மேற்குலகத்தை திசைதிருப்பும் நடவடிக்கை கே.பியிடம் – த.தே கூட்டமைப்பும் ஆதரவு?

சிறீலங்கா அரசுக்கு எதிரான மேற்குலகத்தின் போக்குகளை மாற்றியமைக்கும் பணியை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரசுக்கும் – மேற்குலகத்திற்கும் இடையிலான கசப்புணர்வை நீக்கி போர்க்குற்றங்களில் இருந்து சிறீலங்கா அரசை விடுவிக்கும் பொறுப்பை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளது.

இது தொடர்பான கூட்டங்கள் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளன. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவும், இராஜதந்திரிகளை சந்திப்பதற்குமான கூட்டங்களை பத்மநாதன் மூலம் சிறீலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அரச தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலகத்தின் போக்குகளை மாற்றவும், சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியை பெற்றுக்கொள்ளவும் சிறீலங்கா அரசு இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

கூட்டங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்கள் முன்னெடுத்துள்ளன.

குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவரே தலைமைதாங்கவுள்ளார். அதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. சிறீலங்கா அல்லது நடுநிலையான நாடு ஒன்றில் முக்கிய கூட்டத்தை நடத்தும் திட்டம் தொடர்பிலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

அதேசமயம், சிறீலங்கா அரசு மற்றும் பத்மநாதனின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவும் சிறீலங்கா அரசு முயன்று வருவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

Comments