பலமுனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் சிறிலங்கா

இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெளி விவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் எதனையும் தெரிவிக்காதிருந்த அதேநேரம் துணை வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவிடம் கேட்டபோது அவ்வாறெந்த சந்திப்பும் இடம்பெறவில்லை என அடியோடு மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் அதியுச்ச இரகசியத்துடன் பேணப்படவேண்டும் என்ற வேண்டுகைதான் இவர்களது இந்த மௌனத்திற்கு அல்லது பிரதி வெளிவிவகார அமைச்சரின் பொய்க்குக் காரணம்.


இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் 'The Sunday Times' Sunday February 27, 2011 இதழில் வெளியான அரசியல் பத்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அப்பத்தியின் விபரமாவது,

சிறிலங்காவிலிருந்து வரும் இருவர் அடங்கிய தூதுக்குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையினது செயலாளர் நாயகம் பன் கீ மூனைச் சந்திக்கவுள்ளார்கள் என்ற செய்தியினைக் கேள்வியுற்ற ஐக்கிய நாடுகளை சபையினது சிறிலங்காவிற்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோகன்ன அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

பாலித கோகன்ன அண்மைய நாட்களாக புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களுடனான சட்டம்சார் போரில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா செயலாளர் நாயகத்தினது செயலகம்தான் இந்தத் தகவலை பாலித கோகன்னவிற்குப் பரிமாறியிருந்தது. 'அதியுச்ச இரகசியத்துடன்' வைக்கப்பட்டிருந்த இந்தச் சந்திப்புக்கான வேண்டுகை கொழும்பிலிருந்து நேரடியாக செயலாளர் நாயகத்தினது செயலகத்திற்கு விடுக்கப்பட்டிருந்ததை அதன் பின்னர்தான் கோகன்ன அறிந்துகொண்டார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஸ் ஜெயசிங்க மற்றும் சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் ஆகியோர் சனியன்று [பெப்பிரவரி] நியூயோர்க்குக்குப் பயணித்தனர். ஆனால் திங்கள் காலை செயலகத்திற்கு வரும் வரைக்கும் வெளிவிவகார அமைச்சினது ஏனைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு வெளிவிவகாரச் செயலர் றொமேஸ் ஜெயசிங்க நியூயோர்க் நோக்கிப் பயணமான செய்தி தெரியாது. திங்களன்று காலையில் ஜெயசிங்கவினது பணியக அறைக்குள் கோப்புக்களுடன் சென்றவர்கள் அவர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டனர்.

இதன்பின்னர்தான் வெளிவிவகாரச் செயலர் றொமேஸ் ஜெயசிங்க வெளிநாடொன்றுக்குப் பயணமான செய்தி அவர்களுக்குத் தெரியும். இந்தத் திடீர் வெளிநாட்டுப் பயணத்தின் நோக்கம் என்னவாக இருக்கும் என வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் தமக்குள்ளே இரகசியமாக அலசினார்களாம்.

பெப்பிரவரி 19ம் நாளன்று சிறிலங்காவிலிருந்து பறந்து சென்ற இந்த இரண்டு அதிகாரிகளும் இன்னும் இருவரும் கடந்த புதனன்று மாலையில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா தலைமைகயத்தின் தென்பகுதிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருக்கும் ஐ.நா செயலாளர் நாயகத்தினது தற்காலிக பணியகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

ஐ.நா தலைமையகத்தின் 38வது மாடியிலுள்ள பன் கீ மூனின் செயலகத்தில் திருத்த வேலைகள் இடம்பெறுவதால் அவர் தனது செயலகத்தினை மாற்றியிருந்தார். இந்தத் திருத்த வேலைகள் 2013ம் ஆண்டு வரைக்கும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக 46வது வீதியிலுள்ள தற்காலிக கட்டடமொன்றுக்கு ஐ.நா தலைமையகத்தின் 4,000 பணியாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

