வன்னிப் பேரவலத்தை ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டுவர கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

வன்னி மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள மனிதப் பேரவலத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவரும் பேரணி இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.
நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழுவின் வன்னி இயக்குநகம் நடத்திய இப்பேரணி, கிளிநொச்சி புனித தெரேசாள் கோவிலில் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் உள்ள ஐ.நா செயலகத்தை நோக்கி நகர்ந்த பேரணியின் முடிவில் ஐ.நா செயலாளருக்கான மனுவினை அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையப்பிரதிநிதியிடம் ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் கையளித்தார்.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னி மீது நாசுக்காகத்திணிக்கப்பட்டுள்ள ஈவிரக்கமற்ற பொருண்மியத்தடையானது ஒரு லட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணமும் ஆறுதலும் கொடுப்பதற்கு அரக்கத்தனமான தடைக்கல்லாக உள்ளது.

தூரவீச்சு எறிகணையாலும் பல்குழல் எறிகணைச் செலுத்திகளாலும் குண்டுவீச்சு வானூர்திகளாலும் கடற்படை சுடுகலன்களாலும் வன்னி மண் அதிர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு மானிடப் பேரவலம் திட்டமிடப்பட்டு உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டு வன்னி மண்ணில் வெடித்தெழும்பிக் கொண்டிருக்கின்றது.

போரை நடத்துவதற்கான ஜெனீவா நெறிமுறைகளை ஒருபுறம் வைப்பினும் தமது சக குடிமக்கள் என்ற மனிதநேய அக்கறைகூட இன்றி ஒரு ஆவேசமான, கொடூரமான போரை சிறிலங்கா அரசும், அதன் படைகளும் வன்னி மீது ஏவிவிட்டுள்ளன.

மக்கள் வாழ்விடங்களினதும், மருத்துவமனைகளினதும், பாடசாலைகளினதும், வழிபாட்டுத் தலங்களினதும், தூய்மையும் பரிசுத்தமும் ஒருவித திமிருடன் மீறப்படுகின்றன.

சிறிலங்காப் படையினர், கிராமங்கள் கிராமங்களாக எறிகணைகளைப் பொழிந்து பாரம்பரிய தாயகத்திலிருந்து பலவந்தமாக மக்களை ஓட ஓட விரட்டுகின்றனர்.

இடப்பெயர்வுகள் ஒரு தடவையல்ல, மீளவும் மீளவும் தொடர்கின்றன.

ஓரிடத்திலிருந்து இடம்பெயர்ந்து மற்றோரிடத்தில் நிலைகொள்ளும்முன் அவர்கள் வாழ்விடங்கள் மீது ஏவப்படும் எறிகணைகள், அவர்களை மீளவும் இடம்பெயர நிர்ப்பந்திக்கின்றன. மனிதாபிமானமற்ற இடப்பெயர்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மரங்களின் கீழும், பாதையோரங்களிலும் கொழுத்தும் வெய்யிலிலும், தூசிபடிந்த காற்றின் மத்தியிலும், கொட்டும் மழையினிலும், எறிகணை முழக்கங்களின் மத்தியிலும் மக்கள் அந்தரித்து அவலப்படுகின்றனர்.

குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பாடசாலைகளிலும், வழிபாட்டுத் தலங்களிலும், நண்பர்கள், உறவினர்களுடனும் அடைக்கலமடைந்திருக்கின்றனர்.

இல்லாமையின் மத்தியில் இந்த அப்பாவி மக்கள் எல்லோரும் சொல்லொணாத் துன்பங்களிடையே வாழ்ந்து வருகின்றனர். அரச நிறுவனங்களும், உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களும், பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும், நல்உள்ளம் கொண்டோரும் போற்றதற்குரிய வகையில் இம்மக்களுக்கு உதவிகளை வழங்கியபோதும், இம்மக்களின் அடிப்படை மனிதத் தேவைகளை நிவர்த்தி செய்ய இவை போதியதாக இல்லை.

சிறிலங்கா அரசானது இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான எல்லாவற்றையும் அனுமதிப்பதாக பறைசாற்றுகின்ற போதும், அடிப்படைத் தேவைகளான கூரை விரிப்புக்கள், நீர்க்கொள்கலன்கள், எரிபொருட்கள், மருந்துப்பொருட்கள், உணவுவகைகள் போன்றவற்றை சோதனைச் சாவடிகளில் கடும் வெட்டுக்குட்படுத்தியே அனுமதிக்கின்றது.

மேலும், பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் நடமாட்டங்கள் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளைத் திணித்துள்ளதன் மூலம், அவர்களின் மனிதநேயப் பணிகள் இடம்பெயர்ந்துள்ள மக்களைச் சென்றடைவது முடக்கப்பட்டுள்ளது.

முதியோர்கள், நோயாளிகளுடன் கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மாரும், குழந்தைகளும் இடப்பெயர்வுகளால் மிக அதிகமாய் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை செல்லும் சிறார்கள் செல்லொணா நெருக்கடிகளுக்கும், கசப்பான சூழ்நிலை உளவியல் தாக்கங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இத்தகைய பாரதூரமான சோகநிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.

வளர்ந்த பிள்ளைகளின் நிலையே இப்படியெனின், கடந்த 17 ஆம் நாள் ஓகஸ்ட் மாதம் 2008 ஆம் ஆண்டு நாடளாவிய புலமைப் பரிசில் தேர்விற்குத் தோற்றிய பிஞ்சுகளின் பரிதாப நிலை எத்தகையது என எண்ணிப் பாருங்கள்.

மருந்துப்பொருட்களின் தட்டுப்பாட்டினால் தொற்று நோய்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. குடிநீரானது இன்று அருகிச் செல்லும் பொருளாகியுள்ளது. இந்த அப்பாவி மக்கள் கடும் நெருக்கடியின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

உலகின் கண்களுக்கு உண்மை வெளிப்படாதபடி இந்த அடிப்படை மனித உரிமை மீறல்கள் வன்னி மண் முழுவதும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எண்ணற்ற, திட்டமிடப்பட்ட தடைகள் உண்மையின் பாதையைக் குறுக்கறுத்து விதைக்கப்பட்டு உண்மை வெளிப்பட்டுப் பரவுவதை உறுதியாக நசுக்குகின்றது. பதிலாக நச்சுப்பொய்கள் இலகுவாகக் கட்டவிழ்த்து விடப்பட்டு பிரச்சாரப்படுத்தப்படுகின்றன.

அப்பாவித் தமிழ்மக்களின் பயங்கரமான இந்நிலையை பக்கச்சார்பின்றி வெளிக்கொணரும் வாய்ப்பை- ஊடகத்துறையினரை வன்னிக்குள் நுழையவிடாது தடுத்து நிறுத்தி மறுப்பதே சிறிலங்கா அரசின் நீண்டகால அடக்குமுறை வன்முறையின் மிகக்கொடூரமானதும் தந்திரமானதுமானதுமான நகர்வாகும்.
காலத்தின் அழைப்பு அவசரமானது. வன்னி மக்களை சாவிலிருந்தும், அழிவிலிருந்தும் மனித மாண்பு சிதைக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்றுங்கள்.

இதுவே உலகில் உள்ள நல்மனம் கொண்ட அனைவருக்கும் நீதி சமாதான வன்னி ஆணைக்குழு விடுக்கும் ஆத்மார்த்தமான வேண்டுகோளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments