இணையப் பரப்பில் மேற்கொள்ளப்படும் பரப்புரையின் நிலவரம் என்ன?

அறிவியல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகச் செயற்படும் அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் கூடுதலாகக் கருத்துப் போரில் ஈடுபடுகின்றன. செய்தி வெளியிடுதலில் நேர்மைக்கும் சரிநிலைக்குமான அமைப்பின் 25ம் வருடாந்தக் கூட்டத்தில் பேசிய பேராசிரியர் நோம் சொம்ஸ்கி (Noam Chomsky) இப்படிக் கூறினார்.

”கருத்தாளர்களுக்குக் குறுக்கே அவர்கள் நலனைப் பாதிக்கும் விதத்தில் யார் செயற்படுகிறார்களோ அவர்கள் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். எதிரிகளை வீழ்த்தும் உபாயங்களை ஊடகங்கள் வாயிலாக கருத்தாளர்கள் முன்னெடுக்கிறார்கள். இது ஒரு வகைப் போர்முறை”

ஈழத் தமிழர்களுக்கு எதிரான கருத்துப் போர் முன்னெடுக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. பத்திரிகைகள், நூல் பிரசுரங்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள் வாயிலாகத் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு வகையில் இது ஈழத் தமிழர்களின் பலத்தைக் காட்டுகிறது. காய்த்த மரம் தான் கல்லெறி வாங்கும்.

ஊடகங்கள் நடுநிலை பற்றிப் பேசுகின்றன. உண்மையில் அப்படி ஒன்றுமே இல்லை. நடுநிலையும் உண்மையும் தனது கொள்கை என்று கூறும் BBC இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளின் பிரசாரப் பீரங்கியாக ஒலித்தது. இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.

ஈழப் போரின் போது இந்திய – சிறிலங்கா அரசுகளின் பிரசார ஊடகமாகச் தமிழோசை செயற்பட்டது நினைவிருக்கலாம். வானொலிகளும் பிற ஊடகங்களும் நாடுகளின், இனங்களின், வர்க்கங்களின் நலனை முன்னெடுக்கின்றன. இது இடைவிடாது நாளாந்திரம் நடக்கும் நிகழ்ச்சி.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அது உண்மையாகலாம் என்ற நோக்குடன் சில இணையத் தளங்கள் முயற்சி செய்கின்றன. இவர்கள் வெளியீடும் செய்திகளும், கட்டுரைகளும் நடுநிலையான ஊடகமாக தெரியவில்லை. ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இணையங்கள் நச்சுக் கருத்துக்களை நாசூக்காகப் பரப்புகின்றன.

புலம்பெயர் ஈழத்தமிழர்களின் எழுச்சி போர்க் குற்றவாளி கோத்தபாயவை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இவற்றையெல்லாம் முறியடிக்க சிறிலங்கா அரசு கே.பியை கேடயமாக பாவிக்கின்றது. பல தமிழ் இணையங்களை உருவாக்கித் தனது கருத்துப் போரை முன்னெடுக்கிறது. இவற்றுடன் சில இணைய வியாபாரிகளும் அரசின் கூலிப்படையாக மாறிவிட்டன. நாய் விற்ற பணம் குரைக்காது என்பது அவர்கள் நிலைப்பாடு. மேற்கூறிய இணையங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை போல் வெளித் தோற்றம் காட்டலாம்.

கூர்ந்து நோக்கும் போது இடைத் தொடர்பும் பொதுத் தோற்றுவாயும் தெற்றெனத் தெறியும். ஈழப் போர் காலத்தில் பேசமால் இருந்த கே.பி ஆதரவாளர்களும், அமைப்புக்களும் இன்று உளவுத்துறையின் ஊக்குவிப்போடு சடுதி அக்கறை காட்டுகின்றன. இது நல்லதற்கல்ல.

“திருட்டுவின்” குழுமத்துடன் வேறு சில இணையங்களும் சேர்ந்து சிங்கள ஊடகங்கள் கூறுவதாகச் சொல்லி உண்மைக்கு புறம்பான பொய்ச் செய்திகளை வெளியீடுகின்றன. இவை பல குரல்களில் பல கோணங்களில் ஒரே கருத்தைச் சொல்லும் போது தமிழர் தேசியம் மழுங்கடிக்கப்படலாம் என்று நம்புகின்றன.

சிங்களத்துக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் கருத்து போர் நடைபெறும் இவ்வேளையில் சிங்கள அரசின் கைக்கூலிகளால் நடத்தப்படும் சில தமிழ் இணையங்களின் பொய்த் தகவல்களை தெரிந்தோ தெரியமலோ இணையங்கள் மறு வெளியீடு செய்வதால் புலம்பெயர் மக்கள் இரண்டுபட்டு இருப்பதை அரசு காட்ட முனைகின்றது.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய வலுவான நம்பகத் தன்மையுள்ள இணையங்கள் எதுவென்று ஈழத்தமிழர்கள் நன்கு அறிவார்கள். இதனால் இவர்களின் கருத்துக்கள் புலம்பெயர் மக்களிடம் தோற்றுப் போகின்றன.

Comments