பாலித கோகன்ன மற்றும் பிரதி நிரந்தரப் பணியாளராக முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்திருக்கிறார்கள். மே 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் ஜெனரல் சவேந்திர சில்வா முதன்மைப் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இந்தச் சந்திப்புத் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தினது அதிகாரிகளோ அல்லது வெளி விவகார அமைச்சோ தொடர் மௌனம் காக்கின்றபோதும் ஐ.நா செயலகம் இந்தச் சந்திப்பினை உறுதிப்படுத்தியிருப்பதோடு அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெளி விவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் எதனையும் தெரிவிக்காதிருந்த அதேநேரம் துணை வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவிடம் கேட்டபோது அவ்வாறெந்த சந்திப்பும் இடம்பெறவில்லை என அடியோடு மறுத்துவிட்டார். இந்தச் சம்பவம் அதியுச்ச இரகசியத்துடன் பேணப்படவேண்டும் என்ற வேண்டுகைதான் இவர்களது இந்த மௌனத்திற்கு அல்லது பிரதி வெளிவிவகார அமைச்சரின் பொய்க்குக் காரணம்.

செயலாளர் நாயகத்தினைச் சந்தித்த சிறிலங்காவினது அதிகாரிகள்

"சிறிலங்காவினது தூதுக்குழு செயலாளர் நாயகத்துடனான சந்திப்பு ஒன்றுக்குக் கோரியிருந்தது. இதனடிப்படையில் செயலாளர் நாயகத்திற்கும் இந்தத் தூதுக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதனன்று மாலையில் இடம்பெற்றது" என சண்டே ரைம்சினது மின்னஞ்சல் ஊடாக கேள்விக்குப் பதிலளித்தபோது செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் கூறுகிறார்.

மே 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் வல்லுநர்கள் குழுவினது செயற்பாடுகள் தொடர்பாகவா இந்தச் சந்திப்பு இடம்பெற்றது? என பிரதிப் பேச்சாளரிடம் சட்டே ரைம்ஸ் கோரியிருந்தது.

"போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு பொறுப்புச்சொல்லும் முனைப்புக்கள் முன்னெடுக்கப்படுவது உள்ளிட்ட போருக்குப் பின்னான சில விடயங்கள் தொடர்பாக ஐ.நா சிறிலங்காவினது அதிகாரிகளுடன் தொடர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது" என அவர் பதிலளித்தார்.

ஐ.நாவின் வல்லுநர்கள் குழு செயலாளர் நாயகத்திற்குச் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பாகவே இந்த சந்திப்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு யூன் 22ம் நாள் பன் கீ மூன் வல்லுநர்கள் குழுவினை நியமித்திருந்தார். இந்தோனேசியாவினைச் சேர்ந்த மார்சுகி டருஸ்மன் வல்லுநர்கள் குழுவின் தலைவராகவும்,
தென்னாபிரிக்காவினைச் சேர்ந்த யஸ்மின் சுக்கா மற்றும் அமெரிக்காவினைச் சேர்ந்த ஸ்ரீபன் ரன்னர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள்.

"சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பான ஏனைய நாடுகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துலக
நியமனங்களைக் கருத்திற்கொண்டு பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டுக்குச் சிறிலங்காவிற்குப் பொருத்தமான வழிவகை எதுவென ஆலோசனை வழங்குவதற்காக" இந்த
வல்லுநர்கள் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணை பெப்பிரவரி 28ம் நாளுடன் முடிவுக்கு வருகிறது.

இவ்வாறொரு வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி வெளிவந்தவுடன் சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகரித்திருந்தது. "சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்திற்கு ஏற்கனவே வந்துவிட்ட ஓர் உள்நாட்டு விடயத்தில் தலையிடும் வகையில் ஐ.நா இதுபோல வல்லுநர்கள் குழுவினை அமைத்திருப்பதானது ஐ.நா சாசனத்தின் பொக்கிசமாகப் பேணப்படுகின்ற முக்கியத்துவத்தினை இல்லாதுசெய்வதாக அமைகிறது" என பேராசிரியர் பீரிஸ் கூறியிருந்தார்.

வல்லுநர்கள் குழு அமைக்கப்படுவதற்கு முன்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியூயோர்க்கில் இடம்பெற்ற அணிசேரா அமைப்புக்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஐ.நாவிற்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி கோகன்ன உரை நிகழ்த்தியிருந்தார். "ஐ.நாவின் உறுப்பு நாடு ஒன்றினது விருப்பு வெறுப்புகளுக்கு எதிராக செயலாளர் நாயகம் வல்லுநர்கள் குழுவினை அமைப்பாரெனில் அது கையாளமுடியாததொரு சூழமைவினை ஏற்படுத்திவிடும்" என கலாநிதி கோகன்ன அப்போது வாதிட்டார்.

எவ்வாறிருப்பினும், கடந்த டிசம்பரில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டது. ஐ.நா செயலாளர் நாயகம் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்தே சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தக் கருத்து மாற்றம் ஏற்பட்டிருந்தது.

"சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் எனக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர், அமைக்கப்பட்டிருக்கும் வல்லுநர்கள் குழுவானது சிறிலங்காவிற்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைச் சந்திக்கக்கூடிய சூழமைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்வடைகிறேன்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

"வல்லுநர்கள் குழுவானது சிறிலங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவுடன் நல்லுறவினை வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். நீண்ட கலந்துரையாடல்களின் விளைவாகவே இதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதுவிடயம் தொடர்பில் அதிபர் ராஜபக்ச காட்டிய நெகழ்வுப்போக்கினை நான் வரவேற்கிறேன்" பன் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.
பன் கீ மூனின் இந்தத் திடீர் அறிவிப்பினால் சிறிலங்கா அரசாங்கம் நிலைதடுமாறிப்போனது. கொழும்புக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் தொடராக இடம்பெற்ற இராசதந்திரக் கலந்துரையாடல்களின் விளைவுதான் இது. இருந்தும் சிறிலங்காவிற்குள் வல்லுநர்கள் குழுவினை அனுமதிப்பதற்கு 'ஆம்' எனக்கூறும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஐ.நாவின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சிறிலங்காவிலுள்ள கடும்போக்குக் கட்சிகள் இந்த முடிவினை எதிர்த்தன.

சிறிலங்காவிற்குள் வல்லுநர்கள் குழுவினை அனுமதிப்பதோடு அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் கலந்துகொள்ளுவதற்கு வழிசெய்வதானது வல்லுநர்கள் குழுவிற்குக் கொழும்பு அங்கீகாரம் வழங்குவதாக அமைந்துவிடும் என்றும் வல்லுநர்கள் குழுவினை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் முன்னைய நிலைப்பாட்டுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என்றும் வாதிடப்பட்டது.

இருப்பினும் இதுவிடயம் தொடர்பாக அரசாங்கம் புதியதொரு நிலைப்பாட்டினை எடுத்தது. சிறிலங்காவினது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் ஐ.நாவின் வல்லுநர்கள் குழுவும் ஒருமுறை சந்திப்பதற்கு வழிசெய்வது என்பதுதான் அது. கொழும்பு தனது இந்தப் புதிய நிலைப்பாட்டுடன் ஐ.நாவுடனான பேச்சுக்களில் தொடர்ந்தபோதும் இரண்டு தரப்பும் விட்டுக்கொடுக்காத தன்மையுடன் செயற்பட்டன.

அரசாங்கத்தின் நிலைமையினைச் சீர்செய்யும் முனைப்பு

ஐக்கிய நாடுகள் சபையினது வல்லுநர்கள் குழுவினது அறிக்கை வெளிவருவதற்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுடன் நிலைமையினைச் சீர்செய்யும் வகையில் செயற்பட விரும்பியதாகத் தற்போது அறியமுடிகிறது.

இதனடிப்படையிலேயே நாட்டினது சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் ஐ.நா செயலாளர் நாயகத்தினைச் சந்தித்து தங்களது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அது தந்திருக்கும் வெற்றி தொடர்பாக விலாவாரியாக விளக்கமளித்ததாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சிறிலங்காவிற்கு வருகை தருவதன் ஊடாக ஐ.நாவின் வல்லுநர்கள் குழு அடைய நினைத்ததை இந்த ஆணைக்குழு செயற்படுத்தும் எனவும் மோகன் பீரிஸ் உறுதியளித்திருக்கிறார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கடந்த ஆண்டு மே 15ம் நாளன்று சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டிருந்தது. முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டீ சில்வா இந்த அணைக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.

வடக்கில் உயர் பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலங்கள் அதனது சொந்தக்காரர்களிடம் உடனடியாகக் கையளிக்கப்படவேண்டும் என கடந்த வாரம் இந்த ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. முன்னாள் சட்டமா அதிபரின் தலைமையிலான இந்த ஆணைக்குழு தனது கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளைப் பூரணப்படுத்தும் இறுதிக்கட்டச் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகிறது.

சிறிலங்காவினது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது குறிப்பிட்டுக் கூறக்கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஐ.நாவின் வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிடவேண்டும் என சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் பன் கீ மூனிடம் கோரியதாக அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பான மேலதிக விபரத்தினை வெளியிடுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கம் இந்த ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவினது அறிக்கையில் குறிப்பிடப்படுமிடத்து அது தமக்குச் சாதகமாக அடையும் என அரசாங்கம் நம்புகிறது.

ஐ.நா வல்லுநர்கள் குழுவினை எதற்காக அமைத்ததோ அதே காரணத்திற்காகத்தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைத் தான் அமைத்ததாக
சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறி வந்திருக்கிறது.

இதுபோன்றதொரு நகர்வு ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவினது இறுதி அறிக்கையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அளவினைக் குறைப்பதற்கு வழிசெய்யும் என அரச தரப்பினர் வாதிடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நகர்வு வல்லுநர்கள் குழுவிற்கு அங்கீகாரம் அளிப்பதாகவே அமையும் என்கிறார்கள் மறுசாரார்.

இவ்வகையான குழப்பநிலையில் அரசாங்கம் காணப்படுவதானது நாட்டினது வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் விடயங்களில் அரசாங்கம் உறுதியற்ற, நிலையற்ற அணுகுமுறையினையே கைக்கொள்வதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஆரம்பத்தில், ஐ.நா அமைத்திருக்கும் வல்லுநர்கள் குழுவினைத் துளியேனும் 'ஏற்றுக்கொள்ள முடியாது' என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வல்லுநர்கள் குழுவானது வாக்குமூலங்களைப் பெறும் வகையில் கொழும்புக்குப் பயணம் செய்யவிருப்பதாக செயலாளர் நாயகம் பன் கீ மூன் அறிவத்திருந்தார்.

இந்த நிலையில் அவமானகரமானதொரு நிலைக்குத் தள்ளப்பட்ட அரசாங்கம் தனது முடிவிலிருந்து பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஐ.நாவின் வல்லுநர்கள் குழுவானது கொழும்புக்கு வருகை தரலாம் என்றும் தான் அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் மாத்திரம்தான் பேச்சுக்களை நடாத்தவேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

தற்போது மேலும் இறங்கி வந்திருக்கும் அரசாங்கம், ஐ.நா வல்லுநர்கள் குழுவினை அமைத்த நோக்கம் எதுவோ அதே காரணத்திற்காகத்தான் சிறிலங்காவினது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அது வினைத்திறனுடன் செயற்படுகிறது என்றும் வல்லுநர்கள் குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிடவேண்டுமாம் என கொழும்பு அரசாங்கம் பன் கீ மூனைக் கோரியிருக்கிறது.

