புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை காட்டமாக நடத்துவதற்கான தெரிவுக்கு சிங்களப் படையின் விரிந்த நகர்வுள்ளது

மன்னாரில் இடம்பெற்றுவரும் படைநடவடிக்கைகள் ஒரு திருப்புமுனையை நோக்கி செல்லத்தொடங்கியுள்ளதாக இராணுவ உயர்மட்டத்தில் கூறப்பட்டுவருகிறது.

அடம்பனில் இருந்து முன்னேறிய 57 ஆவது படையணியும் பெரியமடுவில் இருந்து முன்னகர்ந்த 58 ஆவது படையணியும் நெடுவரம்பில் கடந்தவாரம் ஒன்றையொன்று சந்தித்திருக்கின்றன.

இந்த இரு படையணிகளும் சந்தித்துக்கொண்டதே தமக்கு சார்பான திருப்புமுனையை ஏற்படுத்தும் சாத்தியத்தை தோற்றுவித்துள்ளதாக இரு படையணிகளின் தளபதிகளும் கணக்கு போட்டுள்ளனர்.

இந்த இரு படையணிகளின் இணைவானது புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டித்துள்ளதுடன் இராணுவத்தினரின் ஒன்றிணைந்த எதிர்கால நடவடிக்கைக்கும் உதவும் என்று 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு கடந்த 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இதையொத்த கருத்தையே 57 ஆவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ{ம் தெரிவித்து வருகிறார்.

இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா இதற்கும் அப்பால் சென்று புலிகள் மரபுப்போர் செய்ய முடியாதளவுக்கு அவர்களுடைய முதுகெலும்பை முறித்திருப்பதாக கடந்தவாரம் அனைத்துலக பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது கூறியிருக்கிறார்.

மன்னாரில் RICE BOWL என்று கூறப்படுகின்ற நெல்விளையும் வயல்வெளியையும் அதனை அண்மித்த பகுதிகளையும் இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்தே இத்தகைய கருத்துக்களை சரத்பொன்சேகாவும் அவரது படையணித் தளபதிகளும் வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. முதலில் இவர்களது கருத்துகளின் பெறுமதித்தன்மை குறித்து பார்க்கலாம்.

அடம்பனிலிருந்து முன்னேறிய 58 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட்டிலுள்ள லெப்கேணல் கமல் பின்னவல தலைமையிலான 6 ஆவது கெமுனு வோச் பற்றாலியனும், லெப்.கேணல் சுமேத ஜயசுந்தர தலைமையிலான 8 ஆவது கெமுனு வோச் பற்றாலியனுமே பாலமோட்டையைக் கைப்பற்றி அங்கிருந்து ஒட்டுப்பாலத்தை அடைந்து பின்னர் நெடுவரம்புவரை முன்னேறியிருக்கிறது.

அதேநேரம் பெரியமடுவில் இருந்து முன்னேறிய 57 ஆவது படையணியின் மூன்றாவது பிரிகேட்டிலுள்ள பற்றாலியன்களே நெடுவரம்புவரை முன்னேறி 58 ஆவது படையணியுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரிகேட்டில் உள்ள லெப்.கேணல் சேனக விஜயசிங்க தலைமையிலான 11 ஆவது இலகு காலாற்படை பற்றாலியனும் , லெப்.கேணல் சந்திரசோம தலைமையிலான 7 ஆவது கஜபா றெஜிமன்ற் பற்றாலியனும்தான் நெடுவரம்பு பகுதியைச் சென்றடைவதற்கான தாக்குதல்களில் பங்கேற்றுள்ளன.

இந்த இரண்டு படையணிகளும் கடந்தவாரம் இடம்பெற்ற கடுமையான சண்டைகளுக்கு பின்னரே நெடுவரம்பிற்கு செல்லக்கூடியதாக இருந்தது. RICE BOWL என்று கூறப்படுகின்ற நெல்விளையும் வயல்வெளியை கைப்பற்றி அதைத்தொடர்ந்து 57 ஆவது 58 ஆவது படையணிகள் இணைந்துகொண்டதை இராணுவ உயர்மட்டத்தினர் தமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகவும் புலிகளுக்கு கிடைத்த பாரிய தோல்வியாகவும் எடை போட்டுள்ளனர்.

குறித்த ஒரு பகுதியை இலக்குவைத்து அருகருகாக உள்ள இடங்களில் இருந்து நகரத் தொடங்கும் இரண்டு படையணிகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வது அப்பகுதியில் இருக்கும் எதிர்த்தரப்பின் விநியோகத்தை கேள்விக்குள்ளாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

ஆனால் அருகருகாக நகர்ந்த படையணிகள் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்வது ஒன்றும் கடின விடயமல்ல. அந்தவகையில் படையணிகளின் இந்த இணைவு குறித்து பிரிகேடியர் சவீந்திர டி சில்வா கூறியிருப்பதானது அளவுகடந்த ஒரு நம்பிக்கையாகவே கருதப்படுகிறது.

அதேநேரம் அவ்வாறு சந்தித்துக் கொண்டதை மிகப்பெரிய வெற்றியாகக் கருதி எதிர்த்தரப்பின் போரிடும் திறனை மதிப்பிடுவது சரத்பொன்சேகாவின் முட்டாள்த்தனமான மதிப்பீடாகவே இருக்க முடியும்.

நேரெதிர் திசைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டு படைநடவடிக்கைகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டால் அது இராணுவத்தினருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படும்.

ஆனால் அருகருகே ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக நகர்ந்த படையணிகள் சந்தித்துக் கொள்வதென்பது சரத்பொன்சேகாவும் அவரது படையணி தளபதிகளும் குறிப்பிடுவது போல் இராணுவத்தினருக்கு சாதகமான பாரிய திருப்பங்களை ஏற்படுத்தப் போவதுமில்லை, புலிகளின் மரபுவழிப் போரிடும் திறனை மழுங்கடிக்கவும் இல்லை.

சரத்பொன்சேகா கூறியிருப்பதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை வடபோர்முனையில் இடம்பெறும் அடுத்த மோதல் சம்பவம் ஒன்று அனைவருக்கும் தெளிவுபடுத்துவதாகவே இருக்கும்.

வடபோர்முனையில் ஒரு அடிகூட முன்னே எடுத்துவைக்க முடியாமல் 53ஆவது 55 ஆவது படையணிகள் திணறுவதற்கான பிரதான காரணம் என்ன என்பதை மறந்தவர் போன்றே சரத்பொன்சேகா தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை மன்னாரிலும் வவுனியாவிலும் காட்டுப்புறச் சமர்களே இடம்பெற்றன. மணலாறில் இன்னமும் காட்டுப்புறச் சமரே தொடர்ந்துகொண்டிருக்கிறது. காட்டுப்புறச் சமர்களில் மரபுப்படையணிகளை இறக்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல. அதனால்தான் புலிகள் மன்னாரிலும் வவுனியாவிலும் இதுவரை முழுமையானதொரு மரபுப்போரை நடத்தாமல் கெரில்லா பாணியிலான வழிமறிப்பு தாக்குதல்களைச் செய்துவருகின்றனர்.

சமர் இடம்பெறும் பகுதியின் புவியியல் அமைவைக் கருத்திற்கொண்டே அப்பகுதியில் மரபுவழிப்போரை நடத்துவதா அல்லது கெரில்லா தாக்குதலை நடத்துவதா என்பது தீர்மானிக்கப்படும்.

அந்தவகையில் மன்னாரிலும் வவுனியாவிலும் மணலாறிலும் புலிகள் கெரில்லா தாக்குதல்களுடனான ஒருவகை வழிமறிப்பு தாக்குதல்களையே பிரதானமாகக் கைக்கொண்டு வருகின்றனர்.

இந்த களமுனைகளில் தேவையேற்படும் பட்சத்தில் மரபுவழி தாக்குதல்களையும் புலிகள் நடத்தியிருந்தனர். அதற்காக மரபுவழித் தாக்குதல்களைத்தான் புலிகள் இப்பகுதிகளில் மேற்கொள்கின்றனர் என்று அர்த்தமில்லை.

புலிகளின் மரபுவழிப்படையணிகள் தற்போது மையங்கொண்டுள்ள இடம் வடபோர்முனைதான்

வடபோர்முனையின் அமைவிடம் மற்றும் அங்குள்ள புவியியல் சூழல் மரபுவழி தாக்குதல்களுக்கு சாதகமாக இருப்பதால் புலிகள் அங்கு தமது மரபுப்படையணிகளை நிறுத்தியுள்ளனர்.

எனவே மன்னாரில் இதுவரை இடம்பெற்ற காட்டுப்புறச் சமர்களை வைத்துக்கொண்டு அதில் தமது கை மேலோங்கியதும் புலிகளின் மரபுப்போரிடும் ஆற்றலை தோற்கடித்துவிட்டோம் என்று கூறுவது தவறான மதிப்பீடாகவே அமையும். அத்தகைய தவறான மதிப்பீட்டையே சரத்பொன்சேகா மேற்கொண்டிருக்கிறார்.

காட்டுப்புறச் சமர்கள் நடந்த இடத்தை மையப்படுத்தி சரத்பொன்சேகா திடீரென மரபுப்போர் குறித்து கதைக்கிறார் எனில் அதற்கு காரணங்கள் இல்லாமல் இருக்குமா என்ன ?

காட்டுப்புறச்சமர்களை முடித்துக்கொண்டு வயல்வெளிக்குள் நுழைந்திருக்கும் 58,57 ஆவது படையணிகள் இனிமேல் பொட்டல்வெளிச் சமர்களுக்கே முகம்கொடுக்க வேண்டும். இத்தகைய பொட்டல்வெளிச் சமர்களில் மரபுவழி படையணிகளின் ஆதிக்கமே அதிகமிருக்கும்.

எனவே ஆண்டான்குளம், பரப்புக்கடந்தான் ஆகிய பகுதிகளைக் கைவிட்டு பள்ளமடுவிற்கு பின்னகந்திருக்கும் புலிகளின் மன்னாரிற்கான கட்டளைத் தலைமையகம் பள்ளமடுவில் தமது மரபு படையணி வளங்களை குவித்து பொட்டல் வெளிச் சமர்களை எதிரகொள்ளக்கூடும். அதற்காக பள்ளமடு நோக்கி புலிகளின் மரபுவழி படையணி வளங்களை புலிகள் நகர்த்தக்கூடும்.

58,57 ஆவது படையணிகள் இனிமேல் புலிகளின் மரபு வழி தாக்குதல்களையே அதிகம் எதிர்கொள்ளும் சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதால் இராணுவத்தினருக்கு மனவலிமை ஊட்டும் நடவடிக்கையிலேயே சரத்பொன்சேகா தற்போது இறங்கியுள்ளார் என்றே கருதப்படுகிறது.

அடுத்து புலிகளின் மரபுபடையணி தாக்குதல்கள் ஆரம்பமாக முன்னரே புலிகளின் மரபுபடையணி செயலிழந்துவிட்டது என்றுகூறி தாக்குதல்களின் விளைவுகளை மூடிமறைக்கும் திட்டத்தையும் அவர் கொண்டிருக்கலாம்.

மன்னார் களத்திலுள்ள பிந்திய நிலமைகளை அடுத்து பார்க்கலாம். 58 ஆவது படையணியும் 57 ஆவது படையணியும் நெடுவரம்பில் ஒன்றாகச் சந்தித்திருப்பினும் அங்கிருந்து இரண்டு படையணிகளும் ஒருமுனையில் தாக்குதலை நடத்தாமல் வேறு வேறு முனைகளை திறக்கும் திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளன.

57 ஆவது படையணியின் பிரிகேட்டுகள் துணுக்காயை அடுத்தகட்டமாக இலக்குவைத்து நகரும் சாத்தியங்களே களமுனையில் தென்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துணுக்காய் நோக்கி முன்னேறும் திட்டத்தை 57 ஆவது படையணி கொண்டிருந்தால் அந்த படையணி தற்போது நடத்தும் பாணியிலான தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தக்கூடும். அதேநேரம் வவுனியாவிலிருந்தும் இராணுவத்தினர் வலிந்த தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் 57 ஆவது படையணியின் திட்டங்கள் எந்த நேரமும் திசைதிரும்பக்கூடும்.

ஆனால் 58 ஆவது படையணியைப் பொறுத்தவரை அதனது பிரதான இலக்கு விடத்தல்தீவு ஆகும். 58 ஆவது படையணி தற்போது நிலைகொண்டுள்ள இடங்களில் ஒன்றான ஒட்டுப்பாலத்திலிருந்தே கரையோரமாக விடத்தல்தீவு நோக்கி முன்னகரும் முயற்சியை அது கொண்டுள்ளது. ஒட்டுப்பாலத்திற்கும் விடத்தல்தீவிற்கும் இடையிலுள்ள கரையோரமான சுமார் 4 கிலோமீற்றர் பகுதியைக் கடப்பதுதான் இனிமேல் சிக்கலான விடயமாக இருக்கப்போகிறது.

ஏனெனில் கரையோரமாக முன்னேறும் பற்றாலியன்கள் பொட்டல்வெளிகளைக் கடந்தே ஆக வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில்தான் புலிகளின் மரபுப்படையணி நடத்தும் தாக்குதல்கள் இராணுவத்தின் பற்றாலியன்களைச் சிதைக்கலாம் என்று இராணுவத்தரப்பு அஞ்சுகிறது.

ஏனெனில் பள்ளமடுவில் இராணுவத்திற்கு எதிரான பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு புலிகள் திட்டமிட்டு வருகின்றனர் என்றும் அதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுகின்றன என்றும் இராணுவப் புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

அதில் உண்மையும் இருக்கலாம். ஏனெனில் 58 ஆவது படையணி தனது இலக்கை இலகுவில் அடைந்துகொள்வதற்கு புலிகள் ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டார்கள்.

அந்த பகுதிக்குரிய தற்போதைய கேந்திர முக்கியத்துவம், அதனை இழப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விடயங்களை கருத்தில்கொண்டதாகவே அப்பகுதிக்குரிய தாக்குதல் வியூகங்களை புலிகள் அமைத்துக் கொள்வர். பள்ளமடுவில் புலிகள் மேற்கொள்ளும் தயார்படுத்தல்களை பார்க்குமிடத்து விடத்தல்தீவை இராணுவத்தினர் சென்றடைவதற்கு புலிகள் தடைகளைப் போடுவதாகவே தெரிகிறது.

மன்னாரில் பருவமழை காலம் நெருங்குவதால் அதற்கு முன்னர் தமக்கு சாதகமான தரையமைப்பைக் கொண்ட பகுதிக்குள் நுழைந்துவிட இந்த படையணி முனைவதாகவே தெரிகிறது. பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவும் கடந்தவாரம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த பருவமழை காலத்தில் 58 ஆவது படையணி அடம்பன் காடுகளுக்குள் கடும் மழைக்குள் சிக்கி அவதிப்பட்டது மாத்திரமின்றி நோய்வாய்ப்பட்டு களத்திலிருந்து நூற்றுக்கணக்கானோரை அகற்ற வேண்டிய தேவையும் இருந்தது.

மன்னாரில் எதிர்வரும் ஒக்ரோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியே பருவமழைக் காலமாகும். எனவே ஒக்ரோபருக்கு முதலில் 58 ஆவது படையணி தனக்கு சாதகமான தரைத்தோற்ற அமைவிடத்திற்குள் நுழைந்துவிடவே முனையும்.

தற்போது 58 ஆவது படையணி நிலைகொண்டுள்ள பகுதிகளும் பருவமழைகாலத்தில் இராணுவத்தினருக்கு சாதகமான பகுதிகள்தான். ஆனால் பருவமழைக்கு முன்னர் தற்போது நிலைகொண்டுள்ள பகுதிகளிலிருந்து முன்னேற முடியாவிட்டால் பின்னர் அடுத்தவருடம் ஜனவரிக்கு பின்னரே இந்த களமுனையில் படைநடவடிக்கை ஒன்றைச் செய்வதற்கான காலநிலை கனியும்.

எனவே மன்னார் களமுனையில் இராணுவத்தினர் எதிர்பார்த்த விடத்தல்தீவைக்குறிவைத்த தாக்குதல்கள் விரைவிலே தீவிரமடையும் சாத்தியங்கள் உள்ளதால் மன்னார் களமுனை மேலும் கொந்தளிக்கும் நிலையே காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி தற்போது இராணுவத்தினருக்கு கிலி கொடுக்கும் ஜூலை மாதம் நடந்துவருகிறது. கரும்புலிகளை நினைவுகூரும் ஜுலையில் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களைச் செய்திருக்கின்றனர். அந்த அச்சமும் இராணுவத்தினர் மத்தியில் உள்ளது.

அதாவது புலிகள் அடுத்தகட்டமாக வலிந்த தாக்குதல்களை ஆரம்பிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகவே இராணுவத்தினர் அஞ்சுகின்றனர்.

“ புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை காட்டமாக நடத்துவதற்கான தெரிவுக்கு சிங்களப் படையின் விரிந்த நகர்வு இடம்கொடுத்துள்ளது” என்று இறுதியாக வெளிவந்த புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதை சாதாரண ஒரு கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

இராணுவத்தினர் அஞ்சுவதுபோல் புலிகள் வலிந்த தாக்கதல்களை காட்டமாக நடத்தும் கட்டத்திற்கு நகர்ந்திருக்கின்றனர் என்றே தெரிகிறது. இதனையே அண்மையில் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதிகளில் ஒருவரான கேணல் லக்ஸ்மனும் தெரிவித்திருந்தார்.

“ கடந்த காலத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எமது மண்ணிலிருந்து எப்படி விரட்டியடிக்கப்பட்டனர். எப்படி எமது பகுதிகள் மீட்கப்பட்டன என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வார்களேயானால் அடுத்த கட்டம் என்ன நடைபெறும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

தேசியத் தலைவரின் திட்டத்தை உரிய நேரத்தில் இராணுவத்தினர் கற்றுக்கொள்வர்” என்று அவர் தெரிவித்திருப்பது பல்வேறு பெறுமதிமிக்க கேள்விகளுக்கான விடையாகவே உள்ளது.

சுவிஸ் நிலவரம்

Comments