போருக்குப் பின்னான சிறிலங்காவின் வெளிநாட்டு கொள்கை: வெளியே யார் உள்ளே யார்?

விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ்த் தேசியவாதமோ மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்வதுதான் தற்போதைய சூழமைவில் சிறிலங்காவினது வெளிநாட்டுக்கொள்கையினது பிரதான குறியிலக்கு எனலாம்.

இவ்வாறு Eurasia Review இணையத்தளத்தில் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவும் அதனுடன் இணைந்து படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏனைய நாடுகளும் தங்களது வெற்றிதராத இராணுவ நடவடிக்கையினை முடித்துக்கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்குத் தயாராகும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை இராணுவ ரீதியில் தோற்கடித்துப் பெருவெற்றியினைத் தனதாக்கியிருந்தது சிறிலங்கா.

சிறிலங்காவினது இராணுவத்தினர் கைக்கொண்ட தனித்துவமான படைத்துறை நுட்பங்கள் மற்றும் வினைத்திறன்கொண்ட தலைமைத்துவம் ஆகியனதான் இந்த வெற்றிக்குப் பெரும்பங்காற்றியபோதும், சிறிலங்கா பயன்படுத்திய அதியுச்ச கவனத்துடன் செதுக்கப்பட்ட வெளிநாட்டுக்கொள்கை அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

உண்மையான அரசியல் சாணக்கியம் மற்றும் சாதுரியமான அனைத்துலக இராசதந்திரம் என்பன புலிகளை இல்லாதொழிப்பதில் காத்திரமான பங்கினை வகித்திருக்கின்றன.

எவ்வாறிருப்பினும் போரின் பின்னான காலப்பகுதியில் சிறிலங்கா போர்க் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டதாக தொடரான அனைத்துலகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்தப் புறநிலையில் போரின் பின்னான சிறிலங்காவினது வெளிநாட்டுக் கொள்கை எத்தகையது என்பதை அலசுவது முக்கியமானதா?

போர் இடம்பெற்ற வேளையில் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதை முழு முதல் இலக்காகக் கொண்டதாகவே சிறிலங்காவினது மூலோபாயம் அமைந்திருந்தது.

இதன்போது சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைச் சிறிலங்கா பெற்றுக்கொண்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைகள் தொடர்பாக குறைகூறிவந்த மேற்கு நாடுகளினது அமைதியின் செயற்பாட்டாளர்களை சிறிலங்கா மதிநுட்பத்துடன் அமைதிப்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளை இல்லாததொழிப்பதற்கான போருக்கு தொழிநுட்ப ரீதியில் இந்தியா பொழும்புக்கு உதவியிருந்த போதிலும் தமிழர்களது இனப்பிரச்சினை தொடர்பான் புதுடில்லி கொண்டிருந்த அரசியல் வாதத்தினை சிறிலங்கா திறமையுடன் எதிர்கொண்டது எனலாம்.

சிறிலங்காவினது தமிழர்கள் அரச படையினரால் கொடூரமான வகையில் நடாத்தப்பட்டதாகவும் இந்தியத் தமிழர்களால் வஞ்சிக்கப்பட்டதாகவும் அனைத்துலக சமூகத்தினால் வேண்டுமென்றே அனாதைகள் ஆக்கப்பட்டதாகவுமே உலகம் பூராவும் பரந்துவாழும் இலங்கைத் தமிழர்கள் கருதுகிறார்கள்.

கடந்தகாலத்தில் இருந்ததைப் போலல்லாமல், சிறிலங்காவினது வெளிநாட்டுக் கொள்கையானது இன்று உறுதியற்ற தன்மையினைக் கொண்டிருக்கும் அதேநேரம் யதார்தமானதாகவுமே இருக்கிறது.

பிராந்திய மற்றும் அனைத்துலக அரசியல் தொடர்பான சிறிலங்காவினது வெளிநாட்டுக் கொள்கையினது புரிந்துணர்வு பரந்துபட்டதாகக் காணப்படுகிறது. இது சிறிலங்காவினது வெளிநாட்டுக் கட்டமைப்பினது இராசதந்திர திறன்களை விருத்திசெய்வதாக அமைகிறது.

உதாரணமாக, சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புச்சொல்லும் செயல்முறை பற்றித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் கடந்த ஒக்ரோபரில் வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் ஐ.நாவின் இந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்த சிறிலங்கா அரசாங்கம் வல்லுநர்கள் குழுவினது செயற்பாடானது நாட்டின் இறையாண்மையினை மீறுகிறது எனக்கூறி வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்கள் சிறிலங்காவிற்கு வருகை செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அனுமதியினை மறுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்துலகப் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அனைத்துலக வாதத்தினை முறியடிக்கும் வகையில் 2002 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றைத் தானே அமைத்திருந்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் வெளிநாட்டு வல்லுநர்கள் சிறிலங்காவிற்கு வந்து அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்கலாமேயன்றி வேறெந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற வாதத்தினை முறியடிப்பதே சிறிலங்காவினது நோக்கமாக இருந்தது.

இந்த நிலையில் சிறிலங்கா அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது போதிய ஆணையினையோ அல்லது சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் செயற்படும் தன்மையையோ கொண்டிருக்கவில்லை என அனைத்துலக அவதானிகள் கருதுகிறார்கள்.

தற்போதைய நிலையில் சிறிலங்காவினது வெளிநாட்டுக் கொள்கையினது முதன்மையான அம்சம் யாதெனில் தன்னுடைய தராதரத்தினை அது பேணியாகவேண்டும்.

இன்றைய சூழமைவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து எழக்கூடிய சவால்கள் பொருட்படுத்தக்கூடிய அளவிற்கு இல்லை. இருப்பினும், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் மத்தியிலான இந்தக் கருத்துருவாக்கத்தில் அதிக செல்வாக்குச் செலுத்திய புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அதிகம் கவனம் கொள்வதாகத் தெரிகிறது.

விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ்த் தேசியவாதமோ மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்வதுதான் தற்போதைய சூழமைவில் சிறிலங்காவினது வெளிநாட்டுக்கொள்கையினது பிரதான குறியிலக்கு எனலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சிறிலங்காவில் இராணுவ ரீதியிலாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டாலும் அதனது வெளிநாட்டு வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுநிலையில்தான் இருக்கிறது. அத்துடன் மேற்கு நாடுகளில் குறிப்பாக கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் ஈழம் என்ற கருத்துருவாக்கம் வலுவடைந்து வருகிறது.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து நாடுகடந்த தமிழீழ அரசு என்ற ஒன்றை அமைத்திருப்பது இந்த வாதத்திற்கு ஆதாரமாக அமைகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசினை இதுவரை எந்தவொரு நாடும் அங்கீகரிக்காதபோதும் அனைத்துலக ரீதியில் பல்வேறுபட்ட தரப்புகளும் இந்தக் கட்டமைப்புக்குத் தங்களது ஆதரவினை வழங்கி நிற்கின்றன.

எவ்வாறிருப்பினும், இதுபோல அனைத்துலக தரப்பினரின் ஆதரவு கிடைத்தமையானது தமக்குக் கிடைத்த வரவேற்பு என்றும் தங்களது பிரிவினைவாதத்தினை ஏற்கும் ஒரு செயல் என்றுமே புலம்பெயர் தமிழர்கள் கருதுகிறார்கள்.

எது எவ்வாறிருப்பினும் இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க் குற்றங்களுக்கு மேற்கு நாடுகள் சிறிலங்காவினைத் தண்டிப்பதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுமிடத்து சிறிலங்கா தன்னிடமிருக்கும் அனைத்து வழிவகைகளையும் கொண்டு அதனை எதிர்க்கும்.

அதிபர் மகிந்த ராஜபக்சவின் கீழான இன்றைய கொழும்பு அரசாங்கமானது போருக்குப் பின்னான தனது வெளிநாட்டுக் கொள்கையில் இருமுனை மூலோபாயத்தினைக் கைக்கொண்டு வருகிறது.

முதலாவதாக, சிறிலங்கா போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது எனக் குற்றம் சுமத்தும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றை சிறிலங்காவிலிருந்து தள்ளி வைப்பதற்கே கொழும்பு விரும்புகிறது.

இதே காரணத்திற்காக சிறிலங்காவினைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினை இடைநிறுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அமெரிக்கச் செனற் சபையில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, இதுபோல தனக்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்குச் சீனாவினைப் பயன்படுத்துவதற்கும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானங்கள் எதுவும் கொண்டுவரப்படுமிடத்து சீனாவை வீட்டோ அதிகாரத்தினைப் பயன்படுத்த வைப்பதற்கும் சிறிலங்கா விரும்புகிறது.

ஆதலினால் மேற்கு நாடுகள் என்று வரும்போது போருக்குப் பின்னான சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் சிறிலங்காவிலிருந்து பிரித்துவிடமுடியாததொரு தரப்பாக சீனா மாறிவிட்டது. சீனாவினைப் பொறுத்தவரையில் இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் சீனா முன்னெடுத்துவரும் முத்துமாலை மூலோபாயத்தில் சிறிலங்கா ஒரு மிகப்பெரும் முத்து.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் தமிழர்களது இனப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என அது கருதுகிறது.

இந்த எண்ணத்தினை மாற்றும் அதேநேரம் சிறிலங்காவினது தமிழர்களின் சட்டரீதியிலான சமூகப் பொருளாதார துன்ப துயரங்கள் போக்கப்படாதவிடத்து தமிழர்களது இனப்பிரச்சினை புதியதொரு வடிவத்தில் மீண்டும் முளைவிடும் என்பதை சிறிலங்கா விளங்கிக்கொள்ளவேண்டும்.

தி.வண்ணமதி

Comments