வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 3

vanni-valam-34-smallஇப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்குகுழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன.

எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத்தொலைத்த, உறவுகளை இழந்த மனிதர்கள், பசித்த வயிறுகளோடும் புளுங்கிய மனங்களோடும் குந்திக்கொண்டிருந்தார்கள். பாலிலும் தயிரிலுமாக வாழ்ந்த எத்தனையோ பேர் கஞ்சிக்குக்கூட வழியற்றுக்கிடப்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

குழந்தைகள் பசியால் மயங்கி விழுந்தனர். அதை ஒரளவாவது தாங்கும் திட்டமாக சந்திகளில் கஞ்சிக்கொட்டில்கள் முளைத்தன. போராளிகளேதான் அந்த கஞ்சிக்கொட்டில்களை நடத்தினார்கள்.

vanni-valam-31

இப்போதைக்கு பட்டினிச்சாவை தடுத்தால் போதும் என்று நினைத்தார்கள். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பெண்கள் புனர்வாழ்வு நிறுவனம், அரசியல்துறை போன்றவற்றால் இயக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் போதவில்லை என்று படையணிப் போராளிகள்கூட தத்தமது இருப்பிலிருந்த அரிசியில் கஞ்சிகாய்ச்சி ஊற்றினார்கள். மூன்று வேளையும் கஞ்சி வழங்கப்பட்டது.

வரிசையில் நின்று பாத்திரங்களில் கஞ்சி வாங்கிக்குடித்த மக்களைப் பார்த்து, எங்கள் மக்களுக்கா இந்தநிலை என்று நெஞ்சம் கொதிக்க போராடிய போராளிகளில் சிலர் படையினருடன் உக்கிரமாகப்போரிட்டு மாண்டனர்.

மரணம்கூட அழைக்க மறுத்தவர்கள் கண்ணீரில் கரைந்தனர். மாலை நேரங்களில் குழைத்த மா உருண்டை ஒன்றும் ஒரு குவளை பாலும் சிறுவர்களுக்காக வழங்கப்பட்டது. கஞ்சி கொட்டில்களில் அதற்காக குவிந்தது சிறுவர் பட்டாளம்.

வரிசை வரிசையாக நின்ற சிறுவர்கள் தத்தம் குடும்ப அட்டைகளை காட்டி அவற்றை பெற்றுக்கொண்டார்கள். அரசியல்துறை பெண்கள் பிரிவினர் வாய்ப்பன் தயாரித்து கொடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தனர்.

வெறும் கோதுமை மாவை பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட வாய்ப்பனுக்கு ஏகமாய் வரவேற்பு இருந்தது. அவை பசியை ஓரளவு கட்டுப்படுத்த கூடியன. மாவும் எண்ணெயும் கொடுத்து, இவ்வளவிலும் இத்தனை வாய்ப்பன்கள் செய்யவேண்டும். அத்தனையையும் இந்த விலையில் மட்டும்தான் விற்கவேண்டும். அதன் வருமானம் மட்டும்தான் உங்களுக்கான கூலி. இந்தாருங்கள் மாவும் எண்ணெயும். சட்டியும் விறகும் நீங்கள் கொண்டுவந்து சுட்டுவிட்டு, விற்பவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் கூலியை பெற்றுக்கொண்டு போங்கள், என்று சில பெண்களிடம் பொறுப்பை கொடுத்தார்கள்.

vanni-valam-32

வாய்ப்பன் தயாரிப்பதும் போசாக்கு அளிப்பதுமான இந்த செயற்பாடு நடைமுறைக்கு வந்து வாரம் ஒன்றுகூட ஆகவில்லை. இருந்த இடங்கள் எல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தன. இரவுபகல் என்றில்லாத எறிகணைவீச்சில் கொத்துக்கொத்தாய் குலை குலையாய் உயிர்கள் உருவப்பட்டன.