குறிப்பிட்ட இந்தப் பிரச்சினையினைச் சரியாகக் கையாழும் வகையிலான கட்டமைப்பினைச் சிறிலங்கா கொண்டிருக்கிறது என வல்லுநர் குழுவினைச் சிறிலங்கா அரசாங்கத்தினால் கூறவைக்கமுடியுமா என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி.

இதுபோன்றதொரு நகர்வு வல்லுநர்கள் குழுவினைச் சிறிலங்கா எதிர்கொள்வதற்கே வழிசெய்யும் என அரசாங்கத்தின் சில அதிகாரிகள் வாதிடுகிறார்கள். ஐ.நாவின் வல்லுநர்கள் குழுவின் முன்னால் தனது கண்டறிதல்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைப்பதற்குச் சிறிலங்கா விரும்புகிறதோ என்ற ஊகம் ஐ.நா அதிகாரிகள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது.

இந்த ஊகம் தொடர்பாக சிறிலங்காவினது உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் எள்ளி நகையாடினார். "வழமைபோலவே நாங்கள் ஐ.நாவினது செயலாளர் நாயகத்துடன் இணைந்து செயற்படுகிறோம். இதுவிடயம் தொடர்பான எங்களது நிலைப்பாட்டினை அனைதுலக சமூகத்திற்குத் தெளிவாக எடுத்து விளக்குவதே எங்களின் நோக்கம்" என்றார் அவர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையானது தனக்கெனத் தனித்துவமானதாக இல்லாமல் இரவல் வாங்கியதாகவே தெரிகிறது. ஐக்கிய நாடுகள் தொடர்பான விடயங்களுக்கு சட்டமா அதிபர் மோகன் பீரிசைப் புதிதாகக் களமிறக்கியிருக்கும் மகிந்த அரசாங்கம் இந்திய சிறிலங்கா உறவினைக் கவனிப்பதற்குப் பிறிதொரு மும்மூர்த்திகளைப் பயன்படுத்துகிறது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, குடியரசு அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய மூவருமே இந்திய – சிறிலங்கா உறவினைக் கவனித்துவருகிறார்கள். பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கதான் ஐ.நாவின் ஜெனிவா செயலகத்துடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டு வருகிறார். நாட்டினது மனித உரிமை நடவடிக்கைகளைக் கையாளும் பொறுப்பும் இவரிடமே வழங்கப்பட்டிருக்கிறது.

வெளிவிவகார அமைச்சினது செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பணி வழங்கப்பட்டிருந்த சஜின் வாஸ் குணவர்த்தன அண்மைய சில வாரங்களாக மேற்காசிய நாடுகளுடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் லிபியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் ராஜபக்சவின் புதல்வருமான நாமலின் லிபியாவிற்கான பயணத்தினை ஒழுங்குசெய்தவரும் இவர்தான். லிபியாவிற்கு பயணம் செய்திருந்த நாமல் அந்த நாட்டினது அரசதலைவர் முகமர் கடாபியினை மாத்திரமல்லாது அவரது மகன் சலீப் அல் இஸ்லாமையும் சந்தித்திருந்தார்.

பலரதரப்பட்ட காரணங்களுக்காக ஐ.நாவுடனான தனது உறவினை மீளவும் பலப்படுத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருந்தது. சிறிலங்கா அவசர அவசரமாக பன் கீ மூனைச் சந்தித்தமைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தினது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் ஒரு வெளிப்பாடுதான் இது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

பெப்பிரவரி 28ம் நாளன்று ஐக்கிய நாடுகளில் சபையினது மனித உரிமை அவையினது 16வது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கான பிரதான காரணம். இந்தக் கூட்டத்தொடர் மார்ச் 25ம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.

