கே.பி கையகப்படுத்திய முக்கிய ஊடகங்கள் - புலம்பெயர் மக்களுக்கெதிராக மிகப்பெரும் சதி அம்பலம்

சிறீலங்காவில் உள்ள இரண்டு முக்கிய ஊடகங்களையும், பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றையும் கே.பி ஒட்டுக்குழுவினர் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலும், யாழிலும் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகை, குகநாதனின் யாழ் ஒலி தொலைக்காட்சி மற்றும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆகியன கே.பி ஒட்டுக்குழுவினர் முழுமையாக கையகப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஐரோப்பாவில் கே.பி ஒட்டுக்குழுவினரின் பத்திரிகைகளை இடையிடையே வெளியிடுவதும், தற்போது கொழும்பிலிருந்து அச்சடித்து ஐரோப்பா மற்றும் கனடா அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சிகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஊடகப் பொறுப்பாளர் ஒருவரை அண்மையில் கே.பி கொழும்புக்கு அழைத்து சந்தித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் விடுதலை இயக்கத்துக்கு சேறு பூச முற்பட்ட இணையத்தளம் ஒன்று தனது பணிகளை இடைநிறுத்தியிருந்தது. இவ்விணையத்தளத்தின் உரிமையாளரை கே.பி அழைத்து அத்தளங்களை மீள இயக்குவது தொடர்பாக பேசியுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் தொலைக்காட்சியின் இயக்கத்திற்கு ஏற்கனவே தேவையான நிதி உதவிகளை மேற்கொண்டுள்ளதாகவும், புலம்பெயர் மக்களை குறிவைத்து ஏற்கனவே இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது எனவும், இந்திய - சிறீலங்கா கைக்கூலிகள் அத்தொலைக்காட்சியில் பணியாளர்களாக உள்ளனர் எனவும் கொழும்புச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த ஊடகங்கள் மூலம் வருங்காலத்தில் மிகப்பெரும் ஒரு ஊடகப்பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு கே.பி தனது முன்னைய விசுவாசிகளை உலகெங்கும் களமிறக்கியுள்ளார். ஐரோப்பாவில் இருந்தே கே.பியின் முக்கிய சகா சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதாக மேலும் அக்கொழும்புச் செய்தி தெரிவிக்கின்றது.

Comments