துணிச்சலான முடிவுகளை ஜெயலலிதா எடுப்பாரா?

இன்றைக்கு சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்களை மறக்கமுடியாது. எகிப்து மக்களுக்காகவும், லிபிய மக்களுக்காகவும் இன்று சிரிய மக்களுக்காகவும் ஓங்கிக்குரல் கொடுக்கும் உலகம் தன் கண்முன்னே நடந்த இனப்படுகொலையை கண்களை மூடிப் பார்த்துக்கொண்டிருந்த நாட்கள் இவை.

யார்கைவிட்டாலும்எங்கள்தொப்புள்கொடிஉறவான தமிழகம் எங்களைக் கைவிடாது என்று நம்பிக்கையோடு கடற்கரை இரத்த மணல் சகதிக்குள் ஏங்கிக்கிடந்தது தமிழினம்.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி மத்திய அரசையே ஆட்டம்காணவைக்கும் அசுர பலத்தோடு அப்போது இருந்தார். இலங்கைத் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை சிறீலங்காவுடன் சேர்ந்து இந்தியாவின் கொங்கிரஸ் அரசும் புரிகின்றது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் போரைத் தடுத்து நிறுத்தி இராணுவ முற்றுகைக்குள் அழிந்துகொண்டிருந்த மக்களைக் காப்பாற்ற கருணாநிதி நினைத்திருந்தால் நிச்சயமாக முடிந்திருக்கும். ஆனால், ஒரு இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்தவதற்கான அத்தனை அஸ்திரங்கள் கைகளில் இருந்தும், ஏனோ கண்களை இறுக்க மூடி மௌனமாகிக்கிடந்தார் கலைஞர்.

அவரது மௌனத்தைக் கலைக்கவும் கண்களைத் திறக்கவும் முத்துக்குமார் தொடக்கம் எத்தனை எத்தனை உறவுகள் தங்களையே தீப்பந்தமாக்கினார்கள். ஆனால் முத்துக்குமாரனின் எழுச்சித் தீயை அணைக்கவும், கொதித்துக்கொண்டிருந்த தமிழின உணர்வாளர்களின் எழுச்சியை அடக்கவும் மனித சங்கிலி என்றும், உண்ணாவிரதம் என்றும், பதவி விலகல் என்றும் நாடகங்களை அரங்கேற்றி காலத்தை இழுத்தடித்து ஒரு இனம் அழிவதற்கு கருணாநிதியும் ஒரு காரணமானார். இனத்தை அழித்தவர்களுடனேயே கூட்டணியையும் தொடர்ந்தார். ஈழத் தமிழர்களை நேசிக்கும் அத்தனை உள்ளங்களிலும் இது அனலாகவே தகித்துக்கொண்டிருந்தது.


தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் கொங்கிரசையும் அதற்கு துணை நிற்கும்தி.மு.கவையும் அடியோடு சாய்ப்பதற்கு காங்கிரசைக் கருவறுப்பேன் என்ற வெறிகொண்ட வேகத்தோடு இறங்கிய சீமானின் ஓயாத முழக்கமும், மே 17 இயக்கத்தினரின் ஓயாதபரப்புரைகளும், இன உணர்வாளர்களின் நடவடிக்கைகளும் கொங்கிரசையும் அதனோடு கூட்டுவைத்திருந்த கலைஞரின் தி.மு.கவையும் தமிழகத்தில் அடியோடு சாய்த்திருக்கின்றது. எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாத அளவிற்கு தி.மு.கவும், கூட்டாட்சிக்கனவுடன்போட்டியிட்டு வெறும் நான்கு ஆசனங்களுடன் கொங்கிரசும் அவமானகரமான வரலாற்றுப்படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

இவர்களின் இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இப்போது கூறப்படுகின்றன. ஆனால், ‘ஈழத்தமிழர் படுகொலையும் சீமானின் பரப்புரையும்தான் ஒரே நாளில் புதுச்சேரி அரசியலைப் புரட்டிப்போட்டது’ என புதுவை முதல்வர் ரங்கசாமியே ஒத்துக்கொண்டிருக்கின்றார் என்றால் தமிழகத்தின் நிலையைச் சொல்லத்தேவையில்லை. ஈழத் தமிழர்களுக்கு இன்னல் விளைவிக்கின்ற யாரும் தமிழகத்தில் ஆட்சி நடத்தமுடியாது என்று கொங்கிரசுக்கும், தி.மு.கவிற்கும் உணரவைத்த அனைவருக்கும் நன்றி சொல்ல ஈழத் தமிழ் மக்கள் கடமைப்பட்டவர்கள்.

இப்போது தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார் செல்வி ஜெயலலிதா. போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று வெற்றியின் பின்னரும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்கள் கௌரவமான, சுதந்திரமான வாழ்க்கைவாழசிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறீலங்கா அரசைஇந்தியா வலியுறுத்தவேண்டும் என்றும் அதை செய்ய சிறீலங்கா ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் மறுத்தால், சிறீலங்கா மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும்என்றும்கூறியுள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகளாக வர்ணிக்கும் சிங்களத் தலைமைகள், ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்களையும் கோமாளித்தனமாக வர்ணிக்க முற்படுகின்றன.
ஆனால், தமிழகம் நினைத்தால் ஈழத் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும், அவர்களுக்கான விடிவையும் ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்பதை செல்வி ஜெயலலிதா அவர்கள் நிரூபிக்கவேண்டும். எடுத்த காரியத்தை உறுதியோடு செய்து முடிக்கும் துணிச்சல் தனக்கு இருக்கின்றது என்பதை தனது கடந்த இரண்டு ஆட்சிக் காலங்களிலும் பல தடவைகள் நிரூபித்தவர் ஜெயலலிதா அம்மையார். தங்கள் விடயத்திலும் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

நன்றி - ஈழமுரசு_84

Comments