ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தமிழாக்கம் "போர்க்குற்றவாளி" என்னும் புத்தகமாக வெளிவருகிறது

ஐ.நா.நிபுணர் குழு, இலங்கையின் மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது. போர்க் குற்றவாளி என்ற தலைப்புடைய இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலக முழுக்க விற்பனைக்கு வர உள்ளது.

இரண்டு பாகங்களை கொண்டுள்ள இப்புத்தகத்திற்கு, இன்று உலக தமிழர்களை ஒன்றிணைத்து வரும் தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரனும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பணியாளர் திரு. எம்.ஜே. இம்மானுவேல் அவர்களும், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரெஜி அவர்களும், மற்றும் திருமிகு. நிர்மல்கா பெர்னான்டோ (தலைவர், IMADR, இலங்கை), திரு. பேரா. பீட்டர் ஷால்க் (அப்சாலா, ஸ்வீடன்), ஊடகவியலாளர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவரும் திரு. இரா.துரைரத்தினம் அவர்களும், டாக்டர் பிரயன் செனிவரத்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர்.

முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பு - ராசபக்சே குழு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவர் (அக்னி சுப்ரமணியம், தமிழ் நாடு), ஐ.நா. - இலங்கை இடையிலான அறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா ராஜேந்திரன், லண்டன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்! (தங்கவேலு வேலுபிள்ளை, தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம், கனடா) ஆகியோர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் பாகம் முழுவதும், 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை படங்களோடு, முழுமையாக வாசிப்புத் தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

புத்தகம் மொத்தம் 352 பக்கங்களை கொண்டு, சாதாரண அட்டை மற்றும் கெட்டி அட்டைகளில் அச்சிடப்பட்டுள்ளது. இதில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கென மட்டும் 240 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தகம் www.manitham.net என்ற இணைய வழியாகவும் விற்பனைக்கு வர உள்ளது.

வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்ட, தமிழினப் படுகொலைகள் (1956-2008) என்ற புத்தகத்தை 2009-ல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு உலக முழுக்க பரவ செய்துள்ள, மனிதம் வெளியீட்டாளரின் இரண்டாவது ஆவணப் புத்தகமாக, "போர்க் குற்றவாளிகள்" வெளிவருகிறது.

- புத்தகத்தின் அட்டைப் படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

- புத்தகத்திற்கான செய்தியினை பிற தமிழ் நண்பர்களுக்கும், ஊடகங்களில் வெளியிட வேண்டுகிறோம்.

மனிதம் வெளியீட்டாளர்
சென்னை, தமிழ் நாடு.

Comments