கிழக்கு நோக்கி திரும்பும் அரசின் கவனமும், அனைத்துலகத்தின் பிரிவினைகளும்

தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மூலம் வெளிப்படுத்தியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் அதன் படை நடவடிக்கைகளை தொடர்ந்தவாறு உள்ளது.

விடுதலைப்புலிகள் அறிவித்த போர் நிறுத்தம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமாகிய போதும் இலங்கை அரசாங்கம் மன்னார், மணலாறு, வன்னி களமுனைகளில் படை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் பாலமோட்டை மற்றும் மணலாறு களமுனைகளிலும், கடந்த புதன்கிழமை பாலமோட்டை களமுனையிலும் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர். இந்த படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வன்னிப்பகுதியில் படை நடவடிக்கைகள் தொடர்வதாகவும் விடுதலைப்புலிகளின் பதுங்குகுழிகளை தாம் கைப்பற்றிவருவதாகவும் அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

படைநடவடிக்கை மட்டுமல்லாது போர்நிறுத்த காலத்தில் வன்னிப்பகுதிக்கான தொலைத்தொடர்புகளும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அதன் வெளியுலக தொடர்புகளை தடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், உதவிஅமைப்புக்கள் என அத்தியாவசிய சேவைகளை மேற்கொண்டுவந்த நிறுவனங்களின் 500 இற்கு மேற்பட்ட தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு நடைபெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்த 100,000 இற்கு மேற்பட்ட மக்களும், அங்கு வாழும் மக்களும் பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர்.

மேலும் கடந்த புதன்கிழமை உளவுவிமானத்தின் வழிகாட்டலுடன் கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்று பகுதியில் இலங்கை வான்படையின் இரு மிக்27 ரக தாக்குதல் விமானங்கள் குண்டுவீச்சு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளன.

விடுதலைப்புலிகள் தென்ஆசிய பிராந்திய நாடுகளின் சமாதானம் மற்றும் அமைதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ள போதும் படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிராக தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்வார்கள் என்பதை யாரும் நிராகரித்துவிட முடியாது.

படைத்தரப்பு வடபோர்முனையில் நாகர்கோவில் முகமாலை கிளாலி அச்சில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தொடர்ச்சியாக கடுமையான பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

இதனிடையே இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது ஆளுமையை தக்கவைப்பதற்கு இந்திய அரசு போர் கப்பல்கள் இரண்டை இலங்கையின் கடல்பகுதிக்கு அண்மையாக நகர்த்தியுள்ளது. எனினும் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் தென்னிலங்கையில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசும் தனது கடற்படையின் கணிசமான தாக்குதல் கலங்களை கொழும்பை அண்டிய கடற்பகுதிக்கு நகர்த்தியுள்ளது.

இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐ.என்.எஸ். ரண்வீர், ஐ.என்.எஸ். மைசூர் என்பவை இலங்கை கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டுள்ள போதும், இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர். 1987 ஆம் ஆண்டு இலங்கை அரசின் எதிர்ப்புக்களையும் மீறி, 6 அன்ரனோவ்32பி கனரக சரக்கு விமானங்கள் மற்றும் 4 மிராஜ்2000 தாக்குதல் விமானங்களின் மூலம் இலங்கை வான்பரப்பை தன்வசப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட பூகோள அரசியல் தற்போது கடற்பரப்பில் தொடர்கின்றது. ஆனால் அதன் உண்மை நோக்கம் இலங்கை அரசை பணியவைப்பதாகும் என்பதே அல்லாமல் தமிழ் மக்களுக்கு ஆதரவானது என கருதிவிட முடியாது.

இந்திய கடற்படை நகர்த்தியுள்ள ஐ.என்.எஸ். மைசூர் போர்க்கப்பல் டில்லிவகையை சேர்ந்த நாசகாரி கப்பலாகும். கர்நாடக மாநிலத்தின் நகாரின் பெயரை கொண்ட இந்த கப்பல் 6,700 தொன் எடை கொண்டதுடன் 1999 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தது. 163 மீ நீளம் கொண்ட இந்த கப்பலில் 360 சிப்பந்திகள் மற்றும் படையினர் பணியாற்றுவதுண்டு. 32 கடல்மைல் வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை கொண்டதுடன், அணுசக்தி, இராசாயன, உயிரியல் ஆயுதங்களின் தாக்குதல் சூழல்நிலைகளையும் சமாளிக்கும் தன்மை கொண்டது. வான் எதிர்ப்பு ஏவுகணைகள், கனரக பீரங்கிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள், கடலில் இருந்து தரைக்கு பாயும் ஏவுகணைகள் என்பவற்றுடன் இரண்டு உலங்குவானூர்திகளையும் (குஞுச் ஓடிணஞ் ஏஞுடூணிண்) காவும் வல்லமை கொண்டது.

ஐ.என்.எஸ். ரண்வீர் போர்க்கப்பல் ராய்புட் வகையை சேர்ந்தது நாசகாரி கப்பலாகும். இது மைசூர் கப்பலை விட பழமையானது. 5000 தொன் எடை கொண்ட இந்த கப்பல் 1986 களில் இந்திய கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தது. 146 மீ. நீளமான இது வான்தாக்குதல், நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் தேடி அழித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சீ கிங் மற்றும் செல்ரக் வகை உலங்குவானூர்திகளும் தரித்து நிற்கக்கூடியவை.

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய போர்க் கப்பல்களின் தரம் அவர்கள் இந்துசமுத்திர பிராந்தியத்தில் தலையிடும் நாடுகளுக்கே அச்சுறுத்தல்களை ஏற்படுத்த முனைகின்றனர் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. 2000 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் நடைபெற்ற அனைத்துலக கடற்படையினரின் அணிவகுப்பில் கலந்துகொண்ட ஐ.என்.எஸ். மைசூர் போர் கப்பலின் இலங்கை விஜயம் அதன் பூகோள அரசியலை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

இந்திய கடற்படையினரின் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இலங்கை கடற்படையினரும் தமது கடற்படை கப்பல்களை கொழும்பு கடற்பகுதிக்கு நகர்த்தியுள்ளனர். இலங்கை கடற்படையின் கப்பல் தொகுதியில் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்கள், அதிவேக தாக்குதல் டோரா படகுகள், உட்கரையோர நீருந்து விசைப்படகுகள், அதிவேக பீரங்கிப் படகுகள் என்பவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படகு தாக்குதல் ஸ்குவாட்ரன் படையினரும் அடங்கியுள்ளதாக கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசினதும் இலங்கை அரசினதும் இந்த கூட்டு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மேற்குலகம் தனது தரப்பு அழுத்தத்தை இலங்கை மீது மெல்ல மெல்ல இறுக்கி வருகின்றது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கை அரசு அனைத்துலக தராதரத்திற்கு இணையாக மனித உரிமைகளை பேணாது விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச்சலுகை நீடிப்பை இழக்க வேண்டி ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

இந்தியாவினால் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் திருமலைக்கு ஐரோப்பிய ஒன்றிய குழு மேற்கொள்ள தீர்மானித்திருந்த விஜயத்தை பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் இறுதி நேரத்தில் தடுத்தமை அவர்களுக்கு அதிக சினத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கான தமது விஜயத்தின் முக்கிய நோக்கம் திருமலைக்கான விஜயமே என ஐரோப்பிய ஒன்றிய குழு தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கு தொடர்பாக மேற்குலகும் தெற்காசிய நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு வருகையில் கிழக்கின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்கள் எழுத்துள்ளதை அரசாங்கம் தற்போது உணரத்தலைப்பட்டுள்ளது. கடந்த வாரம் புல்மோட்டை கடற்பரப்பில் நடைபெற்ற கடல் சமரின் போது விடுதலைப்புலிகளின் 3 படகுகளை மூழ்கடித்துவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் விடுதலைப்புலிகள் கிழக்குக்கு ஒரு தொகுதி படையினரை தரையிறக்கி உள்ளதாகவே படையினரின் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது கும்புறுப்பிட்டி மற்றும் திரியாய் பகுதிகளில் இரு சிறிய தற்காலிக துறைமுகங்கள் அமைக்கப்பட்டிருந்த தடயங்களை அவதானித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்படும் துறைமுகங்களால் விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்கு தமது உறுப்பினர்களையும், ஆயுத தளவாடங்களையும் நகர்த்தி வருவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

