சிவராம் நினைவுப் பேருரை: போரின் பின்னான இலங்கைத் தீவில் நீதியும் ஜனநாயகமும்

சுவிசில் செயற்பட்டுவரும் சிவராம் ஞாபகார்த்த மன்றம் நடாத்திவரும் 'சிவராம் நினைவு பேருரை' தொடரில் சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ ஆற்றிய உரையினை இங்கு முழுமையாக தருகிறோம்.

சிவராம் ஞாபகார்த்த நிகழ்வில் என்னை உரையாற்ற அழைத்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லசந்த கொலையுண்டதன் பின்னர் உயிர் வாழும் உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் போராடவென எம்மால் ஆரம்பிக்கப்பட்ட ‘சுதந்திரத்துக்கான தளம்’ எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் கூட்டங்களில் பிரபல மக்கள் பாடகரான ஜயதிலக பண்டாரவின் ‘மக்கள் எதிரொலி’ எனும் தொகுப்பிலிருந்து பாடல்கள் பாடப்பட்டு வந்தன.

எங்கள் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் வகையிலான பாடல்கள் அவரால் எழுதப் பட்டிருந்தன. 2007 முதல் 2009 வரை நாடு முழுவதிலும் நாம் நடாத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் சிவராமுக்காக ஒரு பாடல் விசேடமாக அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. அந்தப் பாடலை நான் விரும்பிக் கேட்பேன். மட்டக்களப்பின் பாடும் மீன் சிவராமை அழைப்பதாக அவர் அதனை அமைத்திருந்தார். அது தராக்கியின் ஆழமான குரலை எமக்கு நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது. நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பாடல் தராக்கி எம்மத்தியில் இல்லை என்ற பயங்கரமான நிதர்சனத்தை கூறிய வண்ணமிருந்தது.

சிறி லங்காவில் இன்றும் அச்சுறுத்தலுக்கு இலக்காகிய வண்ணமுள்ள, யுத்தத்தின் பின்னான யுகத்திலும் குடிசார் செயற்பாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ள உயிர் வாழும் உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகவுமாக நாம் மேற்கொண்ட செயற்பாடுகளில் சிவராம் எம்மோடு தொடர்ச்சியாக இணைந்திருந்தார்.

மரணம் துயரமானது அதிலும் ஒரு நண்பனின் மரணம் அதிக துயரத்தைத் தரவல்லது. என்னுடைய வாழ்வில் கிறிஸ்தவ மாணவ இயக்கத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ராஜினி திரணகமவின் மரணத்தை நான் கண்டுள்ளேன்.

சிறிது காலத்தின் பின்னர் சிதைந்து போன நீலன் திருச்செல்வத்தின் உடலத்தையும் அவரை வெடிக்கச் செய்த தற்கொலையாளியின் தலை எனது காலடியில் கிடப்பதையும் கண்டேன்.

மூன்று மனித உயிர்கள் உலகிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டன. நாங்கள் இத்தகைய அதிர்ச்சிகளுடாக வாழ்ந்திருக்கிறோம்.

அன்றைய தினத்தில் சமாதானத்துக்காக உழைப்பது அவசியமானதா என ஒரு கணம் நான் யோசித்தேன். இன்றைய ஞாபகார்த்த நிகழ்வில் பேசுவதற்கு நான் தகுதியானவள் என நினைத்து என்னை நீங்கள் அழைத்துள்ள நிலையில் அந்த அனுபவத்தையிட்டு நான் மகிழ்வடைகின்றேன்.

சமாதானத்துக்கு உழைப்பதற்காகவும், மனித உரிமைக் காப்பாளர்களாகப் பணியாற்றவும் நாம் பலருக்குப் பயிற்சி வழங்குவதுண்டு. தமக்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு சமாதானத்துக்கு உழைப்போரையும் மனித உரிமைக் காப்பாளர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக அரசாங்கங்கள் நினைக்கின்றன.

