தள்ளாடிப் படைமுகாமும் செபஸ்தியார் ஆலயமும்

மன்னார் தள்ளாடி படைமுகாமோடு உடன் அடுத்திருக்கும் சென் அன்ரனீஸ் தேவாலயம் விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்கானதாக பெருமெடுப்பிலான பிரச்சாரமொன்றை சிறிலங்கா அரசும் அதன் ஊடகக்கட்டமைப்பும் சிறிலங்கா படைத்தரப்பும் மேற்கொண்டுவருகின்றன

அவர்களுடைய கூற்றின்படி அன்ரனீஸ் ஆலயத்தில் சிரதமானப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின்தாக்குதலில் பலியாகியும் காயமடைந்துமுள்ளனர்.

ஆனால் மன்னார் குருமுதல்வர் அருட்திரு அன்ரனி விக்ரர் சூசை அவர்கள் பிபிசியின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டி அனைத்துவிவகாரங்களையும் தெளிவுபடுத்திவிட்டது. நிலமை இவ்வாறு இருக்க சிறிலங்காவினுடைய தரப்புக்கள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரமொன்றை கண்களை மூடிக்கொண்டுசெய்கின்றன. இதிலே வேடிக்கை என்னவென்றால் இவர்களுடைய இந்தப் பிரச்சாரத்தை கொழும்பின் ஊடகங்களே கண்டுகொள்ளவில்லையென்பதுதான்.

சென் அன்ரனீஸ் ஆலயத்தின்தற்போதைய நிலைமை என்ன? அதுபற்றி மன்னார் குருமுதல்வர் தெரிவித்த கருத்துக்கள் இவை.
சிலகாலங்களுக்கு முன்னர்வரை செவ்வாய்கிழமை வழிபாடுகளிற்காக தேவாலயத்திற்கு செல்வதற்கு மக்களிற்கு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். ஆனால் அண்மைக்காலமாக மன்னாரில் ஏற்பட்டிருக்கக்கூடிய சம்பவங்களின் காரணமாக (சிறிலங்காப் படையினர் மேற்கொள்ளும் படைநடவடிக்கை காரணமாக) தேவாலயத்திற்கு செல்வதற்கு படையினர் அனுமதிப்பதில்லை.

தேவாலய வளாகத்துள் படைமுகாம் அமைக்கப்பட்டபின்னர் அங்கே பொதுமக்களோ குருவானவர்களோ செல்வதில்லை இதன்காரணமாக தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அங்கு பொதுமக்களோ குருவானவரோ இருந்திருக்கவில்லையென்பதை என்னால் உறுதிப்படுத்தமுடியும்.

மிகத்தெளிவான கூற்று இது। அதாவது விடுதலைப்புலிகளினுடைய எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடம் ஒரு படைமுகாம்மட்டுமே. அது சிலவாரங்களிற்கு முன்புவரை பொதுமக்கள் திரள்கின்ற வணக்கத்தலமாக இருந்திருந்தாலும் கூட தற்பொழுது முற்றுமுழுதான படை ஆக்கிரமிப்பிற்குள்ளேயே அது இருக்கிறது.

படைத்தரப்பினுடைய தகவல்கள் வெகு சுவாரசியமாக இருக்கின்றன. குருவானவர்கள் கேட்டுக்கொண்டதன்படி அங்கே வணக்கநிகழ்வொன்றிற்காக தேவாலய வளாகத்தை படையினர் சிரமதானம் மூலம் துப்பரவுசெய்துகொண்டிருந்தார்கள். அப்போதுதான் விடுதலைப்புலிகளின் எறிகணைகள் அங்கே வீழ்ந்து வெடித்து படையினரை கொன்றும் காயப்படுத்தியும் விட்டன என்கிறது படைத்தரப்பு. ஆனால் மன்னார் குருமுதல்வரோ இந்த விவகாரம் தொடர்பாக மிகத்தெளிவாக தெரிவித்துவிட்டார், கடந்த சிலவாரங்களாக படையினர் அங்கே எவரையும் அனுமதிப்பதில்லை என்பதோடு தேவாலயத்தை படைமுகாமாக மாற்றியும் விட்டனர் என.