பிணங்கள் குவிந்தன. மரணதேவன் தன் கொடூர வலையை அடிக்கடி வீசினான். பலநூறு தடவைகள் வீசிவீசி கிழிந்துபோன அந்த மரண வலையின் கிழிசல்களின் ஊடாக பல்லாயிரம் பேர் உயிர்தப்பி ஓடிவர பல்லாயிரம்போர் மூச்சு திணறியோ உடல் சிதறியோ இதயம் வெடித்தோ செத்துப்போயினர்.

எரிக்கவோ புதைக்கவோ ஆட்களின்றி பிணங்கள் ஆங்காங்கே வாய்பிளந்து கிடந்தன. தூக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியாதளவு காயமடைந்தவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்து துடித்துச் செத்தார்கள்.

மரணம் மனிதர்களை பலவந்தப்படுத்தி இழுத்துக்கொண்டிருந்தது. தமது எல்லாக் குழந்தைகளும் செத்துவிட எஞ்சிய கணவனும் மனைவியும், பெற்றோர் இறந்துவிட மிஞ்சிய பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும் துணைவியை இழந்த துணைவனும், தாய்மாரை இழந்த ஒருமாத, ஒரு வார குழந்தையும் என எங்கும் அவலம். மனித பேரவலம். நடைப்பிணமான வாழ்க்கையின் துயரப்பயணம் மட்டும் முடிந்ததாய் தெரியவில்லை.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் பெரும் சவால்களுக்கு மத்தியில் கப்பலை முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு கொண்டு வந்தார்கள். ‘அந்த கப்பலில் பயணமா?’ என்றுதான் எவ்வளவு அஞ்சவேண்டி இருந்தது.

ஏனெனில் ஆரம்பத்தில் தனியே வந்த கப்பல்கள் இப்போது சுற்றிவர சிறிலங்கா கடற்படையின் டோறா படகுகளோடு நின்றது. கடற்படையினரும் படகுகளில் வந்து கனோன்வகை ஆயுதங்களால் ஊருக்குள் ஆபத்தை விளைவிப்பதுண்டு.

காதுக்குருத்துகளை கிழித்தெறியவல்ல கணீர் என்ற சத்தத்துடன் வந்து ஊரை கருக்கும் கனோன் அடியின் ஒலியில் இதயங்கள் உறைந்துவிடும். அதை நினைத்தாலே நெஞ்சம் படபடக்கும். அந்த ஒலியும் அதனால் ஏற்படும் படுகாயங்களும் அச்சத்தை உண்டுபண்ணக்கூடியன. காயத்தை ஏற்படுத்தும் சிதறுதுண்கள் மிகுந்த எரிவை ஏற்படுத்துவதோடு குருதியில் நச்சுத்தன்மையையும் பரப்பக்கூடியன.

ஈவிரக்கமின்றி மக்களின் உயிர்பறிக்கும் கனோன் அடிக்கும் கடற்படையின் டோறாக்கள் கப்பலின் பாதுகாப்பில் எங்கள் கரையருகே வந்துநின்றன. சனங்கள் பாதுகாப்பு அரண்களுக்குள் பதுங்கிக்கொண்டார்கள்.

வீதிகள் வெறிச்சோடின. நீண்டநேரம் மருத்துவமனைக்குரிய எல்லாச்செயற்பாடும் ஸ்தம்பிதமாகிவிட்டன. டோறாக்கள் தரையிறங்கிவிடுமோ என்ற அச்சம் கேள்வியாகிக் குடைந்தது.

பின்பு வாகனங்களில் நோயாளிகள் ஏற்றப்பட்டார்கள். அவர்களும் பயந்துகொண்டேதான் சென்றார்கள்.

அன்றைய நாட்களில் கப்பலால் செல்வதற்காக மக்கள் துடியாய் துடித்தார்கள். நான் நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு நிற்பவர்களில் எவரை அனுமதிப்பது எவரை தவிர்ப்பது என்ற திண்டாட்டம் மருத்துவர்களுக்கு இருந்தது. காயப்பட்டவர்கள் மட்டும்தான் கப்பலில் செல்லலாம் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே.