என்னுடைய சொந்த அபிப்பிராயத்தின்படி சமாதானத்துக்கு உழைப்போரையும் மனித உரிமைக் காப்பாளர்களையும் எங்களால் உருவாக்க முடியாது.

அவர்கள் அனுபவித்தினதும் வரலாற்றினதும் உற்பத்திகள். பணத்தை வழங்கி மனித உரிமை வாதியாக மாறுமாறு எவரையும் நாம் கேட்க முடியாது. தனிமனித அனுபவத்தில் இருந்தும் நம்பிக்கைகளில் இருந்துமே அது வருகின்றது. கனவைக் கனவு காண்பதற்குத் துணிந்தவர்களே அவர்கள். அத்தகையோருள் ஒருவரான சிவராம் தான் நம்புவதை அல்லது தான் எதற்காகப் பிறந்தாரோ அதைக் கூறவும் எழுதவும் செய்தார்.

இந்த முரண்பாட்டின் பல்வேறு கட்டங்களிலும் பயணித்த ஒரு சமாதானச் செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் சமாதானமென்பது வெறுமனே எதிராளிகளின் குரல்களை அடக்குவது அல்ல எனவும், பதிலாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தலும் ஏற்றுக் கொள்வதும் அத்துடன் சமமான உரிமைகளுடன் முஸ்லிம் மக்களுடனும் ஏனைய சமூகங்களுடனும் வாழ்வதுமே என்பதை தெற்கில் சிங்கள சமூகத்திற்கு விளக்க முயற்சித்தோம்.

இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாக மாறியுள்ள ஒரு நாட்டில் இருந்து வருகை தந்த துயருறும் சமூகமாக நாங்கள் இங்கே கூடியிருக்கின்றோம்.

நடைபெற்ற சம்பவங்களுக்கான பொறுப்பை நாமும் ஓரளவு ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். எனினும், சிறிலங்காவை யுத்தகளமாக மாற்றிய அரசியல் தலைவர்களையும் அவர்களது குண்டர்களையும் சகோதரர்களையும் சுட்டிக் காட்டவும் அம்பலப்படுத்தவும் அச்சமற்றவர்களாக நாம் உள்ளோம்.

யுத்தத்துக்கு முதலில் பலியாகும் விடயங்களுள் ஒன்று உண்மை.

யுத்தப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப் படாததுடன் வெளிப்படையாகப் பேசுபவர்கள் குறிவைக்கவும் பட்டார்கள். ‘தான் கொலை செய்யப்படலாம்’ என ஒருசில தினங்களுக்கு முன்னரேயே எதிர்வு கூறியிருந்த லசந்த விக்கிரமதுங்கவின் கொலையானது இத்தகைய தாக்குதல்களுக்கான ஒரு மனதை நெருடும் காட்டியாக விளங்குகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் சிறிய விடயமல்ல. மாறாக, அநியாயம் நடைபெறல் அதனால் உருவாகும் வலி என்பவற்றின் அடக்கப்பட்ட நினைவாக அது உள்ளது. முரண்பாட்டினதும் உரிமை மீறல்களினதும் அடிப்படைக் காரணங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அடங்கலான உண்மைகளும் ஏற்றுக் கொள்ளலும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாத்திரம் முக்கியமானதல்ல.

ஒட்டுமொத்தமாக மனப்பாதிப்புக்கு இலக்காகியுள்ள அனைவரும் அதிலிருந்து மீள்வது அவசியமென நினைத்தால் இலங்கையில் பலபத்தாண்டு காலங்களாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இது அவசியமானது.

துயரத்தைப் பகிர்ந்து கொள்ளலை ஏற்றுக் கொள்வதன் அவசியம் உள்ளதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் யுத்தத்தின் பின்னான இலங்கை எது? குறியீடுகளின் நாடு. குதுகலிக்கும் நாடு, பால்சோறு சாப்பிடும், சிங்கக் கொடி ஏந்திய மக்களைக் கொண்ட, உலகக் கிண்ணப் போட்டிகளின் போது கன்னங்களில் சித்திரம் வரைந்த மனிதர்களைக் கொண்ட நாடு. விமான நிலையச் சந்தியில் அண்மையில் நடைபெற்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் ஊர்வலத்தின் போது ஜனாதிபதியின் மிகப் பாரிய உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்தகால நிகழ்வுகள் ஒரு அரசவை நிகழ்வாக மாற்றப்பட்டு, மாளிகையில் உள்ள சில கோமாளிகளால் மணிமுடியொன்று உருவாக்கப் பட்டதாகவும் கேள்விப் பட்டோம்.

யுத்தத்தின் பின்னான காட்சிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்த நூறாயிரக் கணக்கான தமிழர்கள் குறுகிய வளமற்ற முகாம்களில் சிறை வைக்கப்பட்டதையும், ஆயிரக் கணக்கான ஏனையோர் இனந்தெரியாத இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு அடித்துச் சித்திரவதை செய்ப்படுவதையும், தினமும் பல நூற்றுக் கணக்கானோர் முகாம்களில் இருந்து காணாமற் போவதையும், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் தாக்கப் படுவதையும் எமது கண்களில் இருந்து மறைத்து விட்டன.

யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் யுத்த செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமுள்ளன. 2010ல் 201 பில்லியன் ரூபாயாக இருந்த பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு 2011ல் 214 பில்லியன் ரூபாயாக 13 பில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.

தர்க்க ரீதியில் யுத்தத்தின் பின்னான சூழலில் பாதுகாப்பு நிதியில் இத்தகைய அபரிமித அதிகரிப்பு நிகழக் கூடாததும் அவசியமற்றதும் ஆகும். ஆனால் பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டது மட்டுமன்றி இராணுவத்தின் எண்ணிக்கையும் 300,000 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

நாங்கள் ஒரு செல்வந்த நாட்டினர் அல்லர், நாம் அதிகரிக்கும் கடன்சுமையை எதிர் கொள்கிறோம். இந்த நிதி யாவும் எங்கே செல்கின்றது என ஒரு பிரபல இலங்கை அரசியல்வாதியிடம் நான் கேட்டேன், அரசாங்கம் உள்ளுர் வங்கிகளிடம் இருந்தும் உலக வங்கியிடம் இருந்தும் கடன் வாங்குகின்றது. கடந்த காலங்களில் யுத்த தளவாடங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பெற்ற கடன்களை அடைக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்தவுமே இந்நிதி செலவிடப்படுவதாக சாதாரணமாகப் பதில் கிடைத்தது.

இது ஒரு அசாதாரணமான வேற்றுமை இலங்கை ஒன்றல்ல இரண்டு துரித பரிமாணங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு தோல்வியுற்ற ஜனநாயகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை நோக்கி மாத்திரமன்றி ஒரு தேசிய பாதுகாப்பு அரசை நோக்கியும் அது சென்று கொண்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னான இலங்கையில் வடக்கில் இராணுவ மயமாக்கம் துரிதகதியில் நடைபெறும் அதேவேளை தெற்கில் உறுதியான மற்றொருவகை உத்தியில் இராணுவ மயமாக்கம் நடைபெற்று வருகின்றது.

