உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை

ஈழத் தமிழனுக்காக நீதி கேட்க மிஞ்சியுள்ளவை நாய்கள் மட்டுமே...?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1M6HhD1I8Vdl_CohozF2As38z6513CsHEfGc58S0fqh2GWj3zRHs7cNhga0uxNeaVu7NPAVy_mKWgsjVmLZ4r2P5-NiBjBI6GtpqAt7tPtP5qdixW9vSheryNVFhUafcCPU_adoWX64Q/s1600/parwathy-flash.jpg
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளையின் மரணம் தற்போது வடக்கில் என்ன நடக்கிறது என்பதை யாதொரு குழப்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு போயிருக்கிறது.

முற்காலங்களில் ஒரு பட்டி மன்றம் நடக்கும் இறந்தவர்களை எரிப்பது நல்லதா இல்லை புதைப்பது நல்லதா என்று.. சிறீலங்காவில் பிறந்திருந்தால் அவரை எரிப்பதே நல்லது என்று மாவீரர் புதைகுழிகள் தோண்டப்பட்ட பின்னர் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இப்போது பார்வதிப்பிள்ளையின் அஸ்தியை கிளறி எறிந்து, அதில் மூன்று சுடலை நாய்களையும் சுட்டு வீசியிருக்கிறார்கள் என்றால் எரிக்கவும் முடியாத அவலம் வந்துள்ளது என்பதே பதிலாகிறது.

நமக்குக் கறுப்புக் கொடி பிடிக்க உரிமை உண்டு, இறந்துபோன ஒருவருக்காக கட்டவுட் வைக்க உரிமையுண்டு என்று சொன்னவர்கள் எல்லாம் வாய்மூடி வாழ வேண்டும் என்ற எச்சரிக்கை இந்த நிகழ்வின் மூலம் விடப்பட்டுள்ளது. தமிழன் வாய்திறந்தால் அவன் தெரு நாயைப்போல சுடப்படுவான், அதைக் கேட்க இன்று உலகில் நாதியில்லை என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் தமிழர்கள் நாய்கள் போலச் சுடப்பட்டபோது உலகம் சும்மாதானே இருந்தது, இனி மட்டும் என்ன வாழப்போகிறது என்ற மமதை இந்தச் செயலில் தெரிகிறது.

அதோ எகிப்தில் மக்கள் மீது சுடுகிறார்கள் என்றும், இதோ லிபியாவில் 200 பேர் செத்துவிட்டார்கள் என்றும் ஓலமிடும் உலக மக்கள், ஐ.நா செயலர் யாவரும் ஈழத்தில் தமிழனுக்கு அவலம் நடந்தபோது உறைந்துதானே கிடந்தார்கள். ஓர் இலட்சம்பேர் வன்னியில் கொல்லப்பட்டபோதும் ஒன்றும் நடக்காதது போல செத்துக்கிடந்தது உலக சமுதாயம். உலகத்தில் உள்ள ஒரு நாயும் நமக்காக வராது என்ற உண்மை தெரிந்து ஈழத் தமிழனுக்காக நீதிகேட்க வந்தவை வல்வை ஊறணிச் சுடலையில் வாழ்ந்த மூன்று சுடலை நாய்களே. தமிழனுக்காக குரைத்த காரணத்தால் அவையும் சுடப்பட்டு பார்வதியம்மாவோடு எரிக்கப்பட்டுவிட்டன. நாயும் கேட்க நாதியில்லா இனம் என்ற நிலையில்தான் இன்றைய தமிழனின் அவல வாழ்வு இருக்கிறது என்ற உண்மையைப் பார்வதியம்மாவின் அஸ்த்தி ஐ.நா செயலர் பான் கி மூனுக்கு அழுத்தம் திருத்;தமாக சொல்லியுள்ளது.

நாயிற்கடையாய் கிடந்த அடியேர்க்கு அருளும் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே என்ற சிவபுராணப் பாடல் பார்வதி அம்மா சுடலையில் கிடந்தபோது கேட்டது. இப்போதோ சிவன் உறையும் சுடலையில் நாய்களே வாழ முடியாத நிலை வந்துள்ளது. தாயிற்சிறந்த தயாவான தத்துவன் வந்திருந்தாலும் அவனுக்கும் இதுதான் கெதி..!

புதுமாத்தளன் போருக்குப் பின்னர் தமிழன் வாழ்வு நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கிறது என்பதே உண்மையாகும். இலங்கைத் தீவில் வாழும் தமிழர் இதுவரை எதையும் பெற்றுவிடவில்லை, ஒரு பிடி சாம்பலைக்கூட…

ஒரு பிடி சாம்பலுக்கே உரிமையில்லாத நிலைக்கு உலக சமுதாயத்தால் ஆளாக்கப்பட்ட ஈழத் தமிழன் இனி..

நாம் பான் கி மூனிடமும், பக்கத்து நாட்டு பாராளும் மன்னர்களிடமும் போவதற்கும், பெறுவதற்கும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை..

பார்வதி அம்மாவிற்காக போராடி உயிர் கொடுத்த மூன்று நன்றியுள்ள நாய்களுக்கு மட்டும் சிரந்தாழ்த்தி மரியாதை செலுத்துகிறோம்.. உறங்கிக் கிடக்கும் உலக சமுதாயத்தைவிட நமக்காக உயிர் மூன்று கொடுத்த நாய்கள் நமக்கு மேலானவை..

வல்வையில் இருந்து ஒரு மானத்தமிழன்.
அலைகள்

Comments