தமிழர்களின் நல்லூர் ராசதானியைக் குறிவைக்கும் சிங்களம்: இன அழிப்பின் உச்சம் !

யாழில் பல்வகையான மறைமுக இன அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இலங்கை இராணுவம், தற்போது யாழ்ப்பாண இராசதானியின் பழைய தலைநகர் நல்லூரை குறி வைத்துள்ளதாக யாழ்ப்பணத்தில் உள்ள செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிங்கள வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் நல்லூர் கந்தசாமி கோவிலின் சுற்று புறத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவம் மேற்படி கோவிலின் சூழலில் மக்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காகவும் ஊரடங்கு சட்டத்தை போன வார இறுதி நாட்களில் அமுல்படுத்தி உள்ளது எனவும் அறியப்பட்டுள்ளது.

நல்லூர் யாழ் நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. இது யாழ் மக்களின் கலாச்சார தலை நகரமாகவும் விளங்குகிறது. கொழும்பு மட்டுமல்லாது சர்வதேச பிரதிநிதிகளும் இந்தியாவும் நல்லுரின் மீது குறி வைத்துள்ளன. அண்மையில் திறக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகராலயமும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களும் நல்லூர் ஆலயத்தின் சுற்று புறத்திலேயே அமைந்துள்ளன என்பது நோக்கப்படவேண்டிய விடையமாக உள்ளது. கண்டி இராசதானியை வென்ற பிறகு தலதா மாளிகையை சுற்றியுள்ள பிரதேசங்களில் பிரித்தானியா அரசு
என்ன செய்ததோ அதையே தற்போது இலங்கை ராணுவமும் நல்லூரில் செய்கிறது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீது படையெடுத்த பிரித்தானியப் பேரரசு, கண்டி ராசதானையை வென்ற பின்னர், தலதா மாளிகைக்கு முன்னால் குயின்ஸ் ஹோட்டல் ஒன்றை கட்டி இருந்தது. இவ்வாறு நன்கு திட்டமிட்டு, சிங்கள கலாச்சார மற்றும் மதத் தலங்களை அவர்கள் குறிவைத்து, பல சிங்களவர்களை பிரித்தானியர்கள் கிறீஸ்தவர்களாக மாற்றியதையும் நாம் மறந்துவிட முடியாது. எதிரிகள் தாம் ஆக்கிரமிக்கும் பகுதிகள் மீது முதலில் ஆரம்பிப்பதே கலாச்சார மற்றும் மத ரீதியான இன அழிப்பே ஆகும். பிரித்தானியாவுக்கு எதிரான தங்களுடைய போராட்டம் சரியானது என சிங்களவர்கள் வாதிடுவர்கள். அப்படி என்றால் சிங்கள ஆக்கிரமிப்பளர்களுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் என்பதும் சரியனதொன்றாகும்.

2 வாரங்களுக்கு முன்னர், இரவு 7.00 மணிக்கு பின்னர் நல்லூர் வளாகத்தில் மக்கள் நடமாட இராணுவம் தடைவித்திருந்த விடையம் பலருக்குத் தெரியாது. நூற்று கணக்கில் இப்பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் மக்களை மேற்படி பிரதேசத்தில் இருந்து விரட்டியும் உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் ஒருவர் கூட இவர்களிடமிருந்து தப்ப முடியவில்லை. மக்களுக்கு இராணுவம் ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்று புரியவில்லை. ஆனால் அதன் பின்னணியில் பல விடையங்கள் அடங்கியிருந்தது. 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கு எதிராக நல்லூர் ஆலய முன்றலில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை நீத்த தியாகி தீலீபன் நினைவாக ஆலயத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த நினைவுத்தூபி ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

இதைவிட அறிவிக்கப்படாத இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில், பல நூற்றுக்கணக்கான சிங்கள வியாபாரிகளை இலங்கை இராணுவம் இறக்கியுள்ளது. அவர்கள் நல்லூர்கோவில் வளாகத்தைச் சுற்றி எங்கேங்கே கடைகளைப் போடலாம், வியாபாரங்களை ஆரம்பிக்கலாம், எவ்வாறு இடங்களை வளைத்துப் போடலாம் என்று ஆராயப்பட்டுள்ளது. பல சிங்கள வியாபாரிகளை இராணுவம் யாழ் கொண்டுவந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுக்கிறது. அவர்கள் தான் அப்படி என்றால், அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி குழுவினர், தமிழ் மக்களை தொடர்ந்தும் காட்டிக்கொடுக்கின்றனர். எந்த வீடுகளில் உள்ள தமிழர்கள் வெளிநாடு சென்றுவிட்டனர், எந்தக் கடை உரிமையாளர் கொல்லப்பட்டார், எந்த வியாபாரஸ்தல உரிமையாளர் வெளிநாடு சென்றுள்ளார் என்பனவற்றை ஈ.பி.டி.பியினரே காட்டிக் கொடுக்கின்றனர். இதைவிடக் கொடுமை வேறு என்னாவாக இருக்கமுடியும் ?

Comments