கிழக்கில் 150 விடுதலைப்புலிகள் கேணல் ராம் மற்றும் லெப். கேணல் நகுலன் தலைமையில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கேணல் ராம் கிழக்கு மாகாண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகையில், லெப். கேணல் நகுலன் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆழஊடுருவும் நடவடிக்கைகளையும், சிறப்பு படை நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த படையணியின் ஒரு குழுவினர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தம்பலகாமம் சந்தியை கடந்து சென்றது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

அம்பாறை மாவட்ட காடுகளில் விடுதலைப்புலிகளை தேடி கண்டறிவதில் அங்கு நிலைகொண்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினருக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதுடன், அங்கு தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. விடுதலைப்புலிகள் கனரக துப்பாக்கிகள், 81 மி.மீ ரக நடுத்தர மோட்டார்களையும் தாக்குதல்களுக்கு பயன்படுத்திவருவது படையினருக்கு பெரும் தலையிடிகளை ஏற்படுத்தி வருகின்றது. அங்கு மாறிவரும் சூழ்நிலை அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் புறந்தள்ளும் நிலையை அடைந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கிழக்கில் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு படைத்தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

மகாஓயா அம்பாறை வீதியில் அமைந்திருந்த இரு சிறப்பு அதிரடிப்படை முகாம்களை முன்னர் அரசாங்கம் அகற்றியிருந்தது. தற்போது அவற்றை மீண்டும் அங்கு அமைக்கும் முயற்சிகளில் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது. திருக்கோவில், அரந்தலாவ, பியன்கலா, புலுக்குணாவ ஆகிய சிறப்பு அதிரடிப்படை முகாம்களும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளின் நகர்வுகளை தடுப்பதற்காக படைத்தரப்பு கந்தளாய் திருமலை வீதியில் உள்ள குரங்குப்பாலத்தில் அமைந்திருந்த சிறப்பு படை பிளட்டூன் துருப்புக்களை மொறவௌ பகுதிக்கு நகர்த்தியிருந்தது. எனினும் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் கிழக்கிலங்கையில் அதிகரித்து வருவதை தொடர்ந்து பொலநறுவை மட்டக்களப்பு வீதியில் உள்ள சித்தாண்டி பகுதியில் புதிய பிரிகேட் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையை படைத்தரப்பு பரிசீலித்து வருகின்றது.

தொப்பிக்கல, வாகரை, சித்தாண்டி என பல பிரிகேட் படையினரை அங்கு நிறுத்தவேண்டிய கட்டாயம் தற்போது படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
இவை தவிர திருமலைத்துறைமுகத்தை சம்பூர், மூதூர், கிண்ணியா, சீனன்குடா ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையையும், சேருவில ஹபரணை பொலநறுவை பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றையும் நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதிகளவான படையினரை மிகவும் விரைவாக நகர்த்துவதற்கு இந்த வீதிகள் அவசியமானது என்பது படைத்தரப்பின் வாதம். இந்நிலையில் இந்த வீதிகளின் நிர்மாணப்பணிகளில் இராணுவ பொறியியல் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

படைத்தரப்பை பொறுத்தவரையில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைக்கு பெருமளவான படையினர் தேவை என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது. களமுனைகளில் இருந்து அகற்றப்படும் படையினர், இராணுவத்தில் இருந்து வெளியேறும் படையினர் ஆகியோரை ஈடுசெய்வதற்கும், கைப்பற்றப்படும் நிலப்பரப்புக்களை தக்கவைப்பதற்கும் இராணுவத்திற்கு அதிகளவான படையினர் தேவை. ஆனால் தற்போது புதிதாக அமைக்கப்படும் பிரிகேட்டுக்களை கிழக்கிலங்கை நோக்கி நகர்த்தவேண்டிய கட்டாயமும் அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு அதிகரித்துவரும் இந்த நெருக்கடிகள் விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதலை ஆரம்பிக்கும் போது மேலும் அதிகரிக்கும் என்பதுடன், தெற்காசிய பிராந்தியத்திற்கான போட்டிகளினால் முனைவாக்கம் பெற்றுவரும் அனைத்துலகின் பிரிவினைகளும் மேலும் அதிகரிக்கலாம்.

- வேல்ஸிலிருந்து அருஷ்-


Comments