வடக்கில் தற்காலிக இராணுவ முகாம்கள் நிரந்தரமாக்கப் படுகின்ற அதேவேளை புதிய முகாம்கள் நிறுவப்படுவதுடன் இராணுவக் குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இராணுவ தினத்தில் இராணுவக் கொடிகளுக்கு ஆசி வேண்டி சிறி மகாபோதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆகக் குறைந்தது ஒரு இராணுவ ‘டிவிசனை’யாவது நிறுத்துவதுடன் ஒரு விசேட அதிரடிப்படை முகாமை நிறுவப் போவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் போதும் இடம்பெயர்ந்தோரின் நிலையை அவதானிக்கும் போதும் இராணுவ மயமாக்கலில் அளவை நாம் உணரலாம். மீளக் குடியமர்வு என்பது வன்னியில் இராணுவ மயமாக்கலின் ஒரு பகுதியே. துரித மீள் குடியேற்றம் பற்றி அரசாங்கம் பேசிக் கொண்டிருக்கையில் உண்மையில் மீளச் செல்லும் மக்களின் கிராமங்களைச் சூழவுள்ள நிலங்கள் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதற்காக கையகப் படுத்தப்பட்டு வருகின்றன. திரும்பிச் செல்வோர் நடமாடும் சுதந்திரம் அற்றவர்களாக உள்ளதுடன் தீவிர கண்காணிப்புக்குள்ளும் ஆளாகின்றனர். அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் அனுமதி பெறவேண்டி உள்ளதுடன் சிலவேளைகளில் இராணுவத்தினர் அவர்களை கையடக்கத் தொலைபேசிகளில் படமும் பிடிக்கின்றனர். அங்குள்ள சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தையே எனக்கு நினைவூட்டுகின்றது.

பெண்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் எழுந்தமானமாக மேற்கொண்ட ஆய்வுகள் கிராமங்களில் ஒற்றைப் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கின்றன.

ஆண் ஒன்றில் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார், கைது செய்யப் பட்டுள்ளார், காணாமற் போயுள்ளார் அல்லது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க 200 க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

அவர்களுக்கு சிறிய மற்றும் வளர்ந்த பெண் பிள்ளைகள் உள்ளனர். மேலும், அநேக பெண்களுக்கு வாழ்வதற்கான எந்தவித தெரிவும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் வாழ்வைப் புதிதாக ஆரம்பிக்க வேண்டி இருந்தது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலைகளே பாலியல் வாத்தகத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் பலவேளைகளில் வழி சமைக்கின்றன. அபாய நிலையில் உள்ள அநேகர் ஆயுதப் படையினரின் அச்சுறுத்தல் காரணமாக தங்களது உண்மை நிலை தொடர்பாகக் கதைப்பதற்கு அஞ்சுகிறார்கள். தாங்கள் வேலை தேடிச் செல்லும் போதோ மீள்குடியேற்றம் தொடர்பான ஒரு விடயத்துக்காக வெளியே செல்ல நேரிடும் போதோ தாங்கள் வீட்டில் விட்டுச் செல்லும் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தேவை என்பது பற்றிப் பல பெண்கள் கதைத்தார்கள்.

திசாராணி குணசேகரவின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தும் அவர் எழுதிய கட்டுரையொன்று என்னைக் கவர்ந்தது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை அதில் திசாராணி குணசேகர குறிப்பிட்டிருந்தார்.

பிலிப் கிரால்டி [முன்னாள் சி.ஐ.ஏ. முகவரும் யுத்தத்துக்கு எதிரான பரப்புரையாளராக மாறிய முன்னாள் பயங்கரவாதத் தடுப்பு நிபுணரும்] என்பவர் கூறிய ஒரு தேசிய பாதுகாப்பு தேசத்தின் உருவாக்கத்திற்கான மூன்று முன் நிபந்தனைகள பற்றி அதில் எழுதியிருந்தார். ஒரு தேசிய பாதுகாப்பு தேசத்தின் உருவாக்கத்தை அது விளக்குகிறது. அரசுக்கு நீதியிலிருந்து விலக்களிக்கக் கூடிய சட்டமும் ஒழுங்கும். தனது குடிமக்களைக் கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் கூடியதான நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்புப் பொறிமுறை என்பவையே அவை.

அவரது விவரணம் ஒரு புதிய ‘தேசிய பாதுகாப்பு கருத்தொற்றுமை’யை உருவாக்குகிறது. இந்தக் ‘கருத்தொற்றுமை’க்கு அப்பால் உள்ளோரை நீதிக்கும் அப்பால் சென்று அடக்குவதற்கு அரசுக்கு இந்தச் சட்ட மாற்றங்கள் உதவுகின்றன. இந்தக் ‘கருத்தொற்றுமை’க்கு எதிரானோரைக் கண்காணிக்க உளவுபார;த்தல் உதவுகின்றது. இந்த மூன்று முன்நிபந்தனைகளும் இலங்கையில் உள்ளன. அவற்றுட் சில ஆரம்பநிலையில் உள்ளன.

இந்த விபரணம் நியாயப்படுத்தும் இலங்கை அரசை ஜனநாயகமற்றதாக்கும் செயற்பாடு பெரும்பாலும் நிறைவேறி விட்டது. ஜனநாயகத்திலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்த இரண்டு வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஒன்று புலிப் பிரிவினை வாதிகளிடம் இருந்தும் அவர்களுடைய இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களிடம் இருந்தும் சுதந்திரத்தையும், இறைமையையும், நிலபுல ஆதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்கான ‘தேவை’. இரண்டாவதாக, துரித பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான ‘தேவை’.

ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிப்போரை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றோ ‘அபிவிருத்திக்கு எதிரானவர்கள்’ என்றோ ராஜபக்சக்கள் குற்றஞ் சாட்ட இந்த விபரணம் உதவுகின்றது.

இரண்டுமே தேசபக்திக்கு எதிரானது எனவே உச்சபட்ச தண்டனைக்கு விலக்கற்றது. இந்த அடிப்படையில் ஜெனரல் பொன்சேகா ‘தேசவிரோதி’யாகத் தண்டிக்கப் பட்டுள்ளார், தாங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த வறிய கொழும்பு வாசிகள் ‘அபிவிருத்திக்கு எதிரானவர்கள்’ எனக் குற்றஞ்சாட்டப்படலாம்.

இவ்வாறே யுத்தம் தொடர்கிறது, யுத்தத்தின் பின்னான யுத்தம்.

மகிந்த ராஜபக்சவின் அரசியல் தலைமைத்துவம் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பேரினவாதக் கருவறையில் வளர்ந்த ஒன்று. சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஒரு முற்போக்குக் கட்சியென அதனோடு இணைந்துள்ள ஒருசில இடதுசாரிகள் கூறுகின்ற போதிலும் யதார்த்தத்தில் சுதந்திரக் கட்சி யுகத்தில் இலங்கையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை.

பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை நாம் மிகவும் மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். மகளிர் விவகார அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் இரண்டு ஆண்களை நியமித்ததுடன் கடந்த காலத்தில் நாங்கள் குரல்தந்து வந்த விடயங்களெல்லாம்; பழைய நிலைக்குச் சென்றுவிட்டன. அவர்களைப் பொறுத்தவரை பெண்களுக்கெதிரான பாராபட்சங்களை நிர்மூலமாக்கும் ஆணைக்குழு என்பது மேற்குலக விடயம், பெண்களின் உரிமைகளைப் பற்றி இலங்கையில் பேசுவது ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி என்றாகி விட்டது.

இன்றைய ஆட்சியாளர்களின் பிரதான கொள்கை சிங்கள மேலாதிக்கமே. தீவை உரிமைகோரும் அனைவரையும் தோற்கடிக்க ஆசி வழங்கப்பட்ட சிங்கள ஆட்சியாளர்கள் ராஜபக்சாக்களே. ஏனைய மக்கள் இலங்கை மன்னனுக்கு மரியாதை செலுத்தியவாறு வாழலாம் அதேவேளை இந்த அடக்குமுறைக்கு எதிராகப் பேசும் எவரும் துரோகிகளாக முத்திரை குத்தப் படுவர்.

இனப் பிரச்சினைக்கான பகுத்தறிவுடன் கூடிய, ஏற்றுக் கொள்ளக் கூடிய, ஒரு நீதியான தீர்வை நாம் ராஜபக்ச அரசிடம் இருந்து எதிர்பார்க்க முடியுமா? இன்றைய நிலையில் வீடமைப்பு முதல் கழிவகற்றல் அடங்கலாக வீதித் துப்பரவு வரை ஆட்சியின் ஒவ்வொரு விடயமும் ராஜபக்ச குடும்பத்தின் கைகளிலேயே உள்ளது. 65 க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் கோத்தாபய, பசில் மற்றும் மகிந்த ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளதென நான் நினைக்கிறேன்.

வடக்கில் வசந்தம் வருமென்ற நம்பிக்கை உள்ளதா? கிழக்கில் உதயம் நிகழுமா? அவசரகாலச் சட்டத்தைத் திருத்தியமைத்துள்ள போதிலும் நடைமுறையில் புலிகள் மீளெழுவதற்கான சாத்தியமுள்ளதாக எச்சரிக்கும் அரசாங்கம் அதனை நீடித்தே வருகின்றது.

இராணுவத்தினரின் அதீத பிரசன்னம் வடக்கு மக்களின் குடிசார் மற்றும் ஜனநாயக உரிமைகளை வலுவிழக்கச் செய்துள்ளது. வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றும் செயற்பாடு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பிரான்ஸ் 24 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியொன்று தங்களது வழக்கமான மீன்பிடிப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மீனவர்களின் அவல நிலை பற்றியும் அவர்களின் வீடுகள் சுவீகரிக்கப்பட்டு அவை சிங்கள மீனவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளமை பற்றியும் வெளிப்படுத்தியிருந்தது. இதன் விளைவாக தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்.

நினைவுச் சின்னங்களும் நினைவுகளும்

வடக்கு மண்ணில் புதிய நினைவுச் சின்னங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அவை கடந்தகால நினைவுகளை அழிக்க முயல்கின்றன. வடக்கின் ஒவ்வொரு மூலையிலும் புத்தர் சிலை காணப்படுகின்றது. புதிய சிங்கள வெற்றி நினைவுச் சின்னங்கள் ஏ-9 வீதியினை அலங்கரிக்கின்றன.

அதேவேளை, இறந்த தமது குடும்ப உறுப்பினர்களை மே மாதத்தில் நினைவு கூர்வதற்குக் கூட வடக்கு மக்கள் சுதந்திரமற்றவர்களாக உள்ளனர். திலீபனின் நினைவுச் சின்னங்கள் அகற்றப் பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் மயானங்களும் நினைவுச் சின்னங்களும் அடியோடு அழிக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் எம்மால் நினைவுகளை இல்லாமல் செய்ய முடியுமா? கற்களாலும் செங்கற்களாலும் மக்களின் குரல்களைக் கொன்று விட முடியுமா?

காயங்களைக் கிளற வேண்டாம் என தனது மே 27ம் திகதிய உரையில் ஜனாதிபதி எம்மைக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலாக, கிழக்குத் தீமோரின் உண்மையறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இருந்து ஒரு மேற்கோளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். “காயங்களுக்கு மருந்திட வேண்டும். நாட்பட்ட காயங்களுக்கு மருந்திடுவதானால் அதனை வெட்டித் திறந்து சுத்தப் படுத்தியே மருந்திட வேண்டும். இல்லாவிடில் காயம் சீழ் பிடித்து மோசமாகி சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்குச் சென்றுவிடும்.”

துயரம் தொடர்பிலான கூட்டுப் பொறுப்பு பற்றி அவசர வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. கிராமங்களில் குறைந்த வளத்துடன் வாழும் சிங்கள இராணுவச் சிப்பாயின் விதவை மனைவி அனுபவிக்கும் வலி, வேதனை எத்தகையது என நானும் நன்கறிவேன். தந்தையில்லாத காரணத்தினால் பிள்ளை பாடசாலையில் நிராகரிப்புக்கு இலக்காகின்றது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் எதிர்காலம் தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் காணி, சொத்து என்பவற்றுக்கான உரிமைகள் இன்றி வாழ்கிறார்கள். இலங்கையில் அடையாளத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் 1990ல் இடம்பெற்ற முஸ்லிம்களின் வலிந்த வெளியேற்றமானது ஒரு துன்பியல் சம்பவமாகும்.