காயப்பட போகிறவர்களும் முற்கூட்டியே ஏறிவிட்டால் காயங்களை தவிர்த்துக்கொள்ளலாம் அல்லவா? ஆகவே பயண அனுமதி பெறுவதிலும் ஒரே சண்டையும் சச்சரவுமானது. எப்படியோ எல்லோருமே அந்த பாழும் பிணக்குழியை விட்டு வெளியேறிவிடவே துடித்தார்கள்.

மாறிமாறிவந்த கப்பல்களில் எத்தனை தடவைகள்தான் ஏற்றிச்சென்றாலும் காயமடைந்தவர்கள் நிரம்பி வழிகின்றார்களே தவிர குறைந்தபாடில்லை. வயோதிபர்களும் சிறுவர்களும் கர்ப்பிணிகளும் செல்வதற்கான அனுமதி பெரும்பாலும் கிடைத்தது. மற்றவர்கள்தான் அதிக விசாரிப்புகளின்பின் அனுமதிக்கப்பட்டார்கள்.

vanni-valam-33

கப்பலடி எப்போதுமே பிரியும் உறவுகளால் கதறியது. கப்பலில் ஏறப்போனவர்கள்தான் அதிகமாய் அழுதார்கள். ‘உங்களை பயங்கரத்திற்குள் விட்டுவிட்டு நாங்கள்மட்டும் போகிறோமே’ என்றுதான் கதறினார்கள்.

மக்களின் கண்ணீர் பெருகி கடலோடு கரைந்தது. கேட்டு முடியாவிட்டால் எவர் காலிலாவது விழுந்து கெஞ்சிக்கூட கப்பலேற அனுமதி கிடைக்காவர்கள் அங்கேயே கிடந்து காயம் புழுத்து அழுகி செத்துப்போனார்கள்.

கொடுக்கும் அனுமதியையும் பயனள்ளதாக கொடுக்கவே மருத்துவர்களும் விரும்பினார்கள். காப்பாற்ற முடியாத பெரும் பாதிப்புகளை உடையவர்களையும் அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இறந்துவிடக்கூடியவர்களையும் அவர்கள் கப்பலில் ஏற்றவில்லை.

மனிதாபிமானம் பார்த்து சில மருத்துவர்கள் சிலருக்கு சலுகை காட்டினார்கள்தான். எல்லோருக்குமே உதவக்கூடிய வழிகள் எவருக்குமே இருக்கவில்லை. வெட்டொன்று துண்டிரண்டாகப்பேசிய வைத்தியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் சனங்கள் கரித்துக்கொட்டினார்கள்.

சரி எது பிழை எது என்று நீதிநியாயம் கேட்காமல் தத்தமக்கு சரி என பட்டதையே எல்லோரும் செய்தார்கள். அனுமதி வழங்கினாலும்தான் கப்பலில் எத்தனைபேரை ஏற்ற முடியும். நாளுக்கு பத்துக்கப்பல்களா வந்தன. வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ என வரும் கப்பல்களில் இடைவெளியே இல்லாமல்தான் சனத்தை நிரப்பினார்கள். அங்கே எவரும் கெஞ்சி மன்றாடி எல்லாம் அனுமதி பெற்றுவிட முடியாது.

சாவுகளைபார்த்துப் பார்த்து பழகிப்போனாலும் சாப்பயம் மனிதர்களை விரட்டத்தான் செய்தது. முள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால், உண்டியல் சந்தியடி பகுதியெங்கும் எறிகணைகள் சரமாரியாய் விழுந்தன.

செய்திகள் பலவிதமாய் வந்தன என்றாலும் எல்லாமே ஒரே தகவலைத்தான் சொல்லின. ‘போராளிகளின் முக்கிய தளபதிகளில் முக்கால்வாசிப்பேரும் ஆனந்தபுரத்தில் மரணமடைந்து விட்டார்களாம். சிலருக்கு நடமாடவே முடியாத காயங்களாம்” என்று. மக்கள் இப்போது கடுமையாக யோசித்தார்கள்.

