி வருகிறது எனச் சில செய்திகள் கசிந்திருக்கின்றன. இந்த நடவடிக்கையின் கீழ் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களைப் பாக்கு நீரிணைப் பகுதியில் நிறுத்துவதோடு எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்துமாறு இவர்களுக்குப் பணிக்கப்படலாம்.

சிறிலங்கா அரசசாங்கத்தினால் பாக்கு நீரிணைப் பகுதியில் நிலைப்படுத்தப்படும் இந்த ஆயுதக் குழுவினர் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது அங்கு எதேட்சையாக வருவதைப் போல நுழையும் சிறிலங்காவினது கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பாற்றுவதைப் போல ஒரு நாடகம் ஆடப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வலியுறுத்துவதற்கு சிறிலங்கா முனையும்.

ஆதலினால் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் இந்தியக் கடற்பிராந்தியத்தில் செயற்படுவதற்கு வழிசெய்வதானது எப்போதும் சிறிலங்காவிற்கு அதிக நன்மைகளைத் தருவதாகவே அமையும்.

எவ்வாறிருப்பினும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் சிறிலங்காவினது கரையோரங்களில் வந்து தங்குவதற்கும் அவர்கள் எரிபொருட்களை நிரப்புவதற்கு வழிசெய்வதும் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

இன்றைய நிலையில் இந்தியாவின் மேற்குக் கரையோரங்களிலேயே சோமாலியக் கடற்கொள்ளையர்கள் அதிகம் செயற்பட்டு வருகிறார்கள். தற்போது சிறிலங்காவின் துணையுடன் தங்களது நடவடிக்கைகளை இந்தியாவின் கிழக்குக் கரையோரத்திற்கு விஸ்தரிக்கும் வசதி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதான கடல்வழி விநியோகப் பாதை குறிப்பிட்ட இந்தக் கடற்பிராந்தியம் ஊடாகத்தான் செல்கிறது. இந்த நிலையில் வங்காள வரிகுடா ஊடாகச் செல்லும் கடல்வழி விநியோகப் பாதை இனியும் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கப்போவதில்லை எனத் தெரிகிறது.

மலாக்கா நீரிணைப் பகுதியிலும் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவேண்டியது அவசியமானது. குறிப்பாக சிறிலங்கா கடற்படையினரும் சோமாலியக் கடற்கொள்ளையர்களும் இணைந்துவிடும் சாத்தியம் தொடர்பில் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும்.

இங்கு நாங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பது அவசியமானது. சீனாவுடனான ஆயிரம் ஆண்டுகால கடல்வழி வர்த்தகத்தினைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசன் ராஜேந்திர சோழன் சிறிலங்காவினைத் தனது கட்டுப்பாட்டுக்குகள் கொண்டுவந்ததோடு மலாக்கா நீரிணையினை கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அந்த நீரிணையினை நோக்கி கப்பல்களை அனுப்பியிருந்தான்.

இவ்வாறு truthdive.com இணையத்தளத்தில் வெளிவந்த ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

Comments