நோர்வேயின் அரச பயங்கரவாதம்.

இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்குடன் பேச்சுவார்த்தை ஒழுங்கமைப்பாளர்களாகத் தலையிட்ட நோர்வே தனது பணியைச் சரிவரச் செய்யவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் தீர்ப்பு. பேச்சுக்களை ஆக்கபூர்வமான இலக்கை நோக்கிச் செலுத்த நோர்வே தவறியுள்ளது.


போரைத் தவிர்ப்பதற்கும் பேச்சுக்களை நீடிப்பதற்கும் அமைதிப் பேச்சுக்களுக்குப் பொறுப்பேற்ற நோர்வே கடமையில் தவறியதால் ஈழத்தமிழரின் துயரம் பன்மடங்காகி உள்ளது. நோர்வேயின் தலையீடு எந்த நோக்குடன் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

அமைதிப் பேச்சுக்கள் பற்றிய ஆய்வுகள் ஒரு முக்கிய செய்தியைச் சொல்கின்றன. பேச்சுக்களை மத்தியஸ்தர்கள் வெற்றி அல்லது தோல்வியை நோக்கி ஏற்கனவே நிர்ணயித்த திட்டத்தின் அடிப்படையில் செலுத்தலாம். இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நோர்வேத் தலையீடு பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன.

நோர்வே உண்மையில் உள்ளத் தூய்மையோடு பேச்சுக்கள் வெற்றி பெற வேண்டுமென்று உழைத்ததா? காலம் கடந்த நிலையிலும் இந்தக் கேள்விக்குப் பொருத்தமான நேரம் இது வாகத்தான் இருக்க முடியும். பேச்சுக்கள் நடந்த காலத்தில் அமைதி நெருங்கி விட்டது என்று பேசாமல் இருந்தோம்.

அரசாங்கம் பேச்சுக்களில் இருந்து விலகுவதாக இரு வார முன்னறிவித்தல் கொடுத்த போது விலகலைத் தடுப்பதற்கு நோர்வே எந்தவொரு பெறுமதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சர்வதேச சமூகத்தைக் கூட்டுச் சேர்த்து அழுத்தம் பிரயோகித்து போர் நடவடிக்கையைத் தடுத்திருக்க முடியும்.

வெளிப்படையான தனது பக்க நியாயப்பாடுகளை வரலாற்றுப் பதிவுகள் சரிவர அமைய வேண்டும் என்ற நோக்குடன் நோர்வே அரசும் அமைதிப் பேச்சுக்குப் பொறுப்பாக இருந்த தனி நபரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி நோர்வே அரசு ஈழத் தமிழர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாச்சும் செயலுக்கு ஒப்பானது.

தானே பிரச்சனைக்குக் காரணமாகித் தானே தண்டனை வாங்கிக் கொடுப்பவராகவும் நோர்வே அரசு தன்னை இனங் காட்டுகிறது. இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்று எப்படிச் சொல்ல முடியும். போர் நின்றாலும் படுகொலைகளும் காணாமற் போதல்களும் பாலியல் வன்முறைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

வடக்கு கிழக்கில் மிக நெருக்கமாக இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரமாக நடமாடுவதற்கும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் இதனால் தடை ஏற்பட்டுள்ளது. புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மிக அண்மையில் கூட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் நடந்துள்ளன.

பத்திரிகைச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 2011ல் அரச தரப்பினர் லங்கா நியூஸ் என்ற ஊடக அலுவலகத்தைத் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இதற்கு எதிராகப் பேரணி நடத்திய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் பாடு மிக மோசமான நிலையில் உள்ளது.

தீர்க்கப்படாத பல மனித உரிமை மீறல்கள் நிலுவையில் உள்ளன. இலங்கை அரசு 2006ம் ஆண்டில் நியமித்த விசாரணைக் குழு பிரான்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான என்.ஜீ.ஒவின் 17 பணியாளர் படுகொலை உட்படப் பல வன்முறைச் சம்பவங்களை விசாரிக்கமால் தட்டிக் கழிக்கிறது.

திருகோணமலையில் பொலிசாரால் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட ஜந்து தமிழ் மாணவர்கள் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தனது படையினருக்கு எதிராக எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுப்பதற்கு அரசு தயாரில்லை என்பது நன்கு அறிந்த விடயம்.

அரச படைகளும் அரச உயர் மட்டத் தலைவர்களும் புரிந்த போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்யப்படும் நிலையில் இருக்கும் நாட்டில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக எப்படிக் கூற முடியும்.

நோர்வே இலங்கைக்கு அனுப்பிய தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கொழும்பின் நோர்வேத் தூதரகம் தவறி விட்டது.

Comments