ஊடகமும் குடிசார்சமூகமும்

தெற்காசியாவைப் பொறுத்தவரை மனித உரிமைகளுக்காகக் குரல்தரும் குடிசார் சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது. ஒரு விதத்தில் குடிசார் சமூகத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவின் அதீத செல்வாக்கிற்கு அது உட்படுகின்றது சகல உறவுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் அரசினால் குறைந்த ஜனநாயகச் சூழலில் இது அதிகம் நிகழ்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை ஒருசில சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய வேளைகளில் ஊடகங்கள் குடிசார் சமூகத்துடன் பொருதும் நிலையே உள்ளது.

மனித உரிமைவாதிகளால் வழங்கப்படும் செய்திகளையும் விவாதங்களைப் புரிந்து கொள்வதில் ஊடகங்களுக்கு உள்ளேயும், மிகுந்த வினைத்திறனுடன் தொடர்பாடுவதில் குடிசார் சமூகத்துக்கு உள்ளேயும் தகைமை தொடர்பான கேள்வி எழுகின்றது, அடிப்படையில், மக்கள் அபிப்பிராயம், ‘பொது அபிப்பிராய’ அரசியல் என்பவை தொடர்பில் பிரபல ஊடகங்களின் விடுக்கும் அழைப்பிற்கும் மனித உரிமை வாதிகளால் முன்மொழியப்படும் விமர்சனப் பாங்கிலான அணுகுமுறைக்கும் இடையே மோதல் உருவாகின்றது.

ஒரே பாங்கிலான படங்கள், அரச கொள்கைகளின் நியாயத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தும் மனித உரிமைவாதிகளைத் தேசவிரோதிகள், துரோகிகள் எனத் தவாறாகச் சித்தரித்தல் என்பவை இவற்றுட் சில.

மறுபுறத்தே, ஊடகங்களுக்கு பாரிய ‘சமூகக் கடமை’ உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில்; ஊடகங்களுடன் ஒரு விசேட உறவைப் பேண விழையும் அநேக குடிசார் சமூகச் செயற்பாட்டாளர்களினது செயற்பாடு கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

ஊடகங்களுடனான தமது உறவு சலுகையுடன் கூடியதாக அன்றி; தொழில் தர்மத்தின் அடிப்படையிலானதாக விளங்கும் வகையில் மனித உரிமைவாதிகள் தமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், மக்கள் நலன் எனும் பரந்த கருத்தின் அடிப்படையில் அரசினால் உருவகப்படுத்தப்படும் விவாதத்தின் அடிப்படையில் ஊடகங்களின் ‘சமூகக் கடமை’ என்பது பல்வேறு வியக்கியானங்களுக்கு உட்படும் நிலையில் சிறந்த ஊடகம், ஊடகச் செயற்பாடு ஆகியவை திறன் வாய்ந்ததாகவும் முக்கியமானவையாகவும் அமைகின்றன.

பலமான சுதந்திரம் மிக்க ஊடகங்களை வளர்த்தெடுப்பதில் இது பிரதானமானது. ஊடகங்களை திறன்மிக்கதாக ஆக்குவதும், தகுதியின்மையை மறைப்பதற்காக தனிப்பட்ட ஊடகவியலாளர்களை ‘வளர்த்தெடுப்பதில்’ தங்கியிருப்பதும் நீண்டகால அடிப்படையில் சிறந்த தந்திரோபாயமாக இராது.

அதேவேளை, குடிசார் சமூகத்துடனான தொடர்ச்சியான விருப்பின்றிய வெளிப்படையான ஈடாட்டமும் பலம்பொருந்திய அரசியல் மற்றும் வர்த்தக நலன்களின் அபாயத்தை எதிர்நோக்கும் பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

குறிப்பிட்ட விடயம் தொடர்பிலான அணுகுமுறை என்பதிலும் பார்க்க நிலைபேறான பரந்த விவாதங்கள் ஊடக அமைப்புக்களுடனும் ஊடகவியலாளர் அமைப்புக்களுடனும் நடாத்தப்பட வேண்டும் என அண்மையில் நோபாளத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில்; எடுக்கப்பட்ட தீர்மானத்தையே நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

இலங்கையில் 2008/2009ல் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்களுக்கான வகைகூறல் தெடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை 25 ஏப்ரல் 2011ல் இறுதியாக வெளியிடப் பட்டது.

மோதல் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மட்டத்தில் நாடு கவனத்தைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப் பட்டதுடன் முடிவிற்கு வந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பு தொடர்பான பிரதான குற்றச் சாட்டுப் பத்திரமாக அறிக்கை விளங்குகிறது.

“நிபுணர் குழு கண்டறிந்த ஆதாரபூவமான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமிடத்து சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் என்பவை (இரு தரப்பினராலும்) மீறப்பட்டுள்ளன அவற்றுட் சில போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக வகைப் படுத்தக் கூடியவை. உண்மையில், யுத்தம் நடாத்தப்பட்ட விதம் சர்வதேசச் சட்டங்களில் வரையறுக்கப் பட்டுள்ள யுத்தத்தின் போதும் சமாதானத்தின் போதும் தனிமனிதர்களின் கௌரவத்தைப் பாதுகாத்தல் எனும் அம்சத்தை அரசாங்கம் பெருமளவில் மீறியுள்ளது.”

இங்கிருந்து நாம் எங்கே செல்வது? யுத்தத்தின் போது நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டோரின் அனுபவங்களே இந்த அறிக்கையின் அடிப்படை.

என்னைப் பொறுத்தவரை சிறி லங்காவின் குடிமக்கள் என்ற அடிப்படையில் ஒரு சாதாரண கேள்வியைக் கேட்பதற்கான வாய்ப்பை அது வழங்குகின்றது. எங்களைச் சுற்றி நடப்பவை யாவற்றையும் கேட்டுக் கொண்டு தொடர்ந்தும் நாம் ஆளப்பட வேண்டுமா?

1989ல் தெற்கில் எமது மகன்களும் மகள்களும் காணாமற் போனமையை நாம் கண்டோம். முப்பதாண்டுகால மோதலின் பின்னர் வடக்கிலுள்ள குடும்பங்களும் இதே கதைகளையே கூறுகின்றன. கணவன்மார் காணாமற் போகின்றனர். ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்திற்கு மிக அருகிலேயே அன்றைய துயர நாளில் சிவராமின் உடலத்தை நாம் கண்டெடுத்தோம்.

‘தனது சொந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கத் தவறும் ஒரு நாட்டை நாடு என அழைக்கவே முடியாது’ என ஆங் சன் சுகி கூறியுள்ளார். எத்தனை பேர் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்கள்? இடம்பெயர்ந்தோரையும் ஏதிலிகளையும் நாடு முழுவதிலும் நாட்டுக்கு வெளியிலும் நாம் கொண்டுள்ளோம்.

நிச்சயமாக நாம் எங்கேயே பிழைவிட்டுள்ளோம். எங்கள் முன்னால் உள்ள சவால்களுக்கான விடைகளை கூட்டாகத் தேடும் தருணம் இதுவே. கட்சி அரசியலிலிருந்து விலகி உயர்தர அரசியல், ஜனநாயகம், கௌரவம், நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றை நாம் விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

வழிமூலம்: சிவராம் ஞாபகார்த்த மன்றம் - சுவிஸ் 05 யூன் 2011

Comments