அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுடன் இணைந்தது பொதுநலவாய அமைப்பு

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் பொதுநலவாய அமைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டுள்ளது.

அனைத்துலக குற்றவியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையில்- ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதியரசர் சாங்-கியூன் சொங் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டில் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்களின் சந்திப்பில் 54 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர்கள், பிரதம நீதியரசர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

“பொதுமக்கள் மீதான சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மிகப்பரந்த அளவில் மேற்கொள்ளப்படுமிடத்து அவற்றை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற முதலாவது பாதுகாப்பு எல்லையாக அந்தந்த நாடுகளின் நீதிசார் அதிகாரங்களே முதல்நிலை வகிக்கின்றன.

இங்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்று என்பது ஒரு பாதுகாப்பு வலையாகும். இறுதித் தீர்வை எட்டுகின்ற ஒரு இடமே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமாகும்“ என்று புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதியரசர் சொங் தெரிவித்துள்ளார்.

“உலக நீதியானது மேலோங்குவதற்கு, தேசிய மற்றும் அனைத்துலக நீதிசார் அதிகாரங்கள் சமாந்தரமாகக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இந்தச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பொதுநலவாய அமைப்பானது ஒரு சமரசவாளராகச் செயற்பட வேண்டும்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனைத்துலக ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், மனிதப் படுகொலைகளைத் தடுத்தல், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் நடைபெறாது தடுப்பதை உறுதிப்படுத்தல் என்பன அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் பிரதான கடமைகள் என்று பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பு நாடுகளுக்கிடையில் தேசிய ரீதியாக, அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மற்றும் அனைத்துலக குற்றவியல் சட்டம் என்பன தொடர்பாக ஆளுமை விருத்திப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்தச் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடு உதவி புரியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“இந்தச் சட்டங்கள் தொடர்பான ஆளுமை அபிவிருத்திப் பயிற்சிகள், உதவித் திட்ட நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு ஆளுமை விருத்திப் பயிற்சிகளை தேசிய மட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிசார் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்குவதற்கான ஒரு புதிய அத்தியாயமாக இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு அமைந்துள்ளது“ என்றும் கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

“பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளாகி நாம் அனைத்துலக குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிக ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என்பதை புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்துக் காட்டுகின்றது.

நாம் ஆதரவளிக்கின்ற இந்தப் புதிய மனிதாபிமான உடன்பாட்டில் பொதுநலவாய அமைப்பின் அடிப்படை பெறுமதியாக இது அமைந்துள்ளது.

மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதனை உறுதிப்படுத்துவதிலும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் துணை புரிவதிலும், குறிப்பாக யுத்தக் குற்றங்கள், மற்றும் மனிதாபிமானக் குற்றங்கள் என்பவற்றில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் ஒத்துழைப்பு நல்குதல் போன்ற பல்வேறுபட்ட கடப்பாடுகளை பொதுநலவாய அமைப்பு நாடுகள் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் உள்ளன“ என்றும் கமலேஸ் சர்மா மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் , அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதியரசருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடானது உரோமச் சட்டத்திற்கேற்பவே நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டக்கட்டுப்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல், குற்றவியல் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான கருத்தரங்குகளை ஒன்றிணைத்தல், கூட்டுக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், பொதுநலவாய நாடுகளில் சட்டத்துறை சார் ஆளுமை விருத்திப் பயிற்சிகள் மற்றும் உதவி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அனைத்துலக குற்றவியல் சட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்தும் அரசுகளுக்கு உதவுதல் போன்ற பல்வேறு சட்டத்துறை சார் விடயங்கள் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Comments