துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு

தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்திலேயே எமது தேசத்தை வெல்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைய தொடக்கப் பயிற்சி கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார்.



இம்ரான் - பாண்டியன் படையணி துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரை நிகழ்த்துகையில் அவர் மேலம் தெரிவித்துள்ளதாவது:


விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் 20 ஆண்டுகள் கடுமையான பணி செய்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் விருப்பத்துக்குரிய போராளியாக செயற்பட்டவர்தான் லெப். கேணல் றெஜித்தன்.

லெப். கேணல் றெஜித்தன் களமுனையில் நன்கு அறிமுகமானவர், சிறந்த போர் வீரனாக திகழ்ந்தவர். விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை இயக்குவதில் சிறந்த வல்லுநர்.

விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதப் படையணியையும் வான் எதிர்ப்பு படையணியையும் தாக்குதல் படை அணியையும் ஒருங்கிணைத்து செயற்பட்டவர்.

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையில் றெஜித்தனின் பங்கு முக்கியமாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் எதிரியின் உலங்குவானூர்திகளை வீழ்த்தியதில் இவரின் பங்கும் உண்டு.

அழிக்க முடியாத மாவீரர்களின் வாழ்ந்த வரலாற்றுக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாவீரர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து நடக்கும் இந்தச் சண்டையில் மக்கள் அனைவரும் தமது பணியை செவ்வனே செய்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் விடுதலையை வென்றெடுக்க அணி திரளவேண்டும் என்றார் அவர்.

இம்ரான் - பாண்டியன் படையணியின் துணைத் தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்கக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக செயலர் சீரன் ஏற்றினார்.

லெப். கேணல் றெஜித்தனின் வித்துடலுக்கு அவரின் தாயார் சுடர் ஏற்ற, துணைவி, பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புக்கள் மலர்மாலை சூட்டினர்.

தொடர்ந்து மலர்மாலைகளை
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை
வடபோர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன்
இம்ரான் - பாண்டியன் படையணி சிறப்புத்தளபதி வேலவன்
படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்
நிதித்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான குட்டி
சோதியா படையணி சிறப்புத்தளபதி கேணல் துர்க்கா
தலைமைச் செயலக செயலர் சீரன்
மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் மாறன்
தளபதி வசந்தன்
தளபதி வீரப்பன்
ராதா படையணி தளபதி சுயாஜி
லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன்
விடுதலைப் புலிகளின் போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ்
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன்
சிறப்பு வேவுப்பிரிவு சிறப்புத்தளபதி சசிக்குமார்
மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாள் தமிழினி
உட்பட தளபதிகள், பொறுப்பாளர்கள் மலர்மாலைகளைச் சூட்டினர்.

வணக்க உரையினை சமர் ஆய்வுப்பிரிவைசேர்ந்த கீதன், நிதித்துறையின் கணக்கு ஆய்வுப் பொறுப்பாளர் அறவாணன் ஆகியோர் நிகழ்த்தினர். வீரவணக்க உரையை கேணல் ஆதவன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து வித்துடல் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.


Comments