போஸ்னியாவில் நடந்ததே இலங்கையில் நடக்கிறது: பால் நியூமென்.

பொஸ்னியாவில் இடம்பெற்ற போரின் போது ஒரு இனத்தின் அடையாளங்களையும், அவர்களின் தாயகத்தையும் சிதைப்பதற்கு பெண்களை குறிவைத்து அவர்களின் கலாச்சாரத்தை அரச படையினர் அழித்ததை போன்ற ஒரு நடவடிக்கையையே இலங்கை அரசு வடக்கில் மேற்கொண்டு வருகின்றது என "கோல்டன் அமைதி ஆதரவுக் குழு" வின் ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையில் மனித உரிமை போராளி பேராசிரியர் பால் நியூமென் கூறியுளார்.


ஆங்கிலத்தில் பால் நியூமென் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:


தமிழ் பெண்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளை அனைத்துலக சமூகம் கவனத்தில் எடுக்காதபோதும், பொதுமக்களை குறிப்பாக பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசு தவறிவருவதாக ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஆனால் நிபுணர் குழு தொடர்பில் மறுதலையான கருத்துக்களை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும் முகமாக அது தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், அறிக்கையில் பொய்யான தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் சிறிலங்கா அரசு தெரிவித்துவருகின்றது.

சிறிலங்காவில் காணாமல்போனவர்களில் பெருமளவானோர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள். சிறிலங்கா அரசின் போரினால் பாதிப்படைந்துள்ள பெண்கள் தொடர்பில் சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாது.


நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ள 8 பேரில் ஒருவர் பெண் என்பது மட்டுமே அதற்குள்ள தகமை. போரில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்கும் போது நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளவர்களிடம் எந்த உணர்வுகளும் காணப்படவில்லை. சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் உறுதிகள் அளிக்கப்படவில்லை. அதன் முழு நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மை அற்றவையாகவே இருந்துள்ளது.


போரின் இறுதி நாட்களில் பெண்கள் மீதான வன்முறைகளும், பாலியல் துன்புறத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது. காணொளி ஆதாரங்களில் காணப்படும் இறந்துபோன பெருமளவான பெண்களின் உடைகள் அகற்றப்பட்டுள்ளன.


டம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த முகாம்களிலும் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரிந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் கணவரை இழந்த 90,000 பெண்களில் பெரும்பாலானவர்கள் 40

வயதுக்கு கீழானவர்கள்.
உதவிகள் அற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள பெண்கள் மிகவும் கடினமான பணிகளை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பலர் கண்ணி வெடிகளை அகற்றும் ஆபத்தான தொழிலையும் மேற்கொள்கின்றனர்.

தமது பிள்ளைகளுக்கு உணவு அளிப்பதற்காக அவர்கள் இந்த மிக ஆபத்தான இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர். மீன்பிடித்தல், விவசாயம், கைத்தொழில் என்பன சிறீலங்கா அரசின் தடைகளால் வடக்கில் பாதிப்படைந்துள்ளன.


குறைந்த ஊதியம், அடிமைபோல நடத்துதல் போன்ற காரணிகளால் பெண்களையே சிறிலங்கா அரச நிர்வாகம் வடக்கு - கிழக்கில் பணிகளில் அமர்த்தி வருகின்றது. ஆண்களுக்கு மதுவையும், போதை பொருட்களையும் கொடுத்து செயற்திறனற்றதாக அது மாற்றி வருகின்றது. இவை அனைத்தும் சிறிலங்கா அரசின் இன அழிப்பின் வடிவங்கள்.


தம்மை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வடக்கில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் பெண்களை பலவந்தப்படுத்தி வருகின்றனர். சிப்பாய்கள் வடக்கில் பணியாற்றும் வரையிலுமே இந்த திருமணம் தொடரும்!


வடக்கை சிங்களமயப்படுத்தும் திட்டதிற்கு அமைவாக தமிழ் பெண்களை திருமணம் செய்யுமாறு சிறிலங்கா அரசு தனது படையினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. ஓரு இனத்தின் தாயகப் பகுதியை அழிக்கும் இந்த நடவடிக்கையே போஸ்னியாவிலும் மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


போரில் வெற்றிபெற்ற சிங்கள இராணுவத்தினரை மகிழ்ச்சிப்படுத்தும் விடுதிகளையும் சிறிலங்கா அரசு வடக்கில் அமைத்து வருகின்றது. உல்லாசப் பணிகளை கவர்வதற்காக வடக்கை தாய்லாந்து போல (விபச்சார விடுதிகளாக) மாற்றவும் சிறீலங்கா அரசு திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


திரிகோணமலையை சிங்களமயப்படுத்தியது போல வடக்கிலும் சிங்களவர்களை குடியமர்த்துவதற்காக சிறீலங்கா அரசு வீடுகளை அமைத்து வருகின்றது. 1881 ஆம் ஆண்டு திருமலையில் சிங்களவர்கள் 3.3 விகிதமும், தமிழ் மக்கள் 66 விகிதமும் வாழ்ந்தனர். ஆனால் தற்போது இரு இனத்தவர்களும் அங்கு 33 விகிதத்தில் சம அளவில் வாழ்கின்றனர்!


முன்னாள் போராளிகள் மீது சிறீலங்கா படையினர் தொடர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். படை அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்படும்போதெல்லாம் முன்னாள் போராளிகள் மீது சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் துன்புறுத்தல்களை மீண்டும் மீண்டும் மேற்கொள்கின்றனர்.


தமது பாலியல் தேவைகளுக்கும் சிறிலங்கா படையினர் முன்னாள் பெண் போராளிகளையே பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளில் உள்ள பெண்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் ஆண்களை பலவந்தமாக தடுப்புக் காவலிலும் வைத்து வருகின்றனர்.


சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைகளுடன் மட்டும் அனைத்துலக சமூகம் நின்றுவிடாது, அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்கள் முன்வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: வீக்எண்ட் லீடர்.

Comments