அத்தோடு தாக்குதல் நடத்த அன்று (12-02-2008 செவ்வாய்கிழமை) அடம்பனை நோக்கி மிகப்பெருமெடுப்பிலான பலமுனை முன்னகர்வொன்றினை சிறிலங்காப்படையினர் மேற்கொண்டிருந்தனர். இவர்களிற்கான மறைமுகச் சூட்டு ஆதரவு தள்ளாடி ஆட்டிலெறி தளத்திலிருந்து வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் படைமுகாமோடு எல்லையைப் பகிர்ந்துகொள்கின்ற சென் அன்ரனீஸ் தேவாலயத்தில் படையினர் சிரமதானம் செய்துகொண்டிருந்தார்கள் என்று யாராவது நம்புவார்களாக இருந்தால் அவர்களிற்கு சித்தம் தெளிவாக இருக்கிறது என்று நம்புவது கடினமாகும்.

இதைவிடவும் விடயங்கள் இருக்கின்றன.

குறித்தாக்குதல் நடைபெற்றது காலை 9.00 மணியளவிலாகும். ஆனால் அப்பகுதி ஊடான வீதிப்போக்குவரத்தை பிற்பகல் 2.00 மணிவரையும் படையினர் தடுத்து வைத்திருந்தனர். அதன்பின்னர்கூட தேவாலய வளாகத்திற்குள் செல்வதற்கு மன்னார் ஆயர் இல்லவட்டாரங்களை படையினர் அனுமதிக்கவில்லை. தேவாலயத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் எனத்தெரிவித்து ஒரு சிலபுகைப்படங்களை மட்டும் படைத்தரப்பு வெளியிட்டது. மன்னார் குருமுதல்வரின் தகவலின்படி மாலையில் அப்பாதையூடாக மன்னாருக்கு வந்த சிலரின் தகவலின்படி தேவாலய முன்மண்டபத்தின் கூரைத் தகடுகளின் சில ஒட்டைகள் காணப்பட்டுள்ளன.

ஏன் தேவாலயத்தை புலிகள் தாக்கிவிட்டதாக குத்திமுறிகின்ற சிறிலங்காப் படையினர் ஆயர் இல்லவட்டாரங்களை தேவாலய வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை?

அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் தேவாலயத்தின் முன்புறங்களை மட்டும் காட்டுவதாக அமைந்திருந்தமை ஏன்?

படைத்தரப்பினுடைய பிரயத்தனமெல்லாம் புலிகள் வணக்கத்தலமொன்றை தாக்கிவிட்டார்கள் என்று உலகெங்கும் நிறுவுவதாகும்.
அதற்காக இல்லாத பொல்லாத எல்லாவற்றையும் அவர்கள் சொல்லுகிறார்கள். கடந்த 12 ஆம்திகதி சிறிலங்காவின் இராணுவ இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் “சனச்செறிவு மிக்க தள்ளாடி நகரத்தில்;” விடுதலைப்புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் சென் அன்ரனீஸ் தேவாலய வளாகத்தில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்த படையினர் ஆறுபேர் கொல்லப்பட்டார் 10பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்செய்தி அப்பட்டமான பொய்யும்திரிப்புமாகும். தள்ளாடி மன்னார் பெருநிலப்பரப்பிற்கும் மன்னார் தீவிற்கும் இடையே இருக்கின்ற மிகஒடுங்கிய ஒரு நிலப்பகுதியாகும். அப்பகுதியில் தள்ளாடிப்படைமுகாம் இந்ததேவாலயமுமே உள்ளன. சிவில் சமூகப்பிரசன்னமென்பது அங்கே மருந்திற்கும் கிடையாது.

