அரசியல் களத்தில் ஆனந்தசங்கரி மஹிந்த – இந்திய நிகழ்ச்சி நிரலில் அடுத்த கட்டம்!

விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இலங்கை அரசியலில் நீண்ட காலமாக ஒரு தீர்மானிக்கும் சக்தியாக வலிமை பெற்றிருந்த விடுதலைப்புலிகள் இலங்கையின் உள்ளுர் அரசியல் களத்தில் இன்று இல்லை.

இது மட்டுமல்ல,சிங்கள தேசத்தின் அநாகரிக அரசியல் இந்த மண்ணுக்காவும், இந்த மக்களின் விடுதலைக்காகவும் தங்கள் வாழ்வையும் உயிரையும் அர்ப்பணித்த தியாகிகளான மாவீர்களையும் அழித்து பெருமைப்பட்டுக் கொண்டது.

makintha-kooda


அதாவது விடுதலைப் புலிகளின் சகல எச்சங்களையும் துடைத்தழித்து இந் நாட்டில் இடம்பெற்ற ஒரு மகத்தான அர்ப்பணிப்புக்கள் நிறைந்த விடுதலை போராட்டத்தை வரலாற்றிலிருந்து அழித்துவிடும் கபட நோக்கத்துடன் இலங்கை, இந்திய அரசுகள் ஒரு பெரும் கூட்டு நிகழ்ச்சி நிரலை உருவாக்கி செயற்பட்டு வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு. தமிழ் மக்களின் விடுதலைக் குரலை நாடாளுமன்றில் ஒலிக்க வைக்கும் பாரிய பணி இதன் தோளில் இதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் காரணமாக இன்றுவரை இது தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு அமைப்பாக விளங்கிவருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்சங்களை அழிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அம்சமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பது அல்லது சிதைப்பது இன்று இலங்கை இந்திய கூட்டுச் சதியின் ஒரு அங்கமாக உருவெடுத்துள்ளது.

இப்படியான ஒரு புறச்சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும், புளொட் அமைப்பும் ஒன்றிணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன.

நேற்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு போக்கைக் கடைப்பிடித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது சேறு அள்ளி எறிந்து வந்த, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை படு கேவலமான முறையில் கொச்சைப்படுத்தி வந்த, இன்னும் புலி எதிர்ப்பு அரசியலில் மிகவும் உறுதியாக நிற்கின்ற திரு.ஆனந்தசங்கரி அவர்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உறவு கொண்டாடுகின்றார் என்றால் பல கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாகும்.

கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் பூரணமாகவே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இவரை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பங்காளியாக்க கதவுகளைத் திறந்துவிட்டவர்கள் பற்றியும் சில சந்தேகங்கள் எழுப்ப வேண்டும்.இவரின் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான ஐக்கியம் இங்கு அரங்கேற இந்தியாவில் இது காலவரை தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு சகலவிதமான துரோகங்களையும் மேற்கொண்டு காட்டிக்கொடுப்புக்களையே தொழிலாகக் கொண்டிருந்த ஈஎன்டிஎல்எவ் அமைப்பினர் சென்னையிலிருந்து டெல்லி நோக்கி இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு பாதயாத்திரையை ஆரம்பித்தனர். 1977 தொடக்கம் அவர்களின் அரசியல் தலைமையை ஆனந்தசங்கரியே வகித்து வருகின்றனர்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். எனவே இவரின் இப்பிரவேசம் ஒரு நீண்ட திட்டத்தின் அடிப்படையிலேயே இடம்பெறுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

ஆனந்தசங்கரியை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைக்க முன்னின்ற சில மூத்த தமிழரசுக்கட்சித் தலைவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி வல்வெட்டித்துறையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட சிவாஜிலிங்கத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். அன்றிலிருந்து இன்வரை தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுத்து வருபவர் என்ற வகையில் அவர் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவரே. அதற்காக ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டை உடைப்பதை எவருமே நியாயப்படுத்திவிடமுடியாது.

இன்னொருபுறம் ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் என்பன வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியோ, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது. அது மட்டுமன்றி கரைச்சி பிரதேச சபையிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது வெற்றிபெறவில்லை.

ஒட்டுமொத்தத்தில் தமிழரசுக்கட்சியின் ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்களும், ஆனந்தசங்கரியும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பையும் ஐக்கியத்தையும் உடைக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இது தமிழ் தேசியக் கூடட்மைப்பைப் பலவீனப்படுத்திச் சிதைத்து தமிழரசுக்கட்சியை அல்லது தமிழர் விடுதலைக்கூட்டணியை மேலோங்க வைக்கும் ஒரு கபட திட்டமாகும். இது இலங்கை இந்திய அரசுகளின் விடுதலைப்புலிகளின் அச்சங்களை துடைத்தழிப்பது என்ற நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும்.

இறுதிப் போரில் இழக்கப்பட்ட நாற்பதனாயிரம் உயிர்களின் இரத்தம் காயுமுன்பே இவ்வாறான நரி வேலைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு மூத்த அரசியல் வாதிகளாக இருந்தாலும் இவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

ஒரு போராட்டமானது பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கும் போது அந்த இடைவெளியை இட்டு நிரப்ப மக்கள் விரோத சக்திகள் தேவதூதர்களாகவும் கருணை கொண்ட மகான்களாகவும் தங்களைக் காட்டி மக்களைத் திசை திருப்ப முயல்வர். ஆனால் அவர்கள் மக்களை ஏமாற்றுவதாக எண்ணி தங்களை தாங்களே ஏமாற்றக் கொண்டதே வரலாறாக உள்ளது.

- நன்றி: சரிதம்

Comments