மனித உரிமைச் சபையினது உறுப்புநாடுகள், பார்வையாளர்களாக இருக்கும் நாடுகளினது பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 3,000 பேர் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார்கள். அண்ணளவாக ஒரு மாதகாலம் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் நூற்றுக்கணக்கான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் எடுக்கப்படுவதோடு பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்தக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக கடந்த வியாழனன்று கொழும்பிலிருந்து ஜெனீவா நோக்கிப் பயணித்திருக்கிறார். சட்டமா அதிபர் மோகன் பீரிசும் ஜெயசிங்கவும் நியூயோர்க்கிலிருந்து நேரடியாகவே ஜெனிவாவிற்குப் பயணிக்கிறார்கள். சிறிலங்காவினது சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் சட்டப்பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளும் ஜெனிவா சென்றிருக்கும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையினது மனித உரிமை ஆணையாளர்
நவநீதம்பிள்ளையுடன் அமைச்சர் சமரசிங்க சந்திப்பொன்றை நடாத்தவிருப்பதாக ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் நாளன்று ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவின் அறிக்கை மனித உரிமைச் சபையின் முன்னால் சமர்ப்பிக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் வல்லுநர்கள் குழுவினது அறிக்கை தொடர்பான விவாதங்கள் இடம்பெறுமா என்பது சரியாகத் தெரியவில்லை.

இதுபோல வல்லுநர்கள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமிடத்து ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் இது தொடர்பான விளக்கத்தினை செயலாளர்
நாயகத்திடமிருந்து கோரலாம் என்ற கரிசனை சிறிலங்காவினது அரச தரப்பினரிடத்தே இருப்பதாகத் தெரிகிறது.

இந்த மனித உரிமைக் கூட்டத்தொடரின்போது பெப்பிரவரி 28ம் நாள்முதல் புதன்கிழமை வரைக்கும் உயர்மட்டச் சந்திப்புகள் இடம்பெறும். தத்தமது நாடுகளில் மனித உரிமையினைப் பாதுகாப்பதற்காக அந்ததந்த நாடுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்புடைய நாடுகளின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்துவார்கள். இதன் பின்னர், நவநீதம்பிள்ளை தனது செயலகத்தின் மனித உரிமைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையினைச் சமர்ப்பிப்பார். அதனைத் தொடர்ந்து நவநீதம்பிள்ளையுடனான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

"மனித உரிமைகள் தொடர்பான செயலாளர் நாயகம் மற்றும் உயர் ஆணையர்களது உரைகள் இடம்பெறும். மாற்று வலுவடையவர்களின் மனித உரிமைகள், அனைத்துலக மனித
உரிமை சாசனங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல், எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் உரிமைகள், சிறுபான்மையினரது உரிமைகள், மனித
உரிமையும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இந்த உரைகள் இடம்பெறும்" என ஐ.நாவின் மனித உரிமைச் சபை கடந்த வாரம் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போர்க் குற்றங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் செயற்பாடுகள்

ஐ.நாவினது மனித உரிமைச் சபையினது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தங்களது போராட்டங்களை புலம்பயெர் நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

பிரித்தானியாவினைத் தளமாகக் கொண்டு செயற்படும் உலகத் தமிழர் பேரவையினைது தலைவர் வணபிதா இம்மானுவேல் அவர்கள் தங்களது அமைப்புக்கு நிதியினைத் திரட்டும் முகமாக தமிழ்நாடு, மலேசியா, அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான பயணம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

ஐ.நா மனித உரிமைச் சபையினது கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவர் தனது அணிக்கான ஆதரவினைத் திரட்டும் முனைப்புக்களையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுதந்திரமாக விசாரிக்கும் வகையிலான அனைத்துலகக் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக்கூறி பிரித்தானியாவின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த நாட்டினது பிரதமர் டேவிற் கமரோனுக்குக் கடிதமொன்றை எழுத்தியிருக்கிறார்கள். இந்தச் செய்தி பிரித்தானியப் செய்தித்தாள்களின் முதலாவது பக்கத்தினை அலங்கரித்திருந்தது.

அமெரிக்கக் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு மற்றும் தென்னாபிரிக்காவின் ஆயர் டெஸ்மன் ருற்றுவின் தலைமையிலான மூத்தோர்களின் அறிக்கை ஆகியவற்றிலிருந்த கருத்துக்களையும் உள்வாங்கி இந்த இரண்டு பக்கக் கடிதத்தினை பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதியிருக்கிறார்கள்.

அனைத்துக் கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பியிருக்கும் வேண்டுகையினை பிரித்தானியப் பிரதமர் கமரோன் ஏற்றுக்கொள்வாரெனில், சிறிலங்காவில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் போர்க்குற்றங்களுக்கான அனைத்துலக விசாரணைக்குப் பிரித்தானியாவும் ஆதரவு தருகிறது என்ற தகவலை நாங்கள் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கு அறிவிப்போம் என பிரித்தானியப் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மக்டொனா கடந்த வாரம் கூறியிருக்கிறார்.

பன் கீ மூன் அவர்கள் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காகப் போட்டியிடவுள்ள நிலையில் இந்த நகர்வு இடம்பெற்றிருக்கிறது. ஐ.நாவின் செயலாளர் நாயகமாக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமெனில் மேற்கு நாடுகளில் ஆதரவு இன்றியமையாதது. ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன சிறிலங்காவில் இடம்பெற்றது எதுவோ அதற்கான பொறுப்புச்சொல்லும் முறைமையினை ஏற்படுத்துவதற்கு ஐ.நா அமைத்திருக்கும் வல்லுநர்கள் குழுவினை ஆதரித்துக் கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நெதர்லாந்தின் கேக்கிலுள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் வழக்கறிஞர் லூயிஸ் மொறெனோ-ஒகம்போவிடம் 45 பக்ககங்களைக்கொண்டு மனுவொன்றை
சுவிஸ் தமிழீழ மக்கள் அவையும் அமெரிக்காவின் இனக்கொலைக்கு எதிரான தமிழரமைப்பும் இணைந்து தாக்கல் செய்திருக்கின்றன.

அவுஸ்ரேலியாவினது குடியுரிமையினையும் பெற்றிருக்கும் கலாநிதி பாலித கோகன்னவிற்கு எதிரான பிடியாணை ஒன்றைப் பிறப்பிக்கும் வகையிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. மே 2009ம் ஆண்டு சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நீதிக்குப் புறம்பான கொலைகளின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்கா ஒரு தரப்பாக இல்லை என்பதால் இலங்கையர்கள் எவரும் எதிராக இந்த நீதிமன்றில் வழக்கினைத் தொடரமுடியாது.

எவ்வாறிருப்பினும், பாலித கோகன்ன அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்றவர் என்பதின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. றோம் தீர்மானம் என அறியப்படுமொரு தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அவுஸ்ரேலியாவும் அங்கம் வகிக்கிறது. தனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த பாலித கோகன்ன, இது 'சிறுபிள்ளைத்தனமானது' எனக் கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்துலகக் குற்றவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்குத் தொடர்பாக இந்த வாரம் அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகளை வெளியிட்டிருந்ததோடு கோகன்னவைத் தொடர்புகொண்டு அவரது கருத்தினை அறிய முற்பட்டிருந்தது. ஆனால் கோகன்ன பதிலெதனையும் வழங்குவதற்கு மறுத்துவிட்டார். இதுவிடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொழும்பிலுள்ள அரச அதிகாரிகள், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இருப்பினும் குற்றவியல் நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளுமிடத்து அது தொடர்பான சட்ட நடைமுறைகளை எடுக்கவேண்டியது அவசியமானது என இந்த அதிகாரிகள் கூறுகிறார்கள். பாலித கோகன்ன ஓர் அவுஸ்ரேலிக் குடிமகன் என்பதன் அடிப்படையிலேயே வழக்குத் தொடரப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படுமிடத்து அதனைச் சிறிலங்காவினால் எதிர்த்து சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் சட்டம்சார் வட்டகைகளில் இதுதான் இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தி.வண்ணமதி

Comments