இதைவிட, மிகப்பெருமெடுப்பிலான படைமுன்னகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற காலத்தில் மன்னாரின் முதன்மைப் படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களின் இருப்பை படையினர் அனுமதிப்பார்கள் என எண்ணுவது எந்தளவுதூரம் புத்திபூர்வமானது? அவ்வாறு படையினர் அனுமதித்தால் கூட சாதாரண சிவிலியன் ஒருவர் வாழத்தக்க அல்லது தங்கத்தக்க சூழல் அப்பகுதியில் இருக்க எந்தவித வாய்ப்பும் இல்லை. இந்தநிலையிற்தான் சிறிலங்கா இராணுவத்தில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையில் அன்றைய படைநடவடிக்கைக்கு எதிராக முறியடிப்புத்தாக்குதல்களை நடத்திய புலிகள் அதனொருபகுதியாக படையினருக்கு உதவியாக எறிகணை மழைபொழிந்துகொண்டிருந்த தள்ளாடி ஆட்டிலெறித் தளத்தின் மீது பதில்தாக்குதல் தொடுத்திருந்தார்கள்.

அதன் விளைவாக தள்ளாடி முகாம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. படையினர் பெருமிழப்பைச் சந்தித்ததோடு அங்கிருந்த ஆயுததளபாடங்களும் பெருமளவில் நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் நகரவாசிகள் தள்ளாடி முகாம் பகுதியிலிருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததைக் கண்டிருக்கிறார்கள். மட்டுமன்றி தள்ளாடி கோஸ்வே பகுதியிலிருந்த காவலரண்களில் கடமையிலிருந்த படையினர் தமது அரண்களைக் கைவிட்டு ஒட்டம்பிடித்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்ட சிறிலங்காத் தரப்பு மிகவும் வடிகட்டப்பட்ட தகவல்களை உருத்திரித்து வெளியிட்டுள்ளது. தள்ளாடி படைத்தளத்திற்கு ஏற்பட்ட சேதங்களை முற்றுமுழுதாக இருட்டடிப்புச்செய்த அது சென் அன்ரனீஸ் தேவாலய முன்மண்டபத்தை மட்டும் உருப்பெருப்பித்து உலகின் கண்முன் நிறுத்துகிறது.

சிறிலங்கா தரப்பு பொய்யான தகவலொன்றை பரப்புவதனூடாக உண்மைநிலையை மறைக்க முனைகிறது. தாங்கள் வணக்கத்தலமொன்றை ஆக்கிரமித்திருப்பதை மறைத்து அதை சிவிலியன்களின் வணக்கத்திற்கு தடுத்துவைத்திருப்பதை மறைத்து அங்கே ஒரு சிவில் வாழ்க்கை இருப்பதுபோலக்காட்டி அதைப்புலிகள் தாக்கியிருப்பதாக சாதிக்கமுற்படுகிறார்கள். இவை அனைத்துமே அப்பட்டமான பொய்களாகும்.

படையினருடைய பொய்களை வெளிப்படுத்துவதான அறிக்கையொன்றை மன்னர் சென் செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்திரு எஸ்.கே.தேவராஜ் அடிகள் வெளியிட்டிருக்கிறார். சென் அன்ரனீஸ் ஆலயவளாகத்தை போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து அரசு விலகிக்கொண்டபின்னர் உடனடியாகவே படையினர் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர் என்பதை சுட்டிக்காட்டிய அடிகளார், தானும் வேறுசில பாதிரியார்களும் 11ம் திகதி காலை சென் அன்ரனீஸ் தேவாலயத்திற்குச் சென்று அங்கு கடமையிலிருந்த முகாம் பொறுப்பதிகாரியிடம் தேவாலய வளவில் தவக்கால யாத்திரை வழிபாடுகளை செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரியதாகவும் ஆனால் தங்களுடையஉரையாடலில் ஒருபோதும் சிரமதானம் மூலம் ஆலயத்தை சுத்தம் செய்துதருமாறு கோரவில்லை எனவும் ஆலயவளாகம் அப்போது வழிபாட்டிற்கு உகந்தமுறையில் சுத்தமாகவே இருந்தது என அடிகளார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அத்தோடு சிரமதானம் செய்வதுகுறித்த வேண்டுகோள் படையினரிடம் விடுக்கப்பட்டதான தகவல் முற்றிலும் தவறானது என்பதை அவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மடுத்திருப்பதியின் மீது 1999ம் ஆண்டு சிறிலங்காப் படைகள் எறிகணைகள் ஏவி அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்களை கொன்றுதீர்த்த சம்பவம் ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது.

-இராவணன்.-

Comments