வறுமை காரணமாகவே பெண்போராளி தற்கொலை: மேலதிக தகவல் !

நேற்று முந் தினம், புன்னாலைக்கட்டுவான் ஈவினை கிழக்கைச் சேர்ந்த லாவன்யா என்ற 21 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மர்மமான முறையில் இவர் இறந்து கிடந்ததால் பிரதப் பரிசோதனைக்கு அவர் உடல் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி, இறுதியில் தூக்கில் தொங்கியுள்ளார் என தற்போது தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் பெண்போராளியாக இருந்த லாவண்யா, மே 18ம் தேதிக்குப் பின்னர் புனர்வாழ்வுக்காக சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டவராவார். நாட்டுக்காகப் போராடிய இப் பெண் வறுமையில் வாழ்ந்துவந்துள்ளார். அண்ணாவை நேசித்த புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னை கைவிடாது எனவும் அவர் கூறி தனது வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்ப இதுவரை அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்தபாடில்லை. அரசாங்கம் தான் செய்யவில்லை போகட்டும், ஆனால் புலம் பெயர் சமூகமும் இவர்களைக் கைவிட்டுள்ளது. இந் நிலை நீடித்தால், பசி பட்டினியால், மனமுடைந்து, பல ஈழத் தமிழர்கள் இவ்வாறான முடிவுகளை நோக்கிச் செல்ல நேரிடலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும், முன்னாள் போராளிகளும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனாலேயே இவர்கள் சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்கின்ற நிலைமைக்கு ஆளாகின்றார்கள் என்று யாழ் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

Comments