எல்லாம் ஓய்ந்துவிட்ட கதை எல்லோருக்கும் புரிந்தது. மக்கள் சண்டை வரிசைகளை ஊடறுத்துக்கொண்டு தங்கள்மீது எறிகணைகள்வீசும் படையினரிடமே சரணடைந்துவிட துணிந்தார்கள். வேறு வழியெதுவும் இருப்பதாக அவர்களுக்கும் தெரியவில்லை.

சாப்பயம் அவர்களை எதிரியின் கால்களில் விழவைத்தது. மன்னாரிலிருந்து ஓடிஓடி வந்தவர்கள்கூட தம் அர்த்தமற்ற இழப்புகளுக்காக அழுதுவிட்டு சொப்பிங் பைகளோடு சரணடைய புறப்பட்டு விட்டார்கள்.

காலதேவனின் கருணையற்ற மாற்றத்தை கண்டு பலர் நெஞ்சம் குமுறினார்கள்.

மாட்டவே மாட்டன். என்ர குமருகள கூட்டிக்கொண்டு அவங்களிட்ட போக மாட்டன் என்று தாயொருவர் தன் தலையிலடித்துக்கொண்டு கதறியழுதார். அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆறுதல்சொல்லத்தான் முடியவில்லை.

நள்ளிரவு. மணி பன்னிரண்டு. வீதிநிறைய சனக்கூட்டம் இடவலம் புரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தது. மெல்லிய நிலவு வெளிச்சத்தில் தம் உறவுகளை இனங்கண்டவர்கள் சேர்ந்துகொண்டார்கள்.

vanni-valam-34

பலரும் தத்தம் உறவுகளை தொலைத்துவிட்டு தேடுபவர்களாகத்தான் இருந்தார்கள். அவலபபட்ட பலர் சந்திகளில் நின்று புலம்பினார்கள். அப்படித்தான் அந்த அம்மாவும் தடுமாறி அலைமோதிக்கொண்டு நின்றார். எனக்கு அவரை பார்க்கப் பார்க்க பரிதாபிமாக இந்தது. அருகில்சென்று அவரது கரம்பிடித்து அழைத்துவந்து எனக்கருகில் அமரவைத்தேன்.

நான் போக மாட்டனம்மா. எதிரியிட்ட போக மாட்டன். நான் அனுபவப்பட்டவள். குமருகள் அவனிட்ட பட்டபாடுகள பாத்தவள். என்ர குமருகள் ரெண்டையும் கூட்டிக்கொண்டு நான் அவனுகளிட்ட எப்பிடியம்மா போவன். போக மாட்டன். அப்பிடி இந்த போராட்டம் தோத்தாலும் நான் போகமாட்டன். என்ர பிள்ளைகள இழுத்துக்கொண்டுபோய் கடல்லவிழுந்து சாகுவன். சாகுவனம்மா. சாகுவன்.’ என்றெல்லாம் கதறும் அந்தத்தாயின் புலம்பலை கேட்க இதயம் வலித்தது.

மணலாறு மண்ணின் வேர் அவள். சுத்த வீரர்களின் சொந்தக்காரி. அவரது தாங்கமுடியாத வேதனை விம்மலாகி கண்ணீராயும் புலம்பலாயும் கொட்டிக்கொண்டிருந்தது.

எத்தனை விதமான மனித உணர்வுகள். எல்லோரும் எதையோ நம்புகிறார்கள். இனிமேலும் இங்கே இருக்க முடியாது என்று தெரிந்தும் படையினரிடம் போகமாட்டேன் என்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

இப்போதுகூட உலகம் தம்மை பார்க்கும் தம் அவலத்தை பார்த்து நீதிபேசும் என்று கூட கதைத்துக்கொண்டார்கள். அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் அங்கே வாழும்வழியின்றி கிளம்ப வரத்தொடங்கிவிட்டார்கள். பலபேர் ‘இன்னமும் போராட்டம் முடியவில்லை. அதன் இறுதிநாள் உலகம் தீர்மானிக்கும் எமது விடிவுநாளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடு பதுங்குகுழிகளை தயாரித்தார்கள்.

