குடாநாட்டில் தரையிறங்கத் தயார் நிலையில் புலிகள்?

களமுனையில் இராணுவத்தினர் தமது முழுமையான வலிமையையும் திரட்டித் தாக்கினாலும் நின்றுபிடித்து எதிர்ச்சமராடும் புலிகளின் போரிடும் திறனைக் கண்டு போரியல் ஆய்வாளர்கள் பலரும் வாய்பிளந்து நிற்கின்றனர். அதேநேரம யாழ் குடாநாட்டை இராணுவத்தினர் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது.

மன்னாரில் குவிந்திருந்த இராணுவத்தினரின் கவனம் தற்போது மணலாறு களமுனை நோக்கி திரும்பியிருக்கும் அதேநேரம் யாழ் குடாநாடு புலிகளிடம் மீண்டும் வீழ்ந்துவிடாமல் தொடர்ந்தும் தக்கவைக்க முடியுமா என்ற அச்சமும் இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் அதனோடு இணைந்துள்ள வவுனியா களமுனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் நீண்டகால நடவடிக்கையின் மூலம் ஆமை வேகத்தில் நகர்ந்து மடு மற்றும் பாலம்பிட்டியில் சிறிய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.

அடம்பனை 58 படையணியும் பெரியமடுவை 57 ஆவது படையணியும் கைப்பற்றியிருக்கும் அதேநேரம் இவ்விரண்டு படையணிகளும் தொடர்ந்தும் தனித்தனி பாதைகளிலேயே முன்னேறும் உத்தியைக் கடைப்பிடிக்கின்றன. எதிர்வரும் நாட்களில் கரையோரப் பாதை வழியே விடத்தல்தீவு வரை முன்னேறும் ஆயத்தப் பணிகளில் தற்போது 58 ஆவது படையணி ஈடுபட்டுள்ளது. கரையோரப் பாதைவழியே முன்னேறுவது காடுகளுக்கு ஊடாக முன்னேறுவதைப் போன்றல்லாது பலத்த ஆபத்தானதாக அமையலாம் என்பதால் அதற்குத் தேவையான தயார்படுத்தல்களை 58 ஆவது படையணி தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்தக் களமுனையில் கவசவாகனப் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டமை இதுவரை மிகவும் குறைவாகவே இருந்தது. இனிமேல் 58 ஆவது படையணியும் கவச வாகனத்தாக்குதல் படைப்பிரிவுடன் கரையோர தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. அத்துடன் கரையோரத்தை அண்மித்துள்ள சில இடங்களிற்கு இந்த கவசவாகனப் படைப்பிரிவு நகர்த்தப்பட்டு வருவதானது இந்த களமுனையில் காலாற்படையின் மீது இராணுவத் தலைமை நம்பிக்கை இழந்துள்ளதையே காட்டுவதாக உள்ளது.

வடபோர்முனையில் நிறுத்தப்பட்டுள்ள டாங்கிகளை உள்ளடக்கிய இயந்திர காலாற்படைக்கு நிகராக இல்லாவிடினும் மன்னார் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள கவச வாகனத் தாக்குதல் பிரிவும் சிறிலங்கா இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய பற்றாலியனில் ஒன்றாகும். எனவே, மன்னார் கரையோரக் களமுனைத் தாக்குதல்கள் விரைவில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக போகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

கடந்தகால வரலாற்றைப் பார்த்தால் பொட்டல்வெளிச் சமர்களில் புலிகளின் போரிடும் திறனே மேலோங்கிக் காணப்பட்டது. அதுவும் கரையோரத்தை அண்டிய பொட்டல்வெளிப் பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் முன்னேற முனைவதானது பாலைவனத்தில் தனித்துக் கைவிடப்பட்ட நிலையை 58 ஆவது படையணிக்கு உருவாக்கினாலும் ஆச்சரியமில்லை.

மன்னார் கரையோரத்தை தக்கவைப்பதில் புலிகள் அதிக முயற்சி எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. கரையோரத்தை அண்மித்துள்ள களமுனைக் கட்டளைத் தளபதியாக கேணல் பானு நிலைகொண்டுள்ளார். பானு தலைமையிலான புலிகளின் அணிக்கு அவர்களது போராட்ட வரலாற்றில் எத்தகைய இடமுண்டு என்பதையும் அந்த அணியினரின் போர்த்திறன் எத்தகையது என்பதையும் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.

வன்னியை ஆக்கிரமிக்கும் பிரதான களமுனையாகத் திறக்கப்பட்ட மன்னார் களமுனையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இராணுவத்தினர் ஆமைவேக நகர்வைக் கூட மேற்கொள்வதற்கு பாரிய தடங்கல்களை எதிர்கொள்கின்றனர் எனில் அந்தக் களமுனையில் நிலைகொண்டுள்ள புலிகளின் போரிடும் திறனைக் கணிப்பிட்டுவிட முடியும். இந்தக் களமுனையில் இராணுவத்தினர் தமது முழுமையான வலிமையையும் திரட்டித் தாக்குதல் நடத்தும் போதும், நின்றுபிடித்து எதிர்ச்சமராடும் புலிகளின் போரிடும் திறனைக் கண்டு போரியல் ஆய்வாளர்கள் பலரும் வாய்பிளந்து நிற்கின்றனர்.

இதேநிலைதான் 57 ஆவது படையணி நிலைகொண்டிருக்கும் களமுனையிலும் நிலவுகிறது. தற்போது 57 ஆவது படையணி பாலமோட்டை, நவ்வி, சின்னவலயன்கட்டு போன்ற இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. 57 ஆவது படையணியானது காட்டுப்புறச் சமர்களுக்கென பெரும் ஆரவாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு பலத்த அடியை கடந்த காலங்களில் வாங்கியது. மடுவை விட்டு புலிகள் விலகிய பின்னர் அங்கு சென்றதன் மூலம் ஏதோவொரு பெரிய வெற்றியை தாங்கள் பெற்றுவிட்டதாக இந்தப் படையணியினர் பெருமை கொண்டாலும் இந்தப் படையணி களமுனையில் சாதித்தது என்று எதனையும் கூறிவிட முடியாது.

இத்தகைய இலட்சணத்தைக் கொண்ட 57 ஆவது படையணியுடன் இராணுவத் தளபதியால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அதிரடிப்படை-11 என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் (விரைவில் இது 62 ஆவது படையணி என பெயர்மாற்றப்படவுள்ளது) மற்றொரு படையணியும், 61 ஆவது படையணியும் தற்போது மன்னாரை அண்மித்துள்ள வவுனியா களமுனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. (60 ஆவது படையணி தப்பியோடி மீண்டும் இணைந்து கொண்ட இராணுவத்தினரைக் கொண்டு தற்போது கட்டமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது)

வழமைக்கு மாறாக இந்தக் களமுனைக்கு மேலதிகமாக இரண்டு படையணிகளை சரத் பொன்சேகா அனுப்பியிருக்கிறார். அத்துடன் வடபோர்முனையில் நின்ற சரத் பொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய தளபதியும் அவரது தீவிர விசிறியுமான பிரிகேடியர் ரால்ப் நுகேர அதிரடிப்படை-11 இன் கட்டளைத் தளபதியாகவும், 1990 களின் இறுதியில் ஆனையிறவுத் தளத்தில் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் லலித் தவுலகல 61 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாகவும் திடீரென வன்னிக் களமுனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதிரடிப்படை-11 ஐ பொறுத்தவரை வன்னிக் களமுனையில் திருப்பத்தை ஏற்படுத்தப்போகும் படையணியாகவே இதனை சரத் பொன்சேகா கருதுவதுபோல் உள்ளது. ஊடகங்களில் அந்தளவுக்கு இந்த படையணிக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனை உறுதிசெய்வதுபோல் அதிரடிப்படை-11 க்கு மொத்தம் ஏழு பற்றாலியன்களை சரத் பொன்சேகா ஒதுக்கியுள்ளார். ஒரு படையணியில் மொத்தம் ஒன்பது பற்றாலியன்கள் இருக்க வேண்டியபோதும் சிறி லங்கா இராணுவ படையணிகளில் அண்மைக் காலமாக ஏழு பற்றாலியன்களைக் கொண்ட அரைகுறைப் படையணிகளாகவே புதிய படையணிகள் உருவாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அதிரடிப்படை-11 என்ற 62 ஆவது படையணிக்கு வடபோர்முனையில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரக் காலாற்படையணியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் ரால்ப் நுகேர நியமிக்கப் பட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் படையணியையும் இயந்திர காலாற்படைப் பிரிவுகளைக் கொண்டதொரு படையணியாகவே சரத் பொன்சேகா உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து 61 ஆவது படையணியைப் பொறுத்தவரை இது வலிந்த தாக்குதல் படையணியாகவும் இன்றி தற்காப்பு தாக்குதல் படையணியாகவும் இன்றி ஒரு அரைகுறைத் தாக்குதல் படையணியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 57 ஆவது படையணி கைப்பற்றிய இடங்களில் இந்த படையணி தற்போது நிலைநிறுத்தப்பட்டு 57 ஆவது படையணி முழுவதும் முன்னரங்க பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

ஆக 57 ஆவது படையணியும் அதிரடிப்படை-11 என்ற 62 ஆவது படையணியும் இணைந்து வவுனியா களமுனையில் ஓமந்தையில் இருந்து பாரிய நகர்வுகளை மாங்குளம் நோக்கி தொடங்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

இவ்விரு படையணிகளினதும் முதலாது தாக்குதல் களம் மூன்றுமுறிப்பு பகுதியாகவே இருக்கப் போவதால் இருதரப்பிலும் தற்போது அப்பகுதியில் வலுவான வேவு நடவடிக்கைகளும் பாதுகாப்பு அரண்களை வலுவாக்கும் முயற்சிகளும் தீவிரம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னாரில் எதிர்த் தாக்குதல் நடத்தும் புலிகளுக்கான விநியோகப் பாதையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே மூன்றுமுறிப்பு உள்ளது.

இந்தப் பகுதியில் புலிகளின் கட்டளைத் தளபதியான லக்ஸ்மன் தலைமையிலான குழு நிலைகொண்டுள்ளதாகத் தெரிகிறது. அண்மைக் காலங்களில் களமுனையில் திறம்படச் செயலாற்றும் புலிகளின் தளபதி என இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே மெச்சுமளவுக்கு அவரது போரிடும் திறன் அமைந்திருக்கிறது.

தளபதி லக்ஸ்மனைக் குறிவைப்பதற்காக இராணுவத்தின் ஆழ ஊடுருவும் குழு ஒன்றையும் இராணுவத் தலைமை நியமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த மூவர் ஆள ஊடுருவிய பின்னர் காணாமல் போயிருப்பதாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி தளபதி லக்ஸ்மனைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் அவர் தப்பியிருக்கிறார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில் மூன்றுமுறிப்பை இலக்குவைத்து ஆரம்பமாகும் இராணுவ நடவடிக்கையின் தாக்கம் கடுமையானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் 57 ஆவது படையணியைப் பொறுத்தவரை இதுவரை களமுனைகளில் திறம்பட செயற்படவில்லை என்ற அவப்பெயரை தனதாக்கி வைத்துள்ளது. இனிமேல் இந்தப் படையணி திறம்படச் செயற்படும் என்று எந்தவகையிலும் நம்பிக்கை வைக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

அதேநேரம் அதிரடிப்படை-11 என்ற 62 ஆவது படையணியும் இனிமேல்தான் தாக்குதல்களை ஆரம்பிக்கவிருப்பதால் அதனது தாக்குதல் திறன் குறித்தும் இப்போது எதுவும் கணிப்பிட்டுவிட முடியாது. அந்தவகையில் இவ்விரு படையணிகளையும் நம்பி ஓமந்தைக் களத்தில் இறங்கவுள்ள சரத் பொன்சேகா, அதற்கு முன்னதாக மணலாறில் தாக்குதல்களை நடத்தி புலிகளின் கவனத்தைத் திசைதிருப்பும் தாக்குதல் உத்தியை இப்போது கடைப்பிடித்து வருகிறார்.

மணலாறு களமுனையானது 14 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டதாகும். ஒரு முனையில் கொக்குத் தொடுவாயையும் மறுமுனையில் கிரிபன்வௌவையும் கொண்ட முன்னரங்கப் பகுதி ஊடாகவே தற்போது இராணுவத்தினர் முன்னேறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். கவசப்படைத் தாக்குதல் பிரிகேட்டைச் சேர்ந்த பிரிகேடியர் நந்த உடுவத்த தலைமையிலான 59 ஆவது படையணியே மணலாற்றில் தற்போது நிலைகொண்டுண்டுள்ளது. கிழக்கில் இடம்பெற்ற படைநடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பற்றாலியன்களைக் கொண்டு இந்த வருட ஆரம்பத்திலேயே இந்த படையணி உருவாக்கப்பட்டது.

இந்த படையணியில் மூன்று பிரிகேட்டுகள் உள்ளன. 59-1 ஆவது பிரிகேட்டுக்கு லெப்.கேணல் அனுர ஆரியசிங்கவும், 59-2 ஆவது பிரிகேட்டுக்கு லெப்.கேணல் மனீஷ சில்வாவும், 59-3 ஆவது பிரிகேட்டுக்கு பாலித பெர்ணாண்டோவும் கட்டளை அதிகாரிகளாக உள்ளனர். 59-3 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி மனீஷ சில்வா ஓய்வில் இருப்பதால் பதில் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் ஜாலிய ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தலைமையிலான பற்றாலியன்களே தற்போதைய மணலாற்று இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. மணலாறு முன்னரங்கின் கரையோர முனையான கொக்குத் தொடுவாயில் 59-1 ஆவது பிரிகேட் நிறுத்தப்பட்டுள்ளது. கொக்குத் தொடுவாயிலிருந்து பக்கவாட்டில் சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ஜனகபுரவிலிருந்துதான் 59-1 ஆவது பிரிகேட் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. 59-2 ஆவது பிரிகேட் முன்னரங்கின் மத்திய பகுதியான கல்யாணபுரவிற்கு வடக்காக நிலைகொண்டவாறு தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. 59-3 ஆவது பிரிகேட் முன்னரங்கின் மறுமுனையான கிரிபன்வௌpல் நிலைகொண்டிருந்தவாறு வடக்கு நோக்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் புலிகள் வலிமைமிக்கதாக உள்ள மணலாறு களமுனையில் இந்த வருட ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிய அனுபவமற்ற படையணி ஒன்றை வைத்துக்கொண்டு வலிந்த தாக்குதல்களை நடத்திக் கொண்டிருப்பதானது நீண்ட நாட்களுக்கு சாத்தியமாகப் போவதில்லை. அது சரத் பொன்சேகாவின் திட்டமும் அல்ல. இதுவொரு திசைதிருப்பும் தாக்குதல் என்பதை புலிகளும் அறியாமல் இல்லை.

புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சொர்ணம் தலைமையிலான புலிகளின் தாக்குதல் பிரிவு மணலாறில் நிலைகொண்டுள்ளது. வன்-போ (1-4) எனப்படும் தளத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக 59 ஆவது படையணி கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை வன்-போ தளப் பகுதியில் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று இராணுவத்தினரின் உத்தியோகப+ர்வ இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்னமும் அங்கு மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றனவே தவிர வன்-போ தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றிவிடவில்லை என்பதே உண்மையாகும். அதைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்குமளவுக்கு வன்-போ தளத்தை புலிகள் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் மணலாறில் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதான தோற்றப்பாட்டை வெளிக்காட்டவே இராணுவத்தினர் முனைகின்றனர். இதுதான் அவர்களுடைய திசைதிருப்பும் நடவடிக்கையின் முதற்படியாக இருக்கிறது. புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இத்தகைய திசைதிருப்பும் நடவடிக்கைகளும் போக்குக் காட்டுவதும் கைவந்த கலை. எனவே, இராணுவத்தினரின் இந்த வலையில் புலிகள் இலகுவில் வீழ்ந்து விடமாட்டார்கள்.

இராணுவத்தின் இத்தகைய திசைதிருப்பும் நடவவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்க யாழ் குடாநாட்டை இராணுவத்தினர் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு வந்திருப்பதாகவே அவர்கள் வெளியிடும் தகவல்களில் இருந்து தெரிகிறது. குடாநாட்டின் ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகப்படுத்தி, கரையோர கடற்றொழிலுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் இரத்துச் செய்து கரையோரம் முழுவதும் முழு உசார் நிலையில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப் பட்டிருப்பதைப் பார்க்கும்போது குடாநாட்டினுள் புலிகள் எந்நேரமும் தரையிறங்கலாம் என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு தொற்றிக் கொண்டிருப்பது வெளிப்படையாகியுள்ளது.

இது இராணுவத்தினரின் மனவலிமையில் ஏற்பட்டுள்ள ஒருவித தாக்கத்தையும் தமது தாக்குதல் திறனில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனத்தையுமே காட்டுகிறது. இந்த வருட இறுதிக்குள் போரை முடித்துக் காட்டுகிறேன் என்று வரிந்துகட்டிக் கொண்டு போர்ச் சங்கை ஊதிய சரத் பொன்சேகா இரண்டு வருடங்கள் நெருங்கிய நிலையில் - தனது காலக்கெடு முடிவடையும் நிலையில் - குறிப்பிடத்தக்க எந்த வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாது திணறும் அதேநேரம், புலிகளின் வலிந்த தாக்குதல்கள் குறித்த அச்சமும் அவரை தொற்றிக் கொண்டுள்ளது.

இத்தகைய நிலைமைகள், களநிலவரங்கள் விரைவில் மாற்றமடையும் சாத்தியங்களையே தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன.

நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி

Comments