சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டது?

மிக வேகமாக புலிகளிற்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவர்களை இலகுவில் தோற்கடித்துவிட முடியும் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோத்தாபய ராஜபக்சவும் உறுதியாக நம்பினர்.


இவ்வாறு இந்தியாவை தளமாகக்கொண்ட The Sunday Standard உடகத்தில் P K Balachandran கொழும்பில் இருந்து எழுதிய செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம், 2006ல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டுவதென திடசங்கற்பம் பூண்டபோது, அதனை சிறியளவிலானோர் மட்டுமே நேர்மறை எண்ணத்துடன் பார்த்தனர்.

கூர்மையான புத்தியுடைய விபரிக்க முடியாத வேலுப்பிள்ளை பிரபகாரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என இந்தப் பூகோளம் முழுமையும் நம்பியிருந்தது.

1965-1971 வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டைக்களங்களில் பல சாதனைகளைப் புரிந்த இந்திய அமைதி காக்கும் படையானது தமிழர் நிலங்களில் கால்பதித்தபோது அதனை எதிர்த்து 1987 தொடக்கம் 1990 மார்ச் வரை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தமுனைப்புக்கள் மூலம் இந்தியப் படை தோற்கடிக்கப்பட்டது.

1990களில், கிழக்கு மாகாணம் தவிர வட பகுதியிலுள்ள வன்னிப் பிராந்தியத்தில் அகலக்கால் பரப்பியிருந்த சிறிலங்காப் படைகளுக்கு எதிராக 'ஓயாத அலைகள் 01,02,03' நடவடிக்கைகளை முன்னெடுத்த புலிகள் அதன் மூலம் தமக்கான வெற்றியைப் பெற்றுக்கொண்டனர்.

1990களின் பிற்பகுதியில், 122மி.மீ, 155மி.மீ ஆட்லறிகளையும் பெற்றுக் கொண்ட புலிகள், கடற்புலிகள் என அழைக்கப்பட்ட கடலில் மிக வேகமாக செல்லக்கூடிய கடற்படை ஒன்றையும் உருவாக்கிக் கொண்டனர்.

2005ல் ராஜபக்ச முதன்முதலில் ஆட்சியில் அமர்ந்தபோது, 2006 தொடக்கம் 2009 வரையான காலகட்டங்களில் இடம்பெற்ற நான்காவது ஈழப்போரின் போது கொழும்பில் இரவு நேர வான் தாக்குதல்கள் சிலவற்றை மேற்கொண்ட Z-143 என்ற வான்கலங்களைக் கொண்ட வான்படை ஒன்றும் புலிகள் அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது.

"பலபேர் நினைப்பது போன்று விடுதலைப் புலிகள் சிறியதொரு குழுவல்ல. சிறிலங்காவின் அதிபர்களில் ஒருவர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் போன்றோர் உள்ளடங்கலாக எண்ணுக்கணக்கற்ற பொதுமக்கள் தவிர 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெற்ற உள்நாட்டுப் போரில் 26,000 வரையிலான சிறிலங்கா இராணுவப் படைகள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர்"

என மே 31 அன்று கொழும்பில் 'பயங்கரவாதத்தை தோற்கடித்தலில் சிறிலங்காவின் அனுபவம்' என்ற தலைப்பின் கீழ் நடாத்தப்பட்ட அனைத்துலக கருத்தரங்கில் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழும் 60 மில்லியன் தமிழ் மக்களின் ஆதரவுடன் செயற்பட்டதால், இந்திய மத்திய அரசு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்நாட்டின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டிய நிலையில் இருந்திருக்கும் என புலிகளின் ஆதரவாளர்களில் சிலர் நம்பியிருந்தனர் என்பது உண்மையானதாகும்.

மிக வேகமாக புலிகளிற்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவர்களை இலகுவில் தோற்கடித்துவிட முடியும் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோத்தாபய ராஜபக்சவும் உறுதியாக நம்பினர்.

சிறிலங்கா இராணுவமானது பல போர்க்களங்களில் வெற்றிகளைப் பெற்றுள்ளது எனவும், ஆனால் இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு நடத்தக் கூடிய போதிய முகாமைத்துவ ஆற்றல், தந்திரோபாயம், மூலோபாயம், தலைமைத்துவம் போன்ற பண்புகள் சிறிலங்கா இராணுவப் படை வீரர்கள் மத்தியில் போதியளவில் இல்லாமையாலேயே இவர்களால் மிகச் சிறந்த பெறுபேறுகளை அடைய முடியவில்லை என ஓய்வுபெற்ற லெப்.கேணல் தர இராணுவ அதிகாரியுமான கோத்தாபயா கருதினார்.

தற்போது குற்றவாளியாக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் இராணுவ தலைமைத்துவம் மற்றும் நெறிப்படுத்தலின் கீழ், ஒரு பிராந்தியத்திற்காக பிறிதொரு பிராந்தியத்தைக் கைப்பற்றி அதன் பின்னர் நிலையான வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கி சகல பிராந்தியங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல் என்ற இராணுவ மூலோபாயம் கைவிடப்பட்டது.

விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும், சொத்துக்களையும் தேடி அழிக்கும் போது புலிகள் தமக்குத் தேவையான உறுப்பினர்களை பலாத்கார ஆட்சேர்ப்பு மூலம் இணைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறான புலிகளின் செற்பாடானது, அவர்களுக்கு பெரும் துணையாகவும் ஆதரவாகவும் இருக்கும் மக்கள் சக்தியை அவர்களுக்கெதிராகத் திருப்ப உதவும் என சரத் பொன்சேகாவால் திட்டமிடப்பட்டு அதற்கேற்ற வகையில் புதிய இராணுவக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது.

இதனடிப்படையில், சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் கொமாண்டோ வீரர்கள், விடுதலைப் புலிகளின் பிரதான தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர்.

பெரியளவிலான காலாற்படை உருவாக்கம், நீண்ட தூர எல்லை வீச்சு ஆயுதங்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் போன்றவை புலிகளை அழிப்பதில் பெரிதும் உதவின என மேஜர் ஜெனரல்கள் சாஜி கல்லகே, ஜெகத் டயஸ், பிரசன்ன டீ சில்வா ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால் சிறப்புப் படைகள், கொமாண்டோ படைகள், மற்றும் காலாற்படையைச் சேர்ந்த ஏனைய சிறிய குழுக்களின் உதவி இல்லாமல் யுத்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.

எட்டு தொடக்கம் பத்து வீரர்களை உள்ளடக்கிய சிறிய குழுக்கள் புலிகளின் முன்னணிப் பாதுகாப்பு அரண்களை ஊடறுத்து உள்நுழைந்து தாக்குதல்களை நடாத்த வழிகோலின.

தமது எதிரிப் படைகளின் பாதுகாப்பு நிலைகளுக்குப் பின்னால் ஊடறுத்து நின்ற இந்த சிறிய அணி இராணு வீரர்கள் பெரியளவிலான முன்னகர்வுகளில் ஈடுபட்ட தமது தரப்பு படைகளுக்கு தேவையான பெறுமதிமிக்க பல தகவல்களை வழங்கி உதவின.

இவ்வாறான தாக்குதல் உத்திகள் யுத்த களங்களின் நிலைமைகளுக்கேற்ப, சிறிய குழுக்களிலிருந்து உச்ச மட்ட தளபதிகள் வரை சிறந்த தொடர்பாடல் மூலம் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டது.

'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

Comments