இனிமேல் தங்கைக்காக என்று என் நேரத்தை செலவிட முடியாது. அடுத்து என்ன முடிவெடுப்பது என்று எவருக்குமே தெரியாது. பொதுவாக போராளிகள் குண்டுகளோடு நிற்போம் எதிரியோடு மோதியோ தற்கொலைசெய்தோ எம்மை அழித்துக்கொள்வோம் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்,.

அதுகூட நல்லதுதான். இத்தனைக்குப்பின்னும் போராளிக்கு சாவு வராதிருப்பது துயரந்தான். ஆகவே வலிந்தாவது சென்று சாவை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். தங்கையையாவது அனுப்பிவிட்டால் போதும் சாவதற்கு தயங்கத்தேவையில்லை.

ஆனால் தங்கையோ பிடிவாதமாக நின்றாள். ‘உங்கள விட்டிட்டு நான் போகமாட்டன்’ என்று. அவளது சம்மதமின்றியே மருத்துவமனைக்குச்சென்று மருத்துவரிடம் கதைத்தேன். அவளது உடல் நிலையையும் என் மனநிலையையும் எடுத்துச் சொன்னேன்.

என் பெற்றோர் மொத்தம் ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள். அவர்களின் ஆசை மகனை ஐவர்க்கும் சகோதரனை மண்ணுக்காக மாவீரனாக விலைகொடுத்தவிட்டார்கள். இரண்டு பிள்ளைகளை யுத்தம் தன் விளையாட்டில் விழுங்கிவிட்டது.

இழப்புகளின் தாக்கத்தால் துவண்டுபோய்விட்ட பெற்றவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாவது மிஞ்சட்டுமே என்றுதான் தங்கையை அவ்வளவு கட்டாயப்படுத்தி அனுப்பினேன். சிதறுதுண்டு உள்ளிறங்கிய மாறாத காயத்துடன் நிற்கும் அவளுக்கு ஒற்றை கையால் தூக்கக்கூடிய பையொன்றை கொடுத்து அனுப்பிவிட்டேன்.

சொத்துப்பத்துக்கு சொந்தக்காரியாய் இருந்தவளை இரண்டு உடைகளடங்கிய ஒற்றைப்பையுடன் அனுப்புவதை நினைக்க வேதனைதான். யாருமற்ற அநாதைபோல போகிறாளே என்ற கவலைதான்.

என்ன செய்வது இவளைவிட மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டில் இன்னும் எவ்வளவுபேர் இருக்கிறார்கள். கலங்கிய கண்களுடன் தங்கையையும் பிரிந்தேன். எனினும் அவளை அம்புலன்சில் ஏற்றிவிட்டேன் என என்னால் நிம்மதிப்பெருமூச்சுவிட முடியவில்லை. காரணம் அவள் கப்பலில் கால்வைப்பாளா என்ற சந்தேகம்தான்.

முள்ளிவாய்க்கால் சந்தியில் இருந்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலைதான். அப்போது மாஞ்சோலை மருத்துவமனையாக இயங்கியது. பகல் மணி பன்னிரண்டை தாண்டப்போகிறது. இப்படியான நேரங்களில்தான் படையினர் கடலில் இருந்தும் எறிகணைகளை வீசித்தள்ளுவது வழமை. கப்பல் புறப்படும்நேரம் நெருங்குகிறது.

கப்பல் புறப்பட்ட ஐந்தாறு நிமிடங்களுக்குள் மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியே ஓடிவிடவேண்டும். அவள் கடைசியாகச்சென்ற அம்புலன்சில்தான் ஏற்றப்பட்டாள். இன்றைக்கென்று கப்பல் புறப்படமுன்பே தொடங்கிவிடுவானோ? தங்கை அதற்குள் கப்பலேறி விடுவாளோ மாட்டாளோ? அதற்குள் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து தொலைந்துவிட்டால்? மீண்டும் காயம்பட்டு…… சே சே… அப்படியொன்றும் நடக்கக்கூடாது.

எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றம் எனக்கு மட்டுமல்ல அங்குநின்ற அனைவரிலும் தெரிந்தது. காயமடைந்தோரை ஏற்றிய குறையிலும் கப்பல் புறப்பட்டுவிட்டதுண்டு. கரைவரை வந்து நங்கூரம் பாய்ச்சிவிட்டும் எவரையும் ஏற்றாமலேயே வெறுங்கப்பலாக திரும்பிச்சென்றதுமுண்டு.

கப்பல் வந்துவிட்டுச்செல்லும் நாட்களில் கட்டாயம் எறிகணைவீச்சு நடக்கும். சரமாரியாய் விழுந்து பலபேரை கொன்று குவிக்கும். அடுத்த காப்பலுக்கும் காயப்பட்டவர்களை தயார்படுத்த வேண்டுமல்லவா? ‘நீங்களா வராட்டி என்ன நாங்கள கூட்டிக்கொண்டு போறம் பாருங்க. காயம்பட்டால் வரத்தானேவேணும்’ என்பதுபோல இருந்த படையினரின் செயற்பாட்டைபற்றி மக்களும் நன்கறிவார்கள்.

அதனால் எறிகணைவீச்சு நேரங்களில் காப்பகழிகளுக்குள் இருந்துவிடுவார்கள். முன்பானால் பதுலிக்குப் பதில் பறக்கும் எறிகணைகள். இப்போது படையினரின் கையே மேலோங்கி இருந்தது. ஆனந்தபுரத்திலிருந்து போராளிகளை மீட்பதற்காக கையிருப்பிலிருந்த எறிகணைகளையும் மோட்டார் பிரிவினர் எறிந்துதீர்த்துவிட்டனர். இப்போது படையினருக்கு எதிராக ஏவ போராளிகளிடம் எதுவுமே இருக்கவில்லை.

நான் தொலைத்தெடர்பு நிலையத்தடிக்குச்சென்றபோது அங்கும் மக்கள் நிரம்பி வழிவதை கண்டேன். நான்கு கம்பிகளில் நான்கே நான்கு தகரங்கள் மாட்டப்பட்ட கூரையின்கீழ் அழுக்கடைந்த நான்கு தொலைபேசிகள் இருந்தன.

மக்களோ மிகநீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்தார்கள். இத்தனை அனர்த்தத்திற்குள்ளும் தொலைபேசிச்சேவை செயற்பட்டது அதிசயமே. என்ன, கதைப்பதில் ஒன்றுமே விளங்காது. விளங்கும் சில சொற்களை வைத்துக்கொண்டு தகவலை புரிந்துகொள்ள வேண்டியதுதான். இடையிடையே தொலைபேசிகள் இயங்கவும் மறுத்துவிடும். வரிசை மெதுமெதுவாய் அரக்கிக்கொண்டிருந்தது.

என் மனதிலோ தங்கையே நிறைந்துநின்றாள். பாவம் அவள் நான் தனித்துவிடக்கூடாது என்றுதானே மன்னாரிலிருந்து இத்தனை துயரங்களையும் தாங்கி இங்குவரை வந்தாள். இப்போது ஒவ்வொருவராய் என்னை விட்டுவிட்டுச் செல்கிறோமே என்ற வேதனைதான் அவளுக்கு.

போய்ட்டு வாறன் என்ற வார்த்தையைகூட அவளால் சொல்ல முடியவில்லை. எத்தனை தவிதவித்தாள். நான் அவளைப்பற்றியே நினைத்துக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எறிகணை ஏவப்படும் ஒலி கேட்கும்போதெல்லாம் நிலத்தில் விழுவதும் பின்பு எழுந்து நிற்பதுமாக ஒரு அறுபடாத வரிசை அந்த தொலைபேசிகளை நோக்கி நகர்ந்தன. அந்த இணைணப்பு விடுபட்டுவிடாமல் நானும் நின்றேன்.

தொடரும்…………….

- ஆனதி

Comments