புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இருந்த இந்தியா, பொதுமக்களின் இழப்புகளை கண்டுகொள்ளவில்லை – கோடன் வைஸ்

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லை என்று, முன்னர் கொழும்பில் ஐ.நா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் குற்றம்சாட்டியுள்ளார்.


பிபிசி சிங்கள சேவைக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பெரும் முற்றுகையின் போது ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும். ஐ.நா நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்களில் இதுவும் ஒன்று.

ஐ.நா இன்னும் பொறுப்புடன் செயற்பட்டிருக்கலாம் என்ற தொனிப்படவே நிபுணர்குழு கருத்து வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிரிழப்புகள், ஆட்சேதங்கள் பற்றி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் பொதுக்களின் உயிரிழப்பு பற்றிய புள்ளிவிபரங்கள் முக்கிய தாக்கத்தை ஏற்பட்டுத்தியிருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்விக்கு, இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக முறையான மீளாய்வு ஒன்றைச் செய்வதன் மூலமே பதிலைப் பெறமுடியும்.

அப்போது ஐ.நா பணியகம் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தது. ஆனால் அது சிறிலங்கா அரசாங்கத்தால் பெரும் சர்ச்சைகளுக்குள்ளாக்கப்பட்டது.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது சிறிலங்கா அரசாங்கம் எதிர்த்தது.

ஆட்சேதங்கள் எவ்வளவு, அது எப்படிக் கணக்கிடப்பட்டது என்பன போன்ற கேள்விகளை எழுப்பியது. இது எமது கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இருந்தது.

தம்மால் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், எனவே பொதுமக்களின் இரத்தம் எதுவும் சிந்தப்படவில்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் வாதிட்டது.

ஆனால் அதற்கு முரணான வகையில் ஐ.நா அறிக்கை உள்ளது.

பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்த அறிக்கையில் அரசபடைகளின் எறிகணைத் தாக்குதல்களிலேயே அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கனரக ஆயுதங்களை அரசபடைகள் பயன்படுத்துகின்றன என்ற பலத்த சந்தேகம் ஐ.நாவுக்கு அப்போது இருந்தது.

இறுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதியை உலகத் தலைவர்களுக்கு சிறிலங்கா அரசு வழங்கியது. ஐ.நா பொதுச்செயலருக்குக் கூட அந்த வாக்குறுதியை அளித்தது.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான இறுதி 5 மாதங்களில் பலமுறை மீண்டும், இந்த வாக்குறுதியை அளித்த போதும் அவையெல்லாம் வெறும் பொய்களாகவே இருந்தன.

ஆனால் கனரக ஆயுதங்களைத் தொடர்ந்தும் சிறிலங்கா அரசு பயன்படுத்தி வந்தது என்பது இறுதியில் தெளிவாகத் தெரியவந்தது.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க ஐ.நா இன்னும் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதை நான் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

ஐ.நாவைப் பொறுத்தவரையில் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக அதன் உறுப்பு நாடுகளிடம் ஒருமித்த கருத்து இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

ஐ.நா பாதுகாப்புச் சபைக்குள்ளேயும் எதுவும் நடக்கவில்லை.

மனிதஉரிமைகள் பேரவைக்குள்ளேயும் எந்தவொரு முயற்சிகளும் இடம்பெற்றதாக எமக்குத் தென்படவில்லை. ஐ.நா தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட வெறும் ஊகத்துக்குரியவையாகவே இருந்தன.

ஐ.நா என்பது ஒர் இராணுவ நோக்கத்துக்கான அணியோ அல்லது அரசியல ரீதியான அமைப்போ அல்லது கண்காணிப்புப் பொறிமுறையோ அல்ல.

சிறிலங்காவைப் பொறுத்தவரையில் ஐ.நாவுக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய பங்கே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன் ஐ.நாவிடம் இருந்து பெரும் தலையீடுகள் எதுவும் ஏற்படுவதை அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா அரசு விரும்பவில்லை.

எனவே இறுக்கமானதும், அரசாங்கத்தினது கடும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் ஐ.நாவின் மனிதநேய நிறுவனங்கள் செயற்பட வேண்டியிருந்தது.

சிறிலங்காவின் போரில் பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன.

சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்புகளை வழங்கிய நாடுகள் மற்றும் உதவுவதில் எல்லா வகையிலும் முன்னின்ற நாடுகள், குறிப்பாக இந்தியா என்று பெரும் பட்டியலே உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திர காலம் முதல் சிறிலங்காவுடன் பல பரிணாம உறவுமுறை தான் உள்ளது.

21ம் நூற்றாண்டில் சிறிலங்கா மீதான செல்வாக்கை இந்தியா இழந்து வருகிறது என்றே கூற வேண்டும். இந்த விடயத்தில் சீனா மிக வேகமாக சிறிலங்காவுடன் நெருங்கி வருகிறது.

இந்தியா இந்த விடயத்தில் சற்றுக் குழப்பிப் போயுள்ளது. அதனால் சிறிலங்காவுக்கு அது உதவுகிறது.

இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சிறிலங்காவுக்கு பல்வேறு புலனாய்வு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

போர் வலயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விபரங்களும் அதற்குத் தெரிந்திருந்தது.

பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயும் மிக நன்றான புலனாய்வு வசதிகள் இந்தியாவுக்கு இருந்தன என்று தான் நான் நம்புகிறேன்.

அங்கிருந்த இழப்புகள் பற்றி இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதன் விகிதாசாரங்கள் குறித்து அது கணித்துக் கொண்டிருந்தது.

இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைளில் நான் ஈடுபட்டிருக்கவில்லை.

அந்தக்கட்டத்தில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பலதரப்பினருக்கிடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

கடைசி வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பௌதிக ரீதியில் பிரிந்து காணப்பட்டது. பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து அவர்கள் வெவ்வேறான திசைகளில் தப்பிச் செல்ல முற்பட்டார்கள்.

புலிகளின் தலைவர்கள் சரணடையும் விவகாரத்தில் விஜய் நம்பியாரும் ஈடுபட்டிருந்தார் என்ற தகவல் உள்ளது. அதில் சூழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கே ஏதும் சூழ்ச்சிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. எஞ்சியுள்ள தலைவர்களை சரணடையுமாறு தூண்டுதல் ஒன்று கொடுக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

அவர்கள் சரணடைந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